உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, July 31, 2009

இவர்கள் எழுதினால்...

‘கதை எழுதுவது எப்படி?’ என்று சுட்டிக் குழந்தைகளிடம் பேசும்போது, எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளுள் ஒன்றாக, “பழைய ‘முயலும் ஆமையும்’, ‘காக்கை-வடை-நரி’ போன்ற கதைகளை உங்களுடைய ஸ்டைலில் எழுதிப் பாருங்கள். உதாரணமாக, ‘ஏ... காக்கா! நீ அசின் மாதிரி ரொம்ப அழகா இருக்கே! உன் குரலும் சாதனா சர்கம் குரல் மாதிரி ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. அதனால, எனக்காக ப்ளீஸ்... ஒரே ஒரு தடவை அந்த நாக்கு மூக்க பாட்டைப் பாடிக் காட்டேன்’ என்று நரி கேட்பதாக எழுதிப் பார்க்கலாம்” என்று ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டேன்.

சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடந்த இந்த சுட்டி விகடன் விழாவுக்கு ஒரு பார்வையாளராக ஆவலோடு வந்து, மாலை வரை விழாவை ரசித்தார் 80 வயதான என் தந்தை. விழாவில் நான் பேசியதை ஒரு தந்தை என்கிற முறையில் ரசித்த அவர், “காக்கா-வடை கதைன்னா உனக்கு அத்தனை பிடிக்குமோ? 30 வருஷங்களுக்கு முன்னே தினமணி கதிர் தீபாவளி ஸ்பெஷல் புத்தகத்தில், காக்கா-வடை கதையை பிரபல எழுத்தாளர்கள் எழுதினால், எப்படி எழுதியிருப்பார்கள் என்று கற்பனையாக எழுதியிருந்தாயே, அதுதான் நீ இப்போது பேசும்போது சட்டென்று என் ஞாபகத்துக்கு வந்தது” என்று சொல்லி, வீட்டுக்கு வந்ததும், தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த புத்தகங்களிலிருந்து மேற்படி தினமணி கதிர் இதழை எடுத்துக் காண்பித்தார்.

நம் சின்ன வயது போட்டோவை இப்போது எடுத்துப் பார்க்கிறபோது, நமக்கே ஒரு சந்தோஷம் வருமில்லையா, அப்படி இருந்தது என் பழைய எழுத்தைப் பார்க்கும்போது.

14.11.1980 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியான, நான் எழுதிய அந்தக் கற்பனைக் கட்டுரை இதோ, இங்கே..!

இவர்கள் எழுதினால்...

பிரபலமான எழுத்தாளர்களுடைய கதைகளைக் கூர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் அமைந்திருப்பது புரியும். ‘காக்கையும் வடையும்’ கதையினை சாண்டில்யன், இந்துமதி, புஷ்பா தங்கதுரை, கண்ணதாசன், சுஜாதா ஆகியோர் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தேன்.

சாண்டில்யன்:

பொழுது புலர்ந்து பத்து நாழிகைக்கு மேல் ஓடிவிட்ட போதிலும், பங்குனியின் பின்பனி மூட்டம் சிறிதும் விலகாமல், முத்துக்களால் நெய்யப்பட்ட போர்வையைப் போன்று அம்மரத்தைப் போர்த்துக் குளிரச் செய்தும், ஆல விருட்சத்தின் கரிய பெரிய கூரிய மரக் கிளைகள் பேய்களைப் போல் பயங்கரமாக எழுந்து நின்று மிரட்டியும், பனியில் குளிர்ந்தாலும் மனம் குளிராத வாயு தேவனானவன் சீறி எழுந்திருந்து தன் வலிவு மிக்க கரங்களால் அம்மரத்தைப் பலமாக அசைக்க முயன்றும்கூட, எதற்கும் மசியாத அக்காகம், மிக அலட்சியமாகக் கிளைகள் மீது தாவியும் குதித்தும், இளம் யுவதியின் இடையினைப் போல் சிறுத்துப் போய் மிக மெல்லியதாயிருந்தபோதிலும் வலிவு மிக்கதாயிருந்த தன் கால்களால் கிளைகளை உறுதியாகப் பற்றியும் தன்னிஷ்டத்திற்கு விளையாடியது.

கதிரவன் கிளம்பிப் பனி மூட்டங்களை விலகச் செய்துவிட்ட காரணமோ, அல்லது தன் அலகில் கொத்தியிருந்த திருட்டு வடையினைச் சுவைக்கும் ஆசை எழுந்து விட்டதன் காரணமோ... அதனுடைய ஆட்டங்கள் சிறிது மந்தப்படவே செய்ததால், தவழ்ந்து பறந்து வந்து கீழே அகலமான பெரிய கிளையொன்றில் உட்கார்ந்தது.

இதன் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த பாறை மீது அமர்ந்திருந்த நரியானது, அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக்கொண்டே கீழிறங்கி வந்தது. அப்படி இறங்கி வரும் மாத்திரத்திலேயே, “ஏமாற்றுவதென்பது அநாகரிகமான செயல் அல்லவா?” என்று உள் மனம் கண்டித்தாலும், அந்தக் கண்டிப்பு பொய்க் கண்டிப்பு என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘சமயம் வரும்போது எந்த நரிமாவும் அயோக்கியன்தான்’ என்று நரி வர்க்கத்தின் அவல நிலைக்குச் சமாதானம் சொன்னது. சொந்தக் குற்றங்களுக்கு வர்க்கத்தின் மேல் பழி போடுவது யாருக்குமே உள்ள இயற்கையாதலால், அந்த இயற்கைக்குத் தானும் விலக்கல்ல என்பதை அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நரியும் நிரூபித்தது.

புகழ் என்பது வாழ்க்கையில் ஏற்படும் பிரமை. ஒரு மாயை. சிலர் புகழை வெறும் மாயை என்று உணர்ந்து, அதிலிருந்து விலகப் பார்க்கிறார்கள். அவர்களைப் புகழ் விடுவதில்லை. சிலர் புகழைச் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். புகழ் அவர்களை அணுகுவதில்லை. வாழ்க்கையை ஊன்றிப் பார்க்கும் பட்சத்தில், புகழுக்கு ஆசைப்பட்டுச் செய்யும் சின்னஞ்சிறு செய்கைகள்கூட பெரியதொரு நஷ்டத்தில் கொண்டு தள்ளிவிடுகின்றன. அதற்கு ஏதாவது உதாரணம் தேவையென்றால், ஆல விருட்சத்தின் அடிக்கிளையில் அமர்ந்திருந்த காகத்தைச் சுட்டிக்காட்டலாம்.

காகம் செய்த முதல் தவறு, புகழின் மீது வைத்த அத்து மீறிய ஆசை. இரண்டாவது தவறு, நரியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிச் சுய நிலை இழந்து பாட ஆரம்பித்தது. இந்த இரண்டு தவறுகளும் சிறிய தவறுகள்தான்; யாருமே செய்யக்கூடியவைதான். ஆனால், அந்தச் சிறிய தவறுகள் எத்தனை பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் விட்டன! காகம் ஆசையுடன் உண்ண வைத்திருந்த வடையினை அல்லவா இழக்கும்படிச் செய்துவிட்டன!

இந்துமதி:

பூவரசன் பூக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாட்களாகத்தான் இப்படி மஞ்சளில் சிரிக்கிறது. இடத்தையும் மனசையும் நிறைக்கிற குழந்தைச் சிரிப்பாகத் தெரிகிறது. தன்னிடம்கூட அதே சிரிப்பு வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டது காகம். பூவரசன் சிரிக்கிறபோதெல்லாம் அதற்கும் சிரிப்பு வரும். மனசு நிறைய சந்தோஷம் வரும். நாள் முழுதும் இப்படிப் பார்த்துக்கொண்டே மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்துகொண்டிருக்கலாம் போலிருக்கும். அந்த நேரத்தில் அதுதான் நிஜம், அது மட்டும்தான் சாஸ்வதம் என்கிற பட்சத்தில் அது எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! எப்படிச் சிரித்துக்கொண்டிருக்கும்! எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதையுமே நினைக்காமல்... முக்கியமாய் அந்தப் பள்ளிக்கூடம் - குழந்தைகள் - அதன் குறும்புகள் - அப்புறம் அந்த நரி..!

நரி..? மை குட்னெஸ்! கற்பனையில்கூடத் தன்னால் நிஜத்திலிருந்து விலக முடிவதில்லை. நிஜங்கள் குரூரமானவைகள். விலக்க முடியாதவைகள். அதனால்தான் அப்பொழுது நரியின் நினைவு வருகிறது. பூவரசன் பூத்துச் சொரிகிறபோதெல்லாம் எப்படி நரியின் நினைவு தவறாமல் வருகிறது? நரிக்கும் பூவரசனுக்கும் என்ன சம்பந்தம்? அந்த நிகழ்ச்சிதான் சம்பந்தமா? வெறும் நிகழ்ச்சி மட்டும்தானா? எதுவானாலும் நரி மோசமான பிராணிதான் என்று பட்டது.

அன்றைய அந்தச் சம்பவம் - பேசின பேச்சுக்கள் மனசுக்குள் வந்து போயிற்று. நேற்று நடந்த மாதிரி ஒவ்வொன்றும் அப்படியே நினைவுக்கு வந்தது. பாட்டி வைத்திருந்த வடைகளுள் ஒன்றை தான் கொத்திக்கொண்டு வந்தது - அதை ருசி பார்க்கத் துவங்குகையில் நரி வந்து நின்றது - தன்னைப் பெரிதாகப் புகழ்ந்து, பாடச் சொல்லி வற்புறுத்தியது - தானும் அதன் பேச்சுக்களில் மயங்கிப் பாட ஆரம்பித்தது - கீழே விழுந்த வடையை நரி கவ்விக்கொண்டு ஓடி மறைந்தது...

‘நரியே, நீ ஏன் இப்படி இருக்கிறாய்? எதற்காக, ஏமாற்றும் கூட்டத்தில் ஒருத்தனாக அலைகிறாய்? இவர்களை விட்டுவிட்டுத் தனியே வாயேன்! உன் ரசனையைக் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளேன். உன் தகுதிக்கும் திறமைக்கும்...’

மரத்தின் கீழே காலடிச் சத்தம் கேட்டுக் காகம் கலைந்து போனது. கீழே நின்றிருந்த நரியினைக் கண்டதும் மெலிதாகப் புன்னகைத்தது. நரியும் இதனைப் பார்த்துப் புன்சிரிப்பாகச் சிரித்தது.

அப்பா... என்ன சிரிப்பு அது! மனசுக்குள் ஊடுருவுகிற மாதிரி... நெஞ்சைத் தொடுகிற மாதிரி... இதமாய் வருடிக் கொடுக்கிற மாதிரி... அதனுடைய தவறுகளை, அதன் மீது எழுந்த கோப தாபங்களை மறக்கடிக்கிற மாதிரி...

இதனுடைய இந்த ஒரு சிரிப்புக்கு எத்தனை வடைகளை வேண்டுமானாலும் இழக்கலாமென்று தோன்றியது. கூடவே, தான் அன்று வசமாக ஏமாந்துபோனதும் நெஞ்சினை உறுத்தியது.

மனசுக்குள் அந்த உறுத்தல் கலையாமல் - கனம் குறையாமல், காகம் அந்த மரத்தை விட்டுப் பறந்து போயிற்று!

