உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, May 30, 2011

திக்... திக்... திகார்!

தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை, திகார் சிறை. புது டெல்லியின் மேற்குப் பகுதியில், சாணக்கியபுரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள திகார் என்னும் கிராமத்தில் உள்ளது இந்தச் சிறை. இதன் சுற்றுப்பட்டுப் பகுதி ஹரி நகர் என்று அழைக்கப்படுகிறது.

தண்டனை தரும் இடமாக இல்லாமல், குற்றவாளிகளைத் திருத்தும் இடமாகவே இந்தச் சிறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிறைக்குள் வருகிறவர்களுக்குக் கல்வி, கைத்திறன் மற்றும் ஒழுங்குமுறைகளையும் நடத்தை விதிகளையும் கற்றுத் தந்து, அவர்களையும் சமூகத்தில் சாதாரண பிரஜைகளாக மாற்றி அனுப்புவதே இந்தச் சிறையின் குறிக்கோள். முக்கியமாக அவர்களின் சுய கண்ணியத்தை வளர்ப்பதும், முன்னேற வேண்டும் என்கிற அவர்களின் விருப்பத்தை பலப்படுத்துவதும்தான் இந்தச் சிறையின் நோக்கம். இந்தச் சிறைக் கைதிகள் தயாரித்த சட்டைகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள், மரச் சாமான்கள், மூலிகைப் பொருள்கள் ஆகியவை, ‘திகார்’ என்னும் வணிகப் பெயரில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. திகார் பொருள்களின் விற்பனை மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு இது ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் திகார் ஜெயில் வளாகத்தின் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராம் நிவாஸ் சர்மா.

இங்கே ஆயுள்தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கும் முகம்மத் சஜ்ஜித் என்பவர், இங்கே தனக்குக் கிடைத்த கைத் தொழில் கல்வி, தான் விடுதலையாகி வெளியே போன பின்பு, சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ்க்கை நடத்த உதவும் என்கிறார்.

சுமார் 5,000 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்தச் சிறையில், 2006-ம் ஆண்டு இருந்தவர்கள் சுமார் 12,000 பேர்.

சிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக கிரண்பேடி இருந்தபோது, அவருடைய ஆளுமையின் கீழ் திகார் ஜெயில்கள் வந்தன. அப்போது
, சிறை தொடர்பான பல மறுமலர்ச்சிகளை அவர் ஏற்படுத்தினார். பல ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்தார். திகார் ஜெயில் என்கிற பெயரைக்கூட திகார் ஆஸ்ரமம் என்று மாற்றினார். அங்கே பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கும் சிறைக் கைதிகளுக்கும் விபாசனா என்கிற தியான வகுப்புகளை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் விபாசனா வகுப்புகளை நடத்தியவர் சத்ய நாராயணா கோயங்கா. இந்தச் சிறையில் இருந்த கைதி ஒருவர் நன்கு படித்து ஐ.ஏ.எஸ். பாஸ் செய்திருக்கிறார்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற தொடர் கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ் இங்கேதான் அடைபட்டுக் கிடந்தான். 1986-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி அவன் தப்பி ஓடினான். ஆனால், விரைவிலேயே பிடிபட்டான். தப்பி ஓட முயன்ற குற்றத்துக்காக மேலும் 10 ஆண்டுகள் தண்டனை பெற்றான். தண்டனைக் காலம் முடிந்து, 1997 பிப்ரவரி 17-ம் தேதி அவன் விடுதலை ஆனான்.

இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான அனைவருமே இங்கேதான் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
.

Wednesday, May 18, 2011

முருகன் மீது ஒரு வழக்கு!

டவுள் இல்லைன்னு நான் சொல்லவில்லை; இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்!’ - இது கலைஞானி.

‘கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை; கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்!’ - இது கலைஞர்.

இந்த மாதிரியான ‘பகுத்தறிவு’க் கருத்துக்கள் எல்லாம் அறிவுஜீவிகளின் தலையில்தான் உதிக்கும். நான் சாமானியன்.

கடவுள் என்று யாரோ ஒருவர் அல்லது சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. ஆனால், ஆச்சரியமூட்டும் சில காரியங்கள் நடக்கும்போது, நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

மகாஸ்ரீ அன்னை என் வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களைத் தற்செயலானவை என்று நினைக்க முடியவில்லை. என்ன முட்டி மோதியும் நடக்காத காரியம், அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் உடனடியாக நடந்துவிடுவதை எப்படித் தற்செயல் என்று எடுத்துக்கொள்ள முடியும்? ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும்? இதை நான் பரீட்சார்த்த முறையில் சோதித்தே பார்த்துவிட்டேன்.

