உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, July 11, 2010

எதில் இருக்கிறது மகிழ்ச்சி?

ண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கிறது? நமக்குப் பிடித்த சுவையான உணவைச் சாப்பிடுவதிலா? நல்ல பாடலைக் கேட்பதிலா? நல்ல புத்தகம் ஒன்றைப் படிப்பதிலா? நமக்குப் பிரியமான நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதிலா? அருமையான திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதிலா? ஆயாசம் தீர உறங்கி ஓய்வெடுப்பதிலா?

இவை எல்லாவற்றிலுமே மகிழ்ச்சி கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உண்மையான மகிழ்ச்சி என்பது, பிறருக்கு உதவி, அதற்கு அவர்கள் நமக்கு நெஞ்சு நெகிழ நன்றி தெரிவிக்கும்போது கிடைப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் சொல்லவேண்டுமானால், பிறருக்கு உதவும்போது 80 சதவிகிதம் மகிழ்ச்சியும், அதற்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மீதி 20 சதவிகித மகிழ்ச்சியும் சேர்ந்து பூரணத்துவம் பெறுகிறது.

இப்படி எழுதுவதனால், நான் ஏதோ ஓடி ஓடி பிறருக்கு உதவுகிறவன், சேவை மனப்பான்மையில் ஊறித் திளைக்கிறவன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். அப்படி இல்லை. என்னால் என்ன முடியுமோ அதைக் கண்டிப்பாக, தேவைப்படுகிறவர்களுக்குச் செய்து தருவேன். அவர்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய முடிவதாக இருந்தால், தட்டிக் கழிக்காமல், அதை நிறைவேற்றித் தர உண்மையாக முயற்சி செய்வேன். அவ்வளவுதான்!

இப்போது இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், இந்த ஒரே வாரத்திலேயே நான்கு உதவிகளைச் செய்த மன நிறைவு கிடைத்திருக்கிறது எனக்கு!

முதலாவது... நண்பரும் இயக்குநருமான சிம்புதேவன் ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் பற்றிய விவரங்கள் வேண்டும் என்றார். சிம்புதேவனுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் வீட்டில் அந்த நபரை மருமகனாக்கிக் கொள்ள விரும்புகின்றனர் என்றும், எனவே அந்த நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அந்த நபர் எங்கள் அலுவலகத்தோடு தொடர்புடையவர் ஆதலால், அவர் யார், எவர் என அவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் சேகரித்துச் சிம்புதேவனிடம் சொன்னேன். தவிர, அந்த நபரைப் பற்றி இன்னும் நன்கு தெரிந்த ஒரு நண்பரின் செல்பேசி எண்ணையும் கொடுத்து, அவரிடமும் விசாரித்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

மேலும், சிம்புதேவன் தனது ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தைப் பத்திரிகையாளர் சோ அவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க விழைந்தார். சோவிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வேண்டும் என விரும்பினார். அவரே நேரடியாகக் கேட்டிருந்தால், மாட்டேன் என்றா சொல்லியிருக்கப் போகிறார் சோ? இருந்தாலும், ஏனோ என்னைக் கேட்டார். நான் என் நண்பர் துக்ளச் சத்யா மூலமாக அதற்கு ஏற்பாடு செய்தேன்.

சந்திப்பு நடந்ததா, தான் விரும்பியபடி சிம்புதேவன் சோ அவர்களுக்குப் படத்தைப் போட்டுக் காண்பித்தாரா என்று தெரியாது.

இரண்டாவது... பழம்பெரும் எழுத்தாளர் மகரம் அவர்களின் புதல்வரும், என் 30 ஆண்டு கால நண்பருமான திரு.மார்க்கபந்து அவர்களுக்கு எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் என்பவரின் விலாசமும், தொலைபேசி எண்ணும் தேவைப்பட்டது. ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு மகரம் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை பிரேமா நந்தகுமார் ‘பாரத மணி’ என்னும் பத்திரிகையில் எழுதி வந்துள்ளாராம்.

பிரேமா நந்தகுமார் பற்றிப் பலரிடம் விசாரித்ததில், எழுத்தாளர் சாருகேசியிடம் லட்டு மாதிரி அவருடைய வீட்டு விலாசமும், தொலைபேசி எண்ணும் கிடைத்தது. அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் குமுதினி என்றொரு எழுத்தாளர் பல கதைகளையும் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அவருடைய மருமகள்தான் இந்த பிரேமா நந்தகுமார் என்கிற தகவலும் கிடைத்தது. கிடைத்த விவரங்களை உடனே மார்க்கபந்துவுக்குச் சொன்னேன்.

