உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, November 16, 2009

ஆண்களுக்குக் காலமில்லை!

தாய்மை, பெண்மை, புனிதம் என்கிற வார்த்தைகளெல்லாம் இன்று அர்த்தம் இழந்துவிட்டன. செய்தித் தாளைப் பிரித்தால், கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற கணவன்மார்களின் எண்ணிக்கையைவிட, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிமார்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. கள்ளக் காதலுக்காகப் பெற்ற மகனையே துண்டுத் துண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்திருந்த பெண்ணைத் தாய் என்று சொல்லவே நாக்கூசுகிறது. தாய் என்றுகூட வேண்டாம்; அந்த நாய் பெண் என்று சொல்லவும் அருகதை அற்றவள்.

காதலிக்குக் கொடுப்பதற்காகத் தாயின் மார்பைப் பிளந்து, இதயத்தை எடுத்துக்கொண்டு சென்ற மகன் கல் தடுக்கி விழுந்தானாம். அப்போது அந்தத் தாயின் இதயம் பதறி, “ஐயோ, மகனே! பார்த்துப் போப்பா!” என்றதாம். முப்பது வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையைப் படித்தபோது விழுந்து விழுந்து சிரித்தேன். ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்பது என்னைச் சிரிக்க வைத்த வாக்கியங்களில் ஒன்று. தாய்மை என்றும், சொந்த ரத்தம் என்றும் சொல்வதில் எல்லாம் எனக்கு அந்நாளிலிருந்தே நம்பிக்கை இருந்ததில்லை. பிறந்ததிலிருந்தே ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதில் உண்டாகிற நேசம் தாய்க்கும் பொது; தந்தைக்கும் பொது; யாரோ ஒரு வளர்ப்புத் தந்தைக்கும் பொதுதான்! சொந்தத் தாயின் பாசம் உசத்தி, வளர்ப்புத் தாயின் பாசம் மட்டம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாசம் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அனைவரின் பாசமும் ஒன்றே! பிரத்யேகமாக தாய்ப் பாசம் என்ற ஒன்றை நாமாகக் கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.

அது போல்தான் பெண் என்ற வரையறைக்குள் நாமாக, அதாவது ஆண்களாகச் சில நல்ல உருவகங்களை, குணங்களைக் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். அமைதியே வடிவானவள் பெண், அன்பே உருவானவள் பெண், அடக்கம் நிறைந்தவள் பெண், பொறுமையின் சிகரம் பெண், சக்தி வடிவானவள் பெண், சாந்த சொரூபிணி பெண் என ஆணிடம் இல்லாத அத்தனை நல்ல குணங்களையும் கொண்டவள் பெண் என்று எண்ணி வந்திருக்கிறோம். ‘அப்படியெல்லாம் இல்லை; நாங்கள் ஆண்களைவிட மட்டம்’ என்று நிரூபித்துக் கொள்வதில் சமீப காலமாகச் சில பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பெண் விடுதலை. ஏதோ நாட்டில் உள்ள பெண்களின் காலில் எல்லாம் இரும்புக் குண்டைக் கட்டி, காராக்கிருகத்தில் தள்ளியிருப்பது போல!

உண்மையில் ஆண்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். பெண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஆண்கள், சாமியாராக ஓடிப் போன ஆண்கள், கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்த ஆண்கள், பெண்கள் ஊதிப் பெரிதாக்கிய சண்டையால் ஒருவரோடு ஒருவர் வெட்டிக் கொண்டு செத்துப் போன ஆண்கள் என்று பட்டியலிட்டால் அதற்கு முடிவே இராது.

சமீபத்தில் ஒரு வலைப்பூவில் படித்தேன். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய ஒரு பெண் அங்குள்ள ஆண்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பணியை உதற நேர்ந்ததாம். பின்னர், தொலைக்காட்சியில் பணியாற்றச் சென்றாராம். அங்கே வேறு விதமான நிலைமை. பெண்களின் அழகு மட்டுமே அங்கே தகுதியாக இருந்ததாம். முட்டாள் பெண்களே அந்த வேலைக்குப் போதுமானதாக இருந்ததாம். மொத்தத்தில், பெண்களின் முன்னேற்றம் ஆண் வர்க்கத்திற்கே பிடிக்கவில்லை என்பதாக அந்தப் பதிவு முழுக்கப் பிதற்றல்!

(இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஆண்கள் ஒட்டு மொத்தப் பெண்களையும் எதிரியாகப் பாவித்துப் பேசுவதில்லை. ஒரு சில பெண்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால், பெண்ணீயம் பேசும் பெரும்பாலான பெண்கள் ஒட்டு மொத்த ஆண்களையுமே ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டை’ போலத்தான் நினைக்கிறார்கள்; கடிக்கிறார்கள்; குதறுகிறார்கள்!)

உண்மையில், பெண்களும் சேர்ந்து வேலை செய்யுமிடத்தில் ஆண்கள் பயந்து பயந்துதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. முன்பு நான் வேலை செய்த ஓர் அலுவலகத்தில், ‘ட’னா போன்று வளைந்து திரும்புகிற இடத்தில் ஒரு பெண் பணியாளர் அமர்ந்திருப்பார். அந்த இடத்தைக் கடக்கிறபோது தவிர்க்கவே முடியாமல் எவரொருவர் பார்வையும் அவர் மீது பதியத்தான் செய்யும். அப்படித்தான் என் பார்வையும் யதேச்சையாகப் பதிந்தது. ஒருநாள் நான் அப்படிக் கடக்கிறபோது, சட்டென்று அந்தப் பெண் எழுந்து நின்றார். “கொஞ்சம் நில்லுங்க” என்றார். நின்றேன். ஏதோ சந்தேகம் கேட்கப் போகிறார் என்றுதான் சத்தியமாக நினைத்தேன். “அதென்ன, போறப்ப வர்றப்ப எல்லாம் என்னை முறைச்சு முறைச்சுப் பார்த்திட்டுப் போறீங்க? உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டிருக்கீங்க? இனியொரு தரம் பார்த்தீங்க, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது; சொல்லிட்டேன்!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். எனக்குக் கை காலெல்லாம் ஆடிப்போய்விட்டது. அதன் பிறகு, அந்த இடத்தைக் கடக்க நேர்ந்தால் கழுத்து வலிக்காரன் மாதிரி தலையை எதிர்ப்புறமாகத் திருப்பிக் கொண்டுதான் கடப்பேன். அடுத்த சில மாதங்களில் அந்தப் பெண் எவனோடோ ஓடிப் போய்விட்டது.

அப்பழுக்கற்ற பழம்பெரும் அரசியல்வாதியின் பேத்தி ஒருத்தி, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருக்கும் மேலதிகாரிக்கும் தொடர்பு இருந்திருக்கும்போல! பணக் கையாடல் விஷயமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அந்த மேலதிகாரியை அந்த நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். சில நாட்களில் அந்தப் பெண், அடுத்து அந்தப் பொறுப்புக்கு வந்த நல்ல மனுஷன் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டை வீசியது. அவர்தான் அந்த மேலதிகாரியின் டிஸ்மிஸுக்குக் காரணம் என்பது அவர்களின் எண்ணம். அதோடு மட்டும் விடவில்லை; இன்னும் இருவர் மீதும் அதே போன்ற பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு. இதன் அட்டூழியத்தைத் தாங்க முடியாமல் நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கும் கல்தா கொடுத்து அனுப்பிவிட்டது. அபாண்டமாகப் போடப்பட்ட அந்த வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது.

