உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, October 02, 2009

அக்டோபர் 2

மகாத்மா

காந்தி பிறந்த தினம். ஆனால், அவரது கொள்கைகளை யாராவது பின்பற்றுகிறோமா என்றால், இல்லை. ‘குவார்ட்டர் பாட்டில் வாங்கியதற்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தி’ என்று புதுக் கவிதைகள் எழுதிக்கொண்டும், அதை ரசித்துக்கொண்டும் இருக்கிறோம். காந்தியின் பொருள்கள் ஏலத்துக்குப் போவதா என்று ஒரு கோஷ்டி பொங்குகிறது. சிலர் உடம்பு முழுக்க அலுமினிய வர்ணம் பூசிக்கொண்டு, தெருவில் யாசகம் கேட்டு வருகிறார்கள். வேதனையாக இருக்கிறது. சிவனும் பார்வதியும் விஷ்ணுவும் லட்சுமியும் அனுமாரும் பிச்சையெடுத்து வருகிற மாதிரி காந்தியாரும் தெருவுக்கு வந்துவிட்டார். மகாத்மா காந்தி சாலை, காமராஜர் சாலையில் எல்லாம் இரண்டு மூன்று டாஸ்மாக் கடைகள். பள்ளிகள், அலுவலகங்கள் இன்று விடுமுறை விட்டுவிட்டன. பள்ளிக் கலைவிழாக்களில் மாறுவேடப் போட்டி என்றால் காந்தியும் சந்தன வீரப்பனும் கை கோத்து வருவார்கள். அதையும் ரசிப்பார்கள் நம்மவர்கள்.

விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும் காலத்தில், தினமும் காலை வணக்கத்தின்போது, மகாகவியின் ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க, வாழ்க!’ என்கிற பாடலும் தவறாமல் பாடப்படும். (இப்போதும் அதைக் கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.) பிள்ளைகள் நாங்கள் அதன் மகத்துவம் தெரியாது, மகாத்மாவின் மகிமை புரியாது கடனே என்று பாடுவோம்.

ஆனால், இன்றைக்கு வளர்ந்த பெரியவர்களும், காந்தி பற்றி நன்கு அறிந்தவர்களுமேகூட அவரது கொள்கைப்படி நடக்கிறார்களா என்றால், இல்லை. ‘அதெல்லாம் இந்தக் காலத்துக்குச் சரிவராதுப்பா!’ என்கிறார்கள். ‘பேசாம வெள்ளைக்காரன் கிட்டேயே நாடு இருந்திருந்தா, இன்னிக்கு இத்தனை ஊழலும், அயோக்கியத்தனமும் இருந்திருக்காது. நாடு நல்லாருந்திருக்கும். ரயில்வேயை யாரு கொண்டு வந்தது? போஸ்ட் ஆபீஸ்களை யாரு கொண்டு வந்தது? ரோடுகளைப் போட்டது யாரு? எல்லாம் வெள்ளைக்காரன்தானே? சுதந்திரம் வாங்கிக் கொடுக்கிறேன்பேர்வழின்னு நாட்டைக் குட்டிச்சுவராக்கிட்டுப் போயிட்டார் மனுஷன்’ என்று பேசும் பெரிசுகளைப் பார்த்திருக்கிறேன்.

நாட்டில் நடக்கும் இயற்கைப் பேரழிவுகளுக்கும் துர்மரணங்களுக்கும் இவர்கள் இப்படித்தானே தங்கள் தவறை மறைத்துக் கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்கள்! காந்தியை மட்டும் விடுவார்களா என்ன!

'World Fellowship of Faith' என்ற நிறுவனம், 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதியன்று, காந்தியின் பிறந்த தினச் செய்தியாக ஒன்றைக் கூறும்படி அவரிடமே கேட்டது. “என் வாழ்க்கையின் மூலம் உங்களுக்குக் கிடைக்காத செய்தியை பேனா முனை மூலம் மட்டும் நான் எப்படி உங்களுக்கு எழுதியனுப்ப முடியும்?” என்று சிறு குறிப்பு மட்டும் எழுதியனுப்பினார் காந்தி.

அவர் தீர்க்கதரிசி!

லால்பகதூர் சாஸ்திரி

சிலரை இருக்கும்போதும் யாரும் கண்டுகொள்வதில்லை; மறைந்த பின்பும் கண்டுகொள்வதில்லை.

