உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, April 01, 2011

அரசியல் மேடைகளில் நான்!

தேர்தல் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கும் நேரம் இது.

அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராகச் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் கான்ஸரால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்றபோது, என்னுடன் படித்த சக மாணவர்கள் (ஐந்தாம் வகுப்பு) அவர் குணமடைந்து நல்லபடியாகத் திரும்பி வரவேண்டுமே என்று தினந்தோறும் பிரார்த்தித்துக்கொண்டதும் நினைவிருக்கிறது. எம்.ஜி.ஆராவது நடிகர். அவரைத் திரையில் பார்த்துப் பார்த்து, ரசிகர்கள் அவர் மீது தீவிர அபிமானம் கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், பிரபல நடிகரிடம் வைத்த‌ அதே அளவு அபிமானத்தை, தீவிர அன்பை ஓர் அரசியல்வாதியிடம் மக்கள் செலுத்தியது அறிஞர் அண்ணாவிடம் மட்டும்தான்! எங்கெங்கும் ஜனங்கள் அண்ணா... அண்ணா... அண்ணா... என்று அவரைக் கொண்டாடினார்கள்.‌‌

கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் முதன்முதலாக அமர்ந்ததும் எனக்குத் தெரியும். நெடுஞ்செழியனைத் தள்ளிவிட்டு முதல்வர் நாற்காலியை அவர் கைப்பற்றிய விதம் பற்றி அரசல் புரசலாக அந்த மாணவப் பருவத்திலேயே எங்களுக்குத் தெரிந்திருந்தது. நோயாளியாகிப் படுத்த படுக்கையாக இருந்த அண்ணாவைப் பார்க்கச் சென்ற கருணாநிதி 'அண்ணா..!' என்று கதறிக்கொண்டே அண்ணாவின் மார்பின் மீது விழுந்ததாகவும், அந்த அதிர்ச்சியிலேயே அண்ணா போய்விட்டார் என்பதாகவும் மாணவர்களுக்குள் (கவனம்: ஐந்தாம் வகுப்பு)பேசிக் கொள்வர்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்வது அந்த நாளில் எனக்குத் தெருக்கூத்து பார்க்கச் செல்வது போல் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. இன்றைக்குப் போல் அந்த நாளில் ஆபாசப் பேச்சுக்க‌ள் காதுக்குள் ஆசிட் வார்க்கவில்லை. அவை நல்லதொரு பட்டிமன்றம் போன்று இருக்கும். தங்கள் கட்சியினரின் சாதனைகளை எடுத்து வைப்பார்கள்; மாற்றுக் கட்சியினர் செய்த தவறுகளைப் பிட்டு வைப்பார்கள். அடுத்து, அந்தக் கட்சியினரின் கூட்டத்துக்குச் சென்றால், இவர்கள் கட்சியின் வண்டவாளங்களைச் சொல்வார்கள். தங்கள் கட்சியைத் தேர்ந்தெடுத்தால் என்ன நன்மை என்று விளக்குவார்கள். பெரியவர், சிறியவர், அனுபவம் வாய்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் எதிர்க் கட்சியினரைச் சகட்டுமேனிக்குக் கடித்துக் குதற மாட்டார்கள்.

குறிப்பாக, டேப் பொன்னையா என்று ஒருவர். குழுவினரோடு வந்து ஜாலியாகப் பாடுவார். வில்லுப்பாட்டு போன்று இடை இடையே, ட்ரூப்பில் உள்ள மற்றவர்கள் எதிர்க் கட்சியினர் பற்றிக் கேள்வி கேட்க, அதற்குக் கிண்டலும் கேலியுமாகப் பதில் சொல்வார் பொன்னையா. பிறகு, அதையே பாட்டாக்கிப் பாடுவார். கேட்கக் கேட்க நேரம் போவதே தெரியாமல், மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரைகூட அமர்ந்து கேட்டிருக்கிறேன். 'ஒரு ரூபா தாரேன், உனக்கு ஒத்தைக் கல் மூக்குத்தி தாரேன்... உதயசூரியன் சின்னத்துக்கு ஓங்கிப் போடும்மா ஓட்டு!' என்று பொன்னையா பாட, 'உன் ஒரு ரூபா வேணாம், ஒத்தைக் கல் மூக்குத்தி வேணாம்! பசுவும் கன்றும் சின்னத்துக்குப் பார்த்துப் போடுவேன் ஓட்டு!' என்று பெண் பாடகி பாடுவார். அருமையான மெல்லிசை நிகழ்ச்சி கேட்பதுபோல் லயித்துப் போய் உட்கார்ந்திருப்பேன்.