‘பாலியல் பலாத்காரம்’ என்பது இன்று வேலைக்குப் போகும் சில (கவனிக்கவும்: சில) பெண்களுக்கு ஓர் அருமையான ஆயுதமாகிவிட்டது. எனக்குத் தெரிந்து எத்தனையோ இடங்களில், அலுவலக வேலையாக எந்தவித அறிவோ, அனுபவமோ இல்லாத பெண்கள் தங்கள் மேலதிகாரியைக் கைக்குள் போட்டுக்கொண்டு, கை நிறையச் சம்பளமும், கூடுதல் பெர்க்ஸும் அனுபவிக்க, நன்கு உழைக்கக்கூடிய அப்பாவி ஆண்கள் மத்தியானம் சாப்பாட்டுக்கு எவர்சில்வர் டப்பாவில் தயிர் சோறு கட்டி எடுத்துக்கொண்டு, பஸ்ஸுக்கு சில்லறை இருக்கிறதா என சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்கொண்டு அலுவலகத்துக்கு போய் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிட்ட சில பெண்கள் மேலதிகாரியிடம் குழைகிற வரையில் குழைந்து, வேண்டிய மட்டும் வாங்கிச் சேர்ப்பார்கள். என்றைக்காவது அவர் முரண்டு பிடித்தால், இருக்கவே இருக்கிறது ‘பாலியல் பலாத்கார’ ஆயுதம்! அதன் பின் அவர் கேஸ், அது இது என்று அல்லாட வேண்டியதுதான். இல்லையென்றால், ஒரு பெரிய தொகையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துச் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டியதுதான். இந்தப் பெண்களுக்கு அடுத்து வேறு ஒரு அலுவலகமும், அங்கே ஒரு இளிச்சவாய் அதிகாரியும் காத்திருப்பார்கள்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன்; திருமணம் ஆகாமல் ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்கிற கலாசாரம் சென்னையிலும் வேகமாகப் பரவி வருகிறதாம்! ‘தாலி என்பது அடிமை வேலி; அதை உதறுவோம். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிப்போம்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்த அனாசாரத்துக்கு - இல்லை, கலாசாரத்துக்கு சில அறிவுஜீவிப் பெண்களும் தயாராகிவிட்டார்களாம்.

பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக்குப் போகும் பையனைக் கவனித்திருக்கிறீர்களா? சிகரெட் பிடிக்கப் பழகுவான்; நண்பர்களுடன் கெட்ட வார்த்தை பேசத் தொடங்குவான்; அடுத்தவரை மரியாதையில்லாமல் பேசுவதில் இன்பம் காண்பான். அதாவது, இத்தனை நாள் அவன் பெற்றோருக்கு அடிமையாக, ஆசிரியர்களுக்கு அடிமையாக இருந்துவிட்டானாம். இப்போது அவன் கட்டுப்பாடுகள் இல்லாத பெரிய மனிதனாகிவிட்டான். அந்தச் சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடுவது என்று அவனுக்குத் தலைகால் புரியவில்லை. அதன் பிரதிபலிப்புதான் மேலே சொன்ன நடவடிக்கைகள் எல்லாம்!

பெண் விடுதலை பேசும் பெண்களில் பெரும்பாலோர் அந்தப் பையனைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். தன்னைக் கேட்பார் இல்லை என்கிற திமிர்த்தனம். ஒரு நாடு என்றால், நல்லதொரு தலைவனின் வழி நடக்க வேண்டும். ஒரு குடும்பம் என்றால், அந்தக் குடும்பத்தின் தலைவன் வழி நடக்க வேண்டும். தலைவன் சரியில்லை என்றால், அந்தக் குடும்பத்தைத் தலைவி வழி நடத்தவோ, அல்லது தலைவனை மாற்றவோ செய்யலாம். ஆனால், நல்ல தலைவன் சொற்படி கேட்டு நடப்பதையே அடிமைத்தனம் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது? அப்படியென்றால் மாணவர்கள் ஆசிரியர் பேச்சைக் கேட்டு நடப்பது, பிள்ளைகள் அப்பா அல்லது அம்மாவின் பேச்சைக் கேட்டு நடப்பது, வாகன ஓட்டிகள் டிராஃபிக் கான்ஸ்டபிள் சொல்கிற வழி நடப்பது எல்லாம்கூட அடிமைத்தனம்தான்!

