உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 22, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 15

பை பை... சிங்கப்பூர்! -15

சிங்கப்பூரில் கடைசி நாளில் அதிக அலைச்சல் இல்லாமல், அருகருகே இருக்கும் முக்கிய இடங்களைப் பார்த்துவிட்டுக் கிளம்ப வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம். மெரினா பே ஸேண்ட்ஸ், ஃப்ளையர், மெர்லியன் பார்க், கார்டன்ஸ் பே, க்ளவுட் ஃபாரஸ்ட், ஃப்ளவர் டோம், மியூஸியம் என சிங்கப்பூரின் முக்கிய அட்ராக்‌ஷன்கள் எல்லாமே அருகருகில்தான் இருக்கின்றன. சிங்கப்பூரில் ஒருநாளோ, இரண்டு நாளோ மட்டும் டூர் திட்டமிடுபவர்கள் இவை அனைத்தையுமே நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். நாங்கள் இந்தப் பட்டியலில் முதல் மூன்றைத் தவிர்த்து மற்றவற்றை ஆரம்ப நாட்களிலேயே பார்த்துவிட்டதால், மீதம் உள்ளவற்றை மட்டும் பார்த்துவிட்டு வரக் கிளம்பினோம்.

நடக்கும் தூரத்தில் உள்ள ‘ஸீ மி’ ஸ்டேஷன் வரை வந்து எங்களை வழியனுப்பினார் ஜெயஸ்ரீசுரேஷ். அங்கே மெட்ரோ ரயில் பிடித்து, நேரே ‘பே ஃப்ரன்ட்’ என்னும் ஸ்டேஷனில் இறங்கினோம். அருகிலேயே மெரினா பே ஸேண்ட்ஸ். உயர உயரமான மூன்று கட்டடங்கள்; உயரே மூன்றையும் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு ஹோட்டல் உள்ளது. ஸ்கைபார்க் ஹோட்டல் என்று பெயர். இந்தக் கட்டடம் சமீபத்தில்தான், அதாவது 2010-11-ல்தான் திறக்கப்பட்டது.

நாங்கள் அந்த மூன்று கட்டடத்தின் மீது ஏறுவதற்கு டிக்கெட் வாங்கியிருந்தோம். 56 மாடிகள். லிப்டுக்குள் ஏறியது தெரியவில்லை; லிப்ட் நகர்ந்ததா என்று தெரியவில்லை. அதற்குள் கதவு திறந்து, உச்சி வந்துவிட்டது. ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்’ கதைதான். ஓர் அதிர்வு இல்லை, ஒரு குலுக்கல் இல்லை.

மேலே சுற்றிலும் கண்ணாடிச் சுவர்தான். சிங்கப்பூர் முழுக்கப் பார்க்கலாம். நாங்கள் ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். அந்தப் பக்கம் நீச்சல் குளத்துக்குப் போக யத்தனித்தபோது, ஹோட்டல் மேனேஜர் தடுத்துவிட்டார். ஹோட்டலுக்குச் சொந்தமான நீச்சல்குளமாம் அது. அதற்கெனத் தனியாக டிக்கெட் வாங்கியிருந்தால்தான் போகமுடியும் என்றார்.

நானும் மற்றவர்களும் ‘போகட்டும், விடு’ என்று தள்ளி வந்துவிட, என் மகன் ரஜினி மட்டும் அவருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு, சற்றுப் பொறுத்து வந்தான். “என்னடா கேட்டார் அவர்?” என்று மகனிடம் கேட்டேன். “ஹூ இஸ் தட் ஜென்டில்மென், லுக்ஸ் லைக் இண்டியன் பிரைம் மினிஸ்டர் மோடி?” என்று என்னைச் சுட்டிக்காட்டிக் கேட்டதாகச் சொன்னான். “அடடா!” என்று உச்சிகுளிர்ந்து போனேன். சென்னையில் என் மனைவியிலிருந்து மற்ற உறவினர்கள், அலுவலக நண்பர்கள், ஃபேஸ்புக் நண்பர்கள் எனப் பலரும் நான் அசப்பில் நரேந்திர மோடி போல் இருப்பதாகச் சொல்லியிருந்தாலும், சிங்கப்பூரின் உயரமான கட்டடத்தின் உச்சியில் ஒருவர் இப்படிச் சொல்கிறார் என்பது விசேஷமல்லவா! ஆனால், அதற்காகவேனும் அவர் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்பது இங்கே கொஞ்சம் வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் குறிப்பிடத்தக்கது.

அங்கே அழகான ஒரு சீனப் பெண் தனியாக அங்கங்கே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். இதே டூரில் ஆரம்ப தினங்களிலும் அந்தப் பெண்ணைப் பார்த்த ஞாபகம். பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் எங்கள் அருகில் வந்து, என் மகளிடம் தன்னைப் புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கச் சொன்னாள். அதன்பின், எங்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினாள். அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று கேட்டேன். ‘அக்கார்டி’ என்றாள், அக்கார்டியன் இசை போன்ற குரலில்! ரயில் சிநேகிதம் போன்று ஸ்கைபார்க் சிநேகிதம்!

அங்கே அவ்வளவு உச்சியிலிருந்து சிங்கப்பூரை முழுவதுமாகப் பார்க்கிறோம் என்பதைத் தவிர, வேறு ஒன்றும் இல்லை. அங்கே 15 நிமிடம் இருந்தாலே அதிகம். கொள்ளைக் காசு கொடுத்துவிட்டு வந்ததற்காக நாங்கள் வம்படியாக ஒரு அரை மணி நேரம் அங்கே இருந்துவிட்டுத்தான் கீழிறங்கினோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடம் சிங்கப்பூர் ஃப்ளையர். ஜெயன்ட் வீல் போன்று இருக்கும் இது வேகமாகவெல்லாம் சுற்றாது. மெதுமெதுவாகத்தான் உயரே போய்க் கீழிறங்கும். இதுவும் சிங்கப்பூரை பறவைக் கோணத்தில் பார்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான். 2008-ஆம் ஆண்டிலிருந்து இது இயங்குகிறது. குளிர்பதனம் செய்யப்பட்ட 28 கேப்ஸ்யூல்கள் (கூண்டுகள்) கொண்ட இந்த ராட்டினத்தைக் கட்டி முடிக்க இரண்டரை வருடங்கள் ஆனதாம். ஒவ்வொரு கூண்டிலும் அதிகபட்சம் 28 பேர் வரைக்கும் ஏறிக்கொள்ளலாம். ஆனால், நாங்கள் சென்ற கூண்டில் பத்துப் பன்னிரண்டு பேர்தான் இருந்தோம்.

இதன் உயரம் சுமார் 540 அடி. இதற்கு முன் ஏறி இறங்கிய ஸ்கைபார்க் ஹோட்டலைவிட இது உயரம் குறைவுதான் என்பதால், ஏதாவது ஒன்றில் ஏறி இறங்கினால் போதுமே என்பது பலரின் அபிப்ராயம். ஆனால், அவ்வளவு தூரம் போய்விட்டு, சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறி இறங்காமல் வந்துவிட்டால் தெய்வ குத்தமாகிவிடுமே என்று இங்கேயும் குடும்பத்தை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்று வந்தேன். ஃப்ளையர் ஒரு சுற்று வர அரை மணி ஆகிறது. அவ்வளவு ஸ்லோ!

அதையடுத்து, அங்கிருந்து பொடிநடையாக நடந்தே மெர்லியன் பார்க்குக்கு வந்தோம். ‘மெர்மெய்ட்’ என்றால் கடல்கன்னி. மீன் உடம்பும் மனிதத் தலையும் கொண்டவள். மீன் உடம்பும் சிங்கத் தலையும் கொண்டிருப்பதால் இது மெர்-லயன் ஆயிற்று. 1966-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் டூரிஸம் போர்டு  சார்பாக அலெக்ஸ் ஃப்ரேஸர் பர்னர் என்பவர் இந்த உருவத்தை வடிவமைத்தார். சிங்கப்பூர் டூரிஸத்தின் சின்னமாக இருந்த இதை, 1972-ல் லிம் லாங் ஜின் என்பவர் சிலையாக வடித்தார். அன்றிலிருந்து சிங்கப்பூர் நதியில் ஸ்தாபிக்கப்பட்ட இது சிங்கப்பூரின் சின்னமாகவே திகழ்ந்துகொண்டிருக்கிறது. முதலில் எஸ்பிளனேட் பிரிட்ஜ் அருகில் வேறொரு பக்கத்தில் இருந்த இந்தச் சிலையை ‘மெரினா பே’யிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியாமல் இருந்ததால், 2002-ல் ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் அருகில் இடமாற்றம் செய்தார்கள். 2010-ல் இதன் மீது பலமான இடி தாக்கியதில், இதன் பாகங்கள் துண்டுகளாகச் சிதறி விழுந்தன. அதன்பின் ரிப்பேர் செய்யப்பட்டு, 2012-லிருந்து இந்த ‘மெர்லயன்’ தொடர்ந்து நீர் உமிழ்ந்து வருகிறது.