மூன்றாவது... இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் அசிஸ்டென்ட் இயக்குநராகப் பணியாற்றும் ஷாலினி, விகடன் அலுவலகத்துக்கு ஓர் உதவி கோரி வந்திருந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஓவியர் கோபுலு வரைந்த சில ஓவியங்கள் ஒரு ரெஃபரென்ஸுக்காக மணிரத்னத்துக்குத் தேவைப்பட்டுள்ளது. குறிப்பாக, சோழர் காலப் பெண்டிரின் ஓவியங்கள். 1958-59-ல் ஜெகசிற்பியன் எழுதிய தொடர்கதைகளான ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம் ஆகியவற்றுக்கு கோபுலு வரைந்த ஓவியங்கள் கொள்ளை அழகு. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக அந்தக் கால விகடன் இதழ்களை அடிக்கடி புரட்டிக்கொண்டு இருப்பவன் நான் என்பதால், ஷாலினி கேட்ட கோபுலு படங்களை உடனடியாக என்னால் ட்ரேஸ்-அவுட் செய்து கொடுக்க முடிந்தது. ஒன்றிரண்டு படங்கள் என்றால், நானே பிரின்ட்-அவுட் எடுத்துக் கொடுத்திருப்பேன். ஆனால், ஷாலினி அந்த இரண்டு தொடர்கதைகளுக்கும் கோபுலு வரைந்திருந்த அத்தனைப் படங்களையும் ஒரு சி.டி-யில் காப்பி செய்து தரும்படி கேட்டார். அது என்னால் சாத்தியமில்லை என்பதால், இதழ் தேதிகளைக் குறித்துக் கொடுத்து, ஆனந்த விகடன் இணை ஆசிரியர் திரு. கண்ணன் மூலமாக சிஸ்டம் டிபார்ட்மென்ட்டில் பதிவு செய்துகொள்ளும்படி சொல்லி அனுப்பினேன்.

நான்காவது... திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களோடு ஒரு அறிமுகம் ஏற்படுத்தித் தரும்படி எழுத்தாளர்(கள்) சுபா என்னைக் கேட்டுக்கொண்டார்கள். திரு.இறையன்பு அவர்களைச் சந்தித்துப் பேச தாங்கள் நாலைந்து முறை முயன்றும், இயலாமல் போனதாகச் சொன்னார்கள்.

சுபா சமீபத்தில் தொடங்கியிருக்கும் ஒரு பதிப்பகத்தின் மூலமாக நாலைந்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, மகாபலிபுரம் பற்றிய புத்தகம் (மகாபலிபுரம் என்பது தவறு; மாமல்லபுரம் என்பதே சரி என்று விளக்கினார் திரு. இறையன்பு). இது வெறும் விளக்கக் கையேடு போல இல்லாமல், மகாபலிபுரத்துக்குச் சுற்றுலா வருபவர்களுக்குக் கூடவே ஒரு கைடு வந்து வழிகாட்டி, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்வது போல விரிவாகவும், சுவாரசியமாகவும் தகவல்கள் இடம்பெற்றுள்ள புத்தகம். இதில், கோட்டுச் சித்திரங்களை அருமையாக வரைந்து அசத்தியிருக்கிறார் ஓவியர் ஜெ.பி. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம்.

திரு.இறையன்பு சுற்றுலாத் துறைச் செயலர் என்பதால், அவருக்கு இந்தப் புத்தகங்களை அளிக்க விரும்பி, அவரிடம் இது பற்றிப் பேச விரும்பினார்கள் சுபா. திரு.இறையன்புவிடம் இன்று காலை செல்பேசியில் தொடர்புகொண்டபோது, மாலை 5 மணிக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே எழுத்தாளர்கள் ‘சுபா’வை அழைத்துச் சென்று, இறையன்புவிடம் அறிமுகப்படுத்தினேன். அறிமுகப்படுத்தினேன் என்றால், ‘இவர்கள்தான் சுபா. இவர்கள் பெரிய எழுத்தாளர்கள். ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான நாவல்களையும், சில திரைப்படங்களுக்குக் கதை, வசனமும் எழுதியிருக்கிறார்கள்’ என்று அல்ல. எழுத்தாளர்கள் ‘சுபா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? திரு.இறையன்புவுக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. என்ன... இவர்கள் ஒருவருக்கொருவர் பத்திரிகை எழுத்துக்கள் மூலமாக அறிந்திருந்தார்களே தவிர, நேரடி அறிமுகம் இல்லை. அவர்களின் சந்திப்புக்கு நான் ஒரு ஓடமாக இருந்தேன். அவ்வளவே!