*****
புஷ்பா தங்கதுரை, சுஜாதா, கண்ணதாசன் ஆகியோர் இதே கதையை எழுதினால்..? அது அடுத்த பதிவில்!

Thursday, July 30, 2009

கண்ணனிடமிருந்து ஒரு கடிதம்!

ன்புள்ள திரு.ரவிபிரகாஷ் அவர்களுக்கு,

வணக்கம். ‘உங்கள் ரசிகன்’ என்கிற உங்களின் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில், ‘கண்ணன் எத்தனைக் கண்ணனடி’ என்கிற தலைப்பிலான பதிவைப் படித்துக்கொண்டே வந்தவன் ஓரிடத்தில் சட்டென்று பரவசமாகிவிட்டேன். எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த கண்ணன்களில் நானும் ஒரு கண்ணன்.

ஆமாம். நான் சிறு வயதில் சங்கீதமங்கலம் கிராமத்தில் தங்களுடன் பழகிய கண்ணன். தங்களின் பதிவைப் படித்தபோது, கால யந்திரத்தில் ஏறி, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய காலத்துக்கே போய்விட்டாற் போன்ற ஓர் இனிமையான, மகிழ்ச்சியான உணர்வில் நான் திளைத்தேன்.

ஒரு சிறு திருத்தம். என் இனிஷியல் ‘கே’ இல்லை. ‘ஜி’. என் அப்பா பெயர் கோவிந்தன். தவிர, என் அசல் பெயர் விஜய்கிருஷ்ணன். ஆனால், கண்ணன் என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள்.

நான் தொடர்ந்து ஆனந்த விகடன் வாசித்து வருகிறேன். அதில் உங்கள் பெயரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னோடு பழகிய ரவிதான் இந்த ரவிபிரகாஷ் என்று என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க இயலவில்லை. உங்களை வெறும் ரவியாக மட்டுமே எனக்குத் தெரியும். தவிர, வலைப்பூவின் முகப்பில் போட்டிருக்கும் உங்கள் புகைப்படமும் எனக்குப் பரிச்சயமானதாக இல்லை. என் மனதில் இருக்கிற உங்கள் முகத்தின் பிம்பம் வேறு.

அப்போது நீங்கள் விழுப்புரம் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்துவிட்டு, கிராமத்துக்கு வந்து உங்கள் பெற்றோருடன் தங்கி, அருகில் உள்ள அனந்தபுரம் டவுனில் தட்டச்சுப் பயிற்சியில் சேர்ந்திருந்தீர்கள் என்று ஞாபகம். ராஜகோபால் செட்டியார் கடைக்குப் பக்கத்தில் உள்ள பாய் டெய்லர் கடைதான் நாம் வழக்கமாகச் சந்திக்கும் இடம்.

அனந்தபுரம் பனமலை குமரன் தியேட்டரில் ‘ஐந்து லட்சம்’, ‘அன்பளிப்பு’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’ எனப் பல படங்களை நாம் இருவரும் ஒன்றாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். ‘அன்னக்கிளி’ படம் விழுப்புரத்தில் வெளியானபோது, நாம் இருவரும் கிளம்பிப் போய்ப் பார்த்தோமே, ஞாபகமிருக்கிறதா? எனக்குத் தெரிந்து இளையராஜாவின் அந்த முதல் படத்திலிருந்தே நாம் இருவரும் அவரின் தீவிர ரசிகர்களாகிவிட்டோம். அப்போதெல்லாம் நீ ‘சாமக்கோழி, ஏ... கூவுதம்மா’ பாடலைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டு இருப்பாய். அதை விட்டால், ‘ஒரு மஞ்சக் குருவி, என் நெஞ்சைத் தடவி...’ பாடல். ‘ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ பாடல் தமிழ்நாட்டையே கலக்கிக்கொண்டு இருந்த காலம் அது. எங்கே திரும்பினாலும், ஸ்பீக்கர்கள் ‘ஓரம்போ... ஓரம்போ’ என்று கத்திக்கொண்டே இருக்கும்.

’கல்கி’ பத்திரிகையில் உன்னுடைய சிறுகதை ஒன்று முதன்முதலாக வெளியானபோது உன் அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சி! தபாலில் வந்திருந்த கல்கி பத்திரிகையை உன் அப்பா எடுத்துக்கொண்டு போய், உள்ளூர் சிவன் கோயில் குருக்கள், தெரிந்தவர்கள், சக ஆசிரியர்கள்... என் தந்தையார் உள்பட கிட்டத்தட்ட சங்கீதமங்கலம் கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்குமே காண்பித்துப் பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சில மாதங்கள் கழித்து உனது இன்னொரு கதை கூட வேறு ஒரு பத்திரிகையில் வந்ததென்று ஞாபகம். உன் நண்பன் என்கிற முறையில் எனக்குமே அது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எனக்கும் கதை எழுதக் கற்றுக்கொடுக்கும்படி கேட்பேன். மனதில் தோன்றுவதை எழுத வேண்டியதுதான்; அதில் கற்றுக் கொடுக்க ஒன்றுமில்லை என்பாய்.

75 முதல் 80 வரையில், கிட்டத்தட்ட நாலைந்து வருடங்கள் நீங்கள் சங்கீதமங்கலத்தில் தங்கியிருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அப்பாவுக்கு சங்கீதமங்கலம் கிராமப் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாது, க்லயாணம்பூண்டி, நங்காத்தூர், அன்னியூர் எனப் பக்கத்துப் பக்கத்து ஊர்களிலேயே மாறுதல் கிடைத்ததால், குடும்பத்தை மாற்றாமல் ஒரே ஊரிலேயே அத்தனை வருடங்கள் தங்கியிருக்க முடிந்ததென்று நினைக்கிறேன்.

நீ உள்ளூர் மற்றும் வெளியூர் கோயில் விழாக்களில் கலந்துகொண்டு புராணச் சொற்பொழிவுகள் செய்வதை நான் ஆச்சரியத்தோடு கேட்டு ரசித்திருக்கிறேன். புராணப் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு டாண் டாணென்று நீ பேசியதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை.

அதன்பின், உன் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டது. நீயும் விழுப்புரம் சென்று செட்டிலாகிவிட்டாய் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியிருக்கும், நீங்கள் கிராமத்தை விட்டுச் சென்று. அப்படி ஒரு சமயத்தில்தான் உன்னை உன் தாயாரோடு நான் கடலூரில் வைத்துப் பார்த்தேன். ரொம்பக் காலம் கழித்து உன்னைக் கண்டதும் சந்தோஷமாகி ஓடி வந்து உன் கையைப் பற்றிக் குலுக்கிப் பேசினேன். எனக்கு உன்னை தூரத்தில் பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது. ஆனால், உனக்கு என்னைத் தெரியவில்லை. அத்தனை தூரம் பழகிய என்னை மறந்துவிட்டாய் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஞாபக சக்தி உனக்கு அதிகம். அதனால்தானே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று உன்னால் தட்டுத் தடுமாறாமல் சொற்பொழிவுகள் செய்ய முடிந்தது? அப்படியும் என்னை மறந்துவிட்டிருக்கிறாய் என்றால், நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை அதுதான் என்று எனக்குக் கோபமாகிவிட்டது. நானாவது என்னை யாரென்று அப்போது தெரியப்படுத்திக்கொண்டு இருக்கலாம். என்னவோ ஒரு அசட்டுக் கோபம்.

இந்த விஷயத்தை இத்தனைக் காலமும் நினைவு வைத்திருந்து எழுதியதிலிருந்து, நீ பழைய நட்பை மறக்கவில்லை என்பது புரிகிறது. உன்னை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறேன். ஆனால், உன் அலுவலகத்திலோ, என் அலுவலகத்திலோ வைத்துச் சந்திக்க விரும்பவில்லை. அப்படிச் சந்தித்தால், அது பழைய நண்பர்களின் இனிமையான சந்திப்பாக இல்லாமல், ஏதோ இரண்டு அலுவலர்களின் சந்திப்பாகத்தான் அமையும். கீழே என் முகவரியைக் கொடுத்துள்ளேன். நான் இங்கே சென்னையில், பெரம்பூரில்தான் இருக்கிறேன். அவசியம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வரவும். வருவதற்கு முன் எனக்கு போன் செய்துவிட்டு வர வேண்டுகிறேன்.

எனக்குத் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள். அகிலா, ஆர்த்தி. பெரிய ஃபுல்ஸ்டாப்! மேற்கொண்டு இ, ஈ-க்களுக்கு முயற்சி செய்யவில்லை. பெரியவள் அகிலாவுக்குத் திருமணமாகி, ஹைதராபாதில் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். சாய்கணேஷ் என்று பெயர். ஆமாம், நான் தாத்தாவாகிவிட்டேன். சின்னவள் கல்லூரியில் செகண்ட் இயர் படிக்கிறாள்.

நீ நலமாக இருக்கிறாயா? மரியாதையாக ஆரம்பித்து, ஏக வசனத்துக்கு என்னையுமறியாமல் மாறிவிட்டதற்கு மன்னிக்கவும். அப்பா, அம்மா இருவரும் நலமா? விவரமாகக் கடிதம் அனுப்பவும்.

பல காலம் கழித்து ஒரு பழைய நண்பனைக் கண்டெடுப்பதுதான், உள்ளதிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.

உன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும்,

உன் அன்புள்ள,

கோ.கண்ணன்.

*****

குறிப்பு: சென்ற ஞாயிறன்று, கண்ணன் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பியிருந்த இ-மெயிலின் தமிழாக்கம் இது.

Sunday, July 19, 2009

கண்ணன் எத்தனைக் கண்ணனடி!

சாவி வார இதழில் எனக்கு சீனியராக இருந்த திரு. கண்ணன் அவர்களைப் பற்றிய பதிவை எழுதிய அன்றைக்கு, என்னோடு எத்தனைக் கண்ணன்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சும்மா தமாஷாக யோசித்துப் பார்த்தேன்.

விகடன் ரா.கண்ணன்:
விகடன் நிர்வாக ஆசிரியர். என்னைவிடக் குறைந்தபட்சம் 20 வயதாவது இளையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதே சமயம், விகடன் பணிகள் என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். விகடன் பரிசீலனைக்கு வரும் படைப்புகள் சிலவற்றின் தரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பிரசுரிக்கலாம் என்று நினைப்பவன் நான். புதிய படைப்பாளியை ஊக்குவிப்போமே என்கிற நல்ல எண்ணம்தான். ஆனால், தரத்தில் குறைவு என்று தெரிந்தால், அதை உதவி ஆசிரியர்களிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வார் கண்ணன். அப்படியும் திருப்தியாக வரவில்லை என்றால், அது எத்தனைப் பிரபல படைப்பாளியினுடையதாக இருந்தாலும், அந்தப் படைப்பை தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுவார். ஆனந்த விகடன் இதழ் தரமானதாக வந்துகொண்டிருப்பதில் பெரும்பங்கு கண்ணனைத்தான் சாரும். இளம் வயதில், ஒரு படைப்பை எடை போட்டுத் தேர்ந்தெடுக்கிற திறனும், தரமாக இல்லையெனில் கொஞ்சமும் தயங்காமல் நிராகரிக்கிற திறனும் இருப்பது வியப்புக்குரியது; போற்றத்தக்கது.

