உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, November 22, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்... கலர்ஃபுல் மலேசியா! - 6

ச்சோ ச்சூ காங்!

சுரேஷ் தம்பதியின் வீடு சாங்கி ஏர்போர்ட்டிலிருந்து காரில் 10 நிமிட தூரத்தில் ‘Simei’ ஏரியாவில் இருக்கிறது. என் மைத்துனர் கண்ணன் வீடு சிங்கப்பூர் வெஸ்ட்டில், ஜுராங் பகுதியில் ‘Choa chu kang drive’ என்னும் ஏரியாவில் உள்ளது. சும்மா பொழுதுபோகாமல், கூகுள் மேப்பில் இருவர் அட்ரஸையும் தட்டி, சேட்டிலைட் வியூ பார்த்தேன். சற்றும் அந்த அனுபவத்தை எதிர்பாராமல், பிரமித்தேவிட்டேன். முப்பரிமாணத்தில் அந்தந்த இடத்திலேயே என்னைக் கொண்டு நிறுத்திவிட்டது கூகுள் மேப். அந்த இரு படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

சுரேஷ் தம்பதியின் வீட்டில் எங்களை வரவேற்ற அந்தச் சீனப் பணிப்பெண்ணின் பெயர் ஜோயன். பிலிப்பைன்ஸில் அவரின் குடும்பம் இருக்கிறது. இங்கே குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு தங்கி, வேலை செய்து வருகிறார். அவருக்கான பிரத்யேக செலவு என்பது இங்கே இல்லையென்பதால், அவரின் மாத வருமானத்தை அப்படியே முழுசாகக் குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுகிறார். இப்படி இங்கே பெரும்பாலான குடும்பங்களில், குடும்பத்தில் ஒருவராகத் தங்கி வேலை செய்யும் பெண்களைப் பார்க்க முடிகிறது. மற்றபடி, காலையில் வந்து பத்துப் பாத்திரங்களை மட்டும் தேய்த்துக் கொடுத்துவிட்டுப் போகும் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் இல்லை.

சுரேஷின் துணைவியார் ஜெயஸ்ரீ சிறந்த சமையல்கலை வித்தகி. வீட்டில் அவரேதான் சமையல். மற்றபடி வீட்டை ஒழுங்குபடுத்துவது, கிச்சனை க்ளீன் செய்வது போன்ற வேலைகளை மட்டும் ஜோயன் செய்கிறார். தமிழ் சரளமாகப் பேச வரவில்லையென்றாலும், பேசுவதைப் புரிந்துகொள்கிறார்.

“சரி, நீங்கள் எல்லாரும் இந்த அறையில் படுத்துச் சற்று நேரம் தூங்குங்கள். 10 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு, உங்கள் நண்பர் வீட்டுக்குச் செல்லலாம்” என்றார் சுரேஷ்.

அப்படியே செய்தோம். ஆனால், தூங்கினோமா இல்லையா என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு மூன்று மணி நேரம் அசதி தீரப் படுத்து எழுந்தோம்.

பல் விளக்கிவிட்டு வந்ததும், டைனிங் டேபிளில் சுடச்சுட டிபன் ரெடியாக இருந்தது. கூடவே, கேசரி இனிப்பும்.

“என்ன, இன்னிக்கு ஏதாவது விசேஷ நாளா? இல்லை, நாங்கள் வந்திருக்கிறதுக்காக கேசரி பண்ணியிருக்கீங்களா?” என்று கேட்டேன்.

“செப்டம்பர் 1, உங்க பையன் பர்த்டே இல்லியா… அதுக்காகத்தான்!” என்றார் ஜெயஸ்ரீ. சட்டென எங்களை நெகிழவைத்தது அந்த அன்பு. அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று சிங்கப்பூரிலிருந்து கிளம்பும்வரை எங்கள்மீது இறுக்கமான வலையாகப் படிந்திருந்தன அந்த அன்பும் அக்கறையும்.