நாலு பேருக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி! அவற்றை இங்கே எழுதிப் பெருமைப்பட்டுக்கொண்டுவிட்டேன். ஆனால், என்னிடம் உதவி கோரி, நிறைவேற்ற இயலாமல் போனவை நாற்பதாவது இருக்கும். என்னிடம் வந்த அந்த நாற்பது கோரிக்கைகளில், எனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவை, சாத்தியம் இல்லாதவை முப்பதாவது இருக்கும். மீதி, நான் உதவ முயன்றும், பல காரணங்களால் இயலாமல் போனவை.

உதாரணமாக, பழம்பெரும் தமிழறிஞர் மறைமலையடிகள் அவர்களின் மகன் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகவும், தமிழக அரசாங்கத்தின் மூலமாகத் தன் குடும்பத்துக்கு ஏதேனும் நிதி உதவி பெற்றுத் தருமாறும் என்னிடம் சில மாதங்களுக்கு முன் கோரிக்கை வைத்தார். அவரைப் பற்றி ஜூனியர் விகடன் குழுவிடம் சொல்லி, அந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவரச் செய்தேன். என்னால் முடிந்த உதவி அவ்வளவுதான்!

சென்ற வாரம் அவர் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசு இதுவரை தன் குடும்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை என்று வருத்தப்பட்டு, மீண்டும் நிதி உதவி கோரிக்கையை வைத்தார். “மன்னிக்கவும் ஐயா! இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நீங்கள் ஜூனியர் விகடனைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.

அதே போல், ஓவியர் கோபுலு கேட்ட ஓர் உதவி உள்பட இன்னும் பலவற்றை (நாற்பது கோரிக்கைகள் என்பது சும்மா ஒரு கணக்குதான். துல்லியமான புள்ளி விவரம் அல்ல) என்னால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை.

உதவி செய்யமுடிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையும் அதே வேளையில், உதவி செய்ய இயலாமல் விட்ட விஷயங்களையும் பகிர்ந்துகொண்டு வருத்தமும் சிறுமையும் அடைவதுதானே முறை!

ஆனால் ஒன்று... உதவ இயலாமல் போன நாற்பது விஷயங்கள் தந்த வருத்தத்தை, உதவ முடிந்த நாலு விஷயங்கள் அறவே போக்கி, பெரிய மன நிறைவை அளித்திருப்பது உண்மை!

.

Tuesday, July 06, 2010

தாதா வீட்டில் நான்!

ரொம்ப நாளாக வலைப்பூ எழுதாததில் எனக்கு வருத்தம்தான். அலுவலகப் பணிகளும், திருமணம் போன்ற விசேஷங்களின்பொருட்டு வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தங்களும் சேர்ந்துகொண்டதால், வலைப்பூக்களில் எழுதமுடியவில்லை.

இனி, வாரம் ஒருமுறையாகிலும் தவறாமல் எழுத முயல்கிறேன்.

நான் வாடகைக்குக் குடியிருந்த பன்னிரண்டு வீடுகளைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டு, ஒன்பதாவது வீடு வரையில் எழுதி முடித்துவிட்டேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான அனுபவம்!

நெசப்பாக்கம் திலகவதி அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்தபோதுதான், எங்கள் குழந்தை ஷைலஜா யூ.கே.ஜி. முடித்தாள். பள்ளி வேனில்தான் போய் வருவாள். காலையில் எட்டு மணிக்கு அவளுக்கு யூனிஃபார்ம் அணிவித்து, கையில் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணித் தந்து, ஒரு குட்டி நாற்காலியைப் போட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்த்தி வைத்திருப்போம். வேன் வந்ததும், அதில் குழந்தையை ஏற்றி அனுப்பிவிட்டு, உள்ளே வருவார் என் மாமியார்.