சாவியில் பணியாற்றிய காலத்தில் நான்கூட அப்படித்தான் இருந்தேன். ஆசிரியர் சாவி இருக்கிற தைரியத்தில், பிரபல படைப்பாளிகள் சிலரின் படைப்புகளை நிராகரித்திருக்கிறேன். அதற்காக அவர்கள் என்னைப் பற்றி சாவி அவர்களிடமே புகார் செய்ய, பிரபலம் என்பதற்காக சாவி சார் அவர்கள் பக்கம் சாராமல், என் பக்கம்தான் நின்றார். அவற்றைப் பற்றிப் பின்னர் சமயம் வரும்போது விரிவாக எழுதுகிறேன்.

என்.கண்ணன்:
என் இரண்டாவது தங்கையின் இரண்டாவது மகன். ப்ளஸ் டூ படிக்கிறான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே, “என்ன மாமா, எப்படி இருக்கே? லைஃபெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு? குழந்தைகள் எல்லாம் சௌக்கியமா? மிஸஸ் உடம்பு ஒண்ணுமில்லாம இருக்காங்களா?” என்றெல்லாம் பெரிய மனுஷத்தனமாக விசாரித்தவன். ஸ்போர்ட்ஸில் நாட்டமுள்ளவன். படிப்பிலும் கெட்டிக்காரன். மகா துறுதுறுப்பும், பழகினால் யாருடனும் ஒட்டிக் கொள்கிற குணமும் உள்ளவன்.

ஐந்தாறு வயதுக் குழந்தையாக இருந்தபோது, வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறி விளையாடி, அங்கிருந்து தலைகுப்புற வெளியே தவறி விழுந்து, டிரெயினேஜில் தலைகீழாய்ப் போய்ச் சிக்கிக்கொண்டு, மண்டை உடைந்து, மகா பயங்கரமாகி, அவனைப் பிழைக்க வைப்பதே பெரும் பாடாகிவிட்டது.

எஸ்.கண்ணன்:
விழுப்புரத்தில், நான் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வீட்டின் இன்னொரு போர்ஷனில் சுந்தரம் ஐயர் என்பவர் குடியிருந்தார். அவரின் மூத்த பிள்ளைதான் கண்ணன். அவரின் தம்பி சிவராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர். ரசிகர். சிவாஜி ரசிகனாக இருந்த என்னை வற்புறுத்தி எம்.ஜி.ஆர். படத்துக்கு அழைத்துப் போவார். முதன்முதல் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் ‘பறக்கும் பாவை’. அதற்கு அழைத்துக்கொண்டு போய் என்னைப் படம் பார்க்கவைத்தவர் சிவராம கிருஷ்ணன்தான். அதன்பின் பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துப் போய், எம்.ஜி.ஆர். படங்களையும் ரசிக்க வைத்தவர் அவர்.

சரி, கண்ணனுக்கு வருவோம். கண்ணன் அவரின் அண்ணன். சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு முறை விழுப்புரம் வருவார். தேங்காய் சீனிவாசனுடன், நாகேஷுடன், ஐசரி வேலனுடன், வி.கே.ராமசாமியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையெல்லாம் என்னிடம் காட்டி பிரமிப்பில் ஆழ்த்துவார். அவர்களும் அவரும் மட்டும் இருக்கிற படங்கள் அல்ல அவை. அந்த நடிகரைச் சுற்றி நட்பு வட்டம் போல் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக இந்தக் கண்ணனும் இருப்பார்.

நிறையப் படங்களில் நடித்திருப்பதாகச் சொல்லி, அந்தப் படம் வந்தால் கட்டாயம் பார்க்கும்படி சொல்வார். எந்தக் காட்சியில் யாராக தான் வருகிறார் என்பதையும் குறித்துக் கொடுப்பார். ‘வாயில்லாப் பூச்சி’ என்று ஒரு படத்தில் ஜெய்சங்கரோடு தான் வருகிற காட்சிகள் நிறைய என்று சொன்னார். அதற்காகவே அந்தப் படத்தைப் பார்த்தேன். இரண்டு மூன்று இடங்களில் அவரைக் கண்டுபிடித்துவிட்டதில் ஏக சந்தோஷம் எனக்கு.

‘இரும்புத் திரை’ என்ற படத்தில், ஒரு காட்சியில் கூலித் தொழிலாளர்கள் வரிசையில் நின்று கூலி வாங்குகிற காட்சியில் இவரும் ஒருவராக நின்றிருப்பார். பின்பு அதே படத்தில் வேறு ஒரு காட்சியில், ‘சார், போஸ்ட்’ என்று சொல்லி தபால் கொடுப்பார். பின்பு வேறு ஒரு காட்சியில், ஒரு துணிக்கடையிலிருந்து கஸ்டமர் போல வெளியே வருவார்.

அந்தப் படத்தில், சிவாஜி இருக்கும் அறையில் இவர் அமர்ந்து ஏதோ டைப் அடித்துக்கொண்டு இருப்பார். சிவாஜி இவர் சொந்தப் பெயரைச் சொல்லி அழைத்து, ‘கண்ணன், அவர் வந்தா என்னை அங்கே வந்து பார்க்கச் சொல்லிடுங்க’ என்று ஏதோ சொல்லிவிட்டுப் போவார். எனக்குத் தெரிந்து கண்ணன் பளிச்சென்று தெரிந்த காட்சி இது மட்டும்தான்!

கண்ணன்:
சென்னை, அசோக் நகரில் நான் சுமார் பதினைந்து வருடங்களாகக் குடியிருக்கும் வீட்டு ஓனர் ஓர் இஸ்லாமியர். அவரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே எங்களிடம் அன்பு கொண்டவர்கள். அவரது கடையில் வேலை செய்கிற பையன் பெயர் கண்ணன். அவனுக்குச் சொந்த ஊர் சென்னை இல்லை. கம்பமோ, தேனியோ! அடிக்கடி அவன் தன் முதலாளியிடம் கோபித்துக்கொண்டு இனி வரவே போவதில்லை என்று சொல்லிவிட்டு, ஊருக்குப் போய்விடுவான். ஆனால், சில மாதங்கள் கழித்து அவனாகவே வந்துவிடுவான். இவர்களும் மறுக்காமல் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.

ஒருமுறை, டிரைசைக்கிளில் அந்தப் பையன் கடை விஷயமாகப் போய்க்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு, தகவல் தெரிந்ததும் கடை ஓனரின் பெரிய பையன் ஓடிப் போய்ப் பார்த்தார். மயங்கிக் கிடந்த அவனை ஆட்டோவில் போட்டுக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். பதினைந்து நாளுக்கு மேலாயிற்று அந்தப் பையன் டிஸ்சார்ஜ் ஆக. அதுவரைக்கும் அந்தப் பெரிய பையன்தான் கடைக்கும் ஆஸ்பத்திரிக்குமாக ஓடிக்கொண்டு இருந்தார்.

கண்ணன் உடம்பு பூரண குணமானதும், தான் இனி ஊருக்குப் போய் பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் இனி நிஜமாகவே வரமாட்டான் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அடுத்த ஏழெட்டு மாதத்தில் வந்துவிட்டான் - புதுப் பெண்டாட்டியோடு! அந்தப் பெண் அவர்கள் வீட்டில் வேலை செய்ய, அவன் பழையபடி கடையில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.

அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்...’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும்.

கே.கண்ணன்:
நான் முன்பு சங்கீதமங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தேன். அங்கே ஊர்க்கார நண்பர் ஒருவர் கண்ணன் என்ற பெயரில் எனக்கு உண்டு. ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மற்றபடி நான் அவரோடு சேர்ந்து படித்ததில்லை; வேலை செய்ததில்லை. ஒரே ஊர்க்காரர். அவ்வளவுதான். சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். கடையில் டீ குடித்திருக்கிறோம். அருகில் உள்ள அனந்தபுரம் தியேட்டரில் (பனமலை குமரன் என்று அந்தத் தியேட்டருக்குப் பெயர்) சினிமா பார்த்திருக்கிறோம்.

எனக்கு முகங்களையும் பெயர்களையும் தொடர்புபடுத்தி நினைவுக்குக் கொண்டு வருவதில் பிரச்னை உண்டு. நன்கு பழகிய ஒருவரை முற்றிலும் வேறு ஒரு இடத்தில், வேறு ஒரு சூழ்நிலையில் பார்த்தால், அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குமே தவிர, யார் என்று சட்டென்று நினைவுக்கு வராது. இதனால் பல நண்பர்களின் கோபத்துக்கும் கடுப்புக்கும் ஆளாகியிருக்கிறேன்.

விழுப்புரத்தில் இருந்தபோது, ஒரு விபத்தில் எனக்குக் கை ஒடிந்துபோய்விட்டது. அதற்காக அம்மாவுடன் சென்று கடலூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாவுக் கட்டு போட்டுக்கொண்டு வந்தேன். மாதமொரு முறை போய், கட்டு மாற்றி வரவேண்டும். இப்படியாக எலும்பு ஒன்று கூடும் வரையில் இரண்டு மூன்று மாதம் தொடர்ந்து கடலூர் போய் வரவேண்டியிருந்தது.

அப்படி ஒரு முறை அம்மாவுடன் கடலூர் போய்விட்டுத் திரும்பி பஸ் ஸ்டாண்டு வரும் வழியில், எதிரே ஒருவர் எதிர்ப்பட்டார். “என்ன ரவி, என்ன ஆச்சு?” என்று விசாரித்தார். சொன்னேன். அவர் யார் என்று தெரியவில்லை.

“யாருடா இது?” என்று கேட்டார் அம்மா. “தெரியாது” என்று சொன்னால், அந்த நபர் மனம் புண்படப் போகிறாரே என்று, அம்மாவின் கேள்வி காதில் விழாதது போல் அந்த நண்பருடன் பேச்சுக்கொடுத்தேன். அவரைப் பற்றிய ஏதாவது குறிப்பு அவர் வாயிலிருந்தே வந்தால், அதை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியாதா என்ற நப்பாசை எனக்கு.

அவரோ, “அம்மா கேட்கறாங்க இல்லே, சொல்லு ரவி!” என்றார்.

அம்மா விடாமல், “யாருடா இது? உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா? இவரும் விழுப்புரமா?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்.

“போகும்போது சொல்றேம்மா!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அவரிடம், “ம்... அப்புறம்... எப்படி இருக்கீங்க? அங்கே எல்லாரும் சௌக்கியமா?” என்றேன்.

“முதல்ல அம்மா கேட்டதுக்கு நான் யாருன்னு சொல்லு ரவி!” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது? சொல்லேன்!” என்றார்.

தர்மசங்கடமான நிலையில், “தெரியவில்லை” என்று முனகலாகச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இவ்வளவுதானா ரவி நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை!” என்றார் தாங்கமாட்டாமல்.

“நீங்கதான் சொல்லுங்களேன்” என்றார் அம்மா அவரிடம். “உங்க பையனுக்கே அப்புறம் ஞாபகம் வந்தா சொல்லச் சொல்லிக் கேட்டுக்குங்க” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

அப்புறம் ரொம்ப நாட்கள், நாட்களென்ன, மாதங்கள்... அவர் யாரென்ற கேள்வியே என் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்தது. ஊஹூம்... ஞாபகத்துக்கு வரவே இல்லை.

