உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, August 07, 2016

சாவி-100 (VII)

சாவி-100 (ஏழாவது பத்து)

61) குருநாதர் கல்கி மீது எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாரோ, அதே அளவு பக்தியை விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் மீதும் வைத்திருந்தார் சாவி. விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்கும் குணம், நல்லதைக் கண்டால் உடனே கூப்பிட்டுப் பாராட்டும் பண்பு, செய்யும் செயலில் துல்லியம் எனப் பல விஷயங்களில் சாவிக்கு ரோல்மாடலாக இருந்தவர் எஸ்.எஸ்.வாசன்தான். “உழைப்பால் உயர்ந்த மாமேதை அவர்” என்று எஸ்.எஸ். வாசன் குறித்து சிலிர்ப்பும் பிரமிப்புமாகக் குறிப்பிடுவார் சாவி. ‘போலி கௌரவத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கியவர் வாசன்” என்று புகழாரம் சூட்டுவார்.

62) சினிமா, பத்திரிகை என இரட்டைக் குதிரையில் பயணம் செய்தாலும், பத்திரிகைப் பணியில் எஸ்.எஸ். வாசன் எத்தனை தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதற்கு சாவி வர்ணித்த ஒரு சம்பவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. பரங்கிமலையில் ஏதோ படப்பிடிப்பு. குதிரைகளை வைத்து ஏதோ காட்சி எடுக்கப்பட்டுக்   கொண்டிருந்தது. அந்தக் குதிரைகள் மைசூர் மகாராஜாவிடமிருந்து, அவர் போட்ட பல நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, மிகவும் சிரமத்துக்கிடையில் படப்பிடிப்புக்காக வாங்கி வந்திருந்தனர். அதே நேரம், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதை வரிக்கு வரி படித்துத் திருத்திக் கொண்டிருந்தார் எஸ்.எஸ்.வாசன். அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து வாசனின் பி.ஏ. நம்பியார் என்பவரிடமிருந்து பதற்றத்துடன் ஒரு போன்கால்! விஷயம் விபரீதமானது. படப்பிடிப்பில் ஓடிய ஒரு குதிரை, கால் தடுக்கி, இசகுபிசகாக உருண்டு விழுந்து, உயிரை விட்டுவிட்டது. ‘ஐயோ! மைசூர் மகாராஜாவுக்கு என்ன பதில் சொல்வது!” என்ற பதற்றத்தில் போன் செய்கிறார் நம்பியார். போன்காலை அட்டெண்ட் செய்த வாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா... “என்ன நம்பியார்! இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாமா   நீங்க தொந்தரவு செய்யறது? இதை நீங்களே டீல் பண்ணிக்கக் கூடாதா? இங்கே நான் எத்தனை முக்கியமான காரியத்தில் இருக்கிறேன். என்ன, போங்க!” என்று காலை கட் செய்துவிட்டாராம் எஸ்.எஸ்.வாசன். “நாங்கள் ஆடிப்போய்விட்டோம். விலை உயர்ந்த ஒரு குதிரையின் இழப்பு ஒரு பக்கம், படப்பிடிப்பு தடைப்பட்டது ஒரு பக்கம், இதையெல்லாம் தாண்டி மைசூர் மகாராஜாவை சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஒருபக்கம்... இதையெல்லாம்விட பத்திரிகையில் வெளியாகும் ஒரு தொடர்கதையைத் திருத்துவதென்பது மிக முக்கியமான விஷயமாக இருந்திருக்கிறது என்றால்,  பத்திரிகை மீது அவருக்கிருந்த அதி தீவிர ஆர்வத்தை, பக்தியை என்னவென்பது!” என்று வியந்து வியந்து சொல்லியிருக்கிறார் சாவி.

63) திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு எத்தனை நகைச்சுவையாக இருக்கும் என்று அதைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாகவே வாரியாரின் சொற்பொழிவு என்றால், கூட்டம் திரளுவதற்குக் கேட்கவே வேண்டாம். மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஒருமுறை சொற்பொழிவு நிகழ்த்தினார் வாரியார். அதற்கு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார் சாவி. விமர்சனம் வெளியான அடுத்த நாளிலிருந்து வழக்கமாக வரும் கூட்டத்தைவிட மும்மடங்கு கூட்டம் பெருகியது அந்த நிகழ்ச்சிக்கு.

64) வாரியாரின் பிரசங்கங்கள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெறுவதற்கு முழு முயற்சி எடுத்துக்கொண்டவர் சாவி. ‘சத்திய சபா’ என்னும் ஓர் ஆன்மிக சபையை நிறுவி, மைசூர் மகாராஜாவையும் பெருந்தலைவர் காமராஜரையும் வரவழைத்து, கிருபானந்த வாரியாரைக் கொண்டு ராமாயண உபன்யாசத்தை ஒரு ஞான வேள்வி போல் 40 நாட்கள் தொடர்ந்து நடத்தியுள்ளார் சாவி.

65)  வாரியாரின் உபன்யாசத்தைக் கேட்க முன் வரிசையில் அமர்ந்திருந்தார் மைசூர் மகாராஜா. அவர் அருகில் தகுதியுள்ள யாரை அமரச் செய்யலாம் என்று யோசித்த சாவி, எஸ்.எஸ்.வாசனே இதற்குப் பொருத்தமானவர் என்று கருதி, அவர் அருகில் சென்று, ‘நீங்கதான் மகாராஜா பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு கம்பெனி கொடுக்கவேண்டும்’ என்று விநயத்துடன் கேட்டுக் கொண்டார். முதலில் மறுத்த வாசன், பின்னர் சாவியின் வற்புறுத்தலுக்கிணங்க, மகாராஜாவின் அருகில் போய் அமர்ந்தார். சிங்கங்கள் போல் இரு பெரிய மனிதர்களும் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டு  காமிராக்கள் சும்மா இருக்குமா? படங்களாக எடுத்துத் தள்ளின. அப்படியொரு அபூர்வமான போட்டோவை பெரிதாக என்லார்ஜ் செய்து எடுத்துக்கொண்டு போய் எஸ்.எஸ்.வாசனிடம் நீட்டினார் சாவி. அதைக் கண்டு அவர் பெரிதும் மகிழ்வார் என்று நினைத்தார். ஆனால்,  மாறாக மகா கோபம் கொண்டார் வாசன். “இதை நான் என் வீட்டு ஹாலில் மாட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தானே கொண்டு வந்திருக்கிறாய்? இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு மைசூர் மகாராஜாவும் வாசனும் நெருங்கிய சிநேகிதர்கள் போலிருக்கிறது என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தானே? மைசூர் மகாராஜாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவரை எனக்குத் தெரியவும் தெரியாது. நீ சொன்னாயே என்றுதான் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். மற்றபடி, இந்த போலியான கௌரவமெல்லாம் எனக்குத் தேவையில்லை” என்றார் வாசன். வாசனைப் போன்ற ஓர் அபூர்வ மனிதரைக் காண்பது அரிது என்கிறார் சாவி.

66) சாவியுடன் ஒன்றாக  ஆனந்த விகடனில் பணியாற்றியவரும், சாவியின் நண்பரும், எழுத்தாளருமான மணியனுக்காக பெண் தேடி, லலிதா என்ற பெண்ணைப் பேசிமுடித்து,  நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்து, ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் பேசி ராஜேஸ்வரி மண்டபத்தை கட்டணமில்லாமல் பேசி முடித்து, திருமணத்தை தடபுடலாக நடத்திக் கொடுத்தவர் சாவிதான்.

67) சாவி பத்திரிகையில் தனது நண்பரான மணியனை தொடர்கதை எழுதச் செய்து, அவரின் ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் தான் ஒரு தொடர்கதை எழுதினார் சாவி. இரண்டு பத்திரிகை ஆசிரியர்கள் மற்றவரின் பத்திரிகையில் பரஸ்பரம் தொடர்கதை எழுதியது அந்நாளில் ஒரு புதுமையாகப் பேசப்பட்டது. ஏன், இன்றளவிலும்கூட இது ஒரு புதுமைதானே? இதற்கு ஐடியா கொடுத்தவர் சாவிதான்.