டிசம்பர் 12 என்றால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் என்று நேற்றைக்குப் பிறந்த பொடியன் கூடச் சொல்லிவிடுவான். அதே நாளில்தான் அற்புதமான நடிகை சௌகார்ஜானகியும் பிறந்தார். அவரை யாரும் கண்டு கொள்வதில்லை. அது இருக்கட்டும்; அதற்கு முந்தின நாள்தான் (டிசம்பர் 11) மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள். அதுவாவது யாருக்காவது தெரியுமா? சந்தேகம்தான்!

சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த அதே ஜூன் 23-ம் தேதிதான் வி.வி.கிரியும் மறைந்தார். சஞ்சய் காந்தி ஞாபகத்தில் இருக்கும் அளவுக்கு வி.வி.கிரி இருக்கிறாரா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

காந்தியார் பிறந்த அதே தினத்தில்தான் லால்பகதூர் சாஸ்திரியும் பிறந்தார். காந்தியாரை நினைவு வைத்துக்கொண்டு, அவரது கொள்கைகளை மறந்துவிட்ட இந்தியா, லால்பகதூர் சாஸ்திரியையே மறந்துவிட்டது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக உயிர்த் தியாகம் செய்தவர் காந்திஜி. இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமைக்காகப் பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்தவர் சாஸ்திரி. துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மண்ணில் சாயும்போது ‘ஹரே ராம்’ என்று உச்சரித்தவர் காந்தி என்று நமக்குத் தெரியும். லால்பகதூர் சாஸ்திரியும் உயிர் துறக்கையில் ‘ஹரே ராம்’ என்றுதான் தன் கடைசி வார்த்தைகளை உச்சரித்தார்.

இவருக்குப் பாவம்.... மகாத்மா, மனிதரில் மாணிக்கம் என்றெல்லாம் எந்தப் பட்டங்களையும் நாம் கொடுத்துக் கௌரவிக்கவில்லை.

பெருந்தலைவர்

காத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கிற காலத்தில், பெருந்தலைவர் கையால் புத்தகப் பரிசு பெற்றதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ‘போதுமே! எத்தனை தடவைதான் அதை எழுதுவீங்க?’ என்று சிலர் சலித்துக் கொண்டாலும், எனக்கு அந்த நினைவு மகிழ்வைத் தருவதால், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதைக் குறிப்பிடுவதில் எனக்குச் சலிப்பே ஏற்படுவதில்லை.

காந்தியைப் போலவேதான் காமராஜும் - ஆசாமியை நினைவு வைத்துக்கொண்டு, கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். ‘காந்தி கணக்கு’ என்பது போல, ‘காமராஜ் ஆட்சி அமைப்போம்’ என்பதும் கேலிக்குரிய ஒன்றாகிவிட்டது.

காமராஜரின் எளிமை, நேர்மை பற்றி எல்லோருக்குமே தெரியும். கக்கனையும் காமராஜரையும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று வர்ணிக்கிறது இன்றைய சமூகம். ‘காமராஜ்’ படம் கமர்ஷியல் ஹிட் இல்லை; ‘போக்கிரி’தான் ஹிட்!

சரி, விடுங்க! சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. காமராஜைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைச் சொல்லி முடிச்சுக்கறேன்.

வாரியார் சுவாமிகளின் மிகப் பெரிய ரசிகர் காமராஜர். முன்பு வாரியார் அவர்கள் தலைவராகவும், திருமதி பட்டம்மாள் வாசன் (எஸ்.எஸ்.வாசனின் துணைவியார்) அவர்கள் உப தலைவராகவும் இருந்து நடத்திய ‘சத்திய சபா’வுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, மேடை நாடகங்களும் கதா காலட்சேபங்களும் பெருமளவில் நடத்த வகை செய்தவர் காமராஜர்.

ஒருமுறை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வாரியாரின் ராமாயணச் சொற்பொழிவு. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த அந்தச் சொற்பொழிவுக்குத் தினமும் அப்படி ஒரு கூட்டம்! சென்னையில் இருந்தால், கண்டிப்பாக அதற்கு வந்துவிடுவார் காமராஜர்.

