உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, April 28, 2010

வியக்க வைக்கும் விசித்திர ரேகைகள்!

ஒரு நினைவூட்டல்:
எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் நான் அறிவித்த புத்தகப் பரிசு போட்டிக்கான உங்கள் விடைகளை அனுப்பக் கடைசி நாள் ஏப்ரல் 30. இதில் வென்றவர்களுக்குப் பரிசாகக் கிடைக்கவிருக்கும் புத்தகம் ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’.

ன் டிடெக்டிவ் ஏஜென்சி நிறுவனர் திரு.வரதராஜன் பேசுவதைத் தொடர்ந்து கேட்போம்...

கைரேகை பதியக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகள் கிளவுஸ் அணிவது உண்டு. இதிலும் ‘மோடஸ் ஆபரேண்டி’ - அதாவது, ஒவ்வொருக்குமான தனிப் பாணி இருக்கிறது. மருத்துவர்கள் அணியும் கிளவுஸ் வாங்கி அணிபவர்கள் எப்போதும் அதையேதான் அணிவார்கள். சாதாரண ரப்பர் கிளவுஸ் உபயோகிப்பவர்கள், விலை மலிவான பிளாஸ்டிக் கிளவுஸ் அணிபவர்கள், துணியால் ஆன கிளவுஸ் அணிபவர்கள் எல்லாம் தங்களுக்குப் பழக்கமானவற்றையே மீண்டும் மீண்டும் உபயோகிப்பார்கள்.

நீங்கள் கொஞ்ச நேரம் தொடர்ந்தாற்போல் கிளவுஸ் அணிந்து வேலை செய்து பாருங்கள். அன்ஈஸியாக உணர்வீர்கள். எப்போதடா அதைக் கழற்றி எறிவோம் என்று உங்களுக்குத் தோன்றும். வெளிநாடுகளில் குற்றவாளிகள் அதிகம். கிளவுஸ் அணிவது இயல்பாக இருக்க வேண்டும், பழக வேண்டும் என்பதற்காக, அவர்கள் எப்போதுமே கிளவுஸ் அணிந்தபடிதான் இருப்பார்கள். நம் நாட்டில் அப்படியல்ல; தேவைப்படும்போது கடையில் ஏதோ ஒரு கிளவுஸ் வாங்கி அணிந்துகொண்டு, குற்றம் செய்துவிட்டு, அதை அங்கேயே கழற்றிப் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அதைக் கைப்பற்றி, ரிவர்ஸ் செய்து, அதிலிருந்தும் கைரேகை எடுக்கலாம்.

பெரும்பாலான குற்றவாளிகள் பூட்டை உடைக்கும்போது கிளவுஸைக் கழற்றிவிடுவார்கள். காரணம், கிளவுஸ் அணிந்து அவர்களால் சுத்தியலை வாகாகப் பிடித்து உபயோகிக்க முடியாது. எனவே, பூட்டைக் கவனமாக ஆராய்ந்தாலே பல குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.

கைரேகை ஜோசியமும் படித்தவர் திரு.வரதராஜன். கைரேகை ஜோசியத்தில், எவன் ஒருவனுக்குப் பத்து விரல்களிலும் சுருள் அமைப்பு இருக்கிறதோ, அவன் நாட்டை ஆளுவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வரதராஜன் விரல் ரேகைப் பிரிவில் பணியாற்றத் தொடங்கியதும், அவருக்குள் இருந்த ஆர்வம் காரணமாக, பத்து விரல்களிலும் சுருள் அமைப்பு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று லட்சக்கணக்கான கிரிமினல்களின் விரல் ரேகைப் பதிவுகளை எடுத்துப் பார்த்தார். 2,400 பேருக்கு அப்படி இருந்ததாம். ‘இவர்கள் கைரேகை ஜோசியப்படி நாட்டை ஆள வேண்டுமே! குற்றவாளிகளாக அல்லவா இருக்கிறார்கள்!’ என்று யோசித்தபடியே, அந்தக் குற்றவாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சரியம்! அவர்கள் அத்தனை பேருமே தலா ஒரு பெரிய கூட்டத்துக்குத் தாதாவாக இருந்திருக்கிறார்கள்.

கைரேகை விஞ்ஞானத்தை முதன்முதலாகப் பிரயோகிக்கத் தொடங்கிய தமிழகம் துரதிர்ஷ்டவசமாக அங்கேயே நின்றுவிட்டது. அதற்குப் பின்னர் அதில் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து, கைரேகையைப் பலவற்றுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. நம் நாட்டில் குற்றவாளிகளின் கைரேகைகளை மட்டும்தான் பதிந்து வைத்திருக்கிறது அரசாங்கம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலோ, ஒவ்வொரு குடிமகனுடைய ரேகையும் பதியப்பட்டுள்ளது. அப்படி இங்கேயும் கொண்டு வந்து, புகைப்படத்தோடு அவரவரின் கைரேகையையும் பதிந்து, தேசிய அடையாள அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்குத் தரவேண்டும். அப்படிச் செய்தால், அநாதைப் பிணம் என்பதே இல்லாது போகும்; போலி ரேஷன்கார்டு பிரச்னை இருக்காது. கைரேகை பதிந்தால்தான் ஒருவர் வோட்டளிக்கவே முடியும் என்றும் கொண்டு வந்துவிட்டால், கள்ள ஓட்டுப் பிரச்னையும் இருக்காது.

விகடன் அலுவலகத்தில் நாங்கள் விரல் ரேகை வைத்தால்தான் கதவு திறந்து எங்களை உள்ளே அனுமதிக்கும்; கூடவே, நாங்கள் அலுவலகம் வந்ததற்கான அட்டெண்டன்ஸ் பதிவாகும். இந்த டெக்னாலஜியை இன்னும் விரிவுபடுத்தி, திரு.வரதராஜன் சொல்வது போல் பல விஷயங்களில் கொண்டு வருவது சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.

இறந்தவரின் கட்டை விரலை வெட்டி எடுத்துக்கொண்டு போய், அதன் மூலம் ரேகைகளைப் பதிந்து, கேஸை திசை திருப்புவதாகச் சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது சாத்தியமா?

“அநேகமாக சாத்தியம் இல்லை. ஒருவரின் விரல்களில் வியர்வை நாளங்கள் உள்ளன. அவரது கைரேகையைப் பதிவு செய்து, அதைப் பெரிதுபடுத்திப் பார்த்தால், அந்த வியர்வை நாளங்கள் திறந்திருப்பது தெரியும். அதுவே, ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடல் டீ-கம்போஸாகி வியர்வை நாளங்கள் மூடிவிடும். அதன் மூலம் ரேகை பதிந்தால், அவற்றைப் பதிந்து, பெரிதுபடுத்திப் பார்க்கும்போது வியர்வை நாளங்கள் மூடியிருப்பது தெரியும். எனவே, இறந்தவரின் கைரேகை அது என்று கண்டுபிடித்துவிடலாம். இறந்து சுமார் ஆறு மணி நேரத்தில் உடம்பு டீ-கம்போஸாகும்” என்று விளக்கிய வரதராஜன், சில அபூர்வமான விரல் ரேகைகளைப் பற்றியும் சொன்னார்.

அவரது பதிவுகளில் உள்ள விரல் ரேகைகளில் ஆங்கில எழுத்துக்களான ஏ, பி, சி, டி என எழுத்துக்கள் உள்ள ரேகைகளும் உண்டாம். இன்னும் கிளி படம், சங்கு-சக்கரம், வேல் போன்ற வடிவங்கள் கொண்ட ரேகைகளும் இருக்கின்றன என்றார். சிலவற்றை லென்ஸ் மூலம் பெரிதுபடுத்தி எங்களுக்கும் காண்பித்தார். அவர் காண்பித்த ஒரு விரல் ரேகை வடிவம் எங்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திற்று. அதில் தெள்ளத் தெளிவாக ‘ஓம்’ என்று இருந்தது. அது ரேகை வடிவம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அது யாருடைய கைரேகை என்று கேட்டோம். எங்கள் ஆச்சரியம் பன்மடங்காயிற்று. ‘கரீம்’ என்கிற ஒரு குற்றவாளியினுடையது என்றார் வரதராஜன். “நமக்குத்தான் சாதி, மதமெல்லாம்! கடவுளுக்கு அதெல்லாம் கிடையாது என்பதற்கு இது ஒரு புரூஃப்” என்று சொல்லிச் சிரித்தார்.

பின்னர், தான் அரசுப் பணியிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பற்றி விவரித்தவர், தனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ மூலம் தீர்த்து வைத்த சில சுவாரசியமான வழக்குகள் பற்றியும் சொன்னார்.