நான் பதினொன்றாம் வகுப்பு (அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி) முடித்த பின்பு மேலே படிக்க வசதி இல்லாமல் தண்டச் சோறாகச் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில், இப்படியான அரசியல் மேடைகளில் ஏறிப் பேசத் தொடங்கினேன். முக்கிய வேட்பாளர் அல்லது அரசியல் பிரசாரகர் வரும் வரைக்கும் உதிரிகள் ஒவ்வொருவராக மேடையேறி, மைக் பிடித்துப் பேசுகிற ஆசையில் என்னத்தையாவது உளறிக்கொட்டுவார்களே, அந்த லிஸ்ட்டில் நானும் ஒருவன். என்ன‌ வித்தியாசம் என்றால், அந்தப் பேச்சாளர் கூட்டத்திலேயே நான்தான் வயதில் மிகச் சிறியவன் என்பதோடு, பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய மேடைகளில், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசிப் பரிசுகள் பெற்றிருந்ததால், உளறாமல் தெளிவாகவும் திருத்தமாகவும் பேசுவேன்.

தவிர இன்ன கட்சிக்காக என்றில்லாமல், என்னை ஆர்வத்தோடு கூப்பிடும் எந்தக் கட்சிக்குச் சார்பாகவும் என் பேச்சை அமைத்துக் கொள்வேன். முதல் நாள் மாலை ஒரு கிராமத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசியிருப்பேன்; மறுநாள் அதே கிராமத்தில், அதே திடலில் தி.மு.க‍வுக்கு ஆதரவாகப் பேசுவேன். அதற்கு அடுத்த நாள் தி.மு.க‍வை எதிர்த்து அ.தி.மு.கவுக்கு ஆதரவாகப் பேசுவேன். எனக்கு வேண்டியது ஒரு மேடை, அதில் ஏறி மைக் பிடித்துப் பேசுகிற கௌரவம், என்னைப் பெயர் சொல்லி அழைத்து 'இன்னார் உரையாற்றுவார்' என்று மைக்கில் அறிவிக்கிற கூட்ட ஏற்பாட்டாளரின் வரவேற்பு தரும் உற்சாகம், என் பேச்சை ரசித்துக் கை தட்டுகிற ஒரு கூட்டம், மாலை மரியாதை... அவ்வளவுதான்! மற்றபடி, அரசியல் கூட்டங்களில் பேசி ஒரு பைசா கூட சம்பாதித்தது இல்லை நான்.

சங்கீதமங்கலம், அன்னியூர், நங்காத்தூர், அனந்தபுரம், கல்யாணம்பூண்டி, அதனூர் எனச் சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் போய் அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு கனல் கக்கியிருக்கிறேன். 'அய்யா... அது உதயசூரியன் இல்லய்யா! ஏமாந்துடாதீங்க. பெருசா இருந்தா உதயசூரியனாதான் இருக்கணும்னு அவசியமில்லே. அஸ்தமன சூரியனும் பெருசாத்தான் இருக்கும்! அணைகிற விளக்கு சுடர்விட்டுப் பிரகாசமாக‌ எரியுமே, அதுமாதிரிதான் இப்ப உதயசூரியன் இருக்கு. அதன் காலம் முடிஞ்சு போச்சு! உங்களுக்கு 'இலை' போட்டு விருந்து பரிமாற, மகராசன் எம்.ஜி.ஆர். காத்திருக்காரு. ஏழைகளின் வயிறு வாடுவதைப் பொறுக்காத கலியுகக் கர்ணனுக்கே உங்கள் ஓட்டு!' என்று பேசுவேன்.

அடுத்த நாள் தி.மு.க. மேடையில் தோன்றி, "இரட்டை இலை எதுக்குப் போடுவாங்க தெரியுமா, தெவசச் சோறு திங்கிறதுக்குப் போடுவாங்க! நீங்க தெவசச் சோறு திங்கப் போறீங்களா? வேணாங்கய்யா! உழைப்பாளிகள், விவசாயிகள் கும்புடற தெய்வம் உதயசூரியன்; உலகுக்கு ஒளி கொடுக்குறது உதயசூரியன்தான். உதயசூரியன் மட்டும் இல்லேன்ன இன்னிக்கு இந்த உலகம் இல்லே. நீயும் இல்லே, நானும் இல்லே, எம்.ஜி.ஆரும் இல்லே!" என்று பேசுவேன்.