ஆனால், இப்போது எழுதப்போவது மகாஸ்ரீ அன்னையின் மகத்துவங்கள் பற்றி அல்ல! அரசியல் மேடைகளில் நான் ஏறிப் பேசியது போன்று, ஆன்மிக மேடைகளில் பங்கேற்றுப் பேசியதைப் பற்றியே!

அரசியல் மேடைகளில் பேசி, மிரட்டப்பட்டு, இந்தச் சனியனே வேண்டாம் என்று ஒதுங்கிய பின்பு, என் பேச்சுத் தாகம் அதிகரித்துவிட்டது. ஏதாவது மேடை கிடைத்தால் போதும் என்றிருந்தது. அந்த நேரம் மேற்படிப்பும் இல்லாமல், உத்தியோகமும் இல்லாமல் வெட்டியாக வேறு இருந்தேன். எனக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா?

அப்போது எனக்குக் கிடைத்ததுதான் ஆன்மிக மேடை. என் அப்பாதான் இதற்கு வழி செய்து கொடுத்தார். தன் மகனின் (நான்தான்) திறமைகள் (?!) பற்றிக் கூச்சமே இல்லாமல் தன் சக ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வார். நான் திறமையாக நடிப்பேன், மேடைகளில் ஏறிக் கலக்குவேன், அற்புதமாகப் பாடுவேன், அருமையாகச் சிறுகதைகள் எழுதுவேன் என்றெல்லாம் என் புகழ் பரப்புவார்.

அப்படி அவர் ஒருமுறை தன் சக ஆசிரிய நண்பர்களிடம் என்னைப் பற்றி வழக்கம்போல் பெருமையடித்துக்கொண்டு இருந்தபோது, திருக்குணம் என்னும் ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்னும் ஆசிரியர், என் பேச்சுத் திறமையை ஆன்மிக வழியில் பயன்படுத்தலாமே என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.

அவர் ஆன்மிகச் சொற்பொழிவாளர். ஆன்மிகப் பட்டிமன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும் கலந்துகொண்டு கர்ஜிப்பவர். பாண்டிச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளவர். நிறைய ஊர்களுக்குச் சென்று, அங்கே நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு வருபவர்.

அவர் கலந்துகொள்ளும் ஒரு ஆன்மிக பட்டிமன்றத்தில் என் பெயரையும் ஒரு அணியில் சேர்த்துவிட்டார். ‘சீதையை மீட்க ராமனுக்கு அதிகம் உதவியது லக்ஷ்மணனா, அனுமனா அல்லது விபீஷணனா?’ என்பதே தலைப்பு. மூன்று அணிகளில் நான் அனுமன் அணியில் இடம்பெற்றேன். இந்தப் பட்டிமன்றத்தில் பேசுவதற்குத் தயார் செய்துகொள்வதற்காக கம்பராமாயணப் பாடல்கள் அனைத்தையும் அவசரமாக ஒரு புரட்டு புரட்டினேன். உதவி: கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க கம்பராமாயணப் பதிப்பு.

மூன்று அணிகள். அனுமன் அணியில் என் பெயரைக் கொடுத்திருந்தார் நாகராஜன். அவர் எதிர் அணி ஒன்றில் இருந்தார்.

கம்பராமாயணத்தில் ஓரிடத்தில், ராமனே அனுமனை மெச்சி, "உன் உதவி மட்டும் இல்லையென்றால், என்னால் சீதையை அடைந்திருக்க முடியாது" என்று சொல்வதாக வரும் ஒரு பாடல் வசமாக எனக்குச் சிக்கியது. அதை வைத்து ஆணித்தரமாக நான் பேசியதும், நடுவர் அரங்க.தியாகராஜனால் மறுக்க முடியாமல், அதையே தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, என் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறிவிட்டார்.

இதனால் ஆசிரியர் நாகராஜன் என் மேல் ஏதேனும் கடுப்பு கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், அப்படி இல்லை. அவர் என் பேச்சாற்றலை ரசித்ததோடில்லாமல், தொடர்ந்து ஆன்மிக மேடைகளில் பேச வாய்ப்புகள் பெற்றுத் தந்தார்.