சாயந்திரம் பள்ளி வேன், கடைசி குழந்தையாக ஷைலஜாவைத்தான் கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போகும். பெரும்பாலான நாட்களில் அவள் தூங்கியபடிதான் வருவாள். நாலு மணிக்குக் கிளம்பும் வேன் எல்லாக் குழந்தைகளையும் விட்டுவிட்டு, இவளைக் கடைசியாகக் கொண்டு வந்து எங்கள் வீட்டில் சேர்ப்பதற்குள் 6 மணி ஆகிவிடும். பள்ளி வேனில் ஒருமுறை நானும் சென்று வந்ததால், குழ்ந்தைக்கு எத்தனை அலுப்பு இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். தூங்குகிற குழந்தையை என் மாமியால் அப்படியே தூக்கிச் செல்ல முடியாது. உலுக்கி எழுப்பித்தான் இறக்கி அழைத்துப் போக வேண்டியிருக்கும். அசந்து தூங்குகிற குழந்தையை எழுப்ப அவர்களுக்குப் பாவமாக இருக்குமாம்.

இதனாலேயே பள்ளிக்கு அருகில் வீடு கிடைத்தால் நல்லது என அசோக் நகரில் தேட ஆரம்பித்துவிட்டேன். சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸில் குடியிருந்தபோதிலிருந்து தமிழ்நாடு மளிகைக் கடையில்தான் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவது வழக்கம். அந்தக் கடையின் உரிமையாளர் முகம்மது இஸ்மாயீல் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரும் எங்களுக்கு நெருங்கிய பழக்கமாகிவிட்டதால், அவர்களிடமே “இந்தப் பக்கத்தில் வாடகைக்கு வீடு ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு இருப்பாள் என் மனைவி. அவர்களும் இன்முகத்தோடு, “அவசியம் சொல்கிறோம்” என்பார்கள்.

அச்சமயத்தில், புரோக்கர் மூலமாக, இந்தப் பக்கத்தில் ஒரு வீடு காலியாக இருப்பதாக அறிந்து, ஒரு மதிய வேளையில் வந்து பார்த்தேன். மிக மிக எளிமையான வீடுதான். அட்வான்ஸ் 5,000 ரூபாய்; வாடகை 500 ரூபாய். பள்ளிக்கு அருகில் குடிவந்தால் போதும் என்கிற எண்ணத்தில், முன்னே பின்னே யோசிக்காமல் உடனடியாக வந்து குடியேறிவிட்டேன்.

சாமான்களை ஒரு வேனில் எடுத்து வரும்போது, அதை ஓட்டி வந்த டிரைவர் சொன்னார்... “என்னா சார்! அங்கேயா குடி போகப் போறீங்க? பார்த்து, நாலு எடத்துல விசாரிச்சுட்டு வரக்கூடாதா சார்? ரொம்பப் பேஜாரான எடம் சார் அது! சாயந்திரம் 6 மணிக்கு மேல தெருவே நாறிடுமே! அடிதடி, சண்டைனு அமக்களப்படும். குடிச்சிட்டுத் தகராறு பண்ணுவானுங்க. ஒரே கலீஜா இருக்கும். எங்களுக்கே அந்தத் தெருவுல நுழைய கஸ்டமா இருக்கும். ரொம்ப ராவடியான எடம் சார் அது! ஏமாந்துட்டீங்களே சார்!”

டிரைவர் இப்படி வயிற்றில் ஏகத்துக்கும் புளியைக் கரைக்க, நொந்து நூலானேன்.

கீழே சின்னச் சின்ன போர்ஷன்களாக மூன்று குடித்தனங்கள்; கடைசி போர்ஷனில் நாங்கள் குடியேறினோம். மாடியில் வீட்டு ஓனர் குடியிருந்தார்.

முதல் போர்ஷனில் கல்லூரி மாணவன் ஒருவன் குடியிருந்தான். அவன் தன் பங்குக்கு ஒரு வெடிகுண்டை வீசினான். “இங்கே ஏன் சார் வந்து மாட்டிக்கிட்டீங்க? எப்படியாவது அட்வான்ஸைத் திரும்ப வாங்கிக்கிட்டு, சீக்கிரமே வேற வீடு பார்த்துப் போயிடுங்க. அதான் உங்களுக்கு நல்லது” என்றான். “என்னப்பா விஷயம்?” என்றேன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு.