நான் நன்றாகப் பேசியதால், எனக்குப் பல கட்சிக் கூட்டங்களில் பேச நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், பேசுவதற்குப் பணம் கேட்கலாம் என்ற யோசனையே எனக்கு வரவில்லை. அவர்களே கார் வைத்து அழைத்துக்கொண்டு போய், கூட்டம் முடிந்ததும் கொண்டு வந்து என் வீட்டில் விடுவார்கள். சாப்பாடு, டீ, காபி, பன், சோடா, கலர் எல்லாம் கிடைக்கும். இதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் போய்ப் பேசிவிட்டு வந்தேன்.

இப்படிச் சுமார் இருபது, இருபத்தைந்து கூட்டங்கள் பேசியிருப்பேன்.

ஒருநாள், எங்கள் வீட்டு வாசலில் ஏழெட்டுப் பேர் கொண்ட ஒரு கூட்டம். "ஐயிரே! வெளியே வா!" என்று முரட்டுத்தனமாகக் குரல் கொடுத்தார்கள். என் அப்பா வெளியே போனார்.

"ஏய்யா! வாத்தியாரா இருந்துக்கிட்டு, உம் பையனுக்குப் புத்தி சொல்ல மாட்டியா? படிக்கிற புள்ளைக்கு ஏய்யா இந்த வீண் வேலை? இனியொருக்கா கட்சி, கூட்டம்னு மேடையேறிப் பேசிச்சுன்னு வையி... வேணாம்! வாத்தியாருங்கிற மரியாதைக்காக இப்ப எச்சரிக்கையோட நிறுத்திக்கிறோம். உம் புள்ளையே இப்படியிருந்தான்னா, உங்கிட்டே படிக்கிற புள்ளைங்க எப்படிய்யா உருப்புடும்? பார்த்து நடந்துக்க. அவ்வளவுதான்; சொல்லிட்டோம்!" என்று அந்தக் குழுவுக்குத் தலைவன் போல் இருந்தவன் மிரட்டலாகச் சொல்லிவிட்டு, "வாங்கடா போகலாம்!" என்று தன் குழுவை அழைத்துக்கொண்டு போனான்.

அன்றோடு என் அரசியல் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.

அடுத்து, என் மேடை தாகத்தைத் தணிக்கக் கை கொடுத்தது ஆன்மிகம். அந்தக் கதை பிறகு!
.

இடப்பெயர்ச்சி!

கன் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி செல்லும் வரை கண்டிப்பாக இங்கேதான் குடியிருப்போம். அதன்பின்பும், தொடர்ந்து இவர்களின் இல்லத்தில் குடியிருக்கவேண்டும் என்றுதான் ஆசை. பார்ப்போம்!

சென்ற வருடம் ஜூலை மாதம் எழுதிய ஒரு பதிவின் கடைசி பாரா இது.

சென்னை அசோக் நகரில், அன்புப் பெரியவர் திரு.முகம்மது இஸ்மாயீல் அவர்களின் இல்லத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் குடியிருந்து வரும் இனிய நினைவுகளின் தொகுப்பாக எழுதிய ஒரு பதிவின் இறுதிப் பாரா இது.

'பார்ப்போம்' என்று முடித்திருந்தது, தொடர்ந்து இங்கே நாங்கள் குடியிருக்காமல் அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக வெளியேறிவிடுவோம் என்பதைத்தான் சூசகமாகச் சுட்டிக்காட்டியதோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

ஆமாம். சென்ற வாரம் நான் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, மாம்பலத்தில் குடியேறிவிட்டேன்.

மகனின் பள்ளிப் படிப்பு முடியும் வரை கண்டிப்பாக அங்கேதான் குடியிருப்போம் என்று எழுதினேன்; அதன்பின்பும் தொடர்ந்து அவர்களின் இல்லத்தில்தான் குடியிருக்க ஆசை என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், காலி செய்யும்படி அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?

பெரியவர் இஸ்மாயீலிடம் சொல்லாத, சொல்லமுடியாத அந்தக் காரணத்தை இங்கே எழுதவும் தயக்கமாக இருக்கிறது.

பெரியவர் இஸ்மாயீல் அருமையான மனிதர்; மிகவும் அன்பானவர். மிக மரியாதைக்குரியவர். நான் வீட்டை காலி செய்யப் போவதாகச் சொன்னவுடன், கிட்டத்தட்ட கண்கலங்கி விட்டார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு, "ஏன் காலி பண்றீங்க? இங்கே உங்களுக்கு ஏதேனும் பிரச்னையா? பையன் படிப்பு முடியற வரைக்கும் இங்கே இருக்கேன்னீங்களே?" என்று நெகிழ்ச்சியாகக் கேட்டார்.