‘திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்கிற’ கலாசாரத்துக்குப் பல ஆண்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தரத் தயாராக இருக்கிறார்கள். பின்னே, எதற்கு குடும்பம், பெண்டாட்டி, குழந்தை குட்டியென்று அவதிப்பட வேண்டும்? எல்லாம் சுமை! ஒரு பெண்ணோடு ஒன்றாகச் சில நாட்கள் வாழ்ந்தோமா, பின்னர் ‘மனம் ஒத்துப் போகவில்லை; இருவரின் எண்ணங்களும், கருத்துக்களும் முரண்படுகின்றன. எனவே, நட்புரீதியாகப் பிரிந்துவிட்டோம்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த பெண்ணோடு மீண்டும் ‘திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதில்’ உள்ள சுகம் தாலி கட்டிய திருமணத்தில் கிடைக்குமா?

சொல்ல முடியாது. இவன் மனதில் இப்படிக் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பான். அந்தப் பெண் கில்லாடியாக இருந்தால், ‘பாலியல் பலாத்கார’க் குற்றச்சாட்டையோ, தன்னை ‘நம்ப வைத்து ஏமாற்றிய’ குற்றச்சாட்டையோ இவன் மீது வீசி, இவனை ஒரு வழி பண்ணலாம்! அதையும் இந்த உலகம் நம்பும்; ஏற்கும். இவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க ஆயுள் முழுக்கப் போராடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இது பெண்கள் உலகம்; ஆண்களுக்குக் காலமில்லை!
.

22 comments:

சார்... மூனு தடவை ஒரே மூச்சில் படித்தாகி விட்டது.
புரியாததால் இல்லை. கருத்துக்கள் பிடித்ததால், மீண்டும் மீண்டும் படிக்க வைத்து விட்டது !

தாய்ப் பாசம் எல்லாம் பல நேரங்களில் பேத்தல் தான். இதை திருவள்ளுவரே சொல்கிறார், 'அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன் போலே நோக்கப் படும்'.

சுதந்திரம் என்பதை பெறுவதற்கான முதல் தகுதியே கீழ் படிவதுதான். இதில், ஆண் பெண் பேதம் கூட இல்லை. இந்த முதல் தகுதியை இழந்தவர் வேண்டுமானால் போலியான சுதந்திரத்தை அனுபவிக்கலாம்.பெண்களுக்கான வரைமுறைகள், அடிமைத்தனம் அல்ல என, பெண்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ? 'பெண்ணீயம்' என்பது ஆண்களை எதிர்ப்பது மட்டும்தான் என்று புரிந்து வைத்து இருக்கிறார்கள் சில பெண்கள்.
இந்தக் காலங்களில் பெண்களை விட ஆண்கள் தான் மிக கவனமாக இருக்க வேண்டும் போல!

மிக மிக அருமையான பதிவு சார் !!!!
 
நீங்கள் சொல்வதில் பெரும்பாலும் உண்மையே..
 
இதுக்கு பேர் ஆணியம்னு சொல்லலாமா சார்? :)
 
யதார்த்தத்தை பிரதிபலிக்க வைத்த பதிவு.

ரேகா ராகவன்.
 
சுதந்திரம் பற்றிய விளக்கம் அருமை.
 
அருமையாண கட்டுரை! வரதட்சணை கொடுமை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்காக இயற்றப்பட்டச்சட்டத்தை சில கெடுமதிப்பெண்கள் தவறாகப்பயன்படுத்தி பல குடும்பங்களை நாசப்படுத்தி நடுத்தெருவிற்கு கொண்டுவருகின்றனர்... இதுபோல் பொய் புகாரினால் சுமார் 1,40000 ஆயிரம் பெண்கள் மட்டும் பொய்வழக்கில் விசாரனைக்கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்படுகின்றனர்... சுமார் 20,000 அயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது.

வரதட்சணை கொடுமை சட்டத்தினால் பாதிக்கப்பட்டவன்

தமிழ். சரவணன்
 
கருத்து ஏதும் சொன்னால் ராத்திரிக்கு சோறு கிடைக்காது என்பதால் பதிவு முழுவதும் படித்தேன் என்பதை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

:)
 
நல்ல பதிவு!
எதற்கும் முதுகு ஜாக்கிரதை
 
பின்னூட்டம் நம்பர் 2

இதன் தொடர்ச்சியாக ஒரு கடிதம் எழுதலாமா எனப் பண்டிதர் ஒருவர் யோசிப்பதாகத் தகவல்
 
Very Good Post
 
பொன்னியின் செல்வன்:
தங்களின் பின்னூட்டமே ஒரு பதிவுக்கு உண்டான நேர்த்தியோடு இருக்கிறது. நன்றி!