அதன் பிறகு, பல வருடங்கள் கழித்து நான் சென்னை வந்து செட்டிலான பிறகு, ஒரு நாள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தபோது, சம்பந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவும், கூடவே சட்டென்று கடலூர் சம்பவமும் அடுத்தடுத்து ஞாபகத்துக்கு வந்து, ‘அடடா! அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர்!’ என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

எம்.கண்ணன்:
மாம்பலத்தில் என் அம்மாவுடைய சித்தி வீடு இருந்தது. அந்தச் சித்தப்பா பெயர் மார்க்கபந்து சாஸ்திரிகள். அவர் வீட்டில் தங்கியிருந்தபோதுதான், நண்பர் மார்க்கபந்து என்னை முதன்முதலில் தேடி வந்து பார்த்தார். இன்றளவும் குடும்ப நண்பராக இருக்கிறார்.

அந்த மார்க்கபந்து சித்தப்பா பையன் பெயர் கண்ணன். என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவராக இருப்பார். எனக்குத் தெரிந்து எங்கள் உறவினர்களில் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே நபர் இந்தக் கண்ணன்தான். அவருடைய பெண்ணுக்குத் திருமணமாகி இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிறாள்.

இந்தக் கண்ணன் படிப்பில் படு சூரப்புலி. அப்போதெல்லாம் சட் சட்டென்று ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு அதிக சம்பளத்துக்கு மாறிவிடுவார். இப்போது எந்த வேலையிலும் இல்லாமல், விருப்ப ஓய்வு பெற்று, சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சுகமாகக் காலம் தள்ளி வருகிறார். பொழுதுபோகவேண்டுமே என்பதற்காக இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டாக இருக்கிறார்.

இயக்குநர் பாண்டியராஜன் இவரின் நண்பர். நான் சென்னை வந்த புதிதில், பாண்டியராஜனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக என்னைச் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி, கடிதம் கொடுத்து, அப்போது சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டிலிருந்த அவரது வீட்டுக்கு அனுப்பினார். நானும் போய்க் காத்திருந்தேன். பாண்டியராஜனின் முதல் படம் ‘கன்னி ராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருந்த நேரம் அது. பாண்டியராஜனின் வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஷூட்டிங் முடிந்து அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவரின் மனைவி சொன்னார். காபி கொடுத்தார். குடித்தேன். பிறகு, ‘அப்புறம் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், மறுபடியும் போகவே இல்லை. நான் முதலும் கடைசியுமாக ஏறிய டைரக்டர் வீட்டுப் படி, பாண்டியராஜனின் வீட்டுப் படிதான்! அதற்கு வழிவகை செய்தவர் என் மாமா முறையான கண்ணன்.

ன்னோடு பழகிய கண்ணன்களில் சட்டென்று என் நினைவுக்கு வந்தவர்களைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் சிலரும் இருக்கக்கூடும். மற்றபடி பாம்பே கண்ணன், யார் கண்ணன், ‘வேதம் புதிது’ கண்ணன், கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் பற்றியெல்லாம் இங்கு நான் குறிப்பிடவில்லை.

Thursday, July 09, 2009

சி.ஆர்.கண்ணன்... - தொடர்ச்சி

சிலர் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தபோதிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு விதமாக அமைந்து, அவரோடு பகை என்னும்படியான ஒரு நிலைக்கு நாம் விரும்பாமலே ஆளாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு நிலை, எனக்குப் பிரியமான சிலருடனேயே நேர்ந்திருக்கிறது.

அவர்களில் ஒருவர், இன்று காலையில் அமரரான திரு. சி.ஆர்.கண்ணன். நான் சாவியில் சேரும்போது, என்னை இன்முகத்தோடு வரவேற்று, அன்பாகப் பேசியவர். ‘அபர்ணா நாயுடு’ என்கிற புனைபெயரில் தினமணி கதிரில் நான் படித்து ரசித்த கதைகளை எழுதியவர் இவர்தானா என்று பிரமிப்போடு அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முந்தைய பதிவில் சொன்னது மாதிரி, சேர்ந்த பத்தே நாட்களுக்குள் அவர் என் மீது மனக் கசப்பு கொள்ளும்படியான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

அடுத்து, மோனா மாத இதழின் பொறுப்பை அவரிடமிருந்து பிடுங்கி, என்னிடம் தந்து, “இனி நீதான் மோனா இதழைப் பார்த்துக் கொள்ளப்போகிறாய். என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ... சரியாக முதல் தேதியன்று அடுத்த மோனா இதழ் என் மேஜையில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுவிட்டார் சாவி.

எனக்குப் பயம் வந்துவிட்டது. பழம் தின்று கொட்டை போட்ட அபர்ணா நாயுடுவாலேயே முடியாதபோது, நான் சுண்டெலி எம்மாத்திரம்!

சில மணி நேரம் கழித்து, சாவி சார் வீட்டில் தன் அறையில் தனியாக இருக்கிற நேரம் பார்த்து, அனுமதி பெற்று அவர் அறைக்குள் சென்றேன்.

“சார்! திடீர்னு நீங்க பெரிய பொறுப்பைத் தூக்கி என்கிட்டே கொடுத்துட்டீங்க. அவ்வளவு அனுபவம் வாய்ந்தவராலேயே செய்ய முடியாத காரியத்தை, அனுபவமே இல்லாத என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடியும்? தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார்! மோனாவை அவரே தொடர்ந்து பார்த்துக்கட்டும்” என்றேன்.

“அப்போ, அவர்கிட்டே போய், ‘அவனால முடியாதாம். பயப்படறான். நீங்களே பழையபடி பார்த்துக்குங்க!’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா? அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா? நீதான் பார்த்துக்கறே! பயப்படாதே! தைரியமா எடுத்துச் செய். எல்லாம் சரியா வரும். போ!” என்றார்.

மேற்கொண்டு பேச முடியாமல், திக் திக்கென்ற நெஞ்சோடு வெளியே வந்தேன். நேரே அபர்ணா நாயுடுவிடம் போனேன். “சார்! என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ்!” என்றேன்.

“அவர் எப்பவும் இப்படித்தான். முன்கோபக்காரர். அவர்கிட்டே நானாக இருக்கக்கொண்டு காலம் தள்ளிக்கிட்டிருக்கேன். அவர் கோபத்தை உன்னால தாங்க முடியாது. நான் உன்னை எதுவும் தப்பா நினைக்கலை. நீ பாவம், என்ன செய்வே? ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ!” என்று இதமாகப் பேசினார் அபர்ணா நாயுடு.

மறுநாள், ஒரே வாரத்துக்குள் கிடைக்கும்படியாக மோனா நாவலுக்கு ஒரு கதை எழுதி அனுப்பும்படி எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்குத் தந்தி கொடுத்தேன். ‘அப்படியே செய்கிறேன்’ என்று பதில் தந்தி அனுப்பியிருந்தார் ராஜேஷ்குமார். நான் கேள்விப்பட்டிருந்த வரையில், சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர் ராஜேஷ்குமார். (இன்று வரையிலும் அவர் அப்படித்தான். ஒப்புக்கொண்டு விட்டாரானால், ஓரிரு நாட்கள் முன்பாகவே கதை நம் கைக்குக் கிடைக்கும்படியாக அனுப்பிவிடுவார்.)

ஆனால், ஒரு வாரமாயிற்று. கதை வரவில்லை. எஸ்டீடி செய்து பேசினால், “இரண்டு நாள் முன்பே அனுப்பிவிட்டேனே! சரி, அதன் ஜெராக்ஸ் பிரதியை இன்றைய தபாலில் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கிறேன்” என்றார் ராஜேஷ்குமார். அப்போது பார்த்துதானா தபால் ஊழியர்கள் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும்?

தேதி 27. பதறிப்போய் மீண்டும் ராஜேஷ்குமாருடன் தொலைபேசினேன். தானே 29-ம் தேதி சென்னை வரவிருப்பதாகவும், பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்திற்கு ஆளை அனுப்பிக் கதையை அன்று வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார். அவ்விதமே செய்தேன்.

நல்லவேளையாக அந்த மாதத்துக்கு 31 தேதி. கதையோடு நேரே சென்று பிரஸ்ஸில் நானே போய் உட்கார்ந்துவிட்டேன். மற்ற வேலைகளோடு தலைமை அச்சக ஊழியர் ராஜாபாதர் இந்த நாவலையும் அச்சுக்கோத்து கேலிகளாகப் போட்டுத் தரத் தர, உடனுக்குடன் அங்கேயே அமர்ந்து திருத்திக் கொடுத்தேன். ராஜேஷ்குமார் தொலைபேசியில் சொன்ன தலைப்பைக் கொண்டு (சின்ன தப்பு, பெரிய தப்பு) மோனா அட்டையை டிசைன் செய்து, ரெடி செய்தாகிவிட்டது.

மறுநாள் 30-ம் தேதி, இரவு ஏழு மணிக்கு நாவல் மொத்தமும் அச்சுக்கோத்து முடிந்தது. அப்போதுதான் புதிய சோதனை ஒன்று முளைத்தது! மோனா மொத்தம் 72 பக்கங்கள். ஆனால், ராஜேஷ்குமாரின் நாவல் 60 பக்கங்களிலேயே முடிந்துவிட்டது. மிச்சம் 12 பக்கங்களுக்கு என்ன செய்வது?

போய் சூடாக ஒரு டீ குடித்துவிட்டு வந்தேன். போனில் சாவி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, ஆர்ட்டிஸ்ட் ராஜேந்திரனிடம் (தற்போது தினமலரில் பணிபுரிகிறார்) ‘நா ஒரு மாதிரி!’ என்ற தலைப்பைச் சொல்லி, ஏதாவது பழைய ஜெயராஜ் ஓவியத்துப் பெண்ணை வைத்து ஒரு பக்கம் டிஸைன் செய்யச் சொன்னேன். மீதி 11 பக்கங்களுக்கு நானே கதை எழுதிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டேன்.

இரவு 9 மணியிலிருந்து, அச்சகத்தில் அமர்ந்து நான் எழுதிக்கொடுக்கக் கொடுக்க, ராஜாபாதர் உடனுக்குடன் அதை அச்சுக்கோத்துத் தர... இரவு 1 மணிக்கு, “போதும், கதை 12 பக்கத்துக்கு மேல் ஓடுகிறது” என்றார் அவர். “மொத்தத்தையும் அச்சுக்கோத்து முடியுங்கள். பின்னர் கேலி திருத்தும்போது குறைத்துத் தருகிறேன்” என்று ஒருவழியாகக் கதையை முடித்தேன்.

மொத்தம் 14 பக்கங்களில் கதை நிறைவடைந்திருந்தது. தேவை 12 பக்கங்கள். தவிர, முகப்புப் பக்கமாக ஜெயராஜ் ஓவியம் + தலைப்பு என ஒரு பக்கத்தை ஒதுக்கினால், கதைக்கு 11 பக்கம்தான் இடம். கேலி திருத்தும்போதே எடிட் செய்துகொடுத்தேன்.

எல்லாம் முடியும்போது விடியற்காலை மணி 4. அவசர அவசரமாக அதை அப்போதே தடக் தடக்கென பெரிய ராட்சத இயந்திரம் அச்சிடத் தொடங்கியது. மோனா நாவல் அட்டையோடு சேர்த்து பைண்டிங் ஆகி, கையில் ஆசிரியருக்கான இரண்டு காப்பிகள் கிடைக்கும்போது மணி 6.