பெரும்பாலும், மணமகன் எப்படிப்பட்டவன், நல்ல குணம் உள்ளவனா என்று கண்டுபிடித்துச் சொல்லும்படி பெண்களின் தகப்பனார்கள் கேட்டுக் கொள்ளும் வழக்குகள்தான் வரும் என்றும், அதற்கடுத்ததாக தன் மனைவி எப்படிப்பட்டவள், தன் மீது விசுவாசம் உள்ளவளா, அவளுடைய செய்கையைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லி, வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்கள் கேட்டுக்கொள்ளும் வழக்குகள் அதிகம் வரும் என்று சொன்னார் வரதராஜன். இன்றைய கணினி உலகில், அதற்கேற்ப டெக்னாலஜியைப் பயன்படுத்தி அந்த வழக்குகளைத் தீர்த்துவைப்பதாகச் சொல்லி, தாங்கள் கையாளும் நவீன முறைகள் பற்றியும் விளக்கினார்.

அவர் விவரித்த ஒரு கேஸ் ரொம்பவும் உருக்கமாக இருந்தது.

சவூதி அரேபியாவிலிருந்து ஒருவர் போன் செய்து, “என் மாமனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நானும் எப்படியெப்படியெல்லாமோ, எந்தெந்த வழிகளில் எல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னால் முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வழக்கு அது.

அது விரிவாக அடுத்த பதிவில்!

.

Sunday, April 25, 2010

கிரிமினல்கள் பலவிதம்!

‘கடவுள் கொடுத்த முத்திரை’, ‘சில சுவாரசியமான கேஸ்கள்’ என இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளையும் பதிந்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, இரண்டுக்கும் தங்கள் பொன்னான வாக்குகளை உடனே தமிழிஷ்-ஷில் செலுத்தி, இரண்டையும் பாப்புலர் பதிவுகளாக்கிய முகமறியா நல்ல உள்ளங்கள் அத்தனை பேருக்கும் முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, சென்ற பதிவின் தொடர்ச்சி...

துரைத் திருட்டுச் சம்பவத்தில் கிடைத்த கைரேகை ஒரு குழந்தையின் ரேகையை ஒத்திருந்தது என்று கண்டோமல்லவா? காவல்துறை குழம்பியது.

அப்போது, அங்கே இருந்த ஃபிங்கர் பிரின்ட் நிபுணருக்கு ஒரு சந்தேகம்... அங்கே குரங்காட்டி ஒருவன் குரங்கை வைத்துத் தெருக்களில் வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். குரங்களுக்கும் மனிதர்களைப் போல ரேகைகள் உண்டு. எனவே, அந்தக் குரங்கைப் பிடித்து ரேகை எடுத்துப் பார்த்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அதன்படியே செய்தார்கள். அந்தக் குரங்குக்குட்டியின் விரல் ரேகை, திருட்டு நடந்த அத்தனை வீடுகளில் கிடைத்த ரேகையுடனும் ஒத்துப் போயிற்று. மிருகங்கள் செய்கிற குற்றத்துக்கு நமது சட்டத்தில் தண்டனை கிடையாது. எனவே, அந்தக் குரங்காட்டிக்குத் தண்டனை கிடைத்தது. அவனிடமிருந்த பொருள்களும் கைப்பற்றப்பட்டன. உலகிலேயே ஒரு குரங்கின் கைரேகையை எடுத்துக் குற்றவாளியைப் பிடித்த விசித்திரமான கேஸ் தமிழ்நாட்டில்தான் நடந்தது.

ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வெறுமே ரேகைகளை மட்டும்தான் வைத்துத் துப்புக் கண்டுபிடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில், ரேகையைவிட வேறு பல விஷயங்களும் அவர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக, குற்றம் நடந்த இடத்தில் கிடக்கும் ஒரு சிகரெட் துண்டு அல்லது ஒரு சின்ன செய்தித்தாள் துண்டு கூட அவர்களுக்கு ஒரு க்ளூவாக உதவும்.

தவிர, மோடஸ் ஆபரேண்டி (modus operandi) என்று ஒன்று உண்டு. சுருக்கமாக இதை எம்.ஓ. என்பார்கள். அதாவது, ஒருவர் செயல்படும் பாணி அல்லது தனித்தன்மை. எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக பாணி உண்டு. அவரவர்கள் அந்தந்த பாணியில்தான் செயல்படுவார்கள். கிரிமினல்களுக்கும் இந்த மோடஸ் ஆபரேண்டி அதிகம் உண்டு. ஒரு நல்ல, கூர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தால், இந்த எம்.ஓ-வை வைத்தும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிடலாம்.

உதாரணமாக, பகலில் திருடுகிறவன் எப்போதும் பகலிலேயே திருடுவான். இரவில் வரமாட்டான். காரிலிருந்து ஸ்டீரியோவைத் திருடிச் செல்கிறவன், அதே திருட்டையேதான் செய்வான். காரிலிருக்கும் வேறு பொருள்களைத் திருட மாட்டான். பைக் திருடுகிறவன் பைக்கை மட்டும்தான் திருடுவான்.

2000-வது ஆண்டில் பரபரப்பான ஒரு திருட்டு கேஸ். கடைகளின் ரோலிங் ஷட்டரை நெம்பித் திறந்து, உள்ளேயிருக்கும் கல்லாப் பெட்டியை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான் ஒரு கிரிமினல். எல்லாக் கொள்ளைகளிலும் ஓர் ஒற்றுமை இருந்தது. களவு நடந்த இடத்தில் ஒரு கடப்பாரை, ஒரு மெழுகுவத்தி, ஒரு பை கிடந்தது. சில இடங்களில் மட்டும் பை இருக்காது. கடப்பாரையும் மெழுகுவத்தியும் மட்டும் கிடக்கும்.

எதற்காக அந்த மூன்று பொருள்கள்? கடப்பாரை, ரோலிங் ஷட்டரை நெம்பித் திறப்பதற்கு. மெழுகுவத்தி, உள்ளே போய்க் கொளுத்தி, அந்த வெளிச்சத்தில் திருடுவதற்கு. ஸ்விட்ச் போட்டால், அதில் தன் கைரேகை பதிந்துவிடும் என்று உஷாராக இருந்தான் அவன். பையில் கொள்ளையடித்த பணத்தைப் போட்டு எடுத்துச் செல்வான். ஆனால், சில இடங்களில் பை கிடந்ததே, ஏன்?

விசாரணையில் காரணம் புரிந்தது. அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில், பை இல்லை. குறைவான பணம் கொள்ளை போன இடங்களில் பை இருந்திருக்கிறது. அதாவது, அதிக பணம் கிடைத்தால், அதை அந்தப் பையில் போட்டு எடுத்துச் செல்கிறான். குறைவாகக் கிடைத்தால், அதைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, பையை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுகிறான்.

மவுண்ட் ரோடு ஷோரூம் ஒன்றிலிருந்து, ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் வந்தது. அங்கேயும் கடப்பாரை, மெழுகுவத்தியோடு பையும் கிடைத்தது. எனில், 50,000 ரூபாய் கொள்ளை போனதாக அவர்கள் சொன்னது பொய் என்று யூகித்தார்கள். பிறகு, வெங்கடேசன் என்ற பெயருள்ள அந்தக் கிரிமினல் பிடிபட்டான். அவனை அடித்து, உதைத்து விசாரித்ததில், அங்கிருந்து வெறும் 5,000 ரூபாய் மட்டும்தான் கொள்ளையடித்ததாகச் சொன்னான்.

எனவே, எம்.ஓ. (மோடஸ் ஆபரேண்டி) என்பது சில கேஸ்களில் ரேகையைவிட அதிக அளவு உபயோகமாகிறது.

பூட்டை உடைத்து உள்ளே செல்வார்கள் சிலர். வேறு சிலரோ ஒரு கட்டிங் பிளேயரால், பூட்டு தொங்கும் கொண்டாணியை நறுக்கிச் சுலபமாக உள்ளே செல்வார்கள். பூட்டு திறக்கப்படாமலே கீழே விழுந்து கிடக்கும்.

எனவே, ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்கள் போனால் அவர்கள் அங்கே முதலில் பார்ப்பது பூட்டு எப்படித் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது உடைக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான். கள்ளச் சாவி போட்டுத் திறந்திருக்கிறானா, பின்னை வளைத்து உபயோகித்துத் திறந்திருக்கிறானா, கொண்டாணியை உடைத்திருக்கிறானா, ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்திருக்கிறானா, அல்லது கம்பிகளை முறுக்கி வளைத்துப் போயிருக்கிறானா, அல்லது ஜன்னலின் ஸ்க்ரூ ஆணிகளைத் திருகிக் கழற்றி ஜன்னலையே பெயர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறானா என்றெல்லாம் பார்ப்பார்கள்.

ஜவுளிக்கடைகளில் பெரும்பாலும் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடிப்பவர்கள்தான் அதிகம். இதிலும் எம்.ஓ. உண்டு. குறிப்பிட்ட ஒரு கிரிமினல் எப்போதும் சதுரமாகத்தான் ஓட்டை போட்டு உள்ளே செல்வான். சிலர் வட்டமாக ஓட்டை போடுவார்கள். அந்த ஓட்டை கூட ஆளுக்கு ஏற்ற மாதிரி குறிப்பிட்ட சைஸ்களில்தான் இருக்கும். அதை வைத்தே இன்னார்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட முடியும். சிலர் ஆக்ஸா பிளேடு வைத்து அறுத்து, செங்கல் செங்கல்லாக உருவி, துவாரம் உண்டு பண்ணி உள்ளே செல்வார்கள்.

இதையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும்.

ஒரு குற்றம் நடந்தால், ‘பிரசர்வேஷன் ஆஃப் தி ஸீன் ஆஃப் க்ரைம்’ என்பது ரொம்ப முக்கியம். அதாவது, தடயங்களைப் பாதுகாத்தல். வெளிநாடுகளில் இது கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் ஒரு குற்றம் நடந்தால், ‘ஸீன் ஆஃப் க்ரைம்; டோண்ட் டிஸ்டர்ப்!’ என்று வெளியே போர்டு வைத்து விடுவார்கள். இங்கே நிலைமை தலைகீழ்.

குற்றம் நடந்த இடத்துக்கு முதலில் தடயவியல் நிபுணர்களும், ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டும்தான் போக வேண்டும். பிறகுதான் போலீஸ் அங்கே நுழைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, இங்கே முதலில் திபுதிபுவென பத்துப் பதினைந்து போலீஸார் நுழைந்து, பொருள்களைப் புரட்டிப் பார்த்து, இறந்து போனவரின் உடலைத் தொட்டுப் புரட்டிவிடுகிறார்கள். அப்புறம் கைரேகை நிபுணர்கள் போய் ஃபிங்கர் பிரின்ட்ஸ் எடுத்தால், எல்லாம் போலீஸ்காரர்களின் கைரேகைதான் கிடைக்கிறது. இதனாலேயே இங்கே பல குற்றவாளிகள் தடயம் கிடைக்காமல் தப்பிவிடுகின்றனர்; பல கேஸ்கள் முடியாமல் இருக்கின்றன.

தவிர, அங்கேயுள்ள வாசனை ரொம்ப முக்கியம். குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளியின் வாசனை இருக்கும். போலீஸ் நாயை அழைத்துச் செல்வ்து அதற்காகத்தான். போலீஸ்காரர்கள் நுழைந்து அவர்களின் வாசனையைப் பரப்பிவிட்டால், போலீஸ் நாய் அவர்களையேதான் பிடிக்கும்.

ஒரு கேஸில், பெண் டாக்டர் ஒருவர் காரில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரியே அவசரப்பட்டுக் கார் கதவைத் திறந்து, இறந்து கிடப்பவரின் உடலைப் பார்த்துவிட்டுக் கதவை மூடினார். பிறகு வந்த விரல் ரேகை நிபுணர்கள் பொடிகளைத் தூவி, “சக்ஸஸ் சார்! கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. கல்ப்ரிட் அகப்பட்டுக்கிட்டான்!” என்றனர். “உடனே அவனை மடக்கிப் பிடிங்க” என்று பரபரத்தார் கமிஷனர்.

ஆனால், எடுக்கப்பட்ட கைரேகை எந்தக் குற்றவாளியின் ரேகையுடனும் பொருந்தவில்லை. அது பெரிதாகப் பிரின்ட் போடப்பட்டு, மற்ற ஸ்டேட்களில் உள்ள குற்றவாளிகளின் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இந்தியா முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. பல நாள்கள் முயற்சி செய்தும் பலன் இல்லை. “எப்படிய்யா கிடைக்காம போகும்? ரேகையைச் சரியா எடுத்தீங்களா?” என்று கேட்டுக் கடுப்படித்தார் கமிஷனர். ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டில் இருந்த ஒருவருக்கு மட்டும் ஒரு சந்தேகம். அதைச் சொல்லியும் விட்டார். “சார்! எங்களுக்கு முன்னே ஏ.எஸ்.பி அங்கே வந்து பார்த்தார். இந்த ரேகை அவர் ரேகையோடு பொருந்தும்னு நினைக்கிறேன்” என்றார். அதன்படி ஏ.எஸ்.பி-யின் ரேகையை எடுத்துப் பார்க்க, இரண்டும் கச்சிதமாகப் பொருந்தின.

தங்களை அநாவசியமாகக் கடுப்படித்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக, இந்தியாவில் உள்ள எல்லா ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டுகளுக்கும் உடனே ஒரு மெயில் அனுப்பினார்கள். “அந்தக் குறிப்பிட்ட கொலைக் கேஸில் எடுத்து அனுப்பப்பட்ட கைரேகை இங்கே ஏ.எஸ்.பி-யின் கைரேகையுடன் பொருந்துகிறது. எனவே, அதைத் தயவுசெய்து இக்னோர் செய்யவும்” என்று தகவல் அனுப்பிவிட்டார்கள்.

தடயங்கள் எத்தனை முக்கியம், அதுபற்றிய விழிப்பு உணர்ச்சி இங்கே காவல்துறையில் பணி புரிகிறவர்களுக்கே இல்லை என்பதை விளக்க, ஆதங்கத்துடன் இந்த உதாரணத்தைக் குறிப்பிட்டார் வரதராஜன்.

கைரேகைக் கூடம் இங்கே சென்னையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதைப் பெருமையுடன் பார்த்தோம். ஆனால், இதில் உள்ள ஒரு சோகம் என்னவென்றால், அதற்குப் பின் வெளிநாடுகளில் எல்லாம் இந்தத் துறை மளமளவென வளர்ந்துவிட்டது. இங்கே கறுப்பு, வெள்ளைப் பொடிகள் என இரண்டு மூன்றை மட்டுமே வைத்து ஒப்பேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்களாக பாரிஸ் கார்னர் போய் கெமிக்கல் வாங்கிக் கலந்து தயாரித்துக் கொள்கிறார்கள். வெளிநாடுகளில் பதினைந்து பதினாறு வகையான கெமிக்கல்கள் நடைமுறை உபயோகத்தில் உள்ளன. இதனால், அங்கே துருப்பிடித்த இரும்பு, வாழைப் பழத் தோல், செங்கல் மீதெல்லாம் பட்ட கைரேகைகளைக்கூட பிரிண்ட் எடுக்க முடிகிறது.

ஓர் அறையில் குற்றம் நடந்தால், அங்கே அறையைப் பூட்டிவிட்டு உள்ளே அயோடின் ஃப்யூமை (புகை) பரப்புவார்கள். சுவர்களில், பீரோக்களில் பதிந்துள்ள ரேகைகள் தெளிவாகப் புலப்படும். அங்கே டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இங்கேயோ, 1902-ல் கண்டுபிடித்த அதே இரண்டு மூன்று பொடிகளை மட்டும் வைத்து கதை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

“மத்திய அரசு ஆண்டுதோறும் காவல்துறை வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அதை உபயோகிக்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அந்தத் தொகையில், ஃபிங்கர் டிபார்ட்மென்ட்டுக்குத் தேவையான இப்படியான பொடிகளையும் உபகரணங்களையும் வாங்கிக் கொடுங்கள் என்று அரசுக்கு எழுதிக் கேட்டேன். அவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் வரதராஜன்.

தனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ பற்றியும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த சில கேஸ்கள் பற்றியும் வரதராஜன் சொன்னவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

.

Saturday, April 24, 2010

சில சுவாரசியமான கேஸ்கள்!

தற்கு முந்தைய ‘கடவுள் கொடுத்த முத்திரை’ பதிவைப் படித்துவிட்டீர்களா? சரி, திரு.வரதராஜன் (சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி) பேசுவதைத் தொடர்ந்து கேட்போம், வாருங்கள்!

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விரல் ரேகை எவ்வளவு உதவுகிறது என்பதை விளக்க, அவர் சில உதாரண சம்பவங்களை விவரித்தார்.

விரல் ரேகைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபடுகின்றன என்பதை அடிப்படையாக வைத்துக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதெல்லாம் சரி; ஆனால், பொருள்களின்மீது கைரேகை எப்படிப் படிகிறது? அவற்றை எப்படித் துல்லியமாகப் பார்க்கிறார்கள் விரல் ரேகை நிபுணர்கள்?

விரல் நுனிகளில் நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள் அதிகம். அவை வியர்வையைச் சுரந்துகொண்டே இருக்கின்றன. உடனுக்குடன் அது ஆவியாகிக்கொண்டே இருப்பதால், நம்மால் அதை உணர முடிவதில்லை. கட்டை விரலால் மற்ற விரல்களை லேசாக வருடிப் பார்த்தால், எப்போதும் ஒரு பிசுபிசுப்பு இருப்பதை உணரலாம். அது வியர்வைதான். இதுதான் நாம் ஒரு பொருளைத் தொடும்போது அதன் மீது ரேகையாகப் பதிகிறது.