உண்மையில், டிக்கெட் புக் செய்தபோதே இந்தப் ‘பிறந்த நாள்’ விஷயத்தை நாங்கள் கவனித்துவிட்டோம். ஃப்ளைட்டில் ரஜினியின் (என் மகன் ரஜ்னீஷ்) பிறந்த நாளைக் கொண்டாடுவோம், உடன் பயணிப்பவர்களுக்கெல்லாம் சாக்லேட்ஸ் வழங்குவோம், ஆனால், அதற்கு அனுமதிப்பார்களா என்று தெரியவில்லையே என்றெல்லாம்கூட எங்கள் ‘பிக்பாஸ்’ கூட்டத்தில் பேசிக்கொண்டோம். ஆனால், கிளம்புவதற்கு இரண்டு நாள்கள் முன்பு உடல்நிலை எங்களைப் படுத்தியெடுத்ததில் இந்த பர்த்டே விஷயம் அடியோடு மறந்தேவிட்டது. அதனால்தான் ஜெயஸ்ரீ கேசரி வழங்கியபோதுகூட இது சற்றும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனால், அவர்கள் அதை நினைவில் வைத்திருந்து, ரஜினிக்கு பர்த்டே விஷ்ஷஸ் சொன்ன அந்த நொடியிலிருந்து, என் மகளும் மகனும் ஜெயஸ்ரீமீது அத்தனை ப்ரியம் வைத்துவிட்டார்கள். சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் அவர்கள் இருவரும் ஒன்றுபோல, “சிங்கப்பூரைவிட்டு வந்ததுகூட அவ்வளவு வருத்தமாவோ ஏக்கமாவோ தெரியலைப்பா… ஜெயஸ்ரீ ஆன்ட்டியையும் அவங்க ஃபேமிலியையும் விட்டு வந்ததுதான் என்னவோபோல் இருக்கு. ரொம்பவே மிஸ் பண்றோம் அவங்களை!” என்று மனதின் ஆழத்திலிருந்து சொன்னது, ஜெயஸ்ரீ தம்பதியின் அன்புக்குச் சான்று.

டிபன் சாப்பிட்டு முடித்ததும், கிளம்பத் தயாரானோம். “மறுபடியும் சொல்றோம்… அங்கே தங்கற இடத்துல உங்களுக்கு ஏதாவது கஷ்டம்னா, யோசிக்கவே யோசிக்காதீங்க. உடனே இங்க கிளம்பி வந்துடுங்க. ரெண்டொரு நாள்தானே… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!” என்றார்கள். தொடர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு சிங்கப்பூர் டாலர்களை பல டினாமினேஷன்களில் கொடுத்தார் சுரேஷ். அங்கே லோக்கலில் தொடர்புகொள்வதற்காக சிங்கப்பூர் சிம்கார்டு ஒன்றைக் கொடுத்தார் ஜெயஸ்ரீ. கூடவே, நான்கு ஈஸிலிங்க் கார்டுகளையும் தந்தார்.

ஏடிஎம் கார்டு மாதிரி உள்ள இதை வாங்கி வைத்துக்கொண்டால் சிங்கப்பூரில் எம்.ஆர்.டி. ரயிலில், பஸ்ஸில் என எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். மூன்று டாலருக்குக் குறைந்தால், டாப் அப் செய்துகொள்ள வேண்டும். டாப் அப் மெஷின்கள் ஒவ்வொரு எம்.ஆர்.டி. ஸ்டேஷன்களிலும் உள்ளன.

எந்தவொரு ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தாலும், கீழேயே பஸ் ஸ்டாப் இருக்கிற மாதிரியான ஒரு செட்டப் இருப்பதால், சிங்கப்பூரில் போக்குவரத்துக்குப் பிரச்னையே இல்லை. எங்கே வேண்டுமானாலும் சுலபமாகப் போய்விட முடிகிறது. யாரையும் விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் துல்லியமான எம்.ஆர்.டி வழித்தட மேப் வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மொத்தமும் நான்கு வழித்தடங்களால் கவர் செய்யப்பட்டுள்ளது. ஐந்தாவது வழித்தடமும் பூர்த்தியாகும் நிலையில் இருந்தது. நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டுமோ அந்த இடத்துக்கு எந்த வழித்தடத்தில் ரயில் ஏறி, எந்த ஸ்டேஷனில் தடம் மாற வேண்டும் என எல்லாமே துல்லியமாய்க் கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் போயிருந்த சமயத்தில் ‘சிங்கப்பூர் எக்ஸ்போ’ நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தவறாமல், சிங்கப்பூர் எக்ஸ்போவுக்குப் போக விரும்புகிறவர்கள் எங்கே இறங்கி, எந்தத் தடத்தில் வண்டி மாற வேண்டும் எனத் துல்லியமாக, தமிழ் உள்பட நான்கு மொழிகளில் கணினிக் குரல் விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தது.