எடுத்துக்கொண்டு நேரே அண்ணா நகருக்கு ஓடினேன். வீட்டு வாசலில் சாவி சார் காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரிடம் மோனா இதழ்களைக் கொடுத்தேன்.

“என்ன, மோனா ரெடியாயிடுச்சா? அவ்வளவுதான்! என்னமோ பயந்தியே! சரி, நீ போ! ராத்திரி பூரா தூங்காம இருந்திருப்பே. நாளைக்கு வா!” என்றார் சாவி.

மறுநாள் போனேன்.

முதல்நாள் சாவி சார் கோபப்பட்டுத் திட்டியதில், திரு.சி.ஆர்.கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருந்தார்...

இல்லை. அப்படி எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. ஒருவேளை, அப்படி நடந்திருந்தால், இன்றளவும் அது என் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்.

சரியான தேதியில் மோனா இதழைக் கொண்டு வந்தது சம்பந்தமாக ஆசிரியர் சாவி, திரு.கண்ணனிடம் எதுவுமே முதல் நாள் பேசவில்லை என்றார்கள் சக நண்பர்கள். என்னிடமும் சாவி அது சம்பந்தமாக பிறகு ஒருபோதும் பேசவில்லை.

ரமணீயன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட, திரு.கண்ணன் சாவி இதழ் பொறுப்பை மேற்கொண்டார். மோனா மாத இதழ் பொறுப்பு என் வசம் தொடர்ந்தது.

உதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு!

சி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்!

‘நானும் என் சாவி சகாக்களும்’ என்னும் தலைப்பில், சாவியில் என்னோடு பணியாற்றிய சீனியர்களையும் ஜூனியர்களையும் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்றை போன மாதம் எழுதியிருந்தேன்.

அதில், ‘அபர்ணா நாயுடு’ என்கிற சி.ஆர்.கண்ணன் பற்றித்தான் முதலாவதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அவர் இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்று எனக்குத் தொலைபேசித் தகவல் வந்தது.

கண்ணன் எப்போதுமே தூய வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும்தான் அணிவார். நடனம் பழகியவரா என்று தெரியவில்லை. ஆனால், அவரது பேச்சும் அங்க அசைவுகளும் நடன அபிநயங்கள் போலத்தான் இருக்கும். தன்மையாகப் பேசுவார். இனிமையாகப் பழகுவார்.

அவர் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. ஆனால், நான் சாவி வார இதழில் பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்கள், சாவி சார் என் பொருட்டு திரு.கண்ணனிடம் கோபப்பட்ட நிகழ்வுகளாகவே அமைந்துவிட்டன. அவை என் மீது திரு.கண்ணனுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம் - உண்மையில் அதற்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை என்றபோதிலும்!

அவரைப் பற்றி எண்ணும்போது, என் மனதில் எழக்கூடிய நினைவுகள் எதுவும் அவரைப் பெருமைப்படுத்துகிற விதமாக இல்லை. ஓர் அஞ்சலிக் கட்டுரையில் அவற்றை எழுதுவது நாகரிகம் இல்லைதான். என்றாலும், அவரின் மதிப்பைக் குறைக்காத விதமாக இங்கே இரண்டொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘கேலி’ (galley) பார்ப்பது என்றொரு வழக்கம் அந்த நாளில் பத்திரிகை அலுவலகங்களில் உண்டு. அதாவது, கையால் அச்சுக்கோத்து, அதை வால் போன்ற நீளமான நியூஸ்ப்ரின்ட் தாளில் அச்சிட்டுத் தருவார்கள். அதை உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் எனப் பலரும் பலப்பல முறை திருத்தித் திருத்திக் கொடுக்க, ஒவ்வொரு முறையும் அச்சுக்கோப்பவர் அந்தத் திருத்தங்களைச் செய்து, புது கேலி எடுத்துக் கொடுப்பார். சாவி சாரின் தொடர்கதை, பதில்கள் பகுதி, தலையங்கம் அல்லது கட்டுரையைப் பொறுத்தவரை, கடைசி வரையில் அவரேதான் கேலி புரூஃப் பார்த்துத் தருவார். ஃபைனல் புரூஃபின்போதுதான் நாம் பார்த்து, அச்சுப் பிழை இருந்தால், அதை மட்டும் திருத்திக் கொடுக்க வேண்டும். அங்கே அதுதான் முறையாக இருந்தது.

நான் சாவியில் வேலைக்குச் சேர்ந்திருந்த புதிது. பத்து நாள் கூட ஆகியிருக்காது. சாவி சார் பார்ப்பதற்காக, அவர் பார்க்க வேண்டிய கேலி புரூஃப் ஒன்று நெல்சன் மாணிக்கம் ரோடிலிருந்த (அருண் ஹோட்டல் பின்புறம்) சாவி அச்சுக்கூடத்திலிருந்து வந்தது. மதிய நேரம். சாவி சார் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அதுவரையில் சும்மா இருப்பானேன் என்று, அந்த கேலி புரூஃபை நான் எடுத்து, எனக்குத் தோன்றிய திருத்தங்களைச் செய்து வைத்துவிட்டேன்.

இதை சி.ஆர்.கண்ணன் அவர்கள் பார்த்து, என்னைக் காச் மூச்சென்று திட்டத் தொடங்கிவிட்டார். “ஆசிரியர் பார்க்கிற புரூஃபில் கைவைப்பதாவது! உடனே நீயே சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு வாங்கிக்கொண்டு வா! சீக்கிரம். சார் எழுந்திருப்பதற்குள் அவர் மேசையில் கிறுக்கல் இல்லாத புதிய கேலி இருக்க வேண்டும்” என்றார். அதன்படியே நான் அண்ணா நகரிலிருந்து அமிஞ்சிக்கரை வரை சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு எடுத்து வந்தேன்.

நான் வருவதற்குள் சாவி சார் எழுந்து வந்து, நான் திருத்தி வைத்திருந்த புரூஃபைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். கண்ணன் அருகில் சென்று, எனக்கு ஆதரவாக, “சார்! ரவி சின்னப் பையன். புதுசு! நீங்க பார்க்க வேண்டிய புரூஃபில் கை வைக்கக்கூடாதுன்னு தெரியலே! வேறு புரூஃப் வாங்கிக்கொண்டு வரச் சொல்லி, அவனை அனுப்பியிருக்கேன். இதோ வந்துடுவான். அதைப் பாருங்க!” என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், என்னுடைய திருத்தங்கள் மிகச் சரியானதாக இருக்கவும், சாவி சார் வியந்து, என்னை வெயிலில் துரத்தியதற்காகவும், ஓர் இளம் உதவியாளனை ஊக்குவிக்கும் விதம் இதுதானா என்று கேட்டும் திரு. கண்ணனைக் கடுமையாகத் திட்டிவிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல், அன்றிலிருந்து தான் பார்க்கவேண்டிய புரூஃப்கள் அனைத்தையும் என்னை முதலில் பார்த்துத் திருத்திக்கொடுத்து, அடுத்த புரூஃப் வாங்கி வைக்கும்படி சொல்லிவிட்டார். (என் புத்தகத் தொகுப்புக்காக எழுதித் தந்த அணிந்துரையில் இதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார் சாவி சார்.) திரு. கண்ணன் என் மீது ஆரம்பத்திலேயே எரிச்சலும் கோபமும் கொள்ளும்படியான நிகழ்வாக ஆகிப்போனது இது.

சாவியின் சகோதர பத்திரிகையான ‘மோனா’, மாதமிருமுறை இதழாக அப்போது வந்துகொண்டிருந்தது. ரமணீயன் சாவி வார இதழைக் கவனித்துக் கொள்ள, சி.ஆர்.கண்ணன் மோனா இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தார். 15-ம் தேதி வெளியாகவேண்டிய பத்திரிகை, 20-ம் தேதிதான் ரெடியாகும். முதல் தேதி வர வேண்டிய பத்திரிகை நாலைந்து தேதிகளில்தான் தயாராகும். ஒவ்வொரு முறையும் சாவியிடம் இதற்காகத் திட்டு வாங்குவார் சி.ஆர்.கண்ணன்.

அப்படி ஒரு முறை 20 தேதி வாக்கில், மோனா இதழை சாவி சாரிடம் கண்ணன் கொண்டு வந்து கொடுத்தபோது, புத்தகத்தை வாங்கி விட்டெறிந்தார் சாவி. “நீங்க ஒரு தடவை கூட ஒழுங்கான தேதிக்குப் புத்தகம் கொண்டு வர்றதாய் இல்ல. பார்க்கறீங்களா, இந்தச் சின்ன பையனை வெச்சு நான் சரியான தேதியில மோனாவைக் கொண்டு வந்து காட்டட்டுமா?” என்று கத்திவிட்டு, அருகில் நின்றிருந்த என்னை அழைத்தார். நான் சாவியில் சேர்ந்து அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தது.

“ரவி, இனிமே மோனா உன் பொறுப்பு. என்ன செய்வியோ, ஏது செய்வியோ, யார் கிட்ட கதை வாங்குவியோ, எனக்குத் தெரியாது! வர ஒண்ணாம் தேதி அடுத்த இதழ் மோனா என் மேஜையில் இருக்கணும். போ!” என்று விரட்டிவிட்டார். தேதி 20.

எனக்குப் படபடப்பாகிவிட்டது. கை கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. தனியாக ஒரு புத்தகத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போனேன்.

(இதன் தொடர்ச்சியை எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.)

Sunday, July 05, 2009

ஏன் படிக்கவேண்டும்?

நமது கல்வி முறையில் உள்ள ஒரு பெரிய குறை - அது வாழ்க்கையை நடத்தக் கற்றுத் தருகிறதே தவிர, வாழக் கற்றுத் தருவதில்லை.

‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றார் மகாகவி பாரதி.

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சீறிய பாரதி, இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் கல்வி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதே பாடலில் அந்த வரிகளுக்கு முன்பாக,

‘அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்’ என்கிறார் மகாகவி பாரதி.

மக்கள் அத்தனை பேருக்குமான கல்வியை ஏற்றத் தாழ்வில்லாமல் ஒன்றாய் அளித்திடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கல்வி பிற்காலத்தில் வளம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று அவருக்கு அன்றைக்கே தோன்றியிருக்கிறது போலும்!

காசிருந்தால்தான் இன்றைக்கு ஒருவன் கல்வி கற்க முடியும். ஒவ்வொரு விலைக்கு ஏற்ப ஒரு கல்வி என்று கடைச்சரக்காகிவிட்டது கல்வி. இத்தகைய ‘காசுக்குக் கல்வி’ முறை வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தனியார் பள்ளிகள் என்கிற ஒரு விஷயமே கிடையாது. கேட்டால் சிரிப்பார்கள். எல்லோருக்கும் ஒரே விதமான, சமமான, பாரதியார் விரும்பிய கல்வி அங்கேயெல்லாம் இருக்கிறது.