ஒரு திருட்டோ, கொள்ளையோ நடந்த இடத்துக்கு முதலில் சோதனையிட வருவது காவல்துறையைச் சேர்ந்த விரல் ரேகை நிபுணர்கள்தான். அவர்கள் வந்ததும் அங்கிருப்பவர்களைக் கேட்கும் முதல் கேள்வி, “யாராவது இங்குள்ள பொருள்களைத் தொட்டீர்களா? இங்கே எந்தப் பொருளாவது இடம் மாறியிருக்கிறதா?” என்பதுதான். “ஆமாம் சார், இந்த டம்ளர் இங்கே டீபாயில் இருந்தது; இப்போது அந்த ஜன்னல் கட்டையில் இருக்கிறது” என்று அவர்கள் ஏதாவது குறிப்புக் கொடுத்தால், திருடனின் விரல் ரேகை அந்தப் பொருளின்மீது பதிந்திருக்கும் என்று யூகித்து, அதன் மீதுள்ள ரேகையைப் பதிவெடுக்க முனைவார்கள்.

டிட்டானியம் டையாக்ஸைடு, ஸிங்க் ஆக்ஸைடு போன்ற பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தேவைக்கேற்ப கலந்து, குறிப்பிட்ட பொருளின்மீது தூவினால், அதில் படிந்திருக்கும் ரேகை(வியர்வை ஈரம்)யில் ஒட்டிக்கொண்டுவிடும். பிறகு ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால், விரலின் ரேகை அமைப்பு துல்லியமாகத் தெரியும். சக்கர ரேகை, சுழல் ரேகை என ஏழெட்டு ரகங்களுக்குள், உலகில் உள்ள லட்சக்கணக்கான கிரிமினல்களின் ரேகைகளையும் வகைப்படுத்தியுள்ளார்கள். பிறகு, ஒவ்வொன்றையும் சிறு சிறு உள் பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போய், மொத்தமாக ஒரு ஆயிரம் கைரேகைகளோடு ஒப்பிட்டால் போதும் என்று தேடுதல் வட்டத்தைச் சுருக்கி, குறிப்பிட்ட ரேகை எந்தக் குற்றவாளியினுடையது என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

கண்ணாடி போன்ற வழவழப்பான பகுதிகளில் படும் கைரேகை, பேப்பர் போன்ற வெள்ளையான பரப்பில் பதியும் கைரேகை, கறுப்பான பொருள் மீது பதியும் கைரேகை, பல வண்ணமயமான பொருள் மீது பதியும் கைரேகை, இரும்பு போன்ற கடினமான பொருள்கள்மீது, துணிகள் மீது என ரேகை பதியும் பொருள்களுக்கேற்ப தேவையான ரசாயனப் பொருள்களைக் கலந்து ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்களே ஒரு கலவையை உருவாக்கித் தெளிக்கிறார்கள். பல வண்ணமயமான பொருள்கள் மீது ரசாயனக் கலவையைத் தெளித்தால் மட்டும் போதாது; அதன்மீது அல்ட்ராவயலட் ஒளியைப் பாய்ச்சினால், ரேகை துல்லியமாக மின்னுவது தெரிகிறது (இதையெல்லாம் எங்கள் முன் டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பித்தார் வரதராஜன்).

“சரி, இப்படிப் பொருள்களின் மீது பதியும் ரேகை எவ்வளவு நாள் இருக்கும்?” என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“அது பல விஷயங்களைப் பொறுத்தது. கண்டிஷன் ஆஃப் த ஆப்ஜெக்ட்: கண்ணாடி போன்ற வழவழப்பான தளம் கொண்ட பொருள்களில் பதியும் ரேகைகள் பல மாதங்கள் வரை இருக்கும். அதுவே பேப்பரில் பதியும் ரேகை அரை மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்காது. கண்டிஷன் ஆஃப் த க்ளைமேட்: மழைக் காலத்தில் வியர்வை அதிகம் சுரக்காது. எனவே, மழைக் காலத்தில் பதியும் ரேகை பலவீனமாக இருக்கும். சீக்கிரமே மறைந்துவிடும். வெயில் காலத்தில் பதியும் ரேகை நீண்ட நாள் இருக்கும். கண்டிஷன் ஆஃப் த பாடி: நமது வியர்வையில் ஃபேட்டி ஆசிட் உள்ளது. சிலருக்கு அதன் பர்சன்டேஜ் மிக அதிகமாக இருக்கும்; சிலருக்கு மிகக் குறைவாக இருக்கும். அதிகமாக உள்ளவரின் ரேகை துல்லியமாகப் பதிந்து, நெடுநாட்களுக்கு இருக்கும்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு திருட்டுச் சம்பவம். ஒரு வீட்டில், ஒரு குடத்தில் போட்டு வைத்திருந்த நகைகளைக் கொள்ளையடித்தவன், குடத்தில் தன் கைரேகை பதிந்திருக்கும் என்று அதைக் கிணற்றில் போட்டுவிட்டுப் போய்விட்டான். ஆறு மாதம் கழித்து, கிணற்றுக்குள் குடம் இருப்பது தெரிந்து, அதை வெளியே எடுத்துக் காய வைத்துப் பார்த்தபோது, ரேகை துல்லியமாகக் கிடைத்தது. திருடனும் பிடிபட்டான்” என்றார் வரதராஜன்.

ல ஆண்டுகளுக்கு முன், உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலேயே ஒருவன் புகுந்து திருட முனைந்து, எதுவும் கிடைக்காமல் தப்பி ஓடிவிட்டான். வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று அவரும் பேசாமல் இருந்துவிட்டார். இரண்டாம் முறையும் அவரது வீட்டில் திருட வந்தான் அவன். அப்போதும் ஒன்றும் கிடைக்காமல் ஓடிப் போனான். அந்த போலீஸ் அதிகாரி, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, உடனே நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார். அவர்களும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மூன்றாம் முறையும் வந்த அந்தத் திருடன், அதிகாரியின் வீட்டிலிருந்து தங்க வளையல், கேமரா போன்றவற்றைத் திருடிக்கொண்டு போய்விட்டான்.

அதிகாரிக்குக் கடுப்பான கடுப்பு. லோகல் போலீஸ்காரர்களை செம டோஸ் விட்டவர், இம்முறை ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டைத் துணைக்கு அழைத்தார். சிரமப்பட்டுப் பொடியெல்லாம் தூவி கைரேகை எடுக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்தத் திருடன் ஒரு பைப்பைப் பிடித்துக்கொண்டு ஏறி, சுவர் தாண்டிக் குதித்துப் போயிருக்கிறான். கிரீஸ் படிந்த அவனது கைரேகை, அந்த பைப்பில் துல்லியமாகப் பதிந்திருந்தது. அவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்லம் ஏரியா இருந்தது. அங்கே சென்று சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அதில் ஒருவனின் கைரேகையோடு இந்தக் கைரேகை பொருந்தியது.

“ஏண்டா... போலீஸ் அதிகாரி வீட்டிலேயே திருடுற அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துடுச்சா?” என்று அவனைக் கேட்டால், “ஐயா! வெளியே ஐயாவோட பேர் மட்டும்தாங்க போர்டுல போட்டிருந்துச்சு. போலீஸ் அதிகாரின்னு போட்டிருந்தா, சத்தியமா இங்கே திருடியிருக்க மாட்டேனுங்க” என்றான் அவன் அப்பிராணியாக.

பிறகு அந்த அதிகாரி, அவன் ஜெயில் தண்டனை முடிந்து வருகிற வரைக்கும் அவனது குடும்பத்துக்குத் தன் கையிலிருந்து மாதா மாதம் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். அவனுக்கு இரண்டு மகன்கள். இருவரின் படிப்புச் செலவுக்கும் உதவினார். அவன் ஜெயிலிலிருந்து வந்த பின்பு, அவனுக்கு வாட்ச்மேன் வேலை வாங்கித் தந்தார். அவனும் திருட்டுத் தொழிலை விட்டு, நல்லபடியாகக் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அது தனிக் கதை.

15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு எக்ஸ்-மினிஸ்டரின் பி.ஏ. வீட்டில் புகுந்து வி.சி.ஆரைத் திருடிக்கொண்டு போய்விட்டான் ஒருவன். கைரேகை நிபுணர்கள் வந்து பார்த்து, கிடைத்த ரேகைகள் பழைய குற்றவாளி கவுஸ் பாஷா என்பவனின் ரேகையோடு ஒத்துப் போகிறது என்றார்கள். விஷயம் என்னவென்றால், அந்த கவுஸ் பாஷா அப்போது ஜெயிலில் இருந்தான்.

கமிஷனர் குழப்பமாகி, ‘என்னய்யா சொல்றீங்க? அவன் ஜெயில்ல இருக்கான். அவன் ரேகையோடு பொருந்திப் போகுதுன்னா என்ன அர்த்தம்?’ என்று கடுப்படிக்க, “அதுக்கு நாங்க என்ன சார் செய்ய முடியும்? இங்கே கிடைச்ச ரேகை கவுஸ் பாஷா ரேகையோடு ஒத்துப் போகுது. அதைத்தான் நாங்க சொல்ல முடியும்” என்று இவர்கள் சொல்ல, விசாரணை தொடர்ந்தது.