தரைக்கு அடியில் மூன்று தளங்களில் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர உயரமான எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்கிக்கொண்டே இருந்தோம், அங்கிருந்த நாட்களில் எல்லாம். ஒவ்வொரு பிளாட்பாரத்துக்குள் நுழையும்போதும் டோல்கேட்போல் தடுப்புக் கதவு திறப்பதற்கு, அதன் பிடியில் உள்ள ஸ்கேனரில் நமது ஈஸிலிங்க் அட்டையை வைத்தால், பண இருப்பு எத்தனை உள்ளது என்பது டிஜிட்டலாக ஒளிர்கிறது. பின்பு வெளியேறும்போதும் அதேபோல் வைத்தால், அதுவரை பயணித்ததற்கான தொகையைக் கழித்துக்கொண்டு மீதியைக் காட்டுகிறது. நமது சென்னை மெட்ரோவிலும் இதே பாணிதான் என்று அறிகிறேன். நான் இதுவரை இங்கே மெட்ரோவில் பயணித்ததில்லை.

பஸ்ஸிலும் கண்டக்டர் என்று யாரும் இல்லை. ஏறுகிற வழியிலேயே உள்ள பாக்ஸில் நமது ஈஸிலிங்க் கார்டை வைத்து ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும். இறங்கும்போதும் அதேபோல் செய்தால், அதுவரை பயணித்த தொகை மட்டும் கழிக்கப்படும். மறந்துவிட்டாலோ, அந்த பஸ் செல்லும் கடைசி டெர்மினஸ் வரைக்குமான தொகை கழிக்கப்பட்டுவிடும்.

இந்த விஷயத்தையெல்லாம், கூடவே எங்களுடன் ஒருநாள் வந்து சொல்லிக்கொடுத்தவர் என் மைத்துனர் கண்ணன் அவர்களின் துணைவி கீதா. போன வருடம் பெங்களூரில் நடந்த அவர்களின் மகன் திருமணத்தில் பிஸியாக இருந்தவரை, அதிகம் அறிமுகம் இல்லாத நிலையில் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்ததற்குப் பிறகு இப்போதுதான் முதன்முறையாக இத்தனை அணுக்கமாகப் பார்க்கிறோம்; பழகுகிறோம். ஆனால், புதியவர் என்கிற எண்ணமே தோன்றாதவாறு மிக நீண்ட நெடுங்காலம் பழகியவர்போன்று, கண்ணன் தம்பதி எங்களை வரவேற்று, அன்புடன் உபசரித்தார்கள்.

அன்பு, அக்கறையில் சுரேஷ்-ஜெயஸ்ரீ தம்பதியும் கண்ணன்-கீதா தம்பதியும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. “அங்கே தங்கற இடத்துல உங்களுக்கு ஏதாவது கஷ்டம்னா, யோசிக்கவே யோசிக்காதீங்க. உடனே இங்க கிளம்பி வந்துடுங்க” என்று சுரேஷ் தம்பதி சொன்ன அதே வார்த்தைகளை இங்கே கண்ணன் தம்பதியும் வார்த்தை மாறாமல் சொன்னது ஓர் ஆச்சர்யம்!

உண்மையில், எங்களின் சிங்கப்பூர் பயணம் திட்டமிட்டபடி வெற்றிகரமாகவும் இனிமையாகவும் நடந்து முடிந்தது இந்த இரு தம்பதியின் அன்பான கவனிப்பால்தான் என்பதில் சந்தேகமில்லை.