68)   ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘கிங் மேக்கராக’ இருந்த காமராஜ் தலையில் விழுந்தது. இதற்காக அவர் டெல்லியில் தங்கியிருந்த நாட்களில், அவரைப் பார்ப்பதற்காகப் பல பெரிய பெரிய புள்ளிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த முக்கியமான நேரத்திலும் காமராஜுடனே இருந்து, அந்தப் பரபரப்பான நிகழ்வுகளைக் கண்டு, கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி. 

69) ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் மீது மிகவும் பிரியம் உள்ளவர் சாவி. “ஒரு முதலாளியாக இல்லாமல், ஒரு தோழனைப் போலத்தான் என்னோடு பழகுவார் பாலு. ஆனாலும், அவர் முதலாளி என்கிற மரியாதை என் உள்ளத்தில் எப்போதுமே இருக்கும். அவருடைய நினைவாற்றலைக் கண்டு பிரமித்திருக்கிறேன். மறதி என்றால் என்னவென்றே தெரியாதவர் பாலு. ஒரு தலையங்கத்தை கமா, ஃபுல்ஸ்டாப்போடு ஒரு முறை நிறுத்தி நிதானமாகப் படித்தால் போதும், கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அதை வரிக்கு வரி அப்படியே திருப்பி ஒப்பிப்பார் பாலு! அசாத்தியமான இந்தத் திறமை வேறு யாருக்குமே வராது. அதேபோல் எந்தவொரு மேட்டரையும் மிகக் கச்சிதமாக எடிட் செய்வார். புதிதாக ஏதேனும் ஐடியாக்கள் கொடுத்தால், ரசித்து உற்சாகப்படுத்துவார். அதை மேலும் சிறப்பாகச் செய்ய ஆலோசனைகள் சொல்வார். என் எழுத்துத் திறமை மேம்பட்டதற்கு பாலுவின் ரசனையும் அவர் தந்த உற்சாகமும்தான் காரணம்!” என்பார் சாவி.

70) ஆசி பெறுவதற்காக காஞ்சி பரமாச்சார்யரை தரிசிக்கச் சென்றபோது, “சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகளோட பையன்தானே நீ? இப்போ நீ விகடன்லே ‘கீ’ போஸ்ட்ல இருக்கிறதா கேள்விப்பட்டேனே! க்ஷேமமா இரு!” என்று புன்னகைத்தபடி சாவியை ஆசீர்வதித்தாராம் மகா பெரியவா. தன் புனைபெயர் சாவி என்பதை மனதில் கொண்டு ‘key post' என்று வார்த்தை விளையாடிய காஞ்சிப் பெரியவரின் சாதுர்யத்தை வியந்து போற்றுவார் சாவி.

(தொடரும்)




5 comments:

யானை விஷயத்தில் மைசூர் மகாராஜாவை அப்புறம் எப்படி சமாளித்தார்கள் என்னும் ஆவலையும் அடக்க முடியவில்லை! அதையும் சொல்லியிருக்கலாமே!

வாசன் அவர்களின் நேர்மை பிரமிக்க வைக்கிறது.
 
Key post சம்பவம் கதிரில் இருந்தபோதா, விக்டனில் இருந்தபோதா?
 
ஓரு எழுத்தாளருக்கு நீங்கள் செய்யும் மரியாதை, தொடரட்டும்.
 
சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!
 
//சாவி பத்திரிகையில் தனது நண்பரான மணியனை தொடர்கதை எழுதச் செய்து, அவரின் ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் தான் ஒரு தொடர்கதை எழுதினார் சாவி.//


இந்த இரு தகவல்களையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
பிறிதொரு சமயம் இதை, விரிவாக விளக்குங்களேன்!!!

.