“இந்த வீட்டு ஓனர் மேல பதினாலு கொலை வழக்கு இருக்குது. கூலிக்குக் கொலை செய்யும் கும்பலோட தலைவரு இவர். வெளியே டாடா சுமோ நிக்குது பார்த்தீங்களா, அதுல எப்பவும் தடி, தாம்பு, அரிவாளு, சூரிக்கத்தின்னு எல்லா ஆயுதமும் இருக்கும். ஆர்டர் வந்தவுடனே கிளம்பிப் போய், சம்பந்தப்பட்ட ஆளோட கை, காலை வாங்கிட்டு வந்துடுவாங்க. இல்லே, தீத்துடறதுன்னாலும் தீத்துட்டு வந்துடுவாங்க. எனக்கே இந்த விஷயம் தெரியாமத்தான் இங்கே வந்து மாட்டிக்கிட்டேன். எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிஞ்சுடும். சொல்லிட்டு நல்லதனமா கிளம்பிடுவேன். நீங்களும் எப்படியாச்சும் கிளம்பிடப் பாருங்க” என்றான் அந்தப் பையன்.

எனக்கு அடிவயிற்றில் சொரேல் என்றது. கொடுத்த அட்வான்ஸ் தொகை திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உடனே வேறு இடம் பார்த்துப் போய்விட வேண்டும் என்று மனசு துடித்தது.

பெரும்பாலான நாட்கள், அந்த வீட்டு வாசலில் ஒரு போலீஸ்காரர் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருப்பார். தாதாவின் நடமாட்டத்தைக் கவனிப்பதற்காகவாம்! அந்தம்மா (ஓனரின் மனைவி) மிகவும் தன்மையாகத்தான் எங்களிடம் பேசினார்; பழகினார். “அவரு இல்லீங்களா? ரொம்ப நாளா காணோமே?” என்று இயல்பாகக் கேட்பதுபோல் ஒரு நாள் அவரிடம் கேட்டேன். “வெளிய போயிருக்கிறாரு. பத்து நாள்ல வந்துருவாரு” என்றார். இதைக் கேட்டுக்கொண்டு இருந்த அந்தக் கல்லூரி மாணவன் பின்னர் என்னிடம் தனியாக, “கேட்டீங்களா... வெளிய போயிருக்கிறாராம்! அதாவது, வெளியே போயிருக்கிறார்னா ‘உள்ளே’ போயிருக்கிறார்னு அர்த்தம். போலீஸ்காரங்க அப்பப்போ வந்து சந்தேக கேஸ்ல இவரை அழைச்சுக்கிட்டுப் போய், ஜெயில்ல பத்துப் பதினஞ்சு நாள் வெச்சிருந்து அனுப்புவாங்க. மாசத்துக்கு கேஸ் கணக்குக் காட்டணும்னாலும் இவரை அழைச்சுக்கிட்டுப் போயிடுவாங்க. அதைத்தான் அந்தம்மா பாலிஷா வெளிய போயிருக்கிறார்ங்குது!” என்றான்.

வயிற்றில் இப்படி அவன் அவ்வப்போது அமிலம் வார்த்துக்கொண்டு இருந்தாலும், பால் வார்ப்பது போலவும் ஒரு தகவலைச் சொன்னான். “சார்! இவங்க ஆளை வெட்டுறது, தீர்க்குறது எதுவும் நம்ம சென்னைல கிடையாது. ஏன், தமிழ்நாட்டுலேயே கிடையாதுன்னு சொல்லலாம். தமிழ்நாட்டு பார்டருக்குள்ள ஆர்டர் வந்தா எடுக்க மாட்டாங்க. ஆந்திரா, கேரளா, கர்நாடகான்னு போயி முடிச்சுட்டு வந்துடுவாங்க. பொதுவா இந்த மாதிரி தாதாங்க, அவங்க இருக்கிற ஏரியாவுல யார் கிட்டயும் தகராறு வெச்சுக்க மாட்டாங்க. நல்லதனமாவே நடந்துப்பாங்க” என்றான். கொஞ்சம் ‘அப்பாடா’ என்றிருந்தது.