அருகில், சாரல் மேலே தெளிக்க நிற்பது சுகமாக இருந்தது. இந்த மெர்லயனின் உயரம் சுமார் 28 அடி; இங்கேயே சற்றுத் தள்ளி இன்னொரு மெர்லயனும் இருக்கிறது. அதன் உயரம் சுமார் 7 அடி.  அதன்பின், அங்குள்ள நீண்ட நடைபாதையில், மெர்லயன் பார்க்கில் நடைபோட்டோம்.

அங்கே சுமார் ஒரு மணி நேரம்போல இருந்துவிட்டு, அங்கிருந்து எம்.ஆர்.டி. பிடித்து ஆர்ச்சர்டு வீதி வந்தோம். மழை தூறியது. ஓரமாக இருந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள் ஏறினால், அப்படியே மழையில் நனையாமல் தெருவின் அந்தக் கோடி வரை நடந்துபோய்விடலாம். கடை, கடைத்தெருவை வேடிக்கை பார்த்துவிட்டு, அங்கிருந்து பஸ் பிடித்து, முஸ்தபா சென்டர் வந்தோம். சிராங்கூன் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வரப்போகும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கான அலங்கார அறிகுறிகள் தெரிந்தன. ஒரு பெரிய திடலில் பந்தல் தயாராகிக்கொண்டிருந்தது. தீபாவளி பட்டாசுக் கடைகள் வரப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், சிங்கப்பூர் அரசாங்கம் காற்று மாசில் கவனம் செலுத்துகிறது. நம்ம ஊர் மாதிரி மெகா சைஸ் வெடிகள், ராக்கெட்டுகள், புஸ்வாணங்கள் போன்றவற்றுக்கு அங்கே அனுமதியில்லை. சின்னதாக கேப், கம்பி மத்தாப்பு போன்றவற்றை மட்டும் கொளுத்திக்கொள்ளலாமாம்.

முஸ்தபா சென்டரில் எதுவும் வாங்கவில்லையென்றாலும், ஒரு மணி நேரத்துக்கு மேல், அங்குள்ள எஸ்கலேட்டரில் ஏறி, இறங்கி, சுற்றிச் சுற்றி வந்தோம். பின்பு, வெளியே தெருவோரக் கடைகள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கினோம். எல்லாமே யானை விலை, குதிரை விலை. எதுவும் வாங்குகிற மாதிரி இல்லை. என்றாலும், சிங்கப்பூர் போய்வந்ததன் அடையாள அன்பளிப்பாக  உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கொடுப்பதற்காக பால்பாயின்ட் பேனாக்களும் சாக்லேட் பெட்டிகளும் வாங்கிக்கொண்டோம்.

இரவு மணி 8. அங்கிருந்து மீண்டும் டிரெயின் பிடித்து, ஸீமீ ஸ்டேஷனில் வந்து இறங்கி, ஜெயஸ்ரீ சுரேஷ் வீட்டுக்கு வந்தோம்.

விடியற்காலை 5 மணிக்கு ஃப்ளைட். சாப்பிட்டுவிட்டுப் படுத்த எங்களைப் பொறுப்பாக விடியற்காலை 3 மணிக்கு எழுப்பிவிட்டார் ஜெயஸ்ரீ. அந்த இரவிலும் காபி போட்டுக்கொடுத்து உபசரித்தார்.

கேப் புக் பண்ணிக் கொடுத்தார் சுரேஷ். 3:30-க்கெல்லாம் சாங்கி ஏர்போர்ட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் இண்டிகோ ரெடியானதும், உள்ளே சென்று உட்கார்ந்து, அது மெல்ல நகரத் தொடங்கியதும், பிரிய மனமில்லாமல் சிங்கப்பூருக்கு ஏக்கம் கலந்த விழிகளோடு ‘பை... பை...’ சொன்னோம். இண்டிகோ  பெரிய உறுமலுடன் தடதடத்து ஓடி, குபுக்கென்று உயரே ஏறிவிட, சிங்கப்பூர் வெளிச்சப் புள்ளிகளாகி, கீழே கீழே கீழே போய், பின்பு கண்களிலிருந்து காணாமல் போனது.

சிங்கப்பூர் காஸ்ட்லியான நகரம். நாலு பேர் கொண்ட ஒரு குடும்பம் அங்கே அறைகளை வாடகைக்கு எடுத்து, ஓட்டல்களில் சாப்பிட்டு, ஒன்பது நாள்கள் ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டுமென்றால், மிகப் பணக்காரராக இருந்தால்தான் முடியும். என்னை மாதிரி நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர் அதைக் கனவிலும் நினைக்க முடியாது.

நட்பைவிடப் பாசம் காட்டிய உறவினரும், உறவைவிட நேசம் செலுத்திய நட்பும் அங்கே  இருந்தது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, இந்தச் சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்த அவர்களுக்கு இன்றைக்கும் நாங்கள் மானசிகமாக நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் மற்றும் கலர்ஃபுல் மலேசியா இவற்றின் இனிய நினைவுகள் எங்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.


(பயணம் நிறைவடைந்தது)

Thursday, January 18, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 14

செந்தோஸா சந்தோஷம்!

சாலைப் போக்குவரத்து சீராக இருக்க வேண்டியது முக்கியம்; அதற்கு சாலைகள் ஒழுங்காக இருக்க வேண்டியதும் முக்கியம். எனவேதான், நம் அரசாங்கம் சாலையில் ரோடு போடுகிற வேலையைச் செய்தால்,நாளைக்கு நாம் சுகமாகப் பயணிப்பதற்குத்தானே இத்தனைப் பாடு என்று, எத்தனை சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும், சாலையில் கல்லையும் மண்ணையும் கொட்டிவைத்தாலும், நாம்பாட்டுக்குக் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்கிறோம். சாலையில் விரிசல் ஏற்பட்டுப் பெரும்பள்ளமே உண்டாகி கார் உள்ளே விழுந்தாலும், அதைப் போட்டோ எடுத்து வாட்ஸப்பில் வைரல் ஆக்குவதிலும், மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதிலும்தான் நம் புத்தி போகிறதே தவிர, அரசு இத்தனை அலட்சியமாக வேலை செய்கிறதே என்று நமக்குக் கோபமே வருவதில்லை; வராது. ஏனென்றால், அது நம் எதிர்காலத்துக்கான நற்பணி ஆயிற்றே!

ஆனால், சிங்கப்பூர் அரசு அப்படியல்ல. எந்தப் பொது வேலையாக இருந்தாலும், தன் மக்களுக்கு ஒரு துளி சிரமம்கூடத் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள், சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா? என்று டிரைவரைக் கேட்டதும், அவர் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது.

பக்கத்துல பாருங்க. ஒரு நீல ரெக்ஸின் துணியால் ஆன சுவர் தெரியுதா... அதும்பின்னால புதுசா ரோடு போட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா, இங்கே எதுவும் தெரியலையேன்னு பார்க்கறீங்க. ரோடுல கல்லு மண்ணு எதுவும் சிதறிக்கிடக்கலையே, புழுதி எதுவும் பறக்கலையேன்னு நினைக்கறீங்க. சாலையில புழுதி வரக்கூடாதுங்கிறதுக்காக எக்ஸாஸ்ட் ஃபேன் மாதிரி ஒரு டெக்னாலஜி வெச்சிருக்காங்க. அதேபோல, அங்கே சிமென்ட், கருங்கல் ஜல்லியைக் கொண்டு போற லாரிகள் வெளியே வரும்போது அப்படியே தூசு தும்போட வெளியே வராது; டயர்கள்ல ஒட்டியிருக்கிற மண் போக நல்லா கழுவி, சுத்தமா குளிச்சிட்டுதான் வெளியே வரும்என்றார் சைனீஸ் கலந்த ஆங்கிலத்தில்.

காற்று மாசு, தண்ணீர் மாசு இவை ஏற்படக்கூடாதென்பதில் கெடுபிடியாக இருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். இங்கே கழிப்பறைகளில் வருகிற தண்ணீரைக் கூடப் பிடித்துக் குடிக்கலாம்; அத்தனை சுத்தமாக இருக்கும் என்றார் அவர் பெருமையாக. குடிதண்ணீரை நன்கு சுத்திகரித்துத்தான் வெளியே பயன்பாட்டுக்கு அனுப்புகிறார்கள் என்றார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை நீர் மாசு, காற்று மாசு இவற்றில் எனக்கு வேறொரு அனுபவம் கிடைத்தது. குடிதண்ணீரைச் சுத்திகரித்துதான் அனுப்புகிறார்கள்; சரி. ஆனால், அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால் அங்குள்ளவர்களுக்குச் சிறுநீரகப் பிரச்னைகள் வருவதாக அறிகிறேன். அது சுத்திகரிப்பால் உண்டாகும் விளைவு. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், அங்கிருக்கும் பலர் சொல்லக் கேள்வி. அதேபோல், எவ்வளவுதான் பணக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் சொந்தமாக ஒரு கார் வாங்கிச் சந்தோஷிக்க முடியாதவாறு ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போட்டு முடக்கி வைத்து, மாசற்ற காற்றுக்காக மெனக்கெடும் சிங்கப்பூர் அரசு, பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. இங்கே நம் சென்னையில், பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை மிக மிக அரிதாகத்தான் பார்க்கிறேன். ஆனால், சிங்கப்பூரிலோ பஸ் ஸ்டாப்பில், பூங்காக்களில், சாலைகளில் எனப் பொது இடங்களில் பலரும் சிகரெட்டும் கையுமாகத்தான் வாயிலிருந்து புகை வழிய வழியச் செல்கிறார்கள். எங்கு திரும்பினாலும் தேவலோகத்தில் இருப்பதுபோலவே இருக்கிறது. எந்த கால் டாக்ஸியைக் கூப்பிட்டு ஏறினாலும், உள்ளே குப்பென்று சிகரெட் வாடை! வண்டி ஓட்டும்போது டிரைவர் சிகரெட் பிடிப்பதில்லை; ஆனால், சற்று முன் அவர் பிடித்த அந்த சிகரெட்டின் நெடி மூச்சை முட்டுகிறது.