சரி, காசுக்கேற்ற கல்வியும்தான் எந்த லட்சணத்தில் இருக்கிறது! வளர்ந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பள்ளிக் குழந்தைகள் கழுதைகளைப் போல புத்தகப் பொதி சுமந்து செல்கிறார்கள். ஒரு டிவிடியில் அவர்களின் அத்தனைப் புத்தகங்களையும் பதிந்துகொள்ள முடியும். ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கணினியை இயக்கக் கற்றுக்கொடுத்தால், நம்மை விட வேகமாகவும் ஆர்வமாகவும் அவன் அதை இயக்குவான். வீட்டுக்கொரு இலவச டி.வி. கொடுக்கிற அரசாங்கம் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் போதிய கணினிகளை இலவசமாகக் கொடுக்கலாமே! தனியார் பள்ளிகளும் தாராளமாகத் தங்கள் பள்ளியை கணினிமயமாக்கலாமே! புத்தக மூட்டைகளை வீட்டு உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே?

படிப்பு எதற்கு என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். நல்ல வேலையில் அமர்வதற்கு என்றுதான் பதில் வரும். ஆக, பெற்றோர்களின் கவனம் எல்லாம் தங்கள் மகன் அல்லது மகள் புத்திசாலியாக ஆக வேண்டும் என்பதில் இல்லாமல், என்ன படிப்பு படித்தால் அவன் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறையச் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுவதிலேயே இருக்கிறது. திரும்பத் திரும்ப டாக்டர், இன்ஜினீயர் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளை பிரெயின் வாஷ் செய்து வருவதற்கு இதுதான் காரணம். இன்றைக்கு அந்த இரண்டோடு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேறு சேர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குப் பிடிக்கவே இல்லை என்றாலும்கூட, பெருந்தொகை செலவிட்டு, கட்டாயப்படுத்தி அவர்களைத் தாங்கள் விரும்பிய படிப்பில்தான் சேர்க்கிறார்கள்.

உண்மையில், படிப்புகளில் உசத்தி தாழ்த்தி என்பது இல்லை. எந்தப் படிப்புமே நல்ல படிப்புதான். பெற்ற அந்தப் படிப்பை நாம் வாழ்க்கையில் என்ன விதமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் நமது வெற்றியும் தோல்வியும் உள்ளதே தவிர, படிப்பில் இல்லை. என்னுடைய உறவினர் பையன் ஒருவனைக் கட்டாயப்படுத்தி டாக்டருக்குப் படிக்க வைத்தார்கள். அவனும் கஷ்டப்பட்டுப் படித்து எம்.பி.பி.எஸ். ஆகிவிட்டான். தனியாகக் கிளினிக் வைத்தான். கைராசியில்லாத டாக்டர் என்று பெயர் எடுத்துவிட்டான். கிளினிக் ஈயாடியது. மூடிவிட்டு அரசு சுகாதார மையத்தில் சொற்ப சம்பளத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

கல்வியின் முக்கிய அம்சம் கைத்திறன் வேலைகள். ஆனால், இன்றைய கல்வித் திட்டத்தில் கைத்திறன் வேலைக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுப்பது தவிர, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க நமது கல்வி எங்கே கற்றுத் தருகிறது?

நினைவாற்றல் என்பது தேவையில்லை என்று சொல்லவில்லை. அது அவசியம்தான். ஆனால், ஓரளவுக்கு. சில தமிழ்ப் பாடல்களை, கணித, அறிவியல் சூத்திரங்களை மனதில் பதித்துக்கொள்வது அவசியம்தான். ஆனால், கேள்விக்கான பதில்களையுமல்லவா மாணவர்கள் உருப்போடுகிறார்கள்!

‘ஏட்டுச் சுரைக்காய் கவைக்கு உதவாது’ என நம் முன்னோர் அன்றைக்கே சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன்? ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நீங்கள் சேர வேண்டும் என்றால், வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் இருந்து பயனில்லை. மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பதில்கள் மட்டும் போதாது. கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் எனப் பல பெரிய தொழில் நிறுவனங்கள் வந்து முகாமிட்டுத் தேர்வு செய்கின்றனவே, அவர்கள் வெறும் படிப்பை மாத்திரமா பார்த்துவிட்டுத் தேர்வு செய்கிறார்கள். இல்லை. ஒரு மாணவன் என்ன கற்றுக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை; கற்றுக்கொண்டவற்றிலிருந்து என்ன புரிந்துகொண்டு இருக்கிறான் என்பதை அவர்கள் பிரத்யேகமாகச் சோதித்து அறிகிறார்கள். இதனால்தான் முதல் மதிப்பெண் எடுத்தவன் வேலைக்குத் தேர்வாகாமல் போய்விட, ஐம்பத்தாறாவது நிலையில் இருப்பவனாக இருந்தாலும், அவனை நல்ல சம்பளம் கொடுத்து அள்ளிக்கொள்கின்றன நிறுவனங்கள்.

கல்வி என்பது நமக்கு என்னென்ன வழங்க வேண்டும்? நான்கு அடிப்படைத் திறன்களைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வைக் கண்டுபிடிக்கும் திறமையை அளிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் இது ஏன் இப்படி இருக்கிறது, இதை மாற்றினால் என்ன ஆகும் என்று ஆராய்ந்து தெளியும் புத்தியைத் தரவேண்டும். எதையும் லாஜிக்கலாக யோசித்து முடிவெடுக்க நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புதுசாக ஒரு விஷயத்தை உருவாக்கும் திறமையை அளிக்க வேண்டும்.

ஆனால், நமது இன்றைய கல்வி இதையெல்லாம் செய்கிறதா? இல்லை. மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் இதிலேயே சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கிறது.

நான் விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியில் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் படிக்கும்போது, வாரம் ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடக்கும். அதில் மாணவர்கள் பெயர் கொடுத்துக் கலந்துகொண்டு பேச வேண்டும். நான் தவறாமல் பேசுவேன்.

ஆரம்பத்தில் எல்லாம், கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதை என் மாமாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அதைத் தலைகீழ் மனப்பாடம் செய்துகொண்டு போய், அங்கே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கைத்தட்டல் வாங்கிவிடுவேன். ஆனால், இதில் ஓர் ஆபத்து இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது நடுவில் ஒரு வரி மறந்துவிட்டால் போச்சு! லிங்க் விட்டுப் போய்விடும். அடுத்து என்ன பேச வேண்டுமென்றே தெரியாது. மொத்தமும் மறந்து போய்விடும். இதனால் சபை நடுவே திருதிருவென்று முழிக்கும்படியாகி, கேலிப் பொருளாகிவிடுவோம். இப்படி இரண்டொரு முறை நடக்கவும், நான் சுதாரித்துக்கொண்டேன்.

என்ன பேச வேண்டும் என்பதை எழுதி வாங்கிக்கொள்வதோடு சரி; அதை ஒரு வரி கூட மனப்பாடம் செய்வதில்லை. மாறாக, அதிலிருந்து நாம் சொல்ல வருவது என்ன என்று புரிந்து கொள்வேன். முக்கிய வார்த்தைகளை மட்டும் ‘கீ வேர்ட்ஸ்’ ஆகக் குறித்துக்கொண்டு போய், கூட்டத்தில் எனக்குத் தெரிந்ததை என் சொந்த மொழியில், சொந்த வாக்கியங்களில் இயல்பாகச் சொல்லத் தொடங்கினேன். அதன்பிறகு மேடை பயமும் இல்லை; என் பேச்சில் மறதியும் தடுமாற்றமும் இல்லை.

இதுவே தேர்வுக்குப் பொருந்தும். ஒரு பதிலை மனப்பாடம் செய்துகொண்டு போனால், நடுவில் ஒரு வார்த்தை மறந்தாலும் மொத்த பதிலும் மறந்துவிடும். எனவே, மனனம் செய்யக் கூடாது. புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொண்டதைத் தெளிவாக விவரித்து எழுத நமக்கு மொழியறிவு முக்கியம். இங்கேதான் தாய்மொழி வழிக் கல்வி என்பது முக்கியமாகிறது. காரணம், வீட்டில் பேசிப் பழகும் மொழி தாய்மொழி. நம் எண்ணங்களைப் பிறருக்கு எளிதாகவும் தெளிவாகவும் புரியவைக்கும் மொழி அது. எனவே, பாடங்களைத் தமிழில் படித்தால் அதை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையிருக்காது. மனதில் வீணான பாரமோ, குழப்பமோ இருக்காது.

தாய்மொழிக் கல்வி என்பதையே புரிந்துகொள்ளாத சிலர், ‘அறிவியலை எப்படித் தமிழில் படிப்பது? ஒவ்வொரு அறிவியில் வார்த்தைக்கும் தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தைகளும் கடினமாக இருக்கும். அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா?’ என்கிறார்கள். தமிழில் படிப்பது என்பதற்கு இதுவா அர்த்தம்? ரேடியோவை ரேடியோ என்று சொல்லுங்கள். செல்போனை செல்போன் என்றே சொல்லுங்கள். அதற்கு ஏன் வீணாக வானொலி, கைபேசி, அலைபேசி என்று மண்டையைப் போட்டு உருட்டுகிறீர்கள்? மொழி என்பது தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்துவதற்கானது. பஸ்ஸும் ரேடியோவும் செல்போனுமே சுலபமாகப் புரிகிறபோது, அதை வேலைமெனக்கெட்டுத் தமிழ்ப்படுத்த வேண்டுமா?

அதே போல, விஞ்ஞானச் சொற்களையும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு என்றே சொல்லுங்களேன். கரியமில வாயு, பிராண வாயு என்று ஏன் பிராணனை வாங்குகிறீர்கள்? அவற்றைக்கொண்டு மாணவனுக்கு நீங்கள் என்ன புரியவைக்கப் போகிறீர்கள் என்கிற வழிமுறையைத்தான் தமிழில் விளக்க வேண்டுமேயல்லாது, மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கல்ல தமிழ்க் கல்வி.

மேல் நிலைப்படிப்பு வந்த பிறகுதான் விருப்பப்பாடம் என்று ஒரு மாணவன் தான் விரும்பிய படிப்பை எடுத்துப் படிக்க முடிகிறது. அதுவே தவறு என்பது என் கருத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தில் விருப்பம் இருக்கும்; வேறொன்றில் இருக்காது. ஐந்தாம் வகுப்பு வரை கணிதம், சரித்திரம், பூகோளம், அறிவியல் எனப் பலவற்றையும் ஓர் அறிமுகமாகக் கற்றுத் தந்துவிட்டு, அவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று பார்த்து, ஆறாம் வகுப்பிலிருந்தே அந்தப் பாடத்தில் சிறப்புக் கவனம் செலுத்தவும், அதில் உச்ச நிலைக்குப் போகவும் பயிற்றுவிக்க வேண்டும்.

எனக்குச் சரித்திரம், பூகோளம் என்றால் வேப்பங்காய். தமிழும் கணிதமும் விருப்பமாக இருந்தது. என் பள்ளி மார்க்குகளைப் பார்த்தால் இந்த இரண்டிலும்தான் நான் தொடர்ந்து அதிக மார்க்குகள் வாங்கினேன். ஆனாலும், இன்றைய கல்வித் திட்டத்தால், தமிழ்ப் பாடமாக என்ன கொடுக்கப்பட்டிருந்ததோ அதை மட்டும்தான் நான் படிக்க முடிந்ததே தவிர, அதைத் தாண்டி என் தமிழறிவு விருத்தியாகவில்லை. கணிதமும் அப்படித்தான்.

