உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, December 24, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 10

மலேசியா வந்தாச்சு!

சிங்கப்பூர் பயணத் திட்டத்தில் மலேசியாவும் உண்டு என்று முன்பே முடிவு செய்திருந்ததால், என்றைக்குப் போவது, எப்படிப் போவது, எங்கே தங்குவது என்பது குறித்தும் முன்பே திட்டமிட்டிருந்தோம். ‘சிங்கப்பூரிலிருந்து தலா ரூ.800 டிக்கெட்டில் ஃப்ளைட்டிலேயே மலேசியாவுக்கு ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். என்ன, போக வர டிக்கெட் போட்டுவிடவா?’ என்று கேட்டிருந்தார் டிராவல் ஏஜென்ட் திரு.பாலச்சந்தர். எங்களின் நலம்விரும்பியும் இனிய தோழியுமான ஜெயஸ்ரீசுரேஷ் வேறு ஒரு யோசனை தெரிவித்தார்.

ஃப்ளைட்டில் ஒரு மணி நேரத்தில் போனாலும், இங்கே ஏர்போர்ட்டுக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகச் சென்று காத்திருக்க வேண்டும். தவிர, அங்கே இறங்குமிடத்தில் செக்கிங் முடிந்து வெளியேற ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். அப்புறம் கோலாலம்பூர் ஏர்போர்ட்டிலிருந்து நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்ஸி பிடிக்க வேண்டும். தவிர, நீங்கள் போக விரும்பும் டூரிஸ்ட் அட்ராக்‌ஷன்களுக்கு 50, 55 மைல் தள்ளி வெளியே இருக்கிறது ஏர்போர்ட். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், இங்கே சிங்கப்பூரிலேயே ஒரு டூரிஸ்ட் வேன் ஏற்பாடு செய்துகொண்டு, அதிலேயே போய்ச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடுவது உத்தமம் என்றார்.

எனில், அதிகச் செலவாகுமே? என்றேன்.

ஆகாது. இங்கே முஸ்தபா டிராவல்ஸ் என்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வருகிறவர்களுக்குப் பெரும்பாலும் இவர்கள்தான் மலேசிய டூருக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்க்கிறேன். கொஞ்சம்போல் கூடுதலாக இருந்தாலும், இது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்றார்.

 “நீங்கள் சொன்னால் சரிதான். அப்படியே செய்துவிடுங்கள்என்றேன். அடுத்த ஒரு வாரத்துக்குள், சிங்கப்பூரிலிருந்து மலேசியா போய்த் திரும்புவதற்கான டிக்கெட் செலவு, அங்கே ஒரு நாள் தங்குவதற்கான ஓட்டல் செலவு, இரண்டு முழு நாள்கள் சுற்றிப் பார்ப்பதற்கான செலவு அனைத்தையும் சேர்த்து எங்கள் நால்வருக்கும் மொத்தம் ரூ.38,000/-க்குள் முடியும்படியாக ஏற்பாடு செய்து தகவல் தெரிவித்து, உரிய டிக்கெட்டுகளையும் எங்களுக்கு மெயிலில் அனுப்பி வைத்திருந்தார் ஜெயஸ்ரீசுரேஷ்.

4-ம் தேதி காலையில், திரு.கண்ணன், கீதா தம்பதியிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டோம். மலேசியாவிலிருந்து அப்படியே ஜெயஸ்ரீசுரேஷ் வீட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று தெரிவித்தோம். எட்டு நாள் இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டு, இப்படிச் சட்டென்று கிளம்பிவிட்டீர்களே?என்று வருத்தப்பட்டார்கள். சரி, அங்கே தங்கும் இடத்தில் ஏதாவது சிரமம் என்றால், யோசிக்கவே யோசிக்காதீர்கள். நேரே இங்கு வந்துவிடுங்கள்என்று சொல்லி, எனக்கும் மகனுக்கும் அழகான டி-ஷர்ட்டுகளைப் பரிசளித்து அனுப்பிவைத்தார்கள்.