கடைசியில் என்ன நடந்திருக்கிறது என்றால், மேற்படி திருட்டு நடந்த நாளன்று கவுஸ் பாஷாவை கோர்ட்டில் சப்மிட் செய்ய அழைத்துப் போயிருக்கிறார்கள். காத்திருந்த நேரத்தில் இவன் ‘பசிக்கிறது. போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று தனக்குக் காவல் இருந்த கான்ஸ்டபிள்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஒரு மணி நேரத்தில் போய் வி.சி.ஆரைத் திருடிப் பதுக்கிவிட்டு, நல்ல பிள்ளையாக வந்துவிட்டிருக்கிறான். ரேகை மட்டும் இல்லையென்றால், அவனை யாரும் சந்தேகப்பட்டிருக்கவே முடியாது.

ன்னொரு விசித்திர கேஸ்... 25 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம். எல்லார் வீட்டிலும் தினம் தினம் திருடு போய்க்கொண்டே இருந்தது. ஜன்னலோரம் வைத்த மோதிரத்தைக் காணோம், மணிபர்சைக் காணோம், மேஜையில் வைத்த நகைப் பெட்டியைக் காணோம் என எக்கச்சக்க புகார்கள் வந்துகொண்டே இருந்தன. எல்லாமே பட்டப்பகலில் நடந்த திருட்டுக்கள். பூட்டை உடைத்து, ஜன்னலை வளைத்து என எந்த முயற்சியும் நடக்கவில்லை. ஆனால், பலரது வீடுகளில் திருட்டுப் போயிருந்தன.

காவல்துறைக்குப் பெரிய குழப்பம். கைரேகை நிபுணர்களை வைத்து ரேகை எடுத்துப் பார்த்தபோது, குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது. கிடைத்த ரேகை ஒரு நாலு வயதுக் குழந்தையின் ரேகை போன்று சிறியதாகக் காணப்பட்டது. குழந்தையைப் பழக்கி யாரேனும் திருடுகிறார்களோ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டது காவல்துறை.

குற்றவாளி யார்?

பதிவு நீண்டுகொண்டே போவதால், மீதி அடுத்த பதிவில்!

.

கடவுள் கொடுத்த முத்திரை!

காவல்துறையில் விரல் ரேகைப் பிரிவில் 20 வருடங்கள் பணியாற்றிவிட்டுப் பின்பு சில பல காரணங்களால் பதவியை ராஜினாமா செய்து, சொந்தமாக ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ என்கிற துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பவர் திரு. வரதராஜன். இவர், சென்ற புதன்கிழமையன்று விகடன் அலுவலகத்துக்கு விருந்தினராக வந்து எங்களிடையே உரையாற்றினார். அருமை... அருமை... மிக அருமை!

அவர் எங்களிடையே பேசிய இரண்டு மணி நேரமும், பரபரப்பான கிரைம் படம் பார்ப்பது போல, அற்புதமான ஒரு நாவலைப் படிப்பது போல இருந்தது. இன்னும் இன்னும் அவர் தன் அனுபவங்களைச் சொல்ல மாட்டாரா என்று இருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், இரண்டு வார இடைவெளியில் மீண்டும் வந்து எங்களோடு பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி!

அவர் சொன்ன எந்த விஷயத்தையும் பதியாமல் விட விரும்பவில்லை. எனவே, ஒரே பதிவில் இயலவில்லை என்றாலும், அடுத்தடுத்து இரண்டு மூன்று பதிவுகளில் அவர் சொன்ன பல சுவாரசியத் தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ரேகையில் தொடங்குகிறார் வரதராஜன்...

ரேகையைப் பொறுத்தவரை கைரேகை, விரல் ரேகை என இரண்டு விதம் உண்டு. கைரேகை என்பது ஒட்டு மொத்த உள்ளங்கையின் ரேகை. கைரேகை ஜோஸ்யர்களுக்கு உதவக்கூடியது இதுதான். காவல்துறைக்கும் கைரேகை உதவும் என்றாலும், அதிகம் உதவுவது விரல் ரேகைதான்!

விரல் ரேகைகளைப் பொறுத்தவரை ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் விரல் ரேகை போல் இன்னொருவரின் விரல் ரேகை இருக்காது. அது மட்டுமல்ல, ஒருவரின் பத்து விரல்களில் ஒரு விரலின் ரேகை போல் மற்றது இருக்காது. ஒரே தோற்றத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் விரல் ரேகைகள்கூட மாறுபடும். உலகில் மொத்தம் சுமார் 600 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்றால், 6000 விரல்கள்; இந்த 6000 விரல்களின் ரேகைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசப்பட்டிருக்கும்.

விரல்களின் நுனிகளில் ரேகை எப்படி உருவாகிறது? எப்போது உருவாகிறது?

குழந்தை தாயின் வயிற்றில் மூன்று மாதக் கருவாக இருக்கும்போதே விரல் ரேகைகள் உருவாகிவிடுவதாக விஞ்ஞான ஆய்வு சொல்கிறது. குழந்தையின் உடம்பில் நடைபெறும் ரத்த ஓட்டம் விரல் நுனிகளுக்குச் சென்று, அதற்கு மேலே செல்ல முடியாமல் சுழன்று திரும்புவதன் காரணமாகவே (reverse swing) ரேகைகள் உருவாகியிருக்க வேண்டும் என்கிறது ஒரு விஞ்ஞான ஆய்வு.

விரல் ரேகை இப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது எனக் கண்டறிந்து, அதைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முறை உருவானது 19-ம் நூற்றாண்டில்தான்! சரி, அதற்கு முன் குற்றவாளிகளை எப்படி அடையாளம் கண்டனர்?

நான்கு விதமான முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். முதலாவது, உறுப்புகளை வெட்டும் முறை. அதாவது, குற்றம் செய்தவன் என யாராவது நிரூபிக்கப்பட்டால் அவனது கை விரலையோ, கால் விரலையோ வெட்டிவிடுவார்கள். ஒருவனுக்குச் சுண்டு விரலை வெட்டினால், மற்றவனுக்கு நடு விரலை வெட்டுவார்கள். அடுத்தவனுக்குக் கட்டை விரலை வெட்டுவார்கள். சுண்டு விரல் இல்லாதவன் குப்புசாமி, நடு விரல் இல்லாதவன் ராமசாமி, கட்டை விரல் இல்லாதவன் கந்தசாமி என அடையாளம் வைத்துக் கொள்வார்கள்.

இரண்டாவது முறை, சூடு வைத்தல். நெற்றியில், முதுகில், மார்பில் என பழுக்கக் காய்ச்சிய இரும்பால் குற்றவாளிகளின் உடம்பில் ஏதேனும் பிரத்யேக வடிவங்களில் சூடு வைத்து, அதன்மூலம் இன்னார் என்று அடையாளம் கண்டார்கள்.

மூன்றாவது முறை, பச்சை குத்துதல். நான்காவது முறை, சவுக்கடி. முதுகில், தொடையில், கால்களில் என சவுக்கால் ரணகளமாக அடித்து, அதனால் ஏற்படும் வரித் தழும்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு அடையாளம் காணும் முறை.

நாகரிகம் வளராத காலம் அது. எனவே, இந்தக் கொடூர முறைகள்தான் வேறு வழியின்றிப் புழக்கத்தில் இருந்தன. ஆனால், நாகரிகம் வளர வளர, குற்றவாளிகளை அடையாளம் வைத்துக்கொள்ள வேறு ஒரு சிறந்த முறை வேண்டும் என்று யோசித்து, 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உடல் உறுப்புகளை அளத்தல் என்கிற ஒரு முறையைக் கொண்டு வந்தார் பெர்ட்ராண்ட் என்பவர். அதாவது ஒருவன் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனவுடன், அவனது தலைச் சுற்றளவு, நெற்றி அகலம், தோள்களின் அகலம், கை, கால்களின் நீளம், மார்புச் சுற்றளவு என சகலத்தையும் தனித் தனியாக அளந்து குறித்துக் கொள்வார்கள். புதிதாக ஒரு குற்றவாளி அகப்பட்டதும் அவனையும் அளந்து பழைய அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவன் பழைய குற்றவாளியா, புதிய குற்றவாளியா என்று தீர்மானிப்பார்கள். இதற்குப் பெர்ட்ராண்ட் முறை என்று பெயர்.

ஆசாமி இளைத்துப் போதல், பருமனாகிவிடுதல் என அளவுகள் அவ்வப்போது மாறிவிடும் சாத்தியம் உள்ளிட்ட பல குறைபாடுகள் இருந்தாலும், இந்த முறை சாத்விக முறையாக இருக்கவே, பல காலம் நீடித்தது. ஆனால், 1909-ல் இந்த முறைக்கும் வந்தது சிக்கல்.