அன்னியூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம், அனந்தபுரம் எனப் பல ஊர் கோயில்களில் நடக்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் கலந்துகொண்டு பேசினேன். சுத்துப்பட்டு எந்தக் கோயிலில் விசேஷம் என்றாலும், அங்கே ஆன்மிகப் பட்டிமன்றமோ, வழக்காடு மன்றமோ, ஆன்மிகச் சொற்பொழிவோ ஏதோ ஒன்று அல்லது அனைத்துமேவோ கட்டாயம் நடைபெறும். (இப்போது மாதிரி ஆபாச அங்க அசைவுகளுடன் கூடிய டப்பாங்குத்து நையாண்டி மேளமோ, வெட்டவெளி சினிமாவோ இருக்காது.) கோயில் விசேஷத்துக்காக அடிக்கப்படும் நோட்டீஸில் கட்டாயம் என் பெயரும் கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும். இப்படியாக என் பெயர் அச்சிடப்பட்ட‌ நோட்டீஸ்களை ஒரு புத்தகம் போல் தைத்து வைத்திருந்தார் அப்பா. பொக்கிஷம் போல் அதை ரொம்ப காலம் பாதுகாத்து வந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், வேண்டாத குப்பைகளை ஒழிக்கும்போது அவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டேன். அதில் மாளாத வருத்தம் என் அப்பாவுக்கு.

இங்கே ஒரு விஷயம். பழைய நினைவுகளின் அடையாளமாக இருக்கும் இது போன்ற அழைப்பிதழ்களை, கடிதங்களை, பொருள்களைப் பாதுகாத்து வைத்திருந்து, பின்னாளில் அவற்றை எடுத்துப் பார்ப்பது ஒரு சுகம்தான். ஆனால், அந்தக் காலத்தில் அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், தினமணிகதிர் போன்ற பத்திரிகைகளில் மாறி மாறி, சராசரியாக‌ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எனப் பிரசுரமாகி வந்த காலத்தில், அதாவது 1979, 80-களில், சுமார் பத்து கதைகள் வெளியாகியிருந்த நிலையில், நண்பர் மார்க்கபந்து கேட்டார் என்று, (அப்போது நான் கிராமத்தில் இருந்தேன். கடிதம் மூலம் மார்க்கபந்து அறிமுகமாகியிருந்த சமயம் அது) என்னிடமிருந்த அந்த பத்து இதழ்களையும் தபாலில் மார்க்கபந்துவின் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அதில் அப்பாவுக்கு என் மீது ஏகப்பட்ட வருத்தம்; கோபம். அவரே ஒவ்வொரு பத்திரிகைக்கும் கைப்படக் கடிதங்கள் எழுதி, அந்தப் பிரதிகள் அனைத்தையும் வரவழைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டார்.‌

நோட்டீஸ்களைப் பொறுத்தவரையில் அப்படித் திரும்பப் பெற வழியில்லை. ஆனால், அதற்காக எள்ளளவும் எனக்கு வருத்தம் இல்லை. அன்றைய சந்தோஷத் தருணங்கள் யாவும் இனிய தடங்களாக என் மனதில் பதிந்துள்ளன. அதை மீண்டும் மனசுக்குள் ஓட்டிப் பார்ப்பதே ஒரு சுகம்தான்.

ஒரு சிறு கிராமம். பெயர் மறந்துவிட்டது. அங்கே ஒரு முருகன் கோயில். சூரசம்ஹார தினத்தன்று, அந்தக் கோயில் மண்டபத்தில் ஒரு வழக்காடு மன்றத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். வழக்குத் தொடுப்பவர் நான். மறுப்பவர் ஆசிரியர் நாகராஜன். 'முருகன் செய்தது குற்றம் குற்றமே!' என்பது வழக்கின் தலைப்பு. முருகப் பெருமான் செய்த‌ குற்றங்களை நான் வரிசைப்படுத்தி, அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும். அதை மறுத்து, முருகனுக்கு ஆதரவாக வாதிடுவார் நாகராஜன்.

வயதில் மூத்தவர் என்றும் மதிக்காமல் பிரம்மனை முருகன் குட்டியது குற்றம், தனக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரிந்துவிட்டது என்கிற கர்வ‌த்தில், தந்தைக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் தலைப்பட்டது குற்றம் என வரிசையாக முருகப் பெருமானின் குற்றங்களை முன்வைத்து வாதிட்டேன். என் வாதங்களுக்குப் பொருத்தமாகவும், ஆதரவாகவும் இருந்த கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற பழந்தமிழ் இலக்கியப் பாடல்களையெல்லாம் தொகுத்து, ஆணித்தரமாக வாதிட்டேன். ஒரு கட்டத்தில், நாகராஜன் எதிர் வாதம் செய்வதற்கே முடியாமல் திணறித் திக்குமுக்காடிப் போனார்.