சுரேஷ் கேப் புக் செய்தார். இங்கேயுள்ள உபர் அங்கேயும் உள்ளது. அது தவிர, Grab என்னும் கேப் சர்வீஸும் உள்ளது. புக் செய்த 10 நிமிடங்களில் கேப் வந்துவிட்டது.

கடைசி மூன்று நாள்களுக்கான எங்களின் துணிமணிகளை மட்டும் ஒரு ட்ராவல் பேகில் போட்டு இங்கேயே வைத்துவிட்டு, மற்றவற்றை எடுத்துக்கொண்டு, மீண்டும் 6-ம் தேதி சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

ஜுராங் பகுதியில் உள்ள ‘ச்சோ ச்சூ காங் டிரைவ்’ முகவரியை டிரைவரிடம் மொபைலில் காட்டியதும், அதை அவர் தன் மொபைலில் ஏற்றி, ஜி.பி.ஆர்.எஸ்ஸில் வழி தெரிந்துகொண்டு, காரைக் கிளப்பினார்.

காலையில் சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்து இறங்கியதுமே கண்ணனின் மொபைலுக்குத் தொடர்புகொண்டு, இங்கே நண்பரின் வீட்டில் சிறிது நேரம் தங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு, 12 மணிக்குள் அங்கு வந்துவிடுகிறோம் என்று சொல்லியிருந்தேன். டாக்ஸி கிளம்பியதும் மீண்டும் அவருக்கு போன் செய்து வந்துகொண்டிருப்பதைத் தெரியப்படுத்தினேன்.

மதியம் 1 மணி சுமாருக்கு கண்ணன் அவர்களின் இல்லத்தை அடைந்தோம். அங்கே…


(பயணம் தொடரும்)

Sunday, November 12, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்... கலர்ஃபுல் மலேசியா! - 5

சிங்கப்பூர் எங்களை அன்புடன் வரவேற்றது!

முதல் வெளிநாட்டுப் பயணம். அந்தப் பரவசமும், விமான நிலையச் சூழலும், கண்ணாடிக் கதவு வழியே வெளியே தெரிந்த இண்டிகோவும், விமானத்துள் ஏறி அமர்ந்தபோது உண்டான சந்தோஷமும் சேர்ந்துகொண்டு, எங்கள் உடல்நலக் குறைவை சற்று மறந்து இருக்கும்படிச் செய்தன.

டிக்கெட்டில் போட்டிருந்தபடியே மிகச் சரியாக இரவு 9:50-க்கு ‘இண்டிகோ’ சுறுசுறுப்பாகி, உயிர்த்தெழுந்தது. ஏர்ஹோஸ்டஸ் மூவரில் இருவர் விமானத்தின் இரு ஓரங்களிலும், ஒருவர் மையமாகவும் பொம்மைபோல் நின்றபடி, காதுகேளாதவருக்கான செய்தி வாசிப்பாளர்கள்போல சைகையாலேயே, பெல்ட் அணிவித்துக்கொள்ளும் முறை பற்றியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ஏர்பேகை எப்படி எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், மொபைல்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கினார்கள்.

‘ர்ர்ர்ரும்ம்ம்ம்ம்ம்…’ என்று உறுமியபடி மெதுவாக நகரத் தொடங்கியது ‘இண்டிகோ’. அரைவட்டமாகச் சுற்றி வந்து, ரன்வேயில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின்பு ‘க்ரக்… க்ரக்… க்ரக்…’ என்று சிலிர்த்துக்கொண்டு, முன்னைக்காட்டிலும் பெரிதாகச் சத்தம் எழுப்பியபடி தடதடவென்று வேகம் எடுத்து, ரன்வேயில் ஓடியது. குட்டி வட்ட ஜன்னல் வழியே கலர் கலர் விளக்குகளாய் சென்னை விமான நிலையம் கடந்துபோனது.

