உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, August 02, 2016

சாவி-100 (II)

சாவி-100 வரிசையில் இரண்டாவது பத்து இங்கே...

11) வெள்ளிமணி, சாவி பத்திரிகைகள் தவிர, மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ் ஆகிய பத்திரிகைகளையும் சாவி சொந்தமாகத் தொடங்கி நடத்தியுள்ளார். இவற்றில் ‘திசைகள்’, பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ‘பூவாளி’, ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையான தமிழ்ப் பத்திரிகையாக விளங்கியது. சாவி தொடங்கிய விசிட்டர் லென்ஸ் பத்திரிகைதான் இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. இதன் ஆசிரியராக இருந்தவர்தான் பின்னர் ‘விசிட்டர் அனந்த்’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

12) சாவி ‘ஆன்ட்டெனா’ என்றொரு பத்திரிகை தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்தார். சினிமா பத்திரிகைகள் இருப்பதுபோல் முழுக்க முழுக்க டி.வி-யை மையமாகக் கொண்டு இந்தப் பத்திரிகையை நடத்த அவர் எண்ணியிருந்தார். சாவி பத்திரிகையில் தொடர்ந்து விளம்பரங்களும் கொடுத்து வந்தார். பல காரணங்களால், அதை அவரால் தொடங்க இயலாமல் போனது. என்றாலும், மக்களின் ரசனையை பல்லாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக உணர்ந்து, அதற்குத் தீனி போடும் விதத்தில் பத்திரிகை நடத்த வல்லவர் சாவி என்பதற்கான அத்தாட்சி இது என்பதில் சந்தேகம் இல்லை.

13) நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான்.

14) ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ பல புதுமைகளை உள்ளடக்கியிருந்தது. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட... என்கிற எழுத்துக்களையே அத்தியான எண்களாக்கி, 11 வாரம் இந்தத் தொடர்கதையை எழுதினார் சாவி. எந்த வாரமும் இதன் எழுத்தாளர் பெயர் வெளியிடப்படவே இல்லை. கடைசி அத்தியாயத்தின் இறுதியில்தான் மிகச் சிறியதாக ‘சாவி’ என்ற பெயர் காணப்பட்டது. வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.

15) தேசப்பிதா மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டபோது அவருடனே நடைப்பயணம் செய்து, அந்த அனுபவங்களை ‘நவகாளி யாத்திரை’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி.

16) எவரையும் மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை. தன் ‘சாவி’ பத்திரிகையில் வெளியான படைப்புதான் என்றில்லை; வேறு ஒரு பத்திரிகையில் நல்ல சிறுகதையையோ, ஓவியத்தையோ கண்டாலும், உடனே அவரைக் கூப்பிட்டுப் பாராட்டுவார் சாவி. அந்தப் பாராட்டு உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

17) கர்னாடக இசைக்குப் பரம ரசிகர் சாவி. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி என்றால் உயிர். கர்னாடக இசைப் பாடகர் மதுரை சோமுவைத் தமது இல்லத்துக்குப் பலமுறை வரவழைத்து, கச்சேரி செய்யச் சொல்லி அனுபவித்து ரசித்து, அவரை கௌரவப்படுத்தி அனுப்பியுள்ளார்.

18) இயக்குநர் கே.பாலசந்தர், சாவியின் ஆப்த நண்பர். இருப்பினும், இயக்குநர்களான மணிரத்னம், பாரதிராஜா இருவரின் திறமையையும் மிகவும் போற்றினார். ஒருமுறை, ‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?’ என்ற கேள்விக்கு, “அன்று, பாலசந்தர்; இன்று, மணிரத்னம்; என்றும் பாரதிராஜா’ என்று பதில் சொன்னார். ”இந்த பதிலைப் படித்தால், உங்கள் நண்பர் பாலசந்தருக்கு உங்கள் மேல் வருத்தம் உண்டாகாதா?” என்று கேட்டேன். “கட்டாயம் வருத்தப்பட மாட்டார். ஏனென்றால், அவர் என் நண்பர்!” என்றார் சாவி அழுத்தமாக.

19) சரித்திரக் கதை, கவிதை என்றால் சாவிக்கு அலர்ஜி!

20) சாவிக்கு மிகவும் பிடித்த ஊர் - சிங்கப்பூர். அதேபோல், சாவியை மிகவும் கவர்ந்த விஷயம் ஜப்பானியர்களின் பர்ஃபெக்‌ஷன். தாமும் அதேபோன்று பர்ஃபெக்‌ஷனாக நடந்துகொள்வார்.

(தொடரும்)