அவரிடம், மாம்பலத்தில் வேறு வீடு பார்த்துக் குடியேறப் போகிறேன் என்று சொல்ல மனம் வரவில்லை. அது அவர் மனத்தை மேலும் புண்படுத்துமோ என்று எண்ணினேன். அதனால் கூசாமல் ஒரு பொய் சொன்னேன்.

சாலிகிராமத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு ஃப்ளாட் இருக்கிறது. அதில் குடியிருந்த என் நண்பர் நா.ரமேஷ்குமார் (பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் தம்பி) தன் குழந்தையின் படிப்பை முன்னிட்டு, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டார். எனவே, "எப்படியும் என் மகன் பள்ளிப் படிப்பு முடிந்ததும் அங்கேயே சொந்த வீட்டில் போய் செட்டிலாகிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் காலி செய்துவிட்டதால், இந்த ஒரு வருடத்துக்கு வேறு யாரையாவது குடி வைப்பதற்குப் பதிலாக நாங்களே அங்கே போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டோம். மற்றபடி, எங்களுக்கு இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. 11 வருடம் பழகிய இந்த வீட்டை விட்டு, அன்பான உங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போவது உண்மையில் எனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது" என்று பெரியவரிடம் சொன்னேன். கடைசியாகச் சொன்னது மட்டும் 100 சதவிகிதம் உண்மை.

அந்தப் பதிலில் அவர் சமாதானம் ஆனார் என்றே தோன்றியது.

"சரி, எங்களையெல்லாம் மறந்துட மாட்டீங்களே? மக கல்யாணத்துக்கு அழைப்பு கொடுப்பீங்க இல்லே? நாங்க அத்தனை பேரும் குடும்பத்தோட வருவோம்!" என்றார்.

"உங்களுக்கு முதல்ல சொல்லிட்டுதான் பத்திரிகையே அடிக்கக் கொடுப்பேன்" என்றேன்.

சரி, வீட்டைக் காலி செய்ததன் உண்மையான காரணம்தான் என்ன?

பூடகமாகச் சொல்வதானால், ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை அல்லவா! அதுதான் காரணம். இதற்கு மேல் அதை விவரித்து எழுத எனக்கு மனம் வரவில்லை. நிற்க.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து தீவிரமாக‌ வீடு பார்க்கத் தொடங்கினோம். மாம்பலம் டாக், மாம்பலம் டைம்ஸ் இவற்றில் வெளியான விளம்பரங்களைக் கொண்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் சராசரியாக ஐந்து வீடுகள் வீதம் மொத்தம் நாற்பது ஐம்பது வீடுகள் பார்த்திருப்போம். அது ஒரு தனிக் கதை.

இறுதியாக, மாம்பலம் கோவிந்தன் சாலையில், ஸ்ரீனிவாசா தியேட்டருக்கு அருகில் ஓர் அருமையான இடம் கிடைத்தது. என் மகன் ரஜ்னீஷ் இணையத்தில் தேடிச் சொன்ன இடம் அது. போனேன்; பார்த்தேன்; பேசினேன். எல்லாமே மனசுக்கு ஏற்றபடி திருப்திகரமாக இருந்தன‌. எனவே, அட்வான்ஸ் கொடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னால் அங்கே குடியேறிவிட்டேன்.

பங்குனியில் குடிபோகக்கூடாது என்பார்கள். ஆனால், நான் நாள், நட்சத்திரமெல்லாம் பார்ப்பது இல்லை. ராகு காலம், எமகண்டம், வடக்கே சூலம், தெற்கே ஈட்டி எதையும் பொருட்படுத்துவது கிடையாது. அதற்காக, வெளியே வறட்டுப் பகுத்தறிவு பேசிக்கொண்டு, வீட்டுக்குள் ரகசியமாக சாமி கும்பிட்டுக்கொண்டு, எல்லா சகுனங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்துச் செயல்படும் போலி நாத்திகவாதியும் இல்லை நான்.

நமக்கும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்று உறுதியாக எண்ணுகிறேன். அது நம்மைக் கைவிடாது என்று உண்மையாக நம்புகிறேன். அந்த சக்தியை மகாஸ்ரீ அரவிந்த அன்னை வடிவத்தில் நான் வணங்குகிறேன்.

அரவிந்த அன்னை துணையிருக்கும்போது நாள், கோள் பற்றியெல்லாம் நான் ஏன் கவலைப்படவேண்டும்?
.