சரி, போகட்டும்... வாருங்கள், நாம் செந்தோஸா தீவுக்குச் செல்வோம்.

செப்டம்பர் 7-ம் தேதி காலையில் சாப்பிட்டுவிட்டு, ஜெயஸ்ரீ சுரேஷ் பக்குவமாகப் பேக் செய்துகொடுத்த பிரெட் ப்ளஸ் வேர்க்கடலைச் சட்னி பார்சல்களுடன் கிளம்பிவிட்டோம். பஸ் பிடித்துமவுன்ட் ஃபேபர் என்னும் இட்த்துக்கு வந்தோம். அங்கிருந்து செந்தோஸாவுக்கு கேபிள் கார் செல்கிறது. ஒரு டிக்கெட் வாங்கினால், அதிலேயே திரும்பவும் ஏறி இங்கே வந்து இறங்கிவிடலாம். நாங்கள் நால்வரும் அதில் பயணித்து செந்தோஸா தீவில் சென்று இறங்கினோம்.

சந்தோஷம்என்னும் சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவான சொல்செந்தோஸா. மலாய் மொழியில் இதற்கு அமைதி, மகிழ்ச்சி என்றெல்லாம் பொருள். இதன் பூர்வாசிரமப் பெயர்சாவுத் தீவு. டெட் ஐலேண்டு. ஆமாம்,புலாவ் பிளேக்காங் மாட்டிஎன்னும் மலாய்ச் சொல்லின் பொருள் அதுதான். அப்புறம், 1972-ம் ஆண்டில்தான், மக்கள் விருப்பத்தின்பேரில் இதற்குசெந்தோஸா தீவுஎன்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். மக்கள் விருப்பத்தை எப்படிக் கேட்டறிந்தார்கள் என்று தெரியவில்லை. இங்கெல்லாம், அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள் மக்கள்என்று தனியார் தொலைக்காட்சிகளில் அடிக்கடி சொல்கிறார்களே, அந்த மாதிரி இருக்கலாமோ, என்னவோ!

உள்ளே பார்க்க ஏராளமான சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் டிக்கெட். ஏதேனும் மூன்று, ஏதேனும் ஐந்து, ஏதேனும் எட்டு என பேக்கேஜ்களாகவும் வாங்கிக் கொள்ளலாம். எது பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும்,ஸீ அக்வேரியம்அதாவதுஅண்டர்வாட்டர் வேர்ல்டுகட்டாயம் போய்ப் பாருங்கள்என்று சொல்லி அனுப்பியிருந்தார் சுரேஷ். ஐந்து அயிட்டங்கள் கொண்ட பேக்கேஜ் டிக்கெட் வாங்கினோம்.

அண்டர்வாட்டர் வேர்ல்டுவாங்கினாலே, கூடவே கொசுறாக ஹோலோகிராம் நடன நிகழ்ச்சி என்ற ஒன்றையும் தலையில் கட்டிவிடுகிறார்கள். அதற்கான காரணம், அந்த நாளின் இறுதியில்தான் தெரிந்த்து. இந்த இரண்டும் போக, ஸ்கைலைன் லூஜ், இரண்டு த்ரீ-டி படங்கள் ஆகியவை கொண்ட பேக்கேஜ் டிக்கெட்டை வாங்கிக்கொண்டோம். பட்டர்ஃப்ளை பார்க் ஃப்ரீ. மெழுகுப் பொம்மை மியூஸியம் பார்ப்பதில் எங்களுக்கு அத்தனை சுவாரஸ்யமில்லை.

செந்தோஸா தீவில் உள்ளேயே அழகான மினி பஸ்கள் ஓடுகின்றன. எதில் வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ஃப்ரீ!

மெகா ஸிப்என்னும் சாதனை விளையாட்டுக்கு மகனும் மகளும் டிக்கெட் வாங்கியிருந்தார்கள். முதலில் அங்கே போனோம்.

நாலு மாடி கொண்ட ஒரு கட்டடத்தின் உச்சிக்கு ஏற வேண்டும்; அங்கே நம் வெயிட்டைச் சோதித்து, அதற்கேற்ப இடுப்பில் ஒரு பெல்ட் கட்டி, கொக்கி ஒன்றை இணைத்துவிடுவார்கள். அவர்கள் ரெடி சொன்னதும், அங்கிருந்து கீழே குதிக்க வேண்டும். தரையை நெருங்குகையில் கயிறு இழுவிசை மூலமாக வேகம் குறைந்து, பத்திரமாகத் தரை இறங்கலாம். கிட்டத்தட்ட பஞ்சி ஜம்ப்பிங் போலத்தான்.

கீழே குதித்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பலரும்வென்று அலறிக்கொண்டே குதித்தார்கள். அவர்களில் யாரும் தரையில் காலூன்றி நிற்கவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தார்கள். என்னதான் பாதுகாப்பாக பாராசூட்டில் குதித்தாலும், கீழே காலூன்றும்போது பிடிப்பில்லாமல் விழுவார்கள் அல்லவா, அதுபோலத்தான்! என் மகளும் மகனும் அடுத்தடுத்துக் குதித்தார்கள். விழுந்து எழுந்தார்கள்.

மெகா ஸிப்பில் அடுத்தது இன்னும் சுவாரஸ்யம், த்ரில் நிறைந்தது. மேலே நீண்டு செல்லும் கம்பியிலிருந்து தொங்கும் கொக்கியை இடுப்பில் மாட்டித் தள்ளிவிடுவார்கள். மிக உயரத்தில், அந்தரத்தில் சர்ரென்று கம்பியில் விஞ்ச் போல சறுக்கிக்கொண்டே ஒரு கி.மீ. தூரம் செல்ல வேண்டியதுதான். மகன், மகள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து கம்பியில் கேபிள் கார் போலச் சறுக்கிச் சென்றார்கள்.

இப்படி மெகா ஸிப் ரைடு செல்பவர்களைக் கீழே இருந்து ஒரு ஜீப்பில் அழைத்துக்கொண்டு வந்து ஆரம்ப இடத்துக்கு விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்தோம். மகன், மகள் இருவரும் வந்ததும், செந்தோஸாவின் மினி பஸ் பிடித்து, அடுத்த இடத்துக்குச் சென்றோம்.

அண்டர்வாட்டர் வேர்ல்டு! மிகப் பிரமாண்ட அக்வேரியமான இதைஓஷனேரியம்என்று அழைக்கிறார்கள். நாம் வெளியே நின்று, தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்த்ததுபோக, நாம் உள்ளே இறங்க, பெரிய பெரிய சுறா மீன்கள் எல்லாம் நம்மைக் கிட்டே வந்து வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்லும் இடம்தான் இந்த அண்டர்வாட்டர் வேர்ல்டு. 1991-ல் தொடங்கப்பட்டதாம் இது.

உள்ளே இறங்கி கண்ணாடி குகைப் பாதைகள் வழியாக நடந்தோம். மிகப் பெரிய கண்ணாடிச் சுவருக்கப்பால் ராட்சத சுறா மீன்கள், நீள நீளமான பாம்புகள் போன்ற மீன்கள், கலர்ஃபுல்லான பற்பல மீன் வகைகள், நட்சத்திர மீன்கள், பூக்கள் உதிர்ந்த மாதிரியான மீன்கள், ஜெல்லி மீன்கள், ராட்சத நண்டுகள், கடல் ஆமைகள், தண்ணீர்ப் பாம்புகள் என என்னென்னவோ காணக் கிடைத்தன. நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.

உள்ளே, அடுத்தடுத்து வெவ்வேறு கூடங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தோம். ஓரிடத்தில் பெரிய கப்பல் ஒன்று உடைந்து கிடந்ததைப் பார்த்தோம். டைட்டானிக் படத்தின் ஆரம்பக் காட்சி போன்று இருந்தது. மற்றொரு இடத்தில், ஸ்டார் ஃபிஷ் ஒன்றைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார்கள். பார்த்தேன். மிருதுவாக, மெத்து மெத்தென்று இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, செங்கல் ஓட்டைத் தொட்டதுபோன்று கடினமாக இருந்தது. அதை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். உயிர் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல், கட்டையாக இருந்தது. 