படு வேகமெடுத்து ஓடிய இண்டிகோ, சில நொடிகளில் தரையுடனான தன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டதை உணர முடிந்தது. கிடுகிடுவென விமானம் உயரே, உயரே, உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கியது. அதன்பின்பு சுற்றிலும் இருள்.

மனசுக்குள் குதூகலம் நிரம்பி வழிந்தது. சின்ன வயசு சிங்கப்பூர்க் கனவு இதோ நிறைவேறிக்கொண்டே இருக்கிறது.

இங்கே ஒரு சின்ன வேடிக்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சிங்கப்பூர் போய்வருவதற்கான டிக்கெட் இ-மெயிலில் கிடைத்தபோது, முதல் பார்வையில் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டு, பின்பு சுதாரித்துத் தெளிவு பிறந்தது.

இங்கே சென்னையில் 9:50-க்குக் கிளம்பும் விமானம் அங்கே சிங்கப்பூரில் விடியற்காலை 4:20-க்குத் தரையிறங்குகிறது. ஆறரை மணி நேரக் கணக்கு. அதுவே சிங்கப்பூரில் விடியற்காலை 5:40-க்குக் கிளம்பும் விமானம் இங்கே சென்னையில் காலை 7:10-க்கெல்லாம் தரையிறங்கிவிடுகிறது. அதாவது, பயணம் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே! எப்படி இது சாத்தியம்?

சிம்பிள். நமக்கும் சிங்கப்பூருக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம். இங்கே காலை 7 மணி என்றால், அங்கே காலை 9:30 மணி. எனவே, இங்கே 9:50-க்குக் கிளம்பும் விமானம் 4 மணி நேரம் பறந்து, அங்கே நம் கணக்குப்படி நடுநிசி 1:50-க்கு லேண்ட் ஆகிறது. ஆனால், சிங்கப்பூர் நேரப்படி அது 4:20 மணி. அதேபோல், அங்கே சிங்கப்பூர் நேரப்படி 5:40-க்குக் கிளம்புகிற விமானம் 4 மணி நேரம் பறந்து, இங்கே சென்னையில் சிங்கப்பூர் நேரப்படி 9:40-க்கு லேண்ட் ஆகிறது. அதாவது, நம் சென்னை நேரப்படி அப்போது காலை 7:10-தான்.

அடிக்கடி விமானப் பயணப் பயணமாக வெளிநாடு செய்பவர்களுக்கு இதொன்றும் புதிய விஷயமல்ல. முதன்முறையாக, நேர வித்தியாசமுள்ள வெளிநாட்டுக்குப் பயணப்படுகிறோம் என்பதால், எங்களுக்கு இது சற்று வேடிக்கையாக இருந்தது. அவ்வளவுதான்!

காலை 4:20-க்கு அங்கே சிங்கப்பூரில் சென்று இறங்கினோம். ஏர்போர்ட்டுக்குள் வந்து எங்கள் லக்கேஜ்களைப் பொறுக்கிக்கொண்டு, இமிகிரேஷன் க்யூவில் நிற்கும்போது, விமான நிலையத்தைச் சுற்றிலும் கண்களால் துழாவினேன். பெரிய எழுத்தில் ‘நல்வரவு’ என அழகு தமிழில் வரவேற்றது சிங்கப்பூர். தமிழன் என்கிற முறையில் எனக்கு அது பெருமையாகவே இருந்தது.

சிங்கப்பூர் அரசு மொழிகளில் தமிழும் ஒன்று. மற்றவை ஆங்கிலம், மாண்டரின் மற்றும் மலாய். ஏர்போர்ட் மட்டுமல்ல, எம்.ஆர்.டி ரயில்களில், பஸ்களில் என எல்லா இடங்களிலும் அழகு தமிழில் அறிவிப்புப் பலகைகள் இருப்பதைப் பார்த்தேன். தவிர, ரயில்களில் அடுத்த ஸ்டேஷன் நெருங்குவதை அறிவிக்கும் குரல், நல்ல திருத்தமான உச்சரிப்பில் அழகு தமிழில் ஒலிக்கிறது.

‘நல்வரவு’ போர்டை ரசித்துக்கொண்டே தலையைத் திருப்பியபோது, கண்ணாடிக் கதவுக்கு வெளியே திரு.சுரேஷ், அவரின் மனைவி திருமதி ஜெயஸ்ரீ இருவரும் நின்று கையசைத்தது தெரிந்தது. பதிலுக்கு நாங்களும் கையசைத்தோம்.

வெளியே வந்ததும், இரண்டு டாக்ஸி பிடித்தார் சுரேஷ். இரண்டும் தாராள இட வசதியோடு பெரிய சைஸ் கார்களாகத்தான் இருந்தன. 

“ஏன், ஒரே ஒரு டாக்ஸி போதாதா? அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்து போய்விடலாமே?” என்றேன்.

“இல்லை. இங்கெல்லாம் ஸ்ட்ரிக்டாக நாலு பேருக்கு மேல் ஏற்றமாட்டார்கள்” என்றார் சுரேஷ். அந்த விநாடியிலிருந்தே சிங்கப்பூர் டிராஃபிக்கின் கட்டுப்பாடும் ஒழுக்கமும் எனக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

முதல் டாக்ஸியில் திருமதி சுரேஷ், என் மனைவி, மகள் மூவரும் செல்ல, அடுத்த காரில் திரு.சுரேஷ், நான், என் மகன் என மூவரும் பின்தொடர்ந்தோம்.

டாக்ஸி டிரைவர்கள் எல்லாரும் பெரும்பாலும் சீனர்களாகவே இருக்கிறார்கள். சீன உச்சரிப்புடன்கூடிய ஆங்கிலம் பேசுகிறார்கள். முகத்தில் மாறாத புன்னகை. ‘வெல்கம்’ சொல்லி வரவேற்கிறார்கள். இறக்கிவிடும்போது அழகாகக் கையசைத்து ‘பை’ சொல்லி வழியனுப்பிவிட்டுத்தான் காரை நகர்த்துகிறார்கள். 

பத்திரிகைகளில் சீன ஆக்கிரமிப்புகள் பற்றியும், அடாவடித்தனம் பற்றியும், இந்தியாவை வளைக்க பாகிஸ்தானோடு சேர்ந்து அது செய்யும் சதித்திட்டங்கள் பற்றியும் படித்துப் படித்து, சீனர்கள்மீது எனக்கு ஏற்பட்டிருந்த இனம்புரியாத ஒரு வெறுப்பானது, சிங்கப்பூர் சீன டிரைவர்களின் கனிவான முகத்தையும் பொறுமையையும் பார்த்து, ரொம்பவே அகன்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.   
பத்து நிமிட நேரத்தில் ‘ஸீமீ’ ஏரியாவில் உள்ள சுரேஷ் தம்பதியரின் குடியிருப்புக்குள் டாக்ஸிகள் சென்று நின்றன. இங்கெல்லாம் யாரும் டாக்ஸி என்று சொல்வதில்லை. கேப் (Cab) என்றே சொல்கிறார்கள். இனி, நாமும் அப்படியே சொல்வோம்.

16-வது மாடியில் உள்ள அவர்களின் பிளாட்டுக்குச் சென்றோம். காலிங் பெல் அடித்ததும், கதவைத் திறந்து, இடுங்கிய கண்களும், முகம் முழுக்கச் சிரிப்புமாக, ‘ஹாய்’ என வரவேற்றார் ஒரு சீனப் பெண்.


(பயணம் தொடரும்) 

Sunday, November 05, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 4

கிளம்பியாச்சு!


சிங்கப்பூருக்கு டிக்கெட் புக் செய்ததிலிருந்து, தினமுமே எங்கள் வீட்டில் இரவு 10 மணிக்கு ‘பிக்பாஸ்’ கூட்டம் நடக்கும். என்னென்ன பேக் எடுத்துப் போகவேண்டும், புதிதாக ட்ராலி பேக் வாங்க வேண்டுமா, வெளியில் சுற்றுவதென்றால், முதுகில் சுமக்கும் பைகள் வாங்கினால் சௌகர்யமாக இருக்குமா, திடும் திடுமென அங்கே மழை பெய்யும் என்கிறார்களே, எனில், ஃபேன்ஸி குடைகள் வாங்கிக்கொள்ளலாமா என்றெல்லாம் பேசி, முடிவெடுப்போம். திரு. கண்ணனிடமும் திரு. சுரேஷிடமும் பேசி, எங்கள் ஐடியாக்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்வோம். எங்கெங்கே சுற்றிப் பார்க்க வேண்டும், என்றைக்கு எந்த இடத்தைப் பார்ப்பது, எதற்கு எவ்வளவு கட்டணம் என்றெல்லாம் என் மகன் ரஜ்னீஷ் கூகுளில் தேடி, யூடியூபில் தேடி, ஒருவாறு ஒன்பது நாள்களுக்கான சிங்கப்பூர் சுற்றுலாத் திட்டத்தை வடிவமைத்து வைத்திருந்தான். அதையும் அவர்கள் இருவரிடமும் பகிர்ந்துகொண்டு, அவர்களின் யோசனைகளையும் கேட்டோம்.

இப்படியாக எல்லாமே சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், எங்கள் சந்தோஷம் மொத்தமும் வடிந்துபோகிற மாதிரியான சூழல் உண்டானாது.

கிளம்புகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு இரண்டு நாள் முன்பு, அதாவது 28-ம் தேதி திங்கள்கிழமை, அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, எனக்குத் தலைச்சுற்றலும் மயக்கமுமாக இருந்தது. அரைநாள் ஓய்வெடுத்துக்கொண்டு, தூங்கி ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று கிளம்பி, வீட்டுக்கு வந்து படுத்தேன். படுத்ததுதான் தெரியும், மறுநாள் காலையில்தான் கண் விழித்தேன். உடம்பு கணகணவெனக் கொதித்துக்கொண்டிருந்தது.

“எழுப்புறேன், எழுப்புறேன்… எழுந்திருக்கவே இல்லை நீங்க. என்னடாயிதுன்னு பயமா போயிடுச்சு எனக்கு. ஊருக்கு வேற போகணும். உடனே போய் டாக்டரைப் பாருங்க” என்றார் மனைவி கவலையாக.

எழுந்து நிற்கவே முடியாமல் கால்கள் வெலவெலத்தன. என் பலம் மொத்தமும் வடிந்துபோனாற்போல் இருந்தது. நின்றாலே கண்களில் பூச்சி பறந்தது. உடம்பு தட்டாமாலை சுற்றியது. அடுத்த தெருவில் உள்ள குடும்ப மருத்தவரின் ஆஸ்பிட்டலுக்குப் போனேன்.

ஜுரத்துக்கு ஊசி போட்டார். ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்றார். ஏற்றிக்கொண்டேன். வீடு வந்து மீண்டும் படுத்தேன்.

மறுநாள் புதன்கிழமை, இன்னும் மோசமாகியது உடம்பு. போதாக்குறைக்கு மகனுக்கும் அதே பிரச்னை. அதே உடம்பு. அவனும் ஜுர வேகத்தில் படுத்துவிட்டான்.

மகள் ஷைலஜா, தன் தோழியுடன் சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்துக்கொண்டிருந்தாள். இரவு பகல் பாராமல் ஷூட்டிங், எடிட்டிங் என்று பிஸியாக இருந்தாள். எல்லாவற்றையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடித்துவிட்டு திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்களும் வீட்டில் தங்கி ரெஸ்ட் எடுக்கும்படி முன்பே அவளிடம் சொல்லியிருந்தோம். சிங்கப்பூர் சுற்றுலாவில் நிறைய தூரம் நடக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப எங்கள் உடலாரோக்கியத்தைத் தயார் செய்துகொள்ளும்பொருட்டு, எங்கள் பிக்பாஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இதற்கு அவள் தலையாட்டினாலும், திட்டமிட்டபடி அவர்களால் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பணிகளை முடிக்க முடியவில்லை. அவளும் இதோ வந்துவிடுவேன், அதோ வந்துவிடுவேன் என்று திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், வந்தபாடில்லை.

புதன்கிழமை காலையில் நானும் மகனும் மீண்டும் அதே டாக்டரிடம் போனோம். “சார், நாளை சிங்கப்பூருக்குக் கிளம்புவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். இந்த நிலையில் நிற்கவே முடியாமல், உடம்பு தள்ளாடுகிறது. முற்றிலும் வலுவிழந்து கிடக்கிறது. தவிர, எத்தனை டம்ளர் தண்ணீர் குடித்தாலும் நாக்கு வறண்டுபோய்க் கிடக்கிறது. வயிறு முட்டத் தண்ணீர் குடித்தாலும், நாக்கு காய்ந்தே கிடக்கிறது. எதையும் சாப்பிட முடியவில்லை. இந்தச் சுற்றுலா நல்லபடியாக நிறைவேற வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது. ஏதாவது செய்து எங்கள் உடம்பைத் தேற்றுங்கள்” என்றோம்.

அவர் மீண்டும் ஆளுக்கொரு ஊசியைப் போட்டுவிட்டு, இருவரையும் மீண்டும் தலா இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளச் சொன்னார். அப்படியே செய்தோம்.

வீட்டுக்கு வந்து நானும் என் மகனும் ஆளுக்கொரு மூலையில் சுருண்டு படுத்தோம். வெளியுலகில் என்ன நடக்கிறது, டி.வி-யில் என்ன நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது, இப்போது மணி என்ன ஆகிறது என்று எதுவுமே தெரியாமல், மயங்கிக் கிடந்தோம்.

சிங்கப்பூர் புறப்பட வேண்டிய வியாழனன்று காலை… இருவருக்கும் ஜுரம் சற்றும் விட்டபாடில்லை. எழுந்து உட்காரக்கூட எங்களால் முடியவில்லை. குறும்படத் தயாரிப்பில் மும்முரமாக இருந்த என் மகள் ஷைலஜாவும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபாடில்லை.

மணி மதியம் 2-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் எடுத்து பேக் செய்ய வேண்டும். இரவு 8:20-க்கு செக் இன் டயம். மாலை 7 மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டில் இருப்பது நல்லது என்று சொல்லியிருந்தார் திரு. சுரேஷ். ஆனால், எல்லோரும் இப்படிப் படுத்துக் கிடப்பதைப் பார்த்து ரொம்பவே கலங்கிப் போனார் என் மனைவி. “யாருக்கும் எந்த உடம்பும் இல்லாமல் இந்தப் பிரயாணத்தை நல்லபடியாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவேற்றிக் கொடு தாயே!” என்று மகாஸ்ரீ அரவிந்த அன்னை படத்தின் எதிரே அமர்ந்து அழத் தொடங்கிவிட்டார்.

மதியம் 3 மணிக்கு, மகள் ஷைலஜா வந்தாள். ராத்திரியும் பகலுமாக குறும்படத் தயாரிப்பில் ஈடுபட்ட களைப்பு அவள் முகத்தில். எங்கள் நிலையைக் கண்டு அவளும் பதறிப்போனாள்.
நாங்கள் வேறு வழியின்றி, எங்களை திடப்படுத்திக்கொண்டு, எழுந்து உட்கார்ந்தோம். மகாஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டு, பயண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

மாலை 6 மணிக்குள் பேக்கிங்கையெல்லாம் ஒருவழியாக முடித்து, ஏற்கெனவே போட்டு வைத்த செக் லிஸ்ட்படி, எதுவும் விட்டுப்போகாமல் எடுத்துக்கொண்டாகிவிட்டதா என்று சரிபார்த்தோம். 6:30 கால் டாக்ஸி வரவழைத்தோம்.

அன்னையை வணங்கினோம். அறைகளைப் பூட்டிக்கொண்டோம். வெளியே வந்து, வாசல் கதவைப் பூட்டினோம்.

உடல் அசதியும் களைப்பும் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய கனவைப் பூர்த்திசெய்துகொள்ளும் சந்தோஷத்துடன் காரில் ஏர்போர்ட் நோக்கிப் பயணப்பட்டோம்.


(பயணம் தொடரும்)