பட்டர்ஃப்ளை சூர்யா:
பெரும்பாலும் உண்மை என்றால், உண்மை இல்லாத வரிகளைச் சுட்டிக் காட்டினால்தானே எனக்குப் புரியும்? மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி! அது இருக்கட்டும், தாங்கள் பதிவு எழுதி நீண்ட நாளாகிறதே, ஏன்? ஒவ்வொரு முறையும் தங்கள் வலைப்பூவைத் திறந்து பார்த்து ஏமாறுகிறேன்.

பீர்:
இயம் எல்லாம் பெண்களுக்குத்தான். தாய்மை உண்டு; தந்தைமை கிடையாது. தாய்நாடு, தாய்மொழி எல்லாம் உண்டு; தந்தை நாடு, தந்தை மொழி எதுவும் கிடையாது. அது போல் பெண்ணியம் உண்டு; ஆணியம் கிடையாது. ஆனியன் வேண்டுமானால் கிடைக்கும்! :-)

ரேகா ராகவன்:
மகிழ்ச்சியும் நன்றியும்!

கே.பி.ஜனார்த்தனன்:
சுதந்திரமாக வெளியிட்ட தங்கள் மனம் திறந்த பின்னூட்டத்துக்கு நன்றி!

தமிழ்.சரவணன்:
தங்கள் பின்னூட்டத்தில் கொடுத்திருந்த புள்ளிவிவரங்கள் என் பதிவுக்கு வலு சேர்க்கின்றன. மகிழ்ச்சியும் நன்றியும்! தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரி என்னைத் திடுக்கிட வைத்தது! நலமே விளைக!

மங்களூர் சிவா:
அப்படித்தான் இருக்க வேண்டும். இது பெண்கள் உலகம். ஆண்களுக்குக் காலமில்லை! :-))

லதானந்த்:
எச்சரிக்கைக்கு நன்றி! :-)
உடனே அந்தப் பண்டிதரைக் கடிதம் எழுதச் சொல்லுங்கள். அவரது கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

அன்பரசு செல்வராசு:
\\Very Good Post// மிக்க நன்றி!
\\Good Post// நன்றி! :-))
 
சி.எஸ்.கிருஷ்ணா, பப்லு, ராம்குமார், தருண், கார்த்திக்6, இவன்சிவன், பொன்னியின் செல்வன், அனுபகவான், தமிழ்.சரண், கே.முரளி, இன்பதுரை, வரதராஜ், பி.மொஹம்மத், வெங்கட்நாகராஜ், கே.பி.ஜனா, வில்லேஜ்பாய், அசோக்92, கிருபாநந்தினி ஆகியோர் தமிழிஷ்-ஷில் இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!
 
முகம் தெரியா நண்பர் சி.எஸ்.கிருஷ்ணா என் பழைய பதிவுகள் சிலவற்றை எடுத்து இப்போது தமிழிஷ்-ஷில் இணைப்புக் கொடுத்துள்ளார். அவற்றைப் படித்துவிட்டும் உடனடியாக எனக்குப் பல பின்னூட்டங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இதன்மூலம் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் பரந்த நோக்கில், தான் படித்து ரசித்த என் பதிவுகளைத் தானே முன்வந்து தமிழிஷ்ஷில் பதிவிட்டு, இதுவரை அவற்றைப் படிக்காதவர்களையும் படிக்கச் செய்த திரு.சி.எஸ்.கிருஷ்ணாவுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ithnai penneeyam enRu solvathai vida,penkaLin thaaymai unarivu kurainthu Alumai unarvu valarnhthuvittathu ena sollalaam.
 
சூப்பர். யாரும் எழுத தயங்குறத நீங்க எழுதிருக்கீங்க. நன்று.