இப்படியாக, அண்டர்வாட்டர் வேர்ல்டில் இரண்டு மணி நேரம் ஓடிப்போனது. அதன்பின், தியேட்டருக்குச் சென்றோம்.

அடுத்தடுத்து இரண்டு தியேட்டர்களில் 3D, 4D படங்கள். ஒன்று, ‘Journey 2 – The Mysterious Island’ என்னும் படம். 3D கண்ணாடி கொடுத்து, உள்ளே அனுப்பினார்கள். கதை புரியவில்லை. தேவையுமில்லை. அந்தப் படம் அதன் கதைக்காக இல்லை; எஃபெக்ட்ஸுக்காக. ஐந்து பேர் எதையோ தேடி, ஒரு தீவுக்குச் செல்கிறார்கள். வழியில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், அவற்றிலிருந்து அவர்கள் தப்பிப்பது ஆகியவை தத்ரூபமாக 3D முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காட்சிகளுக்கேற்றவாறு நம் மீது மழைச்சாரல் நிஜமாகவே தெளித்தது. ஜீப் கரடுமுரடான பாதையில் தடதடத்து ஓடும்போது, நமது நாற்காலியும் ஆடியது. அங்கே அவர்கள் காலைச் சுற்றிப் பாம்பு ஊர்ந்தால், இங்கே அமர்ந்திருக்கும் நம் காலைச் சுற்றியும் ஏதோ ஊர்ந்தது. தூக்கிவாரிப் போட்ட்து. கிட்டத்தட்ட 20 நிமிடப் படம். நல்ல அனுபவம்!

அடுத்ததும் படம்தான். ஆனால், இது சற்றுத் திகிலான, த்ரில்லான, ரோலர்கோஸ்டரில் தலைசுற்றிப் போவது போன்ற ஜாலிரைடு படம். Log rider என்று பெயர். 3D கண்ணாடி போட்டுக்கொண்டு, ஐந்து ஐந்து பேர் உட்காரும்படியான கூண்டுகளில் உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்தோம். படம் தொடங்கியது. நாமே எங்கோ ஆகாயத்தில், பல மைல் உயரத்தில், கம்பி மீது சறுக்கியும் தொங்கியும் செல்வது போல வேகமாகக் காட்சிகள் நகர்ந்தன. உயரேயிருந்து தடாலென்று கீழே... கீழே... கீழே... விழுந்தோம். மரத்தில் படர்ந்திருந்த ஒரு கொடியில் தொற்றினோம். தரையில் இழுத்துச் செல்லப்பட்டோம். பெரிய பெரிய மரக்கட்டைகளில் மோதினோம். எங்கள் மீது பாறைகள் உருண்டு விழுந்தன. நெருப்புக் கங்குகள் வீசியடித்தன. எங்கள் கலம் கடலுக்குள் விழுந்து, களக் புளக்கென்று உள்ளே... உள்ளே... உள்ளே... மூழ்கியது. சட்டென்று ஒரு திமிங்கிலம் எங்கள் கலத்தைத் தாக்கித் தூக்கி எறிந்தது. எல்லாம் எஃபெக்ட்ஸ்! கொஞ்ச நேரத்தில் வயிற்றைக் கலக்கிவிட்டார்கள் கலக்கி!

மூன்று அயிட்டங்கள் முடிந்தன. அடுத்து, லூஜ் எனும் ஜாலி ரேஸ் போகலாம் என்று முடிவு செய்தோம். மினி பஸ் பிடித்து, அந்த இடத்துக்குச் சென்றோம். குழந்தைகள் விளையாடும் ஆட்டம்போல் இருக்கிறது. ஆனால், பெரியவர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டு, ரேஸில் தூள் கிளப்பினார்கள். சிறு சிறு சக்கரங்கள் கொண்ட, தரையோடு தரையாக இருக்கும் சிறு வண்டியில் அமர்ந்துகொண்டு, காலை முன்னே உள்ள பெடலில் வைத்துக்கொள்ள வேண்டும். பெடலை அழுத்த அழுத்த வண்டி வேகமெடுக்கும். காலைப் பின்னுக்கிழுத்துக்கொண்டால் வேகம் குறையும். சிம்பிளான மெக்கானிஸம்தான். ஆரம்பத்தில் சொல்லிக்கொடுத்து, சின்ன டெஸ்ட் வைக்கிறார்கள். ஓகே ஆனதும், சரிவுப் பாதையில் நாம் வண்டியைச் செலுத்திக்கொண்டு பறக்க வேண்டியதுதான். அந்த சிமென்ட் சாலைகள் வளைந்தும் நெளிந்தும் சாய்ந்தும் செல்கின்றன. சின்னச் சின்னக் குழந்தைகள்கூட இந்த ஜாலி விளையாட்டில் பட்டையக் கிளப்புகின்றன. சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டோம்.

மாலை 5 மணி ஆனது. இன்னும் ஒரே ஒரு அயிட்டம். பேக்கேஜ் ரூபத்தில் எங்கள் தலையில் கட்டப்பட்ட அயிட்டம். ஹோலோகிராம் நடன நிகழ்ச்சி.

கே-லைவ் தியேட்டர் என்னும் ஹோலோகிராம் தியேட்டருக்குள் நுழைந்தோம். கும்மிருட்டாக இருந்தது. சோதனையாக நாங்கள் நால்வர் மட்டுமே இருந்தோம். எங்களைத் தவிர வேறு ஈ, காக்காய் இல்லை. எங்களுக்காக மட்டுமே ஷோ தொடங்கப்பட்டது.
எதிரே மேடையில் வண்ண ஒளிகளால் உருவங்கள் தோன்றின. நிஜமாகவே மேடையில் நடனக் கலைஞர்கள் இருப்பது போன்ற மாயத் தோற்றம். பிரபலமான கே-பாப் ஸ்டார்களை இப்படி ஹோலோகிராமாகச் செய்து மேடையில் நடனமாட விடுகிறார்கள். நடனமணிகள் ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் பிரதாபங்களையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். பின்பு பாடியபடியே நடனமாடுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் மோதி, புகையாய்க் கரைந்து காணாமல் போகிறார்கள். பின்பு வேறு இடத்தில் தேவர்கள் மாதிரி தோன்றுகிறார்கள். ஜீன்ஸ் படத்தில்,கண்ணோடு காண்பதெல்லாம்...பாடலில் இரண்டு ஐஸ்வர்யா ராய்களில் ஒருவர் ஹோலோகிராம் உருவம் என்று கதைப்படி சொல்லப்பட்டதல்லவா, அது போன்ற காட்சிதான் இதுவும். எல்லாம் சரி! ஆனால், அந்த நடனக் கலைஞர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை. பாடல்களும் கேள்விப்பட்டவையாக இல்லை. தவிர, அந்த உருவங்கள் ஏதோ டிசம்பர் சீஸன் மாதிரி மேடையிலேயே எல்லாக் கூத்தையும் பண்ணிக்கொண்டிருந்தன. முதலீட்டார்கள் மாநாட்டில் ஹோலோகிராம் குதிரை பறந்து வந்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்ததே... அதுபோல இவர்கள் கீழே இறங்கி வந்து எங்களிடையே புகுந்து நடந்து சென்றிருந்தாலாவது கொஞ்சம் பிரமிப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் மேடையிலேயே நடனம் ஆடிக்கொண்டிருந்தால், அது ஹோலோகிராமாக இருந்தால் என்ன, நிஜமாகவே யாராவது ஆடினால்தான் என்ன... போர் போர்தான்!

அதுவும் பத்து, இருபது நிமிடங்கள் என்றால், தொலைகிறது என்று விடலாம். முக்கால் மணி நேரம் வெச்சு அறு அறுவென்று அறுத்தார்கள். சரியான மொக்கை புரொகிராம்!

இந்த அறுவைக்குப் பயந்துதான் யாரும் வரவில்லை என்பது நிதர்சனம். நாங்கள் அப்பிராணிகளாக மாட்டிக்கொண்டோம். பேக்கேஜ் டிக்கெட்டில் சாமர்த்தியமாக இதைஅண்டர்வாட்டர் வேர்ல்டுடன் சேர்த்துக்கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறதா?! அப்படியே கொடுத்திருந்தாலும், உள்ளே நுழைந்து இதன் லட்சணம் தெரிந்தவுடனேயேபோதுமடா சாமிஎன்று வெளியேறியிருந்தால், இன்னும் வேறு சில சுவாரஸ்யமான இடங்களையாவது பார்த்திருக்கலாம். நாங்கள் தப்பு பண்ணிவிட்டோம். அந்த நடனமணிகள் இறங்கி வந்து எங்கள் எதிரில் நிற்கத்தான் போகிறார்கள் என்று கற்பனை கண்டுகொண்டிருந்தோம். அப்படி எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை. தவிர, எங்கள் நால்வருக்காக மட்டுமே ஒரு ஷோ மெனக்கெட்டுப் போடுகிறபோது,சகிக்கவில்லைஎன்று வெளியேறுவதும் சங்கடமாக இருந்தது. அது அவர்களை இன்சல்ட் செய்கிற மாதிரி ஆகும் என்று மகனும் மகளும் கருதியதால், கடனே என்று அந்த ஷோவைப் பார்த்தோம். ஆக, முக்கால் மணி நேரம் தண்டம்.

