உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, August 04, 2016

சாவி-100 (III)

த்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்களின் மகள் உமா, தன் அப்பாவின் நூற்றாண்டு நினைவாக, அப்பாவோடு நெருக்கமாக இருந்தவர்களில் சிலரை அழைத்து, ஐலண்ட் கிரவுண்டில் உள்ள ஜிம்கானா கிளப்பில் இன்று ஒரு கெட்-டுகெதர் நடத்தினார். என்னையும் அழைத்திருந்தார். சாவி சார் இன்றில்லை; என்றாலும், அவர்களின் குடும்பத்தார் என்னை நினைவு வைத்திருந்து அழைத்ததானது, சாவி சாரே என்னை அழைத்து ஆசீர்வதித்தது போல் என்னை நெகிழச் செய்தது. எழுத்தாளர் திருமதி சிவசங்கரி, எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியர் திரு.ஜெயராஜ், அவரின் மனைவி திருமதி ரெஜினா ஜெயராஜ், ராணிமைந்தன் என சாவி சாரின் அன்புக்குப் பாத்திரமானோர் சுமார் 20 பேர் மட்டும் கலந்துகொண்ட இனிய குடும்ப விழாவாக அது அமைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு சாவி சாரின் அன்பு மகள்கள் ஜெயந்தி, உமா, ஜெயஸ்ரீ மற்றும் சாவி சாரின் மருமகன்கள் எனப் பலரை இன்று சந்தித்து உரையாடினேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களையெல்லாம் சந்திக்கிறோம் என்கிற நினைவே எழாத வண்ணம், ஏதோ தினம் தினம் பார்த்துப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தவர்கள் போன்று அவர்கள் கலகலப்பாகவும் அன்புடனும் உரையாடியது ஓர் இனிய அனுபவம்!

இனி, சாவி-100  தொடர் பதிவின் மூன்றாவது பத்து:

21) ‘வாஷிங்டனில் திருமணம்’ தவிர,  விசிறி வாழை, இங்கே போயிருக்கிறீர்களா, கேரக்டர், ஆத்திசூடிக் கதைகள், திருக்குறள் கதைகள், பயணத் துளிகள் எனப் பல கதை, கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார் சாவி.

22) ஓவிய ரசனை அதிகம் உண்டு சாவிக்கு. ஓவியர் கோபுலு, ஓவியர் ஜெயராஜ், ஓவியர் மணியம்செல்வன் என ஒவ்வொரு ஓவியரின் ஸ்பெஷாலிட்டி என்ன என்பதை நுணுக்கமாகக் கவனித்து அவர் சொல்லும்போதுதான், அந்த ஓவியத்தில் உள்ள நுட்பமே நமக்குப் புரிய வரும். இல்லையெனில், மேலோட்டமாக ‘அழகாக இருக்கிறது’ என்பதற்கு மேல் எதுவும் தோன்றாது நமக்கு. 

23) ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் சாவி. சின்ன வயதில் அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. எனினும், சென்னை, தம்புச்செட்டித் தெரு, அரண்மனைக்காரன் தெருக்களில் நடந்துபோகும்போது, எந்தக் கடையின் ஸைன்போர்டாவது அழிந்தோ, மங்கலாகவோ காணப்பட்டால், உடனே அந்தக் கடையின் முதலாளியை அணுகி, தான் அந்த போர்டை அழகாக எழுதிக் கொடுக்கட்டுமா என்று கேட்டு, அப்படியே எழுதிக் கொடுத்து, வருமானம் ஈட்டியவர் சாவி. பின்னாளில், முதிர்ந்த வயதில் சீனப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, அங்கிருந்த புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளையும், படம் வரைவதற்கான ஸ்டேண்டு உள்பட டிராயிங் உபகரணங்களையும் வாங்கி வந்து, ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் படம் வரைவதை  ஒரு பொழுதுபோக்காக ஆக்கிக் கொண்டார் சாவி.

24) நம்மில் பலரிடம் டைமிங் சென்ஸ் இல்லாதது குறித்து மிகவும் வருத்தப்படுவார் சாவி. எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பதற்கு, தானே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வார்.  அவர் சொல்வார்... “பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு வந்தாதான் அது பிள்ளையாரு; மறுநாள் வந்தா வெறும் களிமண்ணுதான்!” நேரத்தின் முக்கியத்துவத்தை இதைவிட யாராலும் பொட்டில் அடித்தாற்போல் சொல்லிப் புரிய வைக்க முடியாது. 