காலை 8 மணி சுமாருக்கு கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸ் என்னும் இடத்திலுள்ள ஸ்டார்மார்ட் டிராவல்ஸ்அலுவலகத்தில் வந்து காத்திருந்தோம். எங்கள் எண்ணுள்ள பஸ் சரியாக 9 மணிக்கு வந்து, நாங்கள் அனைவரும் ஏறிக்கொண்டதும் உடனே புறப்பட்டது. எங்களுக்கு பஸ்ஸின் மேல்தளத்தில் இருக்கைகள். மலேசியப் பயணம் இனிமையாகத் தொடங்கியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில், இம்மிகிரேஷன் செக்கிங்குக்காக பஸ் நின்றது. கீழே லக்கேஜ் இடத்தில் வைத்திருந்த எங்கள் சூட்கேஸ், ட்ராலிபேக் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, வரிசையில் நின்று, பாஸ்போர்ட், விசா காட்டி, செக்கிங்கை முடித்து, மீண்டும் வண்டியில் ஏறினோம். ஆக, ஒரு அரைமணி நேரத்துக்குப் பிறகு, எங்கள் பஸ் மீண்டும் புறப்பட்டது.

சரியாக மதியம் 3 மணிக்கு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளபெர்ஜயா டைம் ஸ்கொயர்என்ற இடத்தின் வாசலில் வந்து இறங்கினோம்.

பஸ்ஸில் பயணப்பட்டு மலேசியா வந்த நாற்பத்துச் சொச்சம் பேரையும் இந்த பஸ்ஸிலேயேதான் அழைத்துக்கொண்டு போய்ச் சுற்றிக்காண்பிக்கப் போகிறார்களாக்கும் என்றுதான் அதுவரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இதனால், நாம் விருப்பப்பட்ட மாதிரி நம்ம சௌகரியம்போல் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்க்க முடியாதே என்று உள்ளூரக் கொஞ்சம் அதிருப்தியும்கூட. ஆனால், அப்படி ஆகவில்லை.

நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே, சற்றுத் தள்ளி ஒரு டாக்ஸி அருகில் நின்றிருந்த டிரைவர் வேகமாக எங்கள் அருகில் வந்தார். நீங்கள்தானே ரவிபிரகாஷ்?என்று நல்ல தமிழில் கேட்டார். ஆமாம்என்றதும், வாருங்கள், நம்ம காருக்குப் போகலாம் என்று அழைத்துச் சென்றார்.

அவர் பெயர் முனியசாமி. நம்ம சேலத்துக்காரர்தான். ஆனால், அவரின் கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து அவர்கள் குடும்பம் மலேசியாவில்தான் வசிக்கிறதாம். கலகலவென்று பேசினார். மலேசியாவில் இரண்டு நாள் டூர் அனுபவமும் இனிமையாக அமைந்ததற்கு மிக முக்கியமான காரணம் முனியசாமியின் கலகல பேச்சும், இனிமையான சுபாவமும், சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மனத் திருப்திக்கேற்ப முக்கிய இடங்களைப் பொறுமையாக, நிதானமாகச் சுற்றிக் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணமும்தான்.