ஒருநாள், வாரியார் மும்முரமாகச் சொற்பொழிவு செய்துகொண்டு இருந்தார். ஹனுமானுடைய வீரம், ஆற்றல், நேர்மை, எளிமை, தியாகம், கடமை உணர்வு பற்றியெல்லாம் விவரித்துக்கொண்டு இருந்தபோது, காமராஜர் அங்கே வந்தார். கூட்டத்தில் சிறு சலசலப்பு. வாரியார் தமது பிரசங்கத்தைத் தொடர்ந்தார்... “அவர் ஒரு பிரம்மசாரி! பிரம்மசாரிகளுக்கே தனியொரு ஆற்றல் இருக்கும். பிரம்மசாரிகள் மாபெரும் காரியங்களைச் சாதிக்க வல்லவர்கள். தங்கள் செயலில் உறுதியானவர்கள். திடமான முடிவுகளை விரைந்து எடுக்கக் கூடியவர்கள். நான் யாரைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா?” என்று சொல்லியபடியே காமராஜரைப் பார்த்தார். கூட்டம் புரிந்துகொண்டு கரவொலி எழுப்பியதில், தேனாம்பேட்டையே அதிர்ந்தது.

தொடர்ந்து வாரியார், “நான் இவ்வளவு நேரமும் ஹனுமானைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆமாம், நீங்கள் யாரையென்று நினைத்தீர்கள்?” என்று கேட்டார், கண்களை இடுக்கி, தமது வழக்கமான குறும்புச் சிரிப்போடு.

இந்த முறை சென்னையே அதிர்ந்தது.

காமராஜ் மறைந்தபோது, நான் விழுப்புரத்தில் இருந்தேன். அப்போது அங்கே ஒரு தியேட்டரில் சிவாஜியின் ‘பார் மகளே பார்’ படம் ஓடிக்கொண்டு இருந்தது. அதில் ஒரு காட்சியில், காணாமல் போன தன் மகளின் போட்டோவை வைத்துக்கொண்டு சிவாஜி கண் கலங்க நிற்கும் போஸ்டர்கள் ஊர் முழுக்கப் பெரிது பெரிதாக ஒட்டப்பட்டு இருந்தன. காமராஜ் இறந்த தகவல் வந்தவுடன், அத்தனைப் போஸ்டர்களிலும் மகள் படத்துக்குப் பதிலாக அந்த ஃபிரேமுக்குள் காமராஜ் படத்தைக் கச்சிதமாக ஒட்டிவிட்டார்கள். காமராஜ் மறைவைத் தாங்க முடியாமல் சிவாஜி கதறுவது போன்று இருந்த அந்த போஸ்டர்கள் உணர்வுபூர்வமாக என்னைக் கலங்கச் செய்தன.

காமராஜ் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. ‘காமராஜ் மறைவுக்கு உண்மையாக அழுதவர் சிவாஜி ஒருவர்தான்’ என்று நடிகை லட்சுமி அப்போது தைரியமாக ஒரு கமெண்ட் அடித்தார். அதுதான் உண்மை!
.

4 comments:

காந்தி, சாஸ்த்ரி, காமராஜ் ஆகிய மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூவரும் தங்கள் வாழ்வில் எளிமையை கடைப்பிடித்தவர்கள். அவர்களை பற்றிய பதிவு அருமை!அருமை!அருமை!.

ரேகா ராகவன்.
 
நல்லவேளை காந்தி ஜெயந்திக்கு அரசு விடுமுறை விடுவதால் நினைவில் வைத்திருக்கிறார்கள் இல்லைனா இதுவும் மறந்திருப்பார்கள்.

:(((((((
 
பாராட்டுக்கு நன்றி திரு.ராகவன்!

அரசு விடுமுறை விடுவதால், நிறையப் பேர் அன்றைய தினம் சரக்கடித்துவிட்டுக் கொண்டாடுவார்கள். அதற்குப் பேசாமல் ஆபீஸ் வைத்துத் தொலைத்தால், அலுவலக நேரம் முடிகிற வரைக்குமாவது குடிக்காமல் இருப்பார்களல்லவா என்றுதான் நான் நினைக்கிறேன் மங்களூர் சிவா!
:-o
 
மனிதருள் மாணிக்ங்களை பற்றிய தங்கள் கட்டுரை அருமை...!!

வாழ்க வளமுடன்