உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, August 09, 2016

சாவி-100 (IX)

பெருந்தகையாளர் சாவி குறித்து நான் அறிந்த, அவரே என்னிடம் பகிர்ந்துகொண்ட, மற்றும் அவரைப் பற்றி நான் படித்த தகவல்களைத்தான் இங்கே தினம் தினம் தொகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். சாவி சாருக்கு நூற்றாண்டு என்றதும், எனக்கு முதலில் தோன்றிய எண்ணம், அவரைப் பற்றிய 100 தகவல்களைத் தொகுக்க வேண்டும் என்பதுதான். முதல் இரண்டு நாட்கள் எழுதியதும் எனக்கு லேசாக பயம் வந்துவிட்டது - 100 முக்கியமான தகவல்களைத் தொகுக்க முடியுமா என்று. ஆனால், என் குருநாதரின் அருளாலும் ஆசியாலும் அடுத்தடுத்த பத்து தகவல்களைத் திரட்டித் தருவதில் எனக்கெதுவும் சிரமம் ஏற்படவில்லை. யோசிக்க யோசிக்க அவர் பற்றிய தகவல்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கின்றன. ‘ஒன்றில் மிகுந்த ஆர்வமும் தீவிர முயற்சியும் இருந்தால் போதும்; அதைச் செயலாக்குவதற்கு வேண்டிய எல்லாம் தன்னாலே வந்து சேரும்’ என்பார் சாவி. இந்த என் முயற்சியிலும் அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

இனி... சாவி-100-ன் ஒன்பதாவது தொகுப்பு:

81) “நான் பத்திரிகைத் துறையில் அரிச்சுவடி கற்றது ஆதித்தனாரிடம். பிஹெச்.டி முடித்து ஆனந்த விகடனில்!” என்பார் சாவி.

82) சாவி சாரின் கையில் MSV  என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மெல்லிசை மன்னருக்குண்டான அதே எம்.எஸ். இனிஷியல் கொண்டவர்தான் சாவியும். பல நேரங்களில் மெல்லிசை மன்னருக்குப் போகவேண்டிய தபால்கள் இந்த பத்திரிகையுலக மன்னருக்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் உடனுக்குடன் தமது அட்டெண்டர் மூலம் எம்.எஸ்.வி-க்குக் கொடுத்து அனுப்பிவிடுவார் சாவி.

அது ஒருபுறம் இருக்கட்டும். சாவி சாரின் கையில் பச்சை குத்தியிருப்பதன் பின்னணி விவரம் சுவாரஸ்யமானது. வாலிப வயதில், கிராமத்துக்கு வந்த நரிக்குறவக் கும்பல் ஒன்றில் இருந்த ஒரு பெண் மிக அழகாக இருந்ததைப் பார்த்திருக்கிறார் சாவி. அவளைப் பார்ப்பதற்கென்றே அவர்களின் கூடாரம் பக்கம் அடிக்கடி சென்று வருவாராம். ஒருநாள், அவள் பச்சை குத்துவாள் என்றறிந்து, ஆசை ஆசையாக அவளிடம் சென்று, பச்சை குத்திக்கொண்டாராம். இந்தச் சம்பவத்தை சாவி சார் தனது ‘வேதவித்து’ நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

83) சாவிக்கு மிகவும் பிடித்த ஓவியர் கோபுலு. இருவரும் நேரில் சந்தித்தாலோ, போனில் பேசத் தொடங்கினாலோ, ‘ஹலோ’ என்றோ, ‘வணக்கம்’ என்றோ பேசத் தொடங்க மாட்டார்கள். ‘நமஸ்காரா’ என்பார்கள். பக்கத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு இது விசித்திரமாகத் தெரியும். இருவரும் கர்நாடக மாநிலத்தில் சில நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிய பின்னர் தொடங்கிய பழக்கம் இது. 

84) ‘அக்கிரஹாரத்து அதிசய மனிதர்’ என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எழுத்தாளர் வ.ரா. அவரின் துணைவியார் வறுமையால் வாடுவதை அறிந்த சாவி அவர்கள், அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியிடம் பேசி, வ.ரா-வின் துணைவியாருக்கு மாதம்தோறும் ரூ.1000/- பென்ஷன் தொகை வழங்க ஏற்பாடு செய்தார்.