அந்த நிலையில், பார்வையாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. முருகன் கோயிலுக்கே வந்து, முருகப் பெருமானை அவதூறாகப் பேசுவதா என என் மீது அவர்களுக்குக் கட்டுக்கடங்காத‌ கோபம் உண்டாயிற்று. என்னை ஏதோ நாத்திகன் போன்று எண்ணி, "எவண்டா இந்தக் கம்மனாட்டிகளையெல்லாம் கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டு வந்தது? எங்கே வந்து என்ன பேசுறே? பார்த்து தம்பி, உருப்படியா ஊர் போய்ச் சேரு!" என ஆங்காங்கே மிரட்டல் கூச்சல்கள் எழுந்தன. மேடை மீது கற்களும், மண்ணும் வந்து விழுந்தன. நிலைமை விபரீமாவதைக் கண்ட நாகராஜன், மைக்கில் சத்தமாக, "பக்த கோடிகளே! ஆன்மிக அன்பர்களே! இது ஓர் இலக்கிய நிகழ்ச்சி. இந்தத் தம்பியும் முருகன் மீது பக்தி உள்ளவர்தான். ஒரு சுவைக்காக அவர் தன் வாதங்களை இங்கே எடுத்து வைத்தார். இது இறைவனை அவதூறு செய்யும் நிகழ்வல்ல. எங்களுக்கு அது நோக்கமும் அல்ல!" என்று அறிவித்தார்.

ஆனால், நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குத் திட்டமிட்டிருந்த அந்த வழக்காடு மன்றம் இருபது நிமிடத்துக்குள் முடிந்துபோனது.

பக்தியிலும் முரட்டு பக்தி உண்டென்று நான் அறிந்துகொண்ட சம்பவம் அது. அதுதான் என் கடைசி ஆன்மிக மேடையும்கூட!
.

Sunday, May 15, 2011

அசத்தல் ராமன்!

ருவரைப் பார்த்த மாத்திரத்தில், அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வந்துவிட முடியாது; வந்துவிடக் கூடாது! அதிலும், நடிகர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரங்களை வைத்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இமேஜைக் கொண்டு அவர்களை மதிப்பிடுவது சரியல்ல.

நான் எப்போதும் அந்தத் தவற்றைச் செய்வதில்லை. எனினும், நகைச்சுவை நடிகர் மோகன் ராமன் விஷயத்தில் நான் கொஞ்சம் பிசகிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.

குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்று கேள்வி. ஆனால், அவற்றை நான் பார்த்ததில்லை. அசட்டுப் பிசட்டு காமெடி நாடகங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறேன். அந்த நடிப்பும் எனக்கு அத்தனை உவப்பாய் இருந்ததில்லை. அவரது பர்ஃபாமென்ஸ் சரியில்லை என்பதை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. பொதுவாகவே, தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்களில் அசட்டுததனம் மலிந்திருப்பதே காரணம்! நகைச்சுவை என்கிற பெயரில் கதாசிரியரும் இயக்குநரும் சேர்ந்துகொண்டு அறுத்துத் தள்ளும்போது, அந்த எரிச்சல் நடிகர்கள் மீதும் விழும்தானே? ஹோட்டலில் இட்லி வேகவில்லையென்றால், சட்னி புளிக்கிறதென்றால் கொண்டு வருகிற சர்வரைத்தானே கடுப்படிக்கிறோம்?

எனவே, மோகன் ராமன் எங்களுக்கு நிகழ்ச்சி கொடுக்கவிருக்கிறார் என்று தெரிந்தபோது எனக்குப் பெரிய சுவாரஸ்யம் எதுவும் ஏற்பட‌வில்லை. 'சரி, ரொம்ப அறுத்தால் நழுவிவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

மதியம் பஃபே முடிந்ததும், அவரது நிகழ்ச்சி தொடங்கியது. நிர்வாகவியலில் பட்டம் பெற்றவர் மோகன் ராமன். முழு நேர நடிகராக ஆவதற்கு முன்பு அவர் பல்வேறு நிறுவனங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று நிர்வாக மேலாண்மை பற்றியும், மனித உறவுகள் பற்றியும் நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளாராம்.