விட்டால் போதும் என்று வெளியேறியபோது மணி மாலை 7.நாளை ஒருநாள்தான் இருக்கிறது நமது சிங்கப்பூர் டூரின் மிச்சம்என்கிற எண்ணம் ஏக்கமாக உருவெடுக்க, மீண்டும் கேபிள் கார் பிடித்து, எம்.டி.ஆர். டிரெயின் பிடித்து, பஸ் பிடித்து, வீடு வந்து சேர்ந்தோம்.

(பயணம் தொடரும்) 

Tuesday, January 09, 2018

சுபா - நட்புக்கு மரியாதை!

ராஜேஷ்குமாரின் எழுத்தில் உள்ள விறுவிறுப்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்தில் உள்ள ஜிலுஜிலுப்பு இரண்டும் கலந்தாற்போன்ற ஒரு தனித்துவ நடை இரட்டை எழுத்தாளர்கள்சுபாவினுடையது. விறுவிறுப்பு, ஜிலுஜிலுப்பு இரண்டில் சு எதற்குச் சொந்தக்காரர்,பா எதற்குச் சொந்தக்காரர் என்பது எனக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமேகூடத் தெரியாத ஒரு சுவாரஸ்ய ரகசியம்.

ஒரு பேச்சுக்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர,சுபாவைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரே! அதுமட்டுமல்ல, தங்களைசுவாகவும்பாவாகவும் மற்றவர்கள் பிரித்துப் பார்ப்பதைக்கூட விரும்பாத இறுகிய நட்பு அவர்களுடையது என்பதும் எனக்குத் தெரியும்.

இசையுலகில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போன்று இந்தித் திரையுலகிலும் பல இசை ஜோடிகள் இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்திலோ கேட்கவேண்டாம், சகோதரர்கள், சகோதரிகள் என சங்கீத ஜோடிகள் பலர் உண்டு. ஆனால், எழுத்துலகில்சுபாவைத் தவிர, எனக்குத் தெரிந்து வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இருவரின் முதலெழுத்தும் இணைந்துசுபாஎன்னும் அழகான ஒரு பெயர் இசைவாக அமைந்தது எனக்கு ஓர் ஆச்சர்யம்! கல்லூரிக் காலத்திலிருந்து தொடரும் இவர்களின் நாற்பதாண்டுகளுக்கும் மேலான நட்பு, நட்பை போஷிக்கத் தெரியாத எனக்கு மற்றுமொரு ஆச்சர்யம்!

இருவரும் இணைந்து குறைந்தபட்சம் 300 சிறுகதைகளாவது எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கருணை, தீர்ப்பு, நிழல் நர்த்தனம், சிம்மாசனம், கல்வெட்டுகள் கரையும்... எனப் பலப்பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன்.கோழிக்குஞ்சு என்று ஒரு சிறுகதை. சுஜாதாவின்காகிதச் சங்கிலிகள் கதையைப் படித்திருக்கிறீர்களா? கதையின் முடிவில் உறவினர்கள் யாருமே கிட்னி தராமல் ஒருவர் சாக நேரிடுவதைப் படிக்க நேர்கிறபோது, நம் மனசு பாரமாய் வலிக்குமல்லவா, அத்தகைய ஒரு வலியை சுபாவின்கோழிக்குஞ்சு சிறுகதை ஏற்படுத்தியது. 

ஊனமுற்ற குழந்தையாகப் பிறப்பதன் வலிகளை இந்தக் கதை நெடுக விவரித்திருப்பார்கள். தம்பி, தங்கைகள் இந்த மூத்த குழந்தையைப் படுத்துகிற பாடு, படிக்கிற நமக்கே கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் பெரியவர்களாக வளர, அப்பாவும் அம்மாவும் இறந்துபோக, ஊனமுற்ற தன் அண்ணனைக் கொண்டுபோய் விடுதியில் சேர்த்துவிடுவார்கள். கடைசியில், ஒருநாள் தம்பி தேடி வருவான். பாச மழை பொழிவான். விடுதியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வான். அண்ணனின் வாயில் ஒழுகும் எச்சிலைக்கூடத் துடைத்துவிடுவான்.ஆஹா, என் தம்பி எவ்வளவு நல்லவன்!என்று அண்ணனின் மனசு நெகிழும். டாக்டர் வருவார். அண்ணனின் உடம்பைச் சோதனை செய்வார்.மருந்து, மாத்திரை கொடுத்து நம்மை குணப்படுத்திவிடப் போகிறார்கள்என்று அண்ணனின் மனம் சந்தோஷத்தில் குதிக்கும். ஆனால்... தன் மனைவியின் தம்பிக்கு அண்ணனின் கிட்னியை எடுத்துப் பொருத்தும் உத்தேசத்தில்தான் அவன் தன் அண்ணனை விடுதியில் இருந்து அழைத்து வந்து, டாக்டரிடம் காண்பித்திருக்கிறான் என்று க்ளைமாக்ஸில் கதை முடியும்போது, நம் நெஞ்சம் இரும்பாய்க் கனத்துப் போய்விடும். அத்தகைய வலுவான எழுத்து சுபாவினுடையது. இந்தக் கதை ஓர் உதாரணம்தான். சுபாவின் பல கதைகள் இத்தகைய ஆழம் மிக்கவை.

சிறுகதையில் தொடர்கதைக்கே உரிய திருப்பங்களைப் புகுத்துவதும், தொடர்கதையில் சிறுகதையில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய மெசேஜை நுழைப்பதும் இவர்களுக்கே உரிய பாணி. கணேஷ்-வசந்த், விவேக்-ரூபலா, பரத்-சுசீலா ஜோடிகள் போன்றுசுபாவின் நரேன்-வைஜெயந்தி ஜோடியும் கதை ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான, பரிச்சயமான துப்பறியும் ஜோடி.

சுபா எழுதிய மாத நாவல் ஒன்றின் தலைப்பு இப்போது என் நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன்னால் படித்த கதை அது. அது ஒரு சரித்திரக் கதை. ஆனால், முழுக்க முழுக்கக் கற்பனைக் கதாபாத்திரங்களாலும், கற்பனைச் சம்பவங்களாலும் சரித்திர நடையில் எழுதப்பட்ட கதை. முன்குறிப்பு கொடுத்திருக்கவில்லையென்றால், நிஜமாகவே சரித்திரத்தில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக்கும் என்று நம்ம்ம்ம்ம்பி ஏமாந்து போயிருப்பேன். ஏற்கெனவே, பள்ளியில் சரித்திரப் பாடத்தில் நான் ரொம்ப வீக். இத்தனை சுவாரஸ்யமாக யாராவது அன்றைக்குச் சரித்திரப் புத்தகப் பாடங்களைத் தொகுத்திருந்தால், நான் நிச்சயம் சரித்திரத்தில் நல்ல மார்க் எடுத்திருப்பேன்.

இன்றைக்குச் சுபாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறேன். நான் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான் என்னை அவர்களுக்குத் தெரியும். ஆனால், நான் சாவியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களை அறிவேன்.

அவர்களை அறிவேன் என்றால், வெறுமே அவர்களின் சிறுகதைகள் மூலமாக மட்டுமே அல்ல; நேரிலேயும் சந்தித்திருக்கிறேன்.
சாவி இதழுக்கு ஒரு சிறுகதை கொடுப்பதற்காகவோ அல்லது தொடர்கதை எழுதுவது தொடர்பாகப் பேசுவதற்காகவோ அவர்கள் சாவி சாரை சந்திக்க வந்திருந்தார்கள். அப்போது சாவி சார் தமது அண்ணா நகர் வீட்டில் மாடிப் போர்ஷன் கட்டியிருந்த புதிது. மாடியில் நுழைந்ததுமே, வலது பக்கம் ஒரு பத்துக்குப் பத்து சதுர அறை இருக்கும். அங்கே நான் ஒரு கோணி மூட்டையைக் கவிழ்த்துப் போட்டு, அதன் பக்கத்திலேயே தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து, போட்டோவோ அல்லது ஏதும் லைன் டிராயிங்கோ தேடிக்கொண்டிருந்தேன். ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால், அவர் எழுதிய பழைய எழுத்துக்களை எடுத்து வெட்டி ஒட்டித் தேவையான புதிய தலைப்பு உண்டாக்கி அவசரத்துக்கு அனுப்புவதும் என் வழக்கம். அப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக நான் மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, சுபா அங்கே வந்தார்கள். சாவி சாரைப் பார்க்கணும் என்றார்கள். இருங்க, கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களை அங்கேயே நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே போய் சாவி சாருக்குத் தகவல் சொன்னேன். பின்பு மீண்டும் வந்து, பழையபடியே தரையில் கால் பரப்பி அமர்ந்து, என் வேலையைத் தொடர்ந்தேன்.

சுபாவுக்கு நான் ஒரு சப்-எடிட்டர் என்றே தோன்றியிருக்காது. யாரோ ஒரு எடுபிடிப் பையன் என்றுதான் நினைத்திருப்பார்கள். காரணம், என் கோலமும் தோற்றமும் அப்படி.

நீங்க இங்கே என்ன பண்றீங்க? என்று கேட்டார் (சு)பா. சப்-எடிட்டரா இருக்கேன் என்றேன்.

அப்புறம் எதுக்கு நீங்க இந்த வேலையைச் செய்யறீங்க? யாராவது அட்டெண்டரைச் செய்யச் சொல்ல வேண்டியதுதானே? என்றார் (சு)பா.

இங்கே இடைச்செருகலாக ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். நான் சாவியில் உதவிஆசிரியனாகச் சேர்ந்திருந்த புதிது. அங்கு ஏற்கெனவே எனக்கு சீனியர்களாக இருந்த திரு.கண்ணன் என்கிற அபர்ணாநாயுடு, ரமணீயன், கே.வைத்தியநாதன் மூவரும் விலகி, நான் ஒருவன் மட்டுமே சாவி ஆசிரியரின் கீழ் உதவி ஆசிரியனாகப் பணியாற்றத் தொடங்கியிருந்த நேரம். அட்டெண்டர் வேலை முதற்கொண்டு எல்லா வேலைகளையும் ஆர்வத்தோடு இழுத்துப் போட்டுப் பரபரவென்று உழைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. தவிர, இளைஞனுக்கே உரிய திமிரும் தெனாவெட்டும்கூட அப்போது என்னிடத்தில் இருந்தன. கூடவே, எதிலும் குதர்க்கம் கண்டுபிடிக்கும் குறுக்குப் புத்தி. பக்குவமடையாத பருவம். அதனால்தானே மூன்று முறை பெருந்தகையாளர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறினேன்.

திரு.பாலா தப்பாக ஒன்றும் கேட்டுவிடவில்லை. சப்-எடிட்டராக இருந்துகொண்டு அதற்கேற்ற வேலையைச் செய்யாமல், வெட்டியாக ஏதோ செய்துகொண்டிருக்கிறேனே என்கிற அக்கறையில்தான் கேட்டார். அதைப் பின்னாளில்தான் நான் உணர்ந்தேன். ஆனால், அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் அவர் யதார்த்தமாக அப்படிக் கேட்டதும், பக்குவமடையாத என் மனசு பரபரவென்று பற்றிக்கொண்டது. சுறுசுறுவென்று ரோஷம் பொங்கியது.

எனக்குச் சம்பளம் கொடுப்பவர் சாவி சார். நான் என்ன வேலை செய்யலாம், என்ன செய்யக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். ஓகே?என்றேன், மனசிலிருந்த கோபத்தைக் கூடுமானவரை குரலில் காட்டாமல்.

அதற்குள் சாவி சார் வந்துவிட்டார். சுபா அவரோடு பேசப் போய்விட்டார்கள். நான் என் வேலையை முடித்துக்கொண்டு, கீழே வந்துவிட்டேன்.

அதன்பின்பு, ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2000-வது ஆண்டிலிருந்துதான் அவர்களுடனான பழக்கம் ஏற்பட்டு, இன்றைக்கு இறுகிய நட்பாக முகிழ்த்திருக்கிறது. சாவி காலத்துச் சம்பவத்தை அவர்கள் அன்றே மறந்து போயிருக்கலாம்; நினைவிலேயே பதியாமலும் இருந்திருக்கலாம். நானும் இதுவரை அதுபற்றி அவர்களிடம் சொல்லியதில்லை. இதோ, இந்தப் பதிவின்மூலம் அவர்கள் அறிந்தால்தான் உண்டு. அன்றைய இளம்பிராயத்து ரவியின் அதிகப்பிரசங்கித்தனமான பதிலுக்கு இன்றைய பக்குவப்பட்ட ரவியாக திரு.பாலாவிடம் மானசிகமாகஸாரி கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீவேணுகோபாலன் என்னும் ஆன்மிக எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையாக அவதாரம் எடுத்து, ஜிலுஜிலு கதைகள் எழுதிக் கலக்கியது சீனியர் வாசகர்களுக்குத் தெரியும். சுபா அப்படியே உல்டா. க்ரைம் கதைகள் எழுதி அசத்திக் கொண்டிருந்தவர்கள் காஷ்யபன் அவதாரம் எடுத்து, ஆன்மிக குருமார்களைப் பற்றியும், திருத்தல மகிமைகள் பற்றியும் கட்டுரைகளும் தொடர்கட்டுரைகளும் எழுதிக் கலக்கினார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டுஅத்தனைக்கும் ஆசைப்படுஎன்று இவர்கள் எழுதிய தொடருக்கு வாசகர்களிடம் அத்தனை வரவேற்பு.

பொதுவாக, ஆனந்த விகடன் தீபாவளி மலரை ஆசிரியர் குழுவில் உள்ளவர்களேதான் தயாரிப்பது வழக்கம். ஒரே ஒருமுறை,வேறு ஒரு பிரபல எழுத்தாளரை வைத்துத் தயாரித்தால் என்ன என்று ஆசிரியர் குழுவில் முடிவெடுத்தோம். எழுத்தாளர்கள் சுபாவைக் கேட்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சுபாவைத் தொடர்புகொண்டு நான் இந்தத் தகவலைச் சொன்னேன். உடனே ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார்கள்.

அந்தக் கணத்திலிருந்து பரபரவென்று இயங்கினார்கள். ஐடியாக்களைக் கொட்டினார்கள். அசைன்மென்ட்டுகளைப் பிரித்து வழங்கினார்கள். கட்டுரைகளைத் தேடித் தேடிப் பெற்றார்கள். எழுத்தாளர் சுஜாதாவையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும்சினிமாவுக்கான ஒரு திரைக்கதையை எழுதுவது எப்படி?என்று கட்டுரை எழுத வைத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் அதை காட்சி, பிராப்பர்ட்டீஸ், டயலாக் என்று விவரித்து எழுத, சுஜாதா படக் கதையாகவே தன் கட்டுரையை வழங்கினார். முன்பு ஒருமுறை ஓவியர் ஸ்யாமை அழைத்துக்கொண்டு சுஜாதா வீட்டுக்குச் சென்றேன் என்று என் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேனல்லவா, அது இந்தப் படக் கதைக்காகத்தான்.

மேலும், மலரை அழகுபடுத்த சின்னச் சின்ன நகாசு வேலைகளுக்கும் ஐடியா கொடுத்தார்கள் சுபா. மொத்தத்தில், ஒரு முழுமையான மலருக்குண்டான அத்தனை விஷயங்களையும் அட்டை டு அட்டை அவர்களே திட்டமிட்டார்கள். அட்டைப்படத்திலும் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தினார்கள். வழக்கமாக சினிமா நடிகர் அல்லது நடிகையின் படத்தை வெளியிடாமல், விகடன் தாத்தா ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து,கோபியர் கொஞ்சும் ரமணாபோன்று இரண்டு அழகிகளோடு ஜாலியாக ஆடிப்பாடுகிற மாதிரி இளமைத் துள்ளலோடு ஓவியர் ஸ்யாமிடம் படம் வரைந்து வாங்கி, வெளியிட்டார்கள்.

சிறுவர்களிடம் அவர்களின் கற்பனைக்கேற்ப ஏதேனும் படம் வரையச் சொல்லி வாங்கி, அவற்றுக்கேற்ப பிரபல கதாசிரியர்களிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிட்ட சுபாவின் யோசனை மிகப் புதுமையானதாக அந்நாளில் வாசகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வரைந்த சிறுவர்களில் என் மகன் ரஜ்னீஷும் ஒருவன். அவனுக்கு அப்போது நான்கு வயது. அவனுடைய ஓவியத்துக்குப் பொருத்தமாகச் சிறுகதை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன்.

இந்த மலர் தயாரிப்புப் பணி மொத்தத்தையும் சுபா தூக்கிச் சுமக்க, நான் ஓர் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருந்து அவர்களுக்கு உதவினேன். மலர் பணிகள் முடிக்கும் க்ளைமாக்ஸ் நாட்களில் தொடர்ந்து இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் அவர்கள் விகடன் அலுவலகத்திலேயே இருந்து, பசி நோக்கார், கண் துஞ்சாராகி, கருமமே கண்ணாயினராக இருந்து முடித்துக்கொடுத்த அவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் செய்நேர்த்தியும் இன்றைக்கும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

சுபா தயாரித்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியான ஆண்டு 2005. சிறுகதை மன்னர்களான சுபா தயாரித்த இந்த மலரில் அவர்களின் சிறுகதை எதுவும் இடம்பெறவில்லை என்பது ஒரு முரண். ஆமாம், தாங்கள் இதில் சிறுகதை எழுதுவதில்லை என்பதில் அவர்கள் அத்தனை உறுதியாக இருந்தார்கள். இருப்பினும், கதை எழுதாவிட்டால் போகிறது. ஒரு கட்டுரையாவது எழுதுங்கள்என்று நான் வற்புறுத்தியதன்பேரில்என் நாடு, என் மக்கள் என்னும் தலைப்பில் இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை எழுதினார்கள்.

அது சரி, அவர்கள் ஏன் இந்த மலரில் கதை எழுதத் தயங்கினார்கள்?

அதற்கு அவர்கள் சொன்ன பதில்...

நாங்களே ஒரு மலரைத் தயாரித்து, அதில் நாங்களே ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டுக்கொள்வது கொஞ்சம்கூட நியாயமே இல்லை, ரவிபிரகாஷ்!

அவர்களுக்குள் ஊறியிருந்தபத்திரிகை அறம்தான் அவர்களை அப்படிச் சொல்ல வைத்தது.

ஹேட்ஸ் ஆஃப் சுபா!


Sunday, January 07, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 13

சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒருநாள்..!
ன்னின்னிக்கு இந்த இந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்று சென்னையிலிருந்து கிளம்பும்போதே பக்காவாக பிளான் பண்ணியிருந்தோம். அந்த வகையில் கடைசி மூன்று நாட்களும் சிங்கப்பூரில் சுரேஷ் தம்பதியின் இல்லத்தில் தங்கி, யுனிவர்சல் ஸ்டூடியோஸ் ஒருநாள், செண்டோஸா பார்க் ஒருநாள், கடைசி நாளன்று மெரினா பே ஸ்கைபார்க் ஹோட்டல், மெர்லியன் பார்க், ஃப்ளையர் போன்றவற்றைப் பார்க்கலாம் என்று தீர்மானித்திருந்தோம்.

மலேசியாவில் சரியாக 9 மணிக்கு எங்கள் பஸ் கிளம்பியது. களைத்திருந்ததால், பஸ் கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அனைவருக்கும் நல்ல தூக்கம். விடியற்காலை இரண்டரை மணி சுமாருக்கு எழுப்பப்பட்டோம். சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான விசா செக்கிங். மீண்டும் எங்கள் பெட்டி படுக்கைகளை இறக்கி, வரிசையில் நின்று, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை அதிகாரிகளிடம் காண்பித்து, தூக்கக் கலக்கத்தோடு செக்கிங் முடித்து, மீண்டும் பஸ்ஸில் ஏறி, சிங்கப்பூரில் ஏறிய இடத்துக்கே வந்து இறங்கியபோது மணி 3. அங்கிருந்து ஒரு கேப் பிடித்து, திரு.சுரேஷ் அப்பார்ட்மென்ட்டுக்கு விடியற்காலை 3:30 மணிக்கு வந்து, அன் டயத்தில் சிரமப்படுத்துகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியோடு காலிங்பெல் அடித்தோம். கொஞ்சம்கூட அலுப்பில்லாமல் புன்சிரிப்போடு கதவைத் திறந்தார் ஜெயஸ்ரீ. எல்லா இடங்களும் நல்லா சுத்திப் பார்த்தீங்களா? பத்துமலை முருகன் கோயிலுக்கு ஏறிப் போனீங்களா? என்று அந்த நேரத்திலும் ஆர்வத்தோடு விசாரித்தவர், எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காண்பித்தார். போய்ப் படுத்து, மீண்டும் எங்கள் உறக்கத்தைத் தொடர்ந்தோம்.

காலையில் 10 மணி சுமாருக்கு எங்களை எழுப்பினார் ஜெயஸ்ரீ. ஒவ்வொருவராக எழுந்து பல் விளக்கி, சுடச்சுடக் காபி குடித்தோம். குளித்து முடித்து, உடை மாற்றித் தயாராகி வருவதற்குள் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருந்தது. அது மட்டுமல்ல, வெளியே நாங்கள் சாப்பிடுவதற்கு அலுமினிய ஃபாயிலில் ஸ்னாக்ஸும் பாக்கெட் பாதாம் மில்க்கும்கூடத் தயாராக இருந்தது. அவர்கள் இல்லத்தில் இருந்த மூன்று நாள்களும் எங்களுக்கு ராஜயோகம்தான். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேண்டுமானால் பணம் கொடுத்துவிடலாம்; ஆனால், சுரேஷ் தம்பதி எங்கள்மீது காட்டிய அக்கறைக்கும் அன்புக்கும் பிரதிபலன் செய்யவே முடியாது. சென்னை திரும்பியதும் என் மகனும் மகளும் சொன்னதுதான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

சிங்கப்பூர் டூர் முடிஞ்சு வந்தது வருத்தமாதான் இருக்கு. ஒன்பது நாள் போனதே தெரியலே. ஆனா, அதைவிட அவங்களைவிட்டு (சுரேஷ் தம்பதி) வந்ததுதான் ரொம்ப வருத்தமா இருக்குஎன்றான் மகன். ஆரஞ்சு ரசம், அது இதுன்னு ஒவ்வொரு நாளைக்கும் விதம்விதமா சாப்பாடு பண்ணிப் போட்டாங்க. ஒவ்வொண்ணும் அத்தனை டேஸ்ட்! சாப்பாட்டின் சுவைக்காக ஒரு பிடி கூடுதலா சாப்பிடத் தோணுச்சுன்னா,பொரியல் இன்னும் கொஞ்சம் போடட்டுமாம்மா?ன்னு’அவங்க கேட்கிற அன்புக்காகவே இன்னொரு பிடி சாப்பிடலாம்போல இருந்தது என்றாள் மகள். சமீபத்தில் ஜெயஸ்ரீ சென்னை வந்திருந்தபோது, என் மகனும் மகளும் அவர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துப் பேசிவிட்டு வர மிகவும் ஆசைப்பட்டார்கள். அவருடைய புரொகிராம்களும் எங்களுடைய புரொகிராம்களும் வெவ்வேறு திசையில் இருந்ததால், ஜெயஸ்ரீயைச் சந்திக்க முடியாமல் போனதில் இருவருக்கும் ரொம்பவே வருத்தம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். அன்றைய தினம் நாங்கள் திட்டமிட்டிருந்தது யுனிவர்சல் ஸ்டுடியோ விஜயம். மிகச் சமீபத்தில்தான், அதாவது 2010-ம் ஆண்டுதான் யுனிவர்சல் ஸ்டுடியோ திறக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்குச் சற்று வியப்பாக இருந்தது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தீம் பார்க் இது என்கிறார்கள். (முதலாவது ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோ.) டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், ஜாலியாக ஒவ்வொரு ரைடாக ஏறி இறங்கிக் கொண்டாடலாம். உள்ளே தனித்தனியாக டிக்கெட் வாங்கத் தேவையில்லை.

முன்பே தெரிந்ததுதான்... இது பிள்ளைகளுக்கான இடம். எங்களுக்கு இங்கே வேலையில்லை. சும்மா பராக்குப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டோம்.

என்றாலும், தலைசுற்ற வைக்காமல் சிம்பிளாக ஏதேனும் இருந்தால் நாங்களும் செல்லலாம் என்று நினைத்தோம். முதலில், மடகாஸ்கர் ரைடு என்ற ஒன்றில் ஏறினோம். சின்னச் சின்ன போட்டுகள். நாங்கள் நால்வரும் ஒரு போட்டில் ஏறிக்கொண்டோம். வளைந்து வளைந்து செல்லும் கால்வாய் வழியாக அது மிதந்து செல்கிறது. இரண்டு புறமும் சுவர்களில் இடித்து இடித்துச் செல்கிறது. வழியெல்லாம் பிரமாண்டமான கார்ட்டூன் உருவங்கள். அத்தனையும் மடகாஸ்கர் என்கிற அனிமேஷன் படத்தில் வரும் கார்ட்டூன்கள். வெறுமே கட் அவுட்டுகளாக இல்லாமல், அனைத்தும் நகர்கின்றன; தலையைத் திருப்புகின்றன; உயரமான ஒட்டைச்சிவிங்கி எங்கள் போட் வரை குனிந்து எங்களை உற்றுப் பார்த்தது. இந்தக் கரையிலிருந்து ஒரு குட்டிக் குரங்கு (கார்ட்டூன்தான்) விழுதைப் பிடித்துக்கொண்டு அந்தக் கரைக்குத் தாவுகிறது. ஓரத்திலிருந்து ஒரு சிம்பன்ஸி எங்கள்மீது தண்ணீரைத் துப்பியது. சவுண்டு எஃபெக்ட்ஸ் த்ரில் கூட்டுகிறது.