முன்னாள் அமைச்சர் செம்மலை மருமகள் வரதட்சணை வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனது பதிவு இங்கே
http://pinnokki.blogspot.com/2009/10/blog-post_03.html
 
என்னா வாத்தியாரே எல்லாத்தையும் சொல்லிபுட்டு நடிகைங்கள விட்டுட்டியே, சரி அடுத்த பதிவு போடலாமுன்னு இருந்தியாக்கும். நான் கூட வேளச்சேரில ஒரு பெட்டி கடை முன்னாடி கால் சென்டர் பொண்ணுங்க தம் அடிக்கிறத பார்த்தேன். இதுங்க எதுக்கும் சலச்சதில்ல. தாலியை கலட்டி டிவி சோவுல காண்மிக்குதுங்க.
அதெல்லாம் விடு ஏடாகூடமான கதைகள் எழுதுன புண்ணியவான நீ நான் அதை படிச்சிருக்கேன்.படா சோக்கா இருந்த்துபா.
 
//(இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஆண்கள் ஒட்டு மொத்தப் பெண்களையும் எதிரியாகப் பாவித்துப் பேசுவதில்லை. ஒரு சில பெண்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால், பெண்ணீயம் பேசும் பெரும்பாலான பெண்கள் ஒட்டு மொத்த ஆண்களையுமே ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டை’ போலத்தான் நினைக்கிறார்கள்; கடிக்கிறார்கள்; குதறுகிறார்கள்!) //
ஒட்டுமொத்த பெண்கள் அல்ல சில பெண்கள் என குறிப்பிட்டது, உண்மையின் வெளிப்பாடு உங்களின் எழுத்தும் உண்மையின் உரைகல். இப்படி பட்ட பெண்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்ற ஒரு சட்டம் இயற்றும் நாள் தான் பாதிக்கபட்ட, பாதிக்கப்படும், பாதிக்கப்பட இருக்கும் ஆண்களுக்கு சுதந்திர தினம்
ஆக்கப்பூர்வமான கட்டுரை... அனைத்து ஆண்கள் சார்பாகவும் நன்றி!...
 
//(இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஆண்கள் ஒட்டு மொத்தப் பெண்களையும் எதிரியாகப் பாவித்துப் பேசுவதில்லை. ஒரு சில பெண்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால், பெண்ணீயம் பேசும் பெரும்பாலான பெண்கள் ஒட்டு மொத்த ஆண்களையுமே ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டை’ போலத்தான் நினைக்கிறார்கள்; கடிக்கிறார்கள்; குதறுகிறார்கள்!) //
ஒட்டுமொத்த பெண்கள் அல்ல சில பெண்கள் என குறிப்பிட்டது, உண்மையின் வெளிப்பாடு உங்களின் எழுத்தும் உண்மையின் உரைகல். இப்படி பட்ட பெண்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்ற ஒரு சட்டம் இயற்றும் நாள் தான் பாதிக்கபட்ட, பாதிக்கப்படும், பாதிக்கப்பட இருக்கும் ஆண்களுக்கு சுதந்திர தினம்
ஆக்கப்பூர்வமான கட்டுரை... அனைத்து ஆண்கள் சார்பாகவும் நன்றி!...
 
திருமதி ஜெயசீலன்:
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

பின்னோக்கி:
கருத்துக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி!

ஜகதீஸ்வரன்:
பதிவைப் பற்றிய பாராட்டுக்கு நன்றி!
‘ஏடாகூட கதைகள்’ பற்றிய பாராட்டுக்கு மிக்க நன்றி!!

இளவழுதி வீரராசன்:
முதல் வருகையிலேயே நீளமான பின்னூட்டம் இட்டுப் பாராட்டியதற்கு மிக மிக நன்றி!
 
டி க்யூ-டி க்யூ 12, மொஹம்மத் ஃபெரோஸ், வள்ளிபுரம், பின்னோக்கி ஆகியோரும் இந்தப் பதிவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து தமிழிஷ்-ஷில் ஓட்டு அளித்திருக்கிறார்கள். இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
 
நல்ல பதிவு சார். நீங்கள் சொல்கிற சில விஷயங்கள் எல்லாம் ரொம்பவே கரெக்ட்.
 
நன்றி சித்ரன்!