சிங்கப்பூர் மாதிரி மலேசியா பாதுகாப்பான நாடு இல்லை. உங்க கிட்டே டாலர் இருக்குன்னு தெரிஞ்சா, மணி எக்ஸ்சேஞ்ச் இடத்திலேயோ, டிக்கெட் வாங்குற வரிசையிலேயோ உங்க பின்னாலேயே ஒருத்தன் வந்து நின்னு, யாருக்குமே தெரியாத மாதிரி நீளமான கோணி ஊசியை உங்க கழுத்துல வெச்சு, பணம் நகைகளைக் கேட்பான். நீங்க கத்தவும் முடியாது. கொடுக்கலேன்னா ஊசியை உங்க கழுத்துல சர்ருனு இறக்கிட்டுப் போயிட்டே இருப்பான்… என்கிற ரீதியில், மலேசியப் பயணத்தையே ரத்து செய்துவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குப் பலரும் என்னை பயமுறுத்தியிருந்தார்கள். சுரேஷ் தம்பதியும், கண்ணன் தம்பதியும்கூட, ஆமாம், மலேசியா அவ்வளவு பாதுகாப்பான நாடு இல்லை. திருட்டுப் பசங்க ஜாஸ்தி. கொஞ்சம் ஏமாந்தாலும் உங்க பணத்தை அடிச்சுக்கிட்டுப் போயிடுவான்கள்!என்றுதான் சொல்லியிருந்தார்கள். இன்று காலையில் கிளம்பி வரும்போதும்கூட கண்ணன், அங்கே எங்க தங்கப் போறீங்க? பாதுகாப்பான இடம்தானா? முன்னபின்ன தெரியாத இடத்துல நீங்கபாட்டுக்கு ரூம் போட்டுத் தங்கிடாதீங்க. நல்லா விசாரிச்சு, உங்களுக்குத் தெரிஞ்ச இடமா பார்த்துத் தங்குங்க. அதான் சேஃப்டி!என்று சொல்லி அனுப்பியிருந்தார்.

அதுபற்றி திரு.முனியசாமியிடம், மலேசியா என்ன அவ்வளவு மோசமான நாடா? என்று கேட்டேன். அவரும், ஆமாம், சிங்கப்பூரோடு ஒப்பிடும்போது மலேசியாவில் சட்டம் ஒழுங்கு கொஞ்சம் மோசம்தான்!என்றார். கூடவே சிரித்துக்கொண்டு, சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு அத்தனை கெடுபிடி. பிக்பாக்கெட் அடிச்சா விரலை வெட்டிடுவாங்க. டிராஃபிக் ரூல்ஸை மீறி வண்டி ஓட்டினா, டாலர்கள்ல அபராதம் போடுறது மட்டுமில்லே, லைசென்ஸையே கேன்சல் செஞ்சுருவாங்க. அதனால அங்கே பலரும் தப்பு செய்யப் பயப்படுவாங்க, இங்கே மலேசியாவில் அப்படி இல்லை. உங்க மெட்ராஸ் மாதிரிதான். அதனால சிங்கப்பூர்காரங்க கிட்டே கேட்டா, அப்படித்தான் மலேசியாவைப் பத்தி மிரண்டு, வந்தவங்களையும் பயமுறுத்திடுவாங்க. நீங்க மெட்ராஸ்லேர்ந்துதானே வரீங்க, உங்களுக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியாது! என்றார்.

சரி, டூர் கிளம்புறதுக்கு முன்னாடி… பசிக்குது. எங்கேயாவது ஒரு ஓட்டல்ல நிறுத்தினா, சாப்பிடுவோம்! என்றேன்.

சரஸ்வதி பவன் என்று நினைக்கிறேன். அங்கே டாக்ஸியை நிறுத்தினார் முனியசாமி. தான் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார். அந்த இரண்டு நாள் டூரின்போதும் நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் எங்களுடன் டிபன் சாப்பிடவோ, ஜூஸ், காபி குடிக்கவோ இல்லை. கூடவே, இங்கே உங்க மெட்ராஸ் மாதிரி நினைச்சுக்கிட்டு, ஓட்டல்ல சாப்பிட்டதும் சர்வருக்கு டிப்ஸா ரிங்கெட்ஸ் (மலேசிய டாலர் ரிங்கெட்ஸ் எனப்படுகிறது) எதுவும் வைக்காதீங்க. அது இங்கே சட்டப்படி குற்றம் என்றார்.

சாப்பிட்டுவிட்டு நாங்கள் சுற்றுலாவைத் தொடங்கும்போது மணி மாலை 4.

(பயணம் தொடரும்)

0 comments: