உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 01, 2016

சாவி-100

நானும் என் குடும்பமும் இப்போது சாப்பிட்டுக்கொண்டிருக்கிற சோறு, சாவி எனும் பத்திரிகையுலகப் பிதாமகர் போட்டது. சிறுகதைகள் சில எழுதியதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லாத என்னை, எந்தக் கேள்வியும் கேட்காமல், 'உனக்குப் பத்திரிகையில வேலை செய்யணும்னு ஆசை இருக்கில்லே, அது போதும்!' என்று சொல்லி, தம் சாவி பத்திரிகையில் உதவியாளனாகச் சேர்த்துக்கொண்டு, பத்திரிகையின் நுட்பங்களை தாய்க்குத் தாயாய், தகப்பனுக்குத் தகப்பனாய் இருந்து சொல்லிக் கொடுத்து, என்னைப் பொறுப்பாசிரியர் ஆக்கி அழகு பார்த்தவர் சாவி. பின்னாளில், ஒரு மனஸ்தாபத்தில் அவருடன் கோபித்துக்கொண்டு விலகி, ஆனந்த விகடனில் சேர்ந்த பின்னர், எங்கள் சேர்மன் மதிப்புக்குரிய எஸ்.பாலசுப்ரமணியன் சொன்ன ஒரு தகவல், என் குருநாதர் சாவி மீது முன்னைவிட அளப்பரிய மரியாதையையும் அபிமானத்தையும் பல்லாயிரம் மடங்கு பெருக்கிவிட்டது. "ரவி, விகடனில் வேலை கேட்டு உன் விண்ணப்பம் இங்கே வந்தவுடனே, உன்னைப் பத்தி சாவி கிட்டே விசாரிச்சேன். 'தங்கமான பையன். பொறுப்பான பையன். விட்டுராதீங்கோ! அவன் உங்களுக்குக் கிடைச்ச அஸெட்னுதான் சொல்லுவேன்'னு உன்னைப் பத்தி ஆகா, ஓகோன்னு சொன்னார்" என்றார் சேர்மன். 'அஸெட்' என்பதெல்லாம் பெரிய வார்த்தை. ஆனால், தன்னிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி இன்னொரு பெரிய பத்திரிகையில் பணியில் சேர விண்ணப்பம் போட்டிருக்கும் ஒருவனைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டுமென்றால், அதற்கு எத்தனைப் பெரிய உள்ளம் வேண்டும். அதுதான் சாவி!
வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி அவரின் நூற்றாண்டு. அதையொட்டி, அமரர் சாவியை கௌரவிக்கும் பொருட்டு, ஆனந்த விகடனில் அவரைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளேன். அவர் என்னைத் தூக்கி உட்கார்த்தி வைத்திருக்கும் இந்த உயரமான இடத்துக்கு என்னாலான அணில் பங்கு நன்றிக்கடன் இது!
சாவியின் நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றிய துணுக்குத் தகவல்களை இன்றிலிருந்து தினத்துக்கு 10 தகவல்களாக, வருகிற 10-ம் தேதி வரையில் மொத்தம் 100 தகவல்களை இங்கே பகிரலாம் என்று எண்ணியுள்ளேன்.
முதல் பத்து இங்கே...
1) பத்திரிகையுலகப் பிதாமர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 9.02.2001-ல்.
2) காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார் சாவி.
3) சா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி. பின்னாளில் இதே பெயரில்தான் பத்திரிகை தொடங்கி நடத்தினார். 
4) விஸ்வநாதன் என்னும் பெயரை வழக்கமாகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் எழுதும்போது Viswanathan என்றுதான் எழுதுவார்கள். ஆனால், சாவி சாரோ வித்தியாசமாக தமது பெயரை  w-க்கு பதிலாக v எழுத்தைப் போட்டு, Visvanathan என்றுதான் எழுதுவார்.
5) காஞ்சி மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் சாவி. அதேபோல், புட்டபர்த்தி சாயிபாபாவிடமும் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார்.
6) சாவி சாருக்கு மிகவும் இஷ்ட தெய்வம் என்றால், பெங்களூரில் உள்ள ‘பள்ளத்துப் பிள்ளையார்’தான். எப்போது பெங்களூர் போனாலும், பள்ளத்துப் பிள்ளையாரை தரிசிக்காமல் வரமாட்டார். பள்ளத்துப் பிள்ளையாருக்குப் பெரிய கோயில் எல்லாம் கிடையாது. பெங்களூர் சாலையின் ஓரமாக, ஒரு பிளாட்பாரத்தில் இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்லும்படியான ஒரு பள்ளத்தில் வீற்றிருக்கிறார் பிள்ளையார்.
7) ஆனந்த விகடன், தினமணி கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் சாவி ஆசிரியராகப் பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதற்கு முன்பே விசித்திரன், ஹனுமான், சந்திரோதயம், தமிழன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார் சாவி.
8) பல்லாண்டுகளுக்கு முன்பே ‘வெள்ளிமணி’ என்னும் இலக்கியப் பத்திரிகையை நடத்தியுள்ளார் சாவி. முதன்முதலில் சிறுகதைகளுக்கு வண்ணப்படம் அச்சிட்டு வெளியிட்டது வெள்ளிமணி பத்திரிகைதான்!
9) 1938-ம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிகையில், ஆசிரியர் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சாவி.
10) சாவி தினமணி கதிரிலிருந்து விலகியபோது, நட்பின் காரணமாக சாவி சாருக்காகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார் கலைஞர் மு.கருணாநிதி. அதுதான் ‘குங்குமம்’.
- தொடரும்.


2 comments:

அருமை ரவிபிரகாஷ்! நான் தங்களது கட்டுரையை ’சாவி 100’ விகடனில் படித்தபோதே பயங்கர நெகிழ்ச்சியாக இருந்தது.. எப்பேற்பட்ட மனிதர்!! உங்கள் வார்த்தைகள்
ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க நெகிழ்ச்சியில் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது!
 
Thank you sir.