மிக யதார்த்தமாக தன் உரையைத் தொடங்கினார் மோகன் ராமன். அவரது குரல், டி.வி நாடகங்களில் ஒலிக்கும் அசட்டுக் காமெடிக் குரலாக‌ இல்லாமல், மிகக் கம்பீரமாக இருந்தது. அது என் முதல் ஆச்சரியம்! அவரது நடை, உடை, பாவனை, பொடி வைத்துப் பேசும் மெலிதான நகைச்சுவை என ஆரம்ப நொடியிலேயே என்னைக் கட்டிப்போட்டுவிட்டார் அவர்.

நிர்வாகம் என்றால் என்ன, செயல் திட்டம் என்றால் என்ன, முதலாளி தொழிலாளி உறவு எப்படி, அதிகாரி பணியாள் உறவு எப்படி, பாடி லாங்வேஜ் என்றால் என்ன என்று தட்டுத் தடங்கல் இல்லாமல், ஏதோ எழுதிவைத்துக்கொண்டு பேசுவது போன்று இல்லாமல், எங்களிடையே உரையாடிக்கொண்டே தனது நிகழ்ச்சியை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போனார் மோகன் ராமன்.

நம்மவர்களிடையே உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது, எதிராளியைச் சாதுர்யத்தால் முறியடிப்பது, ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர் விவரித்துச் சொல்லச் சொல்ல, உடம்புக்குள் உற்சாக குளூகோஸ் ஏறுவது போலப் புத்துணர்வாக இருந்தது. புது ரத்தம் பாய்ந்தாற்போல் இருந்தது. இது ஏதோ உபமானம் தரவேண்டுமே என்பதற்காக எழுதப்பட்ட வாசகங்கள் இல்லை. நிஜமாகவே அப்படியொரு பரவச உணர்வு கிடைத்தது.‌

தனது உரைக்குப் பக்கபலமாக, தனது விரிவுரைகளுக்கான‌ விளக்க உரையாக, இடையிடையே சில திரைப்படங்களிலிருந்து துண்டுக் காட்சிகளை (கிளிப்பிங்ஸ்) திரையிட்டுக் காண்பித்தார் மோகன் ராமன். அது இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்த்தது. தவிர, 'இந்தக் காட்சியை ஏற்கெனவே பார்த்திருந்தும், இந்தக் கோணத்தில் பார்க்கவில்லையே' என்று, அவர் ஒவ்வொரு காட்சியைத் திரையிட்டபோதும் தோன்றியதில், அந்தக் காட்சிகள் புத்தம்புதுசாக, அர்த்தமுள்ளதாக, நமது முன்னோர்கள் எத்தனைப் புத்திக்கூர்மையோடு செயல்பட்டிருக்கிறார்கள் என்று நம்மை உணரச் செய்வதாக இருந்தன.

ஒரு செயலில் வெற்றி அடைவதற்கு எதிராளியின் பலத்தை எடைபோடுவது எத்தனை முக்கிய‌ம், அதன் வீர்யத்தைக் குறைப்பது எத்தனை முக்கியம் என்பதை விளக்க, மோகன்ராமன் திரையிட்டது கர்ணன் திரைப்படக் காட்சி ஒன்றை. துரியோதனனை உசுப்பேற்றி, விதுரரைப் பற்றிக் கேலியாகப் பேசச் செய்து, விதுரர் தனது வில்லை உடைத்துப் போடச் செய்த பகவான் கிருஷ்ணரின் சாதுர்யம், அமாவாசை நாளில் யுத்தம் தொடங்கினால் துரியோதனனுக்கே வெற்றி கிட்டும் என்பதால், அதை முறியடிக்கும் யுக்தியாக தர்ப்பணம் செய்யத் தொடங்கும் கிருஷ்ணர், குழம்பிப் போய் அவரைப் பார்க்க வந்த சூரியனிடமும் சந்திரனிடமும், "அமாவாசை என்றால் என்ன? நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேருவதுதானே? இதோ, இப்போது நீங்கள் இருவரும் ஒன்றகத்தானே வந்திருக்கிறீர்கள்! அப்படியானால் இன்று அமாவாசைதானே?" என்று கேட்டு மடக்கிய குறும்பு... அற்புதமான காட்சி! கிருஷ்ணராக‌ நடித்த என்.டி.ராமாராவின் வேஷப் பொருத்தத்தையும், நடிப்புத் திறனையும் சொல்லவா வேண்டும்!

'காதலிக்க நேரமில்லை' படத்தில் பிரசித்தி பெற்ற காட்சி, பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லிப் பயமுறுத்தும் காட்சி. அதைத் திரையிட்ட மோகன் ராமன், "