இப்படி, ஒவ்வொரு மாணவனின் விருப்பத்துக்கும் திறனுக்கும் ஏற்ப அவனைப் பயிற்றுவிப்பதற்குரிய திட்டத்தைக் கல்வியாளர்கள் தீட்ட வேண்டும். தமிழில் சிறந்து விளங்கும் மாணவனைச் சொந்தமாய்க் கதை, கட்டுரைகள் எழுதிக் காட்டச் சொல்லவேண்டும். அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவனை அறிவியல் உண்மைகளைப் பிராக்டிகலாகச் செய்து பார்க்கச் சொல்லிப் பழக்க வேண்டும். சிறு சிறு கண்டுபிடிப்புகளைச் செய்யச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். பூகோளத்தில் பிரியமுள்ள மாணவனுக்கு இயற்கைச் சூழல் உள்ள பல இடங்களுக்கும் சுற்றுலா அழைத்துப் போய் நேரடியாகக் காண்பிக்க வேண்டும். இதையெல்லாம் சாத்தியப்படுத்துவது எப்படி என்று கல்வியாளர்களும் அரசாங்கமும்தான் ஒன்றாக அமர்ந்து யோசித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வியாளர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறையுள்ள பெரியவர்கள், உளவியல் நிபுணர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் உள்ள ஒரு குழுதான் இதைச் சரியான முறையில் சாத்தியப்படுத்த முடியும்.

ஏட்டுக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி, செயல்முறைக் கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டால், தேர்வுகளும் மார்க்குகளும் தாமாகவே முக்கியமற்றுப் போய்விடும்.

தனக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்று சுய பரிசோதனை கொள்வதற்காகத்தான் தேர்வுகளும் மதிப்பெண்களும் உள்ளனவே தவிர, அதில் அச்சம் கொள்ள எதுவும் இல்லை என்பது மாணவனுக்குத் தன்னால் புரிந்துபோகும். இதையெல்லாம் செய்யாமல், மதிப்பெண் முறையை மாற்றி கிரேடு முறை கொண்டு வந்துவிடுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை.

என் பாட நோட்டில் வகுப்பாசிரியர் ஒருமுறை எல்லாப் பக்கங்களிலும் சிவப்பு மையால் ரைட் போட்டு, ‘குட்’, ‘குட்’ என்று போட்டுக் கொடுத்தார். எனக்கு ரொம்பச் சோகமாகிவிட்டது. அன்று முழுக்க நான் மிக வருத்தத்தில் இருந்தது இன்றைக்கும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. காரணம், அவரிடம் ‘குட்’ வாங்கியது அதுதான் முதல் தடவை. அதற்கு முன்னெல்லாம் அவர் ‘வெரி குட்’ என்றுதான் எனக்குப் போடுவார். டீகிரேடு ஆகிவிட்டால் வருத்தம் இருக்குமா, இருக்காதா?

எனவே, மீண்டும் சொல்கிறேன்... தேர்வுகளும் மதிப்பெண்களும் ஒரு விஷயமே இல்லை. கல்வி முறை மாறினால், தேர்வு முறைகளும் மதிப்பெண் முறைகளும் தன்னால் மாறிவிடும்.

காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அந்த நோய்க்கு மருந்து கொடுக்க வேண்டுமே தவிர, காய்ச்சலுக்கு வெறுமே ஜுர மாத்திரை முழுங்கிப் பயனில்லை.

சரியான பதில்களைச் சொல்வதற்கு உங்கள் குழந்தைகளைப் பழக்காதீர்கள்; சரியான கேள்விகளைக் கேட்கப் பழக்குங்கள்!

Friday, July 03, 2009

சாவியின் அணிந்துரை!

நான் ஏன் சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் போடவில்லை என விளக்கமாக ஒரு பதிவினை என் இன்னொரு பிளாகில் ‘தொகுதிக்கு வேணும் ஒரு தகுதி’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதில், இருபது சிறுகதைகளை இருபது பிரபலங்களிடம் தந்து ஒவ்வொன்றுக்கும் விமர்சனம் கேட்டு வாங்கியதையும், இருபது கதைகளையும் என் குருநாதர் சாவி அவர்களிடம் தந்து அணிந்துரை எழுதி வாங்கியதையும் சொல்லியிருந்தேன். பின்னர், என்னுடைய கோபத்தால் அந்தப் புத்தகத் தொகுப்பு வெளிவராமல் போனது பற்றியும், நான் பதிப்பகத்தாரிடம் தந்த தாஸ்தாவேஜுகள் அனைத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டு வந்து, ஒரு மூட்டையாகக் கட்டிப் பரண் மேல் போட்டுவிட்டேன் என்பதையும் கூட அதில் குறிப்பிட்டிருந்தேன்.

எனது அந்தப் பதிவினைச் சமீபத்தில் என் தந்தையார் படித்துவிட்டு, சாவி எழுதித் தந்த அந்த முன்னுரையைப் படிக்க விரும்பி, தேடிப் பார்த்துத் தரும்படி ஆவலுடன் கேட்டார். மூக்கில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு, புழுதியும் ஒட்டடையும் படிந்து கிடந்த பரண் மீதிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே இறக்கி வைத்து, போன ஞாயிற்றுக்கிழமைதான் அவற்றைக் கண்டெடுத்தேன்.
சாவி சார் தம் கைப்பட எழுதித் தந்த அந்த அணிந்துரையை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நானே மீண்டும் இப்போதுதான் படிக்கிறேன். படிக்கும்போது அவரின் ஞாபகங்கள் மேலிட, நெஞ்சம் நெகிழ்கிறது; கண்கள் கசிகின்றன.

இதோ, அவர் எழுதித் தந்த அணிந்துரை:

“எண்பத்தைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நான், பத்திரிகைத் துறையில் ஏறத்தாழ அறுபது ஆண்டுக் காலம் உறவாடியிருக்கிறேன். எத்தனையோ பேர் என்னிடம் பயிற்சி பெறவும், பணியாற்றவும் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வந்த வேகத்திலேயே திரும்பியும் போயிருக்கிறார்கள். காரணம் என்ன என்று அவர்களைக் கேட்டால், ‘ஸாரோட முன்கோபம்’ என்பார்கள். இருக்கலாம். ஆனால், உண்மையில் காரணம் இல்லாமல் எனக்குக் கோபம் வருவதில்லை. அந்தக் காரணம்கூட என்னிடம் பணிபுரிபவர்கள் நல்ல முறையில் வரவேண்டும், பத்திரிகைத் தொழிலைச் சரியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான்.

இப்படி என் வட்டத்தில், நான் பார்த்த இளைய தலைமுறை பத்திரிகைத் தொழில் ஆர்வலர்களில் என்னைப் பளிச்சென்று கவர்ந்த ஒருவன் ரவிபிரகாஷ்தான். சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதை அப்படியே செயல்படுத்தும் அவனது ஆற்றல் என்னைப் பிரமிக்க வைத்தது. இன்று, திறமைமிக்க ஒரு முழு எழுத்தாளனாக வளர்ந்திருக்கும் ரவிபிரகாஷை நான் ‘அவன்’ ‘இவன்’ என்று பேசுவது மரியாதைக்குறைவால் அல்ல. ரவி மீதுள்ள அன்பால், அபிமானத்தால், பாசத்தால், நெருக்கத்தால்!

நான் நடத்திய சாவி இதழில் அவன் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஒரு நாள் என் பார்வைக்கு வரவேண்டிய ப்ரூஃபை என் அனுமதி இல்லாமலேயே அவனே படித்துச் சில திருத்தங்களைச் செய்து எனக்கு அனுப்பி வைத்தான். ‘ஆசிரியருக்குப் போகவேண்டிய ப்ரூஃபை யாரைக் கேட்டு நீ பார்த்தாய்? அவரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறாய்!’ என்று மற்ற உதவி ஆசிரியர்கள் அவனைப் பயமுறுத்தியதாகப் பின்னர் அறிந்தேன். ஆனால், அந்த ப்ரூஃபை அவன் திருத்தியிருந்ததைப் பார்த்து நான் கோபப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சிதான் அடைந்தேன். காரணம், நானே திருத்தியிருந்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்குச் சிறப்பாகவும் கச்சிதமாகவும் இருந்தன அவனுடைய திருத்தங்கள்.

‘சாவி’யில் ரவி பணியாற்றியவரை, ஒவ்வொரு நாளும் நானும் அவனும் பத்திரிகை சம்பந்தமாகச் சந்தித்துக்கொண்டபோதெல்லாம் அவனுள் மண்டிக்கிடந்த பத்திரிகை ஆசிரியர் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அதைக் கண்டு எனக்கு ஒரு சிறந்த வாரிசு உருவாகி வருவதாகவே உணர்ந்தேன்.

அற்புதமான உழைப்பாளி அவன். பல நாட்களில், நான் இரவு தூங்கப் போகும்போது பார்த்தால், அவன் கருமமே கண்ணாக இருந்து வேலை பார்த்துக்கொண்டு இருப்பான். காலையில் எழுந்து பார்த்தால், அப்போதும் வேலைதான். அண்ணா நகரில் என் வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த நாட்கள் அவை. இப்படி ஒரு ‘வொர்க்ஹாலிக்’கா என்று நான் வியந்துபோயிருக்கிறேன்.

கதை எழுதுவதில் கவனம் செலுத்தினால் பத்திரிகை வேலையில் கவனம் சிதறும் அல்லது குறையும் என்பதால், என்னிடம் பணிபுரிபவர்களை நான் அதிகம் எழுத அனுமதிப்பதில்லை. ஆனால், ரவிபிரகாஷை என்னால் அப்படி ‘அமுக்கி வைக்க’ முடியவில்லை. ஏனெனில், அவன் எழுதிய சில கதைகள் ‘இவற்றை வெளியிட்டே ஆக வேண்டும்’ என்ற கட்டாயத்தை எனக்கு ஏற்படுத்தின.

தனது உழைப்பாலும் ஜர்னலிஸத் திறமையாலும் கணிசமான உயரத்தில் ஓங்கி நிற்கும் ரவிபிரகாஷ் என்னால் வளர்க்கப்பட்டவன் என்பதை எண்ணி இறும்பூது எய்துகிறேன். இன்று அவன் ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் தலைமையில் இயங்கும் ஆசிரியர் குழாமில் பங்கு பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றி வருவது கண்டு பெருமைப்படுகிறேன்.

ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை, அவளை நல்ல முறையில் வளர்த்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட வைக்கும்போது எத்தனை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவாரோ, அந்த நிலையில் நான் ஆனந்தப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். அத்துடன், நான் வாழ்க்கைப்பட்ட புக்ககத்துக்கே அவனும் போய்ச் சேர்ந்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

ரவிபிரகாஷ் எழுதிய இருபது கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்தக் கதை ‘ஒசத்தி’, எது ‘சுமார்’ என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு எல்லாமே உயர்ந்த கதைகளாக அமைந்துள்ளன. வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் ருசி அதிகம், எந்தப் பக்கம் ருசி குறைவு என்று சொல்ல முடியாதல்லவா, அதைப் போலத்தான்!

தெளிவான எளிய நடையில், சரளமாகக் கதை சொல்லும் பாணியில் கைதேர்ந்த ரவிபிரகாஷ்! சபாஷ்! கீப் இட் அப்!

- சாவி.