நாங்கள் அங்கே ஆறு மாத காலத்துக்கும் குறைவாகவே இருந்தோம். நாங்கள் அங்கே இருந்த வரையில், வீட்டு ஓனரும் சரி, சுற்றி இருந்தவர்களும் சரி, (பெரும்பாலும் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களாகவே இருந்தார்கள்) எங்களிடம் மரியாதையாகவும் அன்பாகவுமே நடந்துகொண்டார்கள். தெருவில் உள்ள பொதுக் குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கப் போனால், “ஏய்... நவுரு! அய்யருக்கு வுடு! மொதல்ல அவரு தண்ணி பிடிச்சுக்கிட்டுப் போவட்டும்” என்பார்கள். “இருக்கட்டுங்க. நீங்க பிடிங்க. நான் அப்புறமா பிடிச்சுக்கிறேன்” என்றாலும் கேட்க மாட்டார்கள். “எவ்ளோ நேரம் இந்தக் கூட்டத்துல நிப்பீங்க? கொண்டாங்க கொடத்தை” என்று அந்தப் பெண்மணிகளே வாங்கி, நீர் நிரப்பித் தருவார்கள்.

சுகாதாரக் கேடான ஏரியா அது. வீட்டில் இருந்த கிணற்றுக்கு, கார்ப்பரேஷனில் இருந்து வாரம் ஒரு முறை வந்து மருந்து அடித்துவிட்டுப் போவார்கள். தெரு ஓரங்களில் பிளீச்சிங் மருந்து தெளித்துவிட்டுப் போவார்கள். எங்கள் குழந்தைகள் இருவருக்கும் முகத்தில் அடிக்கடி கட்டிகள் வந்து, உடைந்து, ரத்தம் ரத்தமாகப் பெருகி வழியும். பரிசோதித்த டாக்டர், “முதல்ல இடத்தை மாத்துங்க. தண்ணி சரியில்லாததாலதான் இப்படிக் கட்டிகள் வருது” என்றார்.

ஐந்து மாதங்களை அங்கே ஒருவழியாகக் கடத்திய பின்பு, வீட்டு ஓனரைச் சந்தித்து (அவர் ‘வெளியே’ போகாமல் இருந்த சமயத்தில்), எங்கள் அலுவலகத்திலேயே குவார்ட்டர்ஸ் கொடுக்கிறார்கள் என்று புளுகி, வீட்டைக் காலி செய்யவிருப்பதாகச் சொன்னேன். “சரிங்க சார்! நீங்க எப்ப வேணாலும் அட்வான்ஸை வாங்கிக்குங்க. நான் இல்லேன்னாலும் அம்மா கிட்ட கொடுத்துட்டுப் போறேன். தருவாங்க” என்றார் அவர்.

அதன்படியே அடுத்த வாரமே நான் அந்த வீட்டை காலி செய்ய, சொன்னபடியே வீட்டு ஓனர் ‘வெளியே’ போயிருக்க, அந்த மாதத்தில் நாங்கள் அங்கே குடியிருந்த இருபது நாளுக்குண்டான வாடகையை மட்டும் அவரின் மனைவி கணக்குப் பண்ணி அட்வான்ஸில் பிடித்துக்கொண்டு, மீதியை என்னிடம் தந்தார்.

நாங்கள் அடுத்துக் குடியேறிய இடம் (11-வது இடம்) வேறெங்கும் இல்லை; இப்போது குடியிருக்கும் இடத்தின் உரிமையாளரின் இன்னொரு வீடுதான்.

அங்கே சில ஆண்டுகள் குடியிருந்துவிட்டு, பின்னர் சாலிகிராமத்தில் சொந்த ஃப்ளாட் வாங்கி, அங்கே சில மாதங்கள் குடியிருந்து (12-வது இடம்), அந்த இடம் எங்களுக்குச் சரிப்பட்டு வராமல், மீண்டும் பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் வீட்டுக்கே வந்து, நாங்கள் முன்பு குடியிருந்த அதே போர்ஷனில் மீண்டும் குடியேறிய கதையைத்தான் முன்பு விரிவாக எழுதியிருந்தேன்.

பின்பு சில மாதங்கள் கழித்து, இப்போதுள்ள சற்றுப் பெரிய இடத்தில் முன்பு குடியிருந்தவர்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டு, எங்களுக்கு இந்த இடத்தை அளித்தார் பெரியவர் இஸ்மாயீல். இங்கே குடி வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

மகன் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி செல்லும் வரை கண்டிப்பாக இங்கேதான் குடியிருப்போம். அதன்பின்பும், தொடர்ந்து இவர்களின் இல்லத்தில் குடியிருக்கவேண்டும் என்றுதான் ஆசை. பார்ப்போம்!

.