வில்லியம் ஈஸ்ட் என்கிற ஒரு நீக்ரோ குற்றவாளியைக் கைது செய்தபோது, வழக்கம்போல் அவனை அளக்க வந்தார் ஒரு கான்ஸ்டபிள். அளந்து முடித்ததும், அவன் பழைய குற்றவாளிதான் என்று சொன்னார். அவனோ ‘இல்லை, நான் போலீஸில் சிக்குவது இதுதான் முதல் முறை’ என்று சாதித்தான். கான்ஸ்டபிள் தான் பதிந்து வைத்திருந்த குற்றவாளிகளின் அளவு நோட்டுப் புத்தகத்தைக் காட்டி, இவனுடைய அதே அங்க அளவுகளை ஏற்கெனவே குறித்து வைத்திருப்பதோடு ஒப்பிட்டுக் காட்டினார். ஆச்சரியம், இவனுடைய ஒவ்வொரு அளவும் அவர் குறித்து வைத்திருந்த அளவுகளோடு துல்லியமாக ஒத்துப் போயிருந்தது.

ஆனால், அதில் காணப்பட்ட பெயர் வில்லியம் வெஸ்ட். இப்போது பிடிபட்டவன் பெயர் வில்லியம் ஈஸ்ட். ‘என்ன... இரண்டு பேரின் உடல் உறுப்புகளின் அளவுகளும் துல்லியமாகப் பொருந்திப் போகிறதா! என்ன ஆச்சரியம்!’ என்று அந்தக் காலத்தில் உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவம் இது.

அதன்பின், இந்த அளவீட்டு முறையும் சரியில்லை என்பதால், குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேறு ஒரு முறையைக் கண்டறியும் தேவை உண்டாயிற்று. விஞ்ஞானிகள் கலந்தாலோசித்தனர். அப்போதுதான் அந்த ஈஸ்ட், வெஸ்ட் ஆசாமிகளின் விரல் ரேகையைப் பதிந்து, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். இரண்டும் வேறுபட்டு இருந்தன.

அதன்பிறகு, இது சம்பந்தமாக பலப் பல ஆராய்ச்சிகள், பலப் பல ஒப்பீடுகள் செய்யப்பட்டன. ஒரு விரல் ரேகையும் இன்னொரு விரல் ரேகையும் ஒன்றுபோல் இல்லை என்கிற விஷயம் கண்டறியப்பட்டது. அந்த விஞ்ஞானிகள் குழுவில் இருந்த முக்கிய விஞ்ஞானி ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்போது ஒருவிதமாக இருக்கும் ஒருவரின் விரல் ரேகை, பிறகு வேறு எந்தக் காரணத்தாலாவது மாறிவிட வாய்ப்பு உண்டா என்று கண்டறிய முயன்றார். அதற்காக அவர் தனது விரல்களையே தீயில் சுட்டுப் புண்ணாக்கிக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, காயமெல்லாம் ஆறிய பின்பு, மீண்டும் தன் விரல்களின் ரேகையைப் பதிந்து, முந்தைய தனது விரல் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார். என்ன ஆச்சரியம்..! தீயில் முழுவதுமாகக் கருகி, புதிதாக வளர்ந்த சதையில்கூட ரேகை பழையபடியே அதே அமைப்பில் இருந்தது. கொஞ்சமும் மாறவில்லை.

அன்றிலிருந்துதான், குற்றவாளிகளை அடையாளம் காண விரல் ரேகை முறை பின்பற்றப்பட்டு, இன்று வரை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.

நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது. பத்து வயதில் இருப்பது போல் இருபது வயதில் இருப்பதில்லை; நாற்பது வயதில், அறுபது வயதில், எண்பது வயதில் என நமது தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இரண்டு வயதுக் குழந்தையின் விரல் ரேகைகள்தான், அந்தக் குழந்தைக்கு எண்பது வயதாகும்போதும் இருக்கிறது. அந்த அமைப்பு கொஞ்சம்கூட மாறுவதில்லை.

எனவேதான், இதை ‘கடவுள் கொடுத்த முத்திரை’ என்று வர்ணிக்கிறார்கள் விரல் ரேகை நிபுணர்கள். A seal given by God!

இங்கே தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளத்தக்க செய்தி ஒன்றையும் சொன்னார் திரு.வரதராஜன்.

ரேகை மூலம் அடையாளம் காணும் முறை 1909 முதல் பின்பற்றப்பட்டாலும், அதற்கு முன்பே, 1895-லேயே உலகின் முதல் கைரேகைக் கூடம் சென்னையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிந்து, பாதுகாத்து, அந்த இடத்துக்குப் பொறுப்பாளராக ஒரு போலீஸ் ஆபீசர் நியமிக்கப்பட்டு, அவருக்கு மாதச் சம்பளம் ரூ.15 வழங்கப்பட்டுள்ளது. ‘ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்’டில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்ட ரசீது இன்னமும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

திரு.வரதராஜன் சொன்ன இன்னும் பல சுவாரசியத் தகவல்கள் எனது அடுத்த பதிவில்!

.

Sunday, April 18, 2010

உதயசந்திரனோடு ஒரு நேர்முகம்!

னந்தவிகடன் அலுவலகத்தில், பத்திரிகைப் பணிகளைத் தாண்டியும் பல சிறப்பான விஷயங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது விகடன் நிர்வாகம். தினமும் மாலை வேலைகளில், விகடன் அலுவலகத்தில் இருக்கும் ஹோம் தியேட்டரில் பைசைக்கிள் தீவ்ஸ், சார்லி சாப்ளின் படங்கள், இரானியப் படங்கள், முள்ளும் மலரும் போன்ற தமிழ்ப் படங்கள் எனப் பல அற்புதமான கிளாஸிக் படங்களைத் திரையிடுவது அவற்றில் ஒன்று.

அதே போலவே, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, யாரேனும் ஒரு பிரபல வி.ஐ.பி-யை விருந்தினராக வரவழைத்து, விகடன் அலுவலக மொட்டை மாடியில், அலுவலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றச் செய்வதும் ஒரு சிறப்பான விஷயமாகும். தடயவியல் சந்திரசேகர், இயக்குநர் மிஷ்கின், தமிழருவி மணியன் எனப் பலர் இங்கே வந்து அற்புதமாக உரையாற்றியிருக்கிறார்கள்; தங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிச் சமீபத்தில் வந்திருந்தவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். சுமார் இரண்டு மணி நேரம் அவர் எங்களிடையே உரையாற்றியபோது, நேரம் போனதே தெரியவில்லை. தனது அனுபவங்களை அத்தனை சுவாரசியமாக அவர் அன்று எங்களோடு பகிர்ந்து கொண்டார். மனித மனங்களை வெல்வது எப்படி என்பது அவர் அன்று பேசியதன் சாராம்சம். அவர் பேசிய அத்தனையையும் இங்கே பதிவிட இயலாது எனினும், ஒரு சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற இரண்டு ஊர்கள் பாலமேடு, அலங்காநல்லூர். ஜல்லிக்கட்டுத் தடை விதித்திருந்தார் நீதிபதி பானுமதி. ‘அப்படி ஒரேயடியாகத் தடை செய்ய முடியாது. சில நிபந்தனைகளோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கலாம்’ என்று முறையீடு செய்து அனுமதி உத்தரவு வாங்கியவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் விசாலமாக இருக்கும். அதுவே அலங்காநல்லூரில் அது ஒரு குறுகலான ரோடு. ரிஸ்க் அதிகம். இங்கே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது, வேறு விசாலமான இடம் இருந்தால் இது பற்றிப் பேசலாம் என்று பிடிவாதமாக இருந்தார் உதயசந்திரன். ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட்டில் அனுமதி வாங்கியவரே இவர்தான் என்பதால், ஊர் மக்கள் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு அமைதி காத்தனர்.

அந்தச் சமயத்தில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தள்ளாத கிழவி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தாள். “இதோ பாருங்க, ரெண்டு சொட்டு ரத்தமாவது இந்த இடத்துலதான் சிந்தணும். இல்லாட்டா முனியாண்டி ஒத்துக்க மாட்டான்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அதன்பின் ஊரே அவள் பேச்சை வழிமொழிய, வேறு வழியின்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, அங்கேயே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டியதாயிற்று.

உதயசந்திரன் இதைச் சொல்லிவிட்டு, “பவர் எங்கெங்கேயோ, யார் யார் அதிகாரிங்க கிட்டேயோ, அரசியல் தலைவர்கள் கிட்டேயோ இருக்குன்னு நினைச்சுக்கறோம். ஆனா, பிராக்டிகலா இறங்கிப் பார்த்தா அங்கே, அந்தக் கிழவியை எதிர்த்து யாரும் எதுவும் நடவடிக்கையும் எடுக்க முடியலே! அந்தச் சாமானிய கிழவியின் வார்த்தைக்கு அங்கே அத்தனை பவர்!” என்றார்.

தனது வெற்றிக் கதைகளை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், தான் தோற்ற கதைகளையும் சொன்னார். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற அவர் உறுதியான நடவடிக்கை எடுத்து, அப்படியான பல கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டிருந்தார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவரால் கை வைக்க முடியவில்லை. காரணம், அது கோர்ட் இயங்கி வந்த வாடகைக் கட்டடம். நீதித் துறையே உதயசந்திரனுக்கு எதிர்ப்பாக இருந்தது.