குறிப்பு: என் சிறுகதைத் தொகுப்பு வெளிவராததில் எனக்கொன்றும் பெரிய வருத்தமில்லை. சாவி உயிருடன் இருக்கும்போதே அவரின் இந்த அணிந்துரையோடு இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து ஆசி பெற முடியவில்லையே என்கிற ஒரே வருத்தம்தான்!

Wednesday, July 01, 2009

இது சரியான தேர்வு அல்ல!

த்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் கபில் சிபல். காரணம், தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதாம்.

தினந்தோறும் நாளேடுகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்திகள் வருவது கண்டு அதைப் படிப்பவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதே, அப்படியானால் இனி நாளேடுகளில் அப்படியான செய்திகளைப் பிரசுரிப்பது ரத்து செய்யப்படுமா?

ப்ளஸ் டூ தேர்வுகள் இன்னும் அதிக மன அழுத்தத்தைத் தருமே, அவற்றையும் ரத்து செய்துவிடலாமே?

மதிப்பெண் முறை கூடாது; அதுவும் மன அழுத்தத்தைத் தரும். அதனால் கிரேடு முறை கொண்டு வரப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். ‘ஏ’ கிரேடு மாணவனைப் பார்த்து ‘டி’ கிரேடு மாணவனுக்கு மன அழுத்தம் வராதா?

தேர்வு கூடாது, மதிப்பெண் கூடாது என்றால், அப்புறம் எப்படித்தான் மாணவர்களின் கல்வித் தரத்தைச் சோதிப்பது?

விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவன், தவளை ஒன்றின் ஒரு காலை வெட்டிவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். தவளை வலி தாளாமல் துடித்து எகிறியது. இன்னொரு காலையும் வெட்டிவிட்டு ‘ஜம்ப்’ என்றான். அப்பவும் துள்ளித் துடித்தது. விஞ்ஞானி, தவளையின் மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். வலியால் துடித்த அந்தத் தவளை தன் ஒரு காலைக் கொண்டே கோணலாக எகிறியது. கடைசியாக அந்த விஞ்ஞானி தவளையின் நான்காவது காலையும் வெட்டி எறிந்துவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன் கொஞ்சம்கூட அசைய முடியாமல் விழுந்து கிடந்தது. ‘ஹூர்ரே..!’ என்று குஷியாகக் கத்திய அந்த போலி விஞ்ஞானி, ‘இன்றைக்கு நான் ஓர் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன். அதாவது, தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், அதற்குக் காது கேட்காது!’ என்று குறிப்பு எழுதி வைத்தானாம்.

அப்படி இருக்கிறது இவர்களின் யோசனைகள்! நமது கல்வித் திட்டத்தில் உள்ள உண்மையான கோளாறு என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல், எதையாவது செய்கிறார்கள். கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித்தால் செரிமானமாகிவிடுமா?

நமது கல்வித் திட்டத்தில் கட்டாயம் மாற்றம் வரவேண்டும். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்குத் தேர்வுகளை ரத்து செய்வதோ, மதிப்பெண் முறையை மாற்றியமைப்பதோ சரியான வழிமுறையாகாது!

நூறாண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்கள் தங்களுக்குக் கணக்குப்பிள்ளை உத்தியோகம் பார்க்க வேலையாட்கள் வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தி வைத்த கல்வித் திட்டம்தான், இன்று நம்மிடையே நடைமுறையில் இருக்கும் மெக்காலே கல்வித் திட்டம். மாணவனின் மனன ஆற்றலை மட்டுமே வளர்த்து, புத்தாக்கத் திறனை வளர்த்துக்கொள்ள எந்த வழிவகையும் செய்யாத இந்தக் கல்வித் திட்டத்தைதான் மாற்றியமைக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் முறையை அல்ல!

நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, எனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்திலிருந்து இரண்டு உதாரணங்கள் கூறுகிறேன்.

கணிதப் பாடம். ‘இருபது பேர் ஒரு வேலையை எட்டு நாளில் செய்வார்கள் என்றால், அதே வேலையை பத்து பேர் செய்ய எத்தனை நாளாகும்? ஒருவருக்கு ஒரு நாள் கூலி ஐம்பது ரூபாய் என்றால், மொத்தக் கூலி எவ்வளவு?’ என்று கணக்கு நீளமாக இருக்கும். உடனுக்குடன் அந்தப் பெருக்கல், வகுத்தலை எல்லாம் போட்டுக்கொண்டு இருந்தால், ஒவ்வொரு முறையும் பின்னமாக வரும். இறுதி விடை மட்டும் ரவுண்டாகக் கிடைக்கும். எனவே, ஒருமுறை நான் இதுமாதிரியான கணக்கில் பெருக்கல், வகுத்தல் இடங்களை மட்டும் அப்படி அப்படியே குறித்துக்கொண்டே, வழிமுறைகளை மட்டும் போட்டுக்கொண்டே போனேன். கடைசியில் பார்த்தால், மேலே இருக்கிற 74 என்கிற எண்ணை கீழே உள்ள 37-ஆல் மிச்சமில்லாமல் வகுக்க முடியும். கீழே இருக்கிற ஓர் எண்ணையும் மேலே இருக்கிற ஓர் எண்ணையும் ஒரு பொது எண்ணால் வகுத்துப் போட முடியும். இறுதியில் சரியான விடை லட்டு போல் கிடைக்கும்.

நானே என் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டு, இதே பாணியில் அத்தனைக் கணக்குகளையும் மிகச் சரியாக, சடுதியில் போட்டுக்கொண்டு போய் என் கணித ஆசிரியரிடம் காட்டியதில் சக்கையாக உதை விழுந்தது. ஒழுங்குமுறையாகப் போட்டுக்கொண்டு வரச்சொல்லி இம்போசிஷன் எழுத வைத்துவிட்டார்.

அடுத்து, தமிழ்ப் பாடம். புலவர் ஒருவர் ஒரு மன்னனிடம் போய்த் தம் புலமையை நிரூபிக்க, அவன் மகிழ்ந்து அவருக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்துவிடுவான். அவர் அந்த விஷயத்தைத் தன் மனைவியிடம் போய்ச் சொல்வார். யானை என்று நேரடியாகச் சொல்லாமல், அதன் வெவ்வேறு பெயர்களைச் சொல்வார். அவளும் ஒவ்வொரு முறையும் அதற்கான அர்த்தத்தை வேறு விதமாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைச் சொல்லுவாள். உதாரணமாக, மாதங்கம் என்று அவர் யானையைச் சொல்ல, அவளோ நிறைய தங்கம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘நாம் இனி ஒரு குறைவுமில்லாமல் வாழ்வோம்’ என்பாள். கடைசியில் புலவர் ‘கைம்மா’ என்றபோதுதான், அதற்கு யானை என்பதைத் தவிர வேறு அர்த்தம் இல்லாததால், சரியாக அர்த்தப்படுத்திக்கொண்டு திடுக்கிடுவாள் என்பது அந்தப் பாடலின் பொருள்.

இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசு மென்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்
பகடென்றேன் உழுமென்றாள் பழனந்தன்னைக்
கம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்
கைம்மாஎன் றேன் சும்மா கலங்கினாளே!

யானையைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவதுதான் இந்தப் பாடலின் நோக்கம். எனக்கு அந்த விஷயம் புரியாமல், நான் நேரே எங்கள் தமிழாசிரியரிடம் போய், “ஐயா! அந்தப் புலவர் முதலில் இரண்டு மூன்று முறை மாற்றிச் சொன்னபோதே, தன் கணவர் யானையைத்தான் பரிசாக வாங்கி வந்திருக்கிறார் என்று அந்த அம்மாள் புரிந்துகொண்டு இருக்கலாமே? அல்லது, அவளுக்குத்தான் புரியவில்லை என்றால், இவராவது கைம்மா என்று சொல்லியிருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காதே?” என்று சீரியஸாகக் கேட்டேன்.

அடுத்த கணம், பளாரென்று என் கன்னத்தில் அறை விழுந்தது. “என்ன பேச்சு பேசுறே அதிகப்பிரசங்கித்தனமா? ஒழுங்கா போய் மனப்பாடம் பண்ணி எழுதுற வழியைப் பாரு! கேக்கறான் கேள்வி கோணங்கித்தனமா!” என்று சீறினார் தமிழய்யா.

இன்னொருமுறை, ‘இன்றியமையாத’, ‘இடுக்கண்’ போன்ற பத்து சிக்கலான தமிழ் வார்த்தைகளைக் கொடுத்து, ஒவ்வொன்றையும் வாக்கியத்தில் பொருத்தி எழுதிக்கொண்டு வரச் சொன்னார். அத்தனை மாணவர்களும் சமர்த்தாக பத்து வார்த்தைகளுக்குப் பத்து வாக்கியங்கள் அமைத்து எழுதிக்கொண்டு போய்ப் பாராட்டுதல்களைப் பெற்றனர்.

நான்தான் கோணங்கியாச்சே? அந்தப் பத்து தமிழ் வார்த்தைகளையும் வரிசையாக அடுத்தடுத்த வாக்கியங்களில் வருமாறு அமைத்து ஒரு பாராவாக, அதாவது முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் தொடர்பு இருக்கும்படியாக எழுதி எடுத்துக்கொண்டு போய்ப் பெருமிதத்தோடு காண்பித்தேன். அதற்கும் அறை விழுந்தது. காரணம் ஐயா சொல்லிக்கொடுத்த வாக்கியங்கள் அல்ல அவை. நானே சொந்தமாகத் தயாரித்து எழுதிக்கொண்டு போனவை. அந்தப் பத்து வார்த்தைகளைச் சரியானபடி நான் வாக்கியங்களில் பொருத்தியிருக்கிறேனா இல்லையா என்று கூடச் சோதிக்கவில்லை தமிழய்யா. சிவப்பு மசியால் குறுக்கே கோடு போட்டு அடித்துவிட்டு, தான் சொல்லிக்கொடுத்ததைப் பிழையின்றி ஒவ்வொன்றையும் பத்து முறை எழுதிக்கொண்டு வந்து காண்பிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

எதற்குச் சொல்கிறேன், மாணவர்களின் புத்தாக்கத் திறமைகள் நமது பள்ளிகளில் ஊக்குவிக்கப்படுவதே இல்லை. அதற்கு முதலில் வழிவகை செய்யட்டும் இந்த அரசாங்கம்! தகுந்த கல்வியாளர்களைக் கொண்டு, கல்வித் திட்டத்தை எப்படி மாற்றியமைக்கலாம் என்று விரிவான ஆய்வு நடத்தட்டும்.

புத்திசாலிகள் பெரும்பாலும் ஞாபக மறதிக்காரர்களாகவே இருப்பதைக் காணலாம். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் புத்திசாலித்தனத்துக்கு எந்தக் குறைவும் இல்லை என்பதையும் இங்கே யோசித்துப் பார்க்கவேண்டும். ஆனால், நமது கல்வி முறையோ மனனம் செய்யும் திறன் உள்ள குழந்தைகளைத்தான் புத்திசாலிகளாகவும், படைப்பாக்கத் திறன் உள்ள குழந்தைகளை மக்குகளாகவும் காட்டுகிறது.

ஆகவே, அதை மாற்றியமைத்து, அதற்கேற்ப தேர்வு முறைகளை வடிவமைத்து, மதிப்பெண் வழங்கட்டும்.

அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கிறபோது, சுவர் விரிசல்களைச் சும்மா பூசி மெழுகுவதில் அர்த்தமில்லை.