25) வாழ்க்கையில் பல நெருக்கடிகளையும், துயரங்களையும், அதிர்ச்சிகளையும் சந்தித்தவர் சாவி. ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் அவர் பொதுவெளியில் அதிகம் பேசியதில்லை. “ஆண்டவனுக்குத் தெரியும், இவனுக்கு எதையும் தாங்கிக்கிற சக்தி உண்டுன்னு. அதான், எனக்கே மீண்டும் மீண்டும் பெரிய பெரிய துக்கங்களைக் கொடுக்கிறான்!” என்பார். தமது துயரங்களைக் கரைக்கும் வடிகாலாக பத்திரிகைப் பணியை பாவித்தார் சாவி. பத்திரிகை அவர் மூச்சு! பத்திரிகை அவர் தாய் மடி!

26) ஒரு பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும், எப்படி நடத்தக் கூடாது என்பதை சாவி சொல்லும் அழகே அழகு! “பத்திரிகையை சிராத்தம் மாதிரி நடத்தக் கூடாது. அரிசியும் வாழைக்காயும் கொடுத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ஒவ்வொரு இதழைக் கொண்டு வருவதையும் ஒரு கல்யாணம் மாதிரி பண்ணணும். பாத்திரம், துணிமணி, நகைகள் எனப் பார்த்துப் பார்த்து வாங்குகிற மாதிரி, விஷயங்களைத் தேடித் தேடிச் சேகரிக்கணும். மேள தாளத்துக்கு, மண்டபத்துக்கு ஏற்பாடு பண்ற மாதிரி பத்திரிகையின் லே-அவுட், ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சுப் பண்ணணும்.” சாவி சாரின் இந்த அட்வைஸ், இன்றைய ஜர்னலிஸ்டுகளுக்கும்கூட ஒரு வேத வாக்கு!

27) ஆனந்த விகடன், குமுதம், கல்கி என மூன்றே மூன்று பத்திரிகைகள் மட்டுமே வாசகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அந்தக் காலத்தில், வெறும் பத்தாயிரம் பிரதிகள் மட்டுமே விற்றுக்கொண்டிருந்த தினமணி கதிர் பத்திரிகைக்குப் பொறுப்பேற்று, அதில் பல புரட்சிகள் செய்து, அதன் விற்பனையை கிடுகிடுவென இரண்டரை லட்சம் வரை உயர்த்தியவர் சாவி.

28) எழுத்தாளர் சுஜாதாவை ஒரு பெண் எழுத்தாளர் என வாசகர்கள் நினைத்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், பெரிய சைஸ் தினமணி கதிரில் ‘நில், கவனி, தாக்கு!; என்னும் சுஜாதாவின் தொடர்கதைக்கு, பெரிய மீசை வைத்த  சுஜாதாவின் முகத்தை  ஒரு முழுப்பக்க அளவுக்குப் பிரசுரித்து, அவரை வாசகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் சாவி.

29) ’இங்கே போயிருக்கிறீர்களா?’ கட்டுரைகளில் சாவி ஒரு புதுமையைச் செய்தார். வாசகர்களையும் தன்னோடு பயணம் அழைத்துக்கொண்டு போய், அங்கேயெல்லாம் சுற்றிக் காட்டும் விதமான நேர்முக வர்ணனையில் அமைந்த கட்டுரைகள் அவை. இதே உத்தியைப் பின்னாளில் பல எழுத்தாளர்கள் கையாண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவி.

30) ஓர் எழுத்தாளரின் படைப்புகள் ஒரு பத்திரிகையில் வெளியானால், அதைப் புத்தகமாக வெளியிடும் உரிமையும் அந்தப் பத்திரிகைக்குதான் உண்டு என அன்றைக்கு நடைமுறையில் இருந்த நிலையை மாற்றி, எழுத்தாளர்களுக்கே அவர்களின் படைப்புகளுக்கான உரிமை உண்டு எனப் போராடிப் பெற்றுத் தந்தவர் சாவிதான். “அதெப்படி..? கோஷா ஆஸ்பத்திரியில் ஒருத்தி பிள்ளை பெற்றுக் கொண்டால், அந்தக் குழந்தை அந்த ஆஸ்பத்திரிக்குதான் சொந்தம் என்று ஆகிவிடுமா என்ன?” என்று சாவி வைத்த வாதத்தில் கச்சிதமான உதாரணமும் இருந்தது; ரசிக்கத்தக்க நகைச்சுவையும் இருந்தது; மறுக்கமுடியாத நியாயமும் இருந்தது!

(தொடரும்) 


4 comments:

எவ்வளவு தரம் படித்தாலும் சுவாரஸ்யம் குறையாது. தொடர்கிறேன்.
 
சுவாரஸ்யம். தொடருகிறேன்
 
‘பழைய கணக்கை’ இவ்வளவு பத்திரப் படுத்தி எழுத்தில் மீட்பதற்கு மிகத் திறன் வேண்டும். நீங்கள் அதைச் செய்கிறீர்கள்... என்பதால் இன்னும் சாவி கொடுத்து உங்களை முடுக்கிவிட வேண்டியதுதான்... ஆகவே, சூப்பர் சார்!

 
Thank you sir for the post.