85) முதலமைச்சர் கருணாநிதியின் ஆப்த நண்பராக இருந்தும், தமக்கென பதவியோ பட்டமோ எதுவும் கேட்டுப் பெறாதவர் சாவி. இருப்பினும், கலைஞரின் வற்புறுத்தலுக்கிணங்க சில காலம் இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை வகித்தார்.

86) சாவிக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். பிடித்த நடிகை மனோரமா. நடிகை மனோரமா பலமுறை சாவி இல்லத்துக்கு வந்து, சாவியின் துணைவியார் கையால் விருந்துண்டு சென்றிருக்கிறார்.

87) சாவி அவர்களிடம் தாம் வரைந்த ஓவியத்தை எடுத்து வந்து காண்பித்து, தனக்குப் பத்திரிகையில் வரையச் சந்தர்ப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் ஒரு பெண்மணி. அந்தப் படத்தைப் பற்றி ஒரு குறிப்பு எழுதித் தரச் சொன்னார் சாவி. அப்படியே அந்தப் பெண்மணி எழுதிக் கொடுக்க, அதைப் படித்த சாவி, “உனக்குப் படம் வரைவதைவிட எழுதுவது நன்றாக வருகிறது. அதனால், ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வா! பிரசுரிக்கிறேன்” என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். பின்னாளில் அந்தப் பெண்மணி புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர் வேறு யாருமல்ல; அனுராதா ரமணன்.

88) சாவி பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், தாம் எழுதியவற்றில் அவருக்கே பிடித்த புத்தகங்களாக அவர் குறிப்பிடுவது இரண்டைத்தான்! ஒன்று - நீங்களே எளிதில் யூகிக்க முடியும்; ஆம், காந்திஜியுடன் பயணம் செய்து எழுதிய ‘நவகாளி யாத்திரை’ புத்தகம். இரண்டாவது, தமது மனம் கவர்ந்த பெருந்தலைவர் காமராஜர் பற்றித் தாம் எழுதிய ‘சிவகாமியின் செல்வன்’ நூல்.

89) சாவி நடத்திய ‘வெள்ளிமணி’ பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் சேர்ந்து பணியாற்றி, தன் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் பின்னாளில் ‘நந்திபுரத்து நாயகி’ போன்ற சரித்திர நாவல்களை எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனதோடு, அமுதசுரபி இலக்கியப் பத்திரிகையில் பல்லாண்டுக் காலம் ஆசிரியராகவும் இருந்த ‘கலைமாமணி’ விக்கிரமன்.

90) ஓவியர் கோபுலுவும் சாவியும் ஒருமுறை  அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்களுக்குச் சென்றிருந்தார்கள். எல்லோரா குகைக் கோயிலின் வெளியே பிரமாண்டமான கங்காதேவி சிற்பம்! வானத்திலிருந்து ஆவேசத்துடன் இறங்கி வருவது போன்ற அழகிய கலை நயமுள்ள சிற்பம் அது. ‘வெயிலும் மழையும் இதைச் சேதப்படுத்தாதா? இதை வடித்த சிற்பி குகையின் உள்ளே  இதை நிறுவாமல் வெளியே அமைக்க என்ன காரணம்?’ என்ற கேள்வி இருவரின் மனத்தையும் குடைந்தது. அதே நேரம், பலத்த இடியுடன்  மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. பரவசமான சாவி, “கோபுலு! அங்கே பாருங்கள். ஆகாயத்திலிருந்து நீர் கொட்டுகிறது. அதன் நடுவே கங்கை இறங்கி வருவது போன்ற அற்புதமான சிற்பம்! ஆஹா! இதை இங்கே வடித்த சிற்பி என்னவொரு கலாரசிகனாக இருக்க வேண்டும்!” என்று ரசித்துச் சிலிர்த்தார். ரசனையின் மொத்த உருவம் சாவி சார் என்றால், மிகையில்லை!

(தொடரும்)


3 comments:

90 வது குறிப்பு சிலிர்க்க வைக்கிறது.
 
90வது குறிப்பு! சிற்பியின் ரசனையை சாவி சிலாகித்தது கண் முன் காட்சியாக விரிந்து நம்மையும் சிலாகிக்க செய்கின்றது!
 
மே மாதம் எல்லோரா போனதால் நீங்கள் குறிப்பிட்ட அனுபவம் பெறமுடியவில்லை! :) சாவி குறித்த அனைத்துக் குறிப்புகளும் அருமை!