என்றாலும், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காலை 10 மணிக்கு, ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை இடிப்பதற்காக உதயசந்திரன் தமது பரிவாரங்களுடன் சென்றபோது, கோர்ட்டிலிருந்து தடை உத்தரவு வந்துவிட்டது. அந்த இடம் லோகல் கோர்ட் ப்ளீடர் ஒருவருக்குச் சொந்தமானது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அவரே, தன் கட்டடத்தை இடிக்க கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியிருந்தார்.

எனவே, வேறு வழியின்றி அதை மட்டும் விட்டுவிட்டு, மற்ற ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டார் உதயசந்திரன். பொது மக்களிடம் இதற்குப் பெரிய வரவேற்பு!

சில நாட்களுக்குப் பின், உதயசந்திரனுக்கு ஒரு போஸ்ட் கார்டு வந்தது.

“ஐயா! நீங்க ரொம்ப நேர்மையான அதிகாரி. பாரபட்சமில்லாம நடந்துக்கிறீங்க. உங்களை ரொம்பப் பாராட்டுறேன். நான் முதுகுளத்தூர்லேர்ந்து வந்து இங்கே கடை போட்டிருந்தேன். மனைவியின் நகைகளையெல்லாம் வித்து ரூ.40,000 கொண்டு வந்து, இங்கே ஒத்திக்கு ஒரு கடை எடுத்திருந்தேன். எடுத்து 15 நாள்கூட ஆகலை; அதை இடிச்சுப்பிட்டீங்க. நியாயம்தாங்க. ஆனா, நான் வெறுங்கையோட திரும்பி ஊருக்குப் போறேன். கையிலே வேற ஒரு நயா பைசா கிடையாது. என்ன பண்ணப் போறேன்னு தெரியலீங்க. ஆனா, நீங்க நேர்மையான அதிகாரி. நீங்க செஞ்சது சரிதாங்க. உங்களை நான் பாராட்டுறேன்!”

அந்தக் கடிதம் இன்றளவும் தன்னை உறுத்திக்கொண்டு இருப்பதாகச் சொன்னார் உதயசந்திரன். தான் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகிச் செல்லும் வரையில், அந்தத் தடை உத்தரவைத் தன்னால் நீக்க முடியவில்லை என்பதைச் சொன்னவர், “நாம யாருக்காக நம்ம திறமையை, நம்ம மூளையைச் செலவு பண்றோம்னு யோசிக்கிறப்ப, சில சமயம் சங்கடமா இருக்கு. நம்மால முடிஞ்ச வரைக்கும் மைனாரிட்டி மக்கள், அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படணும்னு அன்னிக்கு ஓர் உறுதி எடுத்துக்கிட்டேன்” என்றார்.

மக்களின் சில பண்பாட்டு நாகரிகங்கள் பற்றியும் சொன்னார். அகால மரணம் அடைந்த ஓர் இளைஞனின் வீட்டில் உறவினர்களும் நண்பர்களுமாகத் திரண்டிருந்தனர். திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில், இளம் மனைவியை விதவையாக்கிவிட்டுப் பிரிந்துவிட்டான் 25 வயதே ஆன அந்த இளைஞன். சோகமான சூழல். அப்போது ஒரு மூதாட்டி ஒரு சொம்போடு வெளியே வந்து ஒரு முல்லைப் பூ சரத்தைத் தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு மூலையில் போட்டாள். இன்னொரு முல்லைப்பூச் சரத்தை எடுத்து வேறு ஒரு மூலையில் போட்டாள். மூன்றாவது சரத்தையும் எடுத்துப் போட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள்.

அவள் அப்படிச் செய்ததன் தாத்பரியம் என்ன என்று விசாரித்தார் உதயசந்திரன். “அதுவாங்களா ஐயா! செத்துப் போனவன் ரொம்பச் சின்னவன். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்தான் ஆகுது. அந்தப் புள்ள இப்ப வாயும் வயிறுமா இருக்குது. இன்னும் பல மாசம் கழிச்சுக் குழந்தை பிறக்குறப்போ யாரும் தப்பா ஒரு வார்த்தை பேசிடக் கூடாது பாருங்க. அதே சமயத்துல, அதை இங்கே வெளிப்படையா சொல்றதுக்கான சூழ்நிலையும் இல்லை. அதனால்தான் சூசகமா இப்படிச் சொம்புலேர்ந்து பூ எடுத்துப் போட்டுச் சொன்னாங்க அந்தம்மா!” என்று விளக்கினார் ஒருவர்.

எத்தனை அழகாக, எத்தனை நாசூக்காக ஜனங்கள் சில விஷயங்களைக் கையாள்கிறார்கள் என்பதை விளக்க இந்தச் சம்பவத்தை வியந்து சொன்ன உதயசந்திரன், சில சமயம் பாமர ஜனங்கள் சினிமா மற்றும் டி.வி-க்கு அடிமை போல் நடந்துகொள்வதையும் சில உதாரணங்களோடு சொல்லி விளக்கினார்.

‘பாரதி’ திரைப்படம் பார்க்க தேவி தியேட்டருக்குச் சென்றிருந்தார் உதயசந்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்திலிருந்து தொடங்குகிறது படம். ஒரு மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் பன்னிரண்டே பேர்தான். ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வியோடு தொடங்கும் படம், ஃபிளாஷ்பேக்கில் பாரதியின் கதையை விவரிக்கிறது. முடியும்போது மீண்டும் வருகிறது அந்த இறுதி ஊர்வலக் காட்சி.

வழக்கமாக, ஆரம்பக் காட்சியே மீண்டும் வந்தால், படம் முடிந்துவிட்டது என்று கலையத் தொடங்கிவிடுவார்கள் ஜனங்கள். ஆனால், அந்த இறுதி ஊர்வலக் காட்சி, படம் பார்த்தவர்கள் அத்தனை பேரையும் நெகிழ்த்தியிருக்க, அனைவரும் எழுந்து, அந்தக் காட்சி முடியும் வரை மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினார்கள். இது தன்னை மிகவும் சிலிர்க்கச் செய்தது என்றார் உதயசந்திரன். ஒரு மகா கவிக்கு அந்நாளில் மக்கள் செலுத்த மறந்த கடமைக்குப் பிராயச்சித்தமாக நடந்து கொண்டது போன்று இருந்தது அந்தக் காட்சி என்றார்.

அதே நேரத்தில், இதற்கு நேர்மாறாக, ‘ஜனங்கள் எப்படிப்பட்டவர்கள்’ என்று வகைப்படுத்த முடியாத குழப்பமான சம்பவமும் அன்று நிகழ்ந்தது என்றார்.

பாரதி பட இயக்குநர் ஞான ராஜசேகரனும் அன்றைய தினம் தேவி தியேட்டருக்குப் படம் பார்க்க வந்திருந்தாராம். அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, படத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவரும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தாராம். அந்தக் காட்சியை எதற்காக வைத்தீர்கள், இந்தப் பாடல் வரிகளை பாரதியார் பாடுவது போல் அமைத்தது சரியா என்று ஆக்கப்பூர்வமான கேள்வி-பதில் நிகழ்ச்சியாக இருந்தது அந்த நிகழ்ச்சி. தனது முறை வந்ததும், தானும் கேட்க வேண்டும் என்று உதயசந்திரன் நினைத்துக் கொண்டு இருந்தபோது, நாலைந்து பாமர இளைஞர்கள் இயக்குநரைச் சூழ்ந்துகொண்டு கேட்டார்களாம்... “ஆமா, ஏன் சார் பாரதிக்கு ஒரு ஃபைட் ஸீன்கூட வைக்கலே?”

இவர்களை எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வது என்று, தான் நொந்து போனதாகச் சொன்னார் உதயசந்திரன்.

இன்னொரு சம்பவம்... சென்னையை சுனாமி தாக்கிய தினம், இவர் சென்னை கார்ப்பொரேஷனின் டெபுடி கலெக்டராக இருந்தார். வட சென்னையில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்க மத்திய அரசிலிருந்து ஒரு குழு வந்திருந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் தலைவிரி கோலமாக, அழுது சிவந்திருந்த கண்களோடு வந்திருந்தாள் ஓர் இளம் பெண். காலையில், காலைக் கடன் கழிக்கச் சென்ற தனது தாயையும், அவளோடு சென்ற தனது மகளையும் ஒரே நேரத்தில் சுனாமி வந்து அடித்துக் கொண்டு போய்விட்டது என்று கதறினாள் அவள்.

“சரியா எப்பம்மா சுனாமி வந்துச்சு?” என்று மத்திய அரசுக் குழுவினர் கேட்க, அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் தூக்கிவாரிப் போட வைத்தது. “அதுங்களா... அலையடிச்சு வந்துச்சுங்கய்யா... எப்பன்னா, காலைல டி.வி-யில ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ போடுவாங்களே, அப்பங்கய்யா..!”

ஒரே நேரத்தில் தாயையும் மகளையும் பறிகொடுத்த மகள் சொல்கிற நேரக் கணக்கா இது!

உதயசந்திரன் அன்று எங்களோடு பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள், உண்மையிலேயே எங்களுக்குப் பலவற்றைத் தெளிவு படுத்தின. மக்களில் எத்தனை விதமானவர்கள் இருக்கிறார்கள், அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்றெல்லாம் புரிய வைத்தன.

ஹேட்ஸ் ஆஃப் உதயசந்திரன்!
.

Friday, April 02, 2010

சாகட்டும் சமுதாயம்!

செய்தித் தாள்களைப் பிரித்தாலே பிண வாடை வருகிறது. அந்த அளவுக்கு கொலை, வன்முறை, விபத்துச் சம்பவங்கள். முன்னெல்லாம் ஒரு கொலைச் செய்தியோ, விபத்துச் செய்தியோ வந்தால் அந்த வருடம் பூராவும் அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். பின்னர் இந்தக் கால அளவு சுருங்கி, ஒரு மாத காலம் வரையிலுமாவது சாவுச் செய்தியின் தாக்கம் நீடித்திருந்தது. இப்போது தினம் பத்து கொலைகள், பன்னிரண்டு விபத்துகள்..!

இப்படியான செய்திகளையெல்லாம் படித்துப் படித்து மனசு மரத்துவிட்டது; சொரணை போய்விட்டது. மனித உயிரின் மீதான அக்கறையும், மதிப்பும் அறவே அற்றுப் போய்விட்டது. செய்தித்தாளைப் பிரித்ததுமே சாவுச் செய்தி ஏதேனும் உண்டா என்று தேடிப் போய், அதைத்தான் சுவாரசியமாகப் படிக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மனசு வக்கரித்துப் போய்விட்டது. மனசில் இருந்த ஈரம் மொத்தமும் வறண்டு, பாளம் பாளமாக வெடித்துவிட்டது.

அப்படியும்கூட, என் மனசின் ஒரு ஓரமாக ஒரு சின்ன ஈரக் கசிவு இருந்திருக்கும்போலும்! இந்த வாரத்துச் செய்திகளில் இரண்டு செய்திகள் என்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டன.

ஒன்று: பஸ் படியில் நின்றவர் தடுமாறி டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் விழ, பஸ்ஸின் சக்கரங்கள் அவர் மீது ஏறி, ஸ்பாட்டிலேயே மரணம். வெறுமே உச்சுக் கொட்டிவிட்டு, அந்த பஸ் பயணிகள் மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ள, டிரைவரும் பஸ்ஸை ஓட்டிச் சென்றுவிட்டார்.

அவ்வளவுதானா மனித உயிரின் மதிப்பு?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு போட்டோவைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அமெரிக்காவா, லண்டனா என்று ஞாபகமில்லை; சாலையில் பிளாட்பாரம் ஓரமாக ஒரு குழந்தையின் சடலம் கிடக்க, ஆண்களும் பெண்களுமாகப் பலர் அங்கே போய் வந்துகொண்டு இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் பார்வையாவது அந்தக் குழந்தையின் மீது விழுந்திருக்காது.

‘என்னடா உலகம் இது! நல்லவேளை, நம் நாட்டில் மனித நேயம் இன்னும் அந்த அளவுக்கு வற்றிப் போய்விடவில்லை’ என்று அப்போது நினைத்தேன். அந்த நினைப்பில் இன்றைக்கு மண் விழுந்துவிட்டது.

நாமும் அமெரிக்கா, லண்டன் போல முன்னேறிக்கொண்டு வருகிறோம் என்பதன் அடையாளமாக டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் சம்பவத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானா?

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். டிரைவர்கள் பலர் தொண்டைத் தண்ணி வற்ற, “ஏறி வாய்யா உள்ளே! படியில விழுந்து செத்தா, நீ போய்ச் சேர்ந்துடுவே! நாங்க இல்லே கோர்ட்டு வாசல்ல போய் நிக்கணும்!” என்று கடுப்படித்தும், அவர் ஏதோ தங்கள் உரிமையில், சந்தோஷத்தில் குறுக்கிடுவதாக நினைத்து முறைக்கிற பயணிகளை நான் தினம் தினம் பார்த்து வருகிறேன். தாங்கள் ஏதோ பெரிய சாகசச் செயல் செய்வதாக நினைத்துப் படியில் வீம்புக்குத் தொங்கி வருகிற கல்லூரி மாணவர்களையும் தினசரி பயணத்தில் பார்க்கிறேன்.

இந்த டி.வி.எஸ். சம்பவத்துக்குப் பிறகும்கூட, பஸ்ஸினுள் இடம் இருந்தும், அழும்பாகப் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தவர்களை இன்றைய பயணத்திலும் பார்த்தேன்.

இப்படியான சூழ்நிலையில், இம்மாதிரி விபத்துச் செய்திகளைக் கேள்விப்படும்போது, தவிர்க்க முடியாமல், ‘ஒழியட்டும் சனியன்கள்! நாட்டுக்காவது கொஞ்சம் பாரம் குறையும்!’ என்று ஒரு கொடூர எண்ணம் மனதில் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், சாலையில் யாராவது விழுந்து கிடந்தால், ‘ஐயோ பாவம்!’ என்று ஓடிப் போய்த் தூக்கத் தோன்றும். யாராவது ஓடிப் போய் சோடா கீடா வாங்கி வந்து, அவர் முகத்தில் அடிப்பார்கள். ‘என்னங்க ஆச்சு?’ என்று கனிவோடும் அக்கறையோடும் விசாரிக்கிற ஈர மனசுக் கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். பத்திரமாக அவரை அவரது வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிற பொறுப்பை யாராவது ஒருவர் முன்வந்து ஏற்றுக் கொள்வார்.

அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்றைக்கு யாரைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை; கவலையில்லை. ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என் காரியம் நடந்தால் சரி!’ என்கிற சுயநலம் பெருகிவிட்டது.

அதற்குக் காரணம், எவனும் இங்கே யோக்கியம் இல்லை. யார் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ‘ராஸ்கல்! கொழுப்பெடுத்துப்போய் கண்ணு மண்ணு தெரியாம மூக்கு முட்டக் குடிச்சிருப்பான். அதான், இப்படி விழுந்து கிடக்கிறான். வேணும் இவனுக்கு!’ என்று அருவருப்போடு முகத்தைச் சுளித்தபடி கடந்து போய்விடுகிறார்கள்.

யோசிக்கும் வேளையில், தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டத் தோன்றவில்லை எனக்கு. ஒட்டு மொத்த சமுதாயமே சீரழிந்துகொண்டு இருக்கிறபோது யாரைக் குற்றம் சாட்டுவது?

இரண்டாவது செய்தி: ஆசிரியை திட்டினார் என்று நடுரோட்டில் மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றிக்கொண்டு, கொளுத்திக்கொண்டு இறந்து போன சிறுமி. அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஆறு வயசோ, ஏழு வயசோதான்!

இத்தனைச் சிறிய குழந்தைக்கு கெரஸினைத் தன் மீது ஊற்றிக்கொண்டு இறந்துபோக வேண்டும் என்கிற எண்ணம் வந்தது எப்படி?

டி.வி. சீரியல்கள் செய்கிற பிரெயின்வாஷ்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிற அல்லது தலையில் கெரஸினை ஊற்றி நெருப்பு வைத்துத் தற்கொலை செய்துகொள்கிற சீன் இல்லாத சீரியல் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அந்த ஆசிரியை சற்றுக் கடுமையாகவே திட்டிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு சின்னப் பெண்ணுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுமா? வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கோபித்துக்கொண்டதற்கே ஒரு சின்னப் பெண் தற்கொலை அளவுக்குப் போயிற்றென்றால், இது வளர்ந்த பின்னால் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கும்? போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை? அதைத் தைரியமாக எதிர்கொள்ள அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்காதது யார் தவறு? பெற்றோரின் தவறா? பள்ளிக்கூடங்களின் தவறா? இந்தச் சமுதாயத்தின் தவறா? ஊடகங்களின் தவறா?

தேர்வில் தோற்றால் தற்கொலை; காதலில் தோற்றால் தற்கொலை; வேலை கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை; அடுத்தவன் அவமானமாகப் பேசிவிட்டான் என்றால் தற்கொலை... தற்கொலை, தற்கொலை, தற்கொலை..! எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?

உண்மையில் தங்கள் செயலுக்காக அவமானப்பட வேண்டியவர்கள் யாரும் அவமானப்படுவதில்லை. அவர்கள் மான, அவமானங்களைத் துடைத்துப் போட்டுவிட்டுத் தங்கள் காரியத்தைப் பார்த்துப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்கள் உசுப்புகிற உசுப்பலில், அவமானம் கொள்ளத் தேவையில்லாததற்கெல்லாம் பெரிய மானக்கேடே நடந்துவிட்டாற்போன்று துக்கித்துத் தற்கொலை செய்துகொள்பவர்கள் அப்பாவிகள்தான்!

அதிலும், ஆறு வயசுக் குழந்தையின் தற்கொலை... சே! இதற்காக இந்தச் சமுதாயமே அவமானப்பட்டு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டும்!

.