கரைகளில் கள்ளிப்பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் போட் அந்த இடத்தைக் கடக்கும்போது அத்தனை பெரிய பெட்டிகள் தடாலென்று சரிந்து எங்கள்மீது விழுந்துவிடும்போல் பயமுறுத்துகிறது. கொஞ்சம் தூக்கிவாரித்தான் போடுகிறது. இதன் யூ-டியூப் லின்க்கைக் கீழே கொடுத்துள்ளேன்.

அடுத்து, நாங்கள் சென்றது ஜுராசிக் பார்க் ரேப்பிட் ரைடு. நீளமான க்யூ. எல்லோரும் கையில் கண்ணாடித் தாளிலான ரெயின்கோட் போல் வைத்திருந்தார்கள். அதைத் தனியாக ஓரிடத்தில் வாடகைக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாடகை ஒரு டாலரோ, இரண்டு டாலரோ... ஞாபகமில்லை. இந்த ஜாலி ரைடு போகிறவர்கள் தெப்பமாக நனைந்துபோவார்கள் என்பதால், தற்காப்புக்காக இந்த ரெயின்கோட்.

நனைந்துதான் பார்ப்போமே என்று நாங்கள் ரெயின்கோட் வாங்காமலே சென்றோம். எங்களுக்கான போட்டில் ஏறி அமர்ந்தோம். ஒன்றன்பின் ஒன்றாக நகர ஆரம்பித்தன. வளைந்து நெளிந்து கால்வாய் வழியே வேகமாக மிதந்து ஓடியது போட். வழியெல்லாம் மெகா சைஸ் டினோசர்கள்... காரே பூரே என்று உறுமிக்கொண்டிருந்தன. ஓரங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள், சில்லென்று தெறிக்கும் தண்ணீர்த் திவாலைகள், திடும் திடுமெனப் பீறிட்டு அடிக்கும் ஃபவுண்டெய்ன்கள், கரையோரங்களில் கவிழ்ந்து கிடக்கும் பழைய கால ஜீப், வேரோடு சாய்ந்த மரம் என செட்டப்புகள் அபாரம்!

ப்பூ... இவ்வளவுதானா... இதற்கா ரெயின்கோட் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் ரைடு க்ளைமாக்ஸை நெருங்கியது. தடதடவென்று வழியை மறித்தாற்போல் நீர்வீழ்ச்சி ஒரு திரைபோல் கொட்டிக்கொண்டிருந்தது. ஆஹா, தொப்பலாக நனையப்போகிறோம்என்று நினைத்து உடம்பைக் குறுக்கிக்கொள்ள, நீர்த்திரையை எங்கள் போட் நெருங்கியதுமே சட்டென அந்த நீர்த்தாரை நின்றுபோனது. அந்த இடத்தை எங்கள் போட் கடந்ததும், மீண்டும்சோவெனக் கொட்டத் தொடங்கியது.

தொடர்ந்து, எங்கள் போட் ஓர் இருண்ட குகை வழியே பயணிக்கத் தொடங்கியது. காரே பூரே சத்தங்கள் திகில் கூட்டின. ஓரங்களிலிருந்து குபீர் குபீரென தீ ஜுவாலைகள் வீசின. சென்றுகொண்டிருந்த ஒரு போட் எங்கோ கதவு மீது முட்டி நின்றது. கும்மிருட்டில், பெரிய உயரமான கோட்டைக் கதவுகள் போன்ற கதவுகள் திறக்க, எங்கள் போட்டு மெதுவாக உள்ளே நுழைந்து நின்றது. திறந்த கதவுகள் மூடிக்கொண்டன. யோசிப்பதற்குள் எங்கள் போட் விறுவிறுவென உயரே ஒரு முப்பதடி உயரத்துக்குத் தூக்கப்பட்டது. அப்போதே வயிற்றில் புளி கரைந்தது. அடுத்த எதிர் கதவு திறக்க, உயரே இருந்து எங்கள் போட் நீர்வீழ்ச்சியில் சரிந்து தடாலென்று கீழே விழுந்தது.என்ற அலறல், எங்கும் எதிரொலித்தது. தண்ணீர் வாரியடித்து எங்கள் அனைவரையும் முற்றாகக் குளிப்பாட்டியது.

ஈரம் சொட்டச் சொட்ட வெளியேறினோம். வெளியே, ஈரத்தை உலர்த்திக் கொள்வதற்காகடிரையர் பாக்ஸ்கள் இரண்டு இருந்தன. 2 டாலர் கட்டணம் கொடுத்தால், பழைய கால பொதுத் தொலைபேசி பூத் போன்ற அதில் இருவர் உள்ளே ஏறி நின்று, அனல்காற்று வாங்கலாம். நானும் என் மகனும் மட்டும் அப்படி எங்கள் உடைகளை உடம்போடு காய வைத்துக்கொண்டோம்.

அதன்பின்பு, என் மகனும் மகளும் ரோலர் கோஸ்டர்களில் ஏறிச் செல்ல விரும்பினார்கள். நாங்கள் அருகில் இருந்த வசதியான ஒரு மண்டபத்தில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தோம்.

பேட்டில்ஸ்டார் கலாக்டிகா என்னும் இந்த ரைடில் இரண்டு வகை இருக்கிறது.ஹ்யூமன்என்கிற ரைடில் ரேஸ் கார் மாதிரி உட்கார்ந்து செல்லலாம்.சைலோன்என்பது கூடுதல் த்ரில் தருவது. கொக்கியில் தொங்கியபடி செல்ல வேண்டும்.

பார்க்கும்போதே தலைசுற்றுகிறது. ராட்சதத் தண்டவாளங்களில் படுவேகமாக ஓடும் இவை வளைந்து, நெளிந்து, சரேலென்று மேலேறி, தடாலென்று சரிந்து கீழிறங்கி, முறுக்கிக்கொண்டு திரும்பி... என ஒரு நிமிட நேரத்துக்குள் உச்சபட்ச த்ரில்லைக் கூட்டுகின்றன. மகனும் மகளும் அடுத்தடுத்து இரண்டிலும் ஏறி இறங்கி, பரவசம் குறையாமல் வந்தார்கள்.

பின்னர், அங்கிருந்த ஓர் அழகான குடையின்கீழ் அமர்ந்து, கொண்டுவந்திருந்த ஸ்னாக்ஸை உண்டு முடித்து, சற்று ரெஸ்ட் எடுத்தோம். அருகிலேயே ஏன்ஷியன் ஈஜிப்ட் உலகம் இருந்தது. ஒரு ஜீப்பில் ஏறிக்கொண்டோம். ஒற்றைத் தண்டவாளத்தின் வழிகாட்டலோடு அந்த ஜீப் இயந்திர இயக்கத்தில் ஓடுகிறது. இருபக்கமும் சுவர்களில் பழைய எகிப்திய நகரம் போன்ற கட்டட அமைப்புகள், பழைய கால வாகனங்கள், காட்டெருமைகள், ராட்சத வண்டுகள்... எங்கோ எதுவோ எரிந்து, புகைந்துகொண்டிருந்தது. பழைமையை நினைவூட்டும் ஒரு ஜாலி ரைடு அது!

அதன்பின்பு, மகனும் மகளும் மட்டும் வேறு பல ரைடுகளில் புகுந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் மட்டும் தனியாக உள்ளே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். ரோம் மற்றும் நியூயார்க் நகரத் தெருக்கள் போன்று வீடுகள், கடைகளை எல்லாம் ஒவ்வோர் இடத்தில் வடிவமைத்திருந்தார்கள். அங்கெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தோம்.

மாலை 6 மணி. ஸ்டுடியோ நேரம் முடிந்தது. அனைவரையும் வெளியேறச் சொல்லி அறிவித்தார்கள். ஒரு நீண்ட பாதை வழியாக வெளியேறினோம். படி ஏறுவதற்கு எஸ்கலேட்டர் போன்று நீண்ட தூரம் நடப்பதற்கு டிராவலேட்டர் (நகரும் நடைபாதை) அமைத்திருந்தார்கள். சென்னையிலும் அப்படி டிராவலேட்டர்கள் எங்கேனும் இருக்கக்கூடும். ஆனால், அங்கேதான் முதன்முதலில் பார்த்தோம் என்பதால், புதுமையாக இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறப் பயந்த என் மனைவி, டிராவலேட்டரில் அதையே ஒரு ஜாலி ரைடு போல உற்சாகமாக அனுபவித்தார்.

யுனிவர்சல் ஸ்டுடியோவைவிட்டு வெளியேறி, கடலோரம் நடைபாதை நீண்டது. கப்பல்கள் நின்றிருந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டே சாலைக்கு வந்தோம். கால்டாக்ஸி வரவழைத்தோம். வீடு திரும்பினோம்.

சினிமாக்களில் பார்த்ததுபோல், அகலமும் நீளமுமான சுரங்கப் பாதையில் வழுக்கிக்கொண்டு காரில் பயணித்தது இனிமையான அனுபவம்.

இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள், சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா? என்று டிரைவரைக் கேட்டேன்.

அவர் சொன்ன பதில் என்னை வியக்கவைத்தது.

(பயணம் தொடரும்)

மடகாஸ்கர் ரைடு: https://www.youtube.com/watch?v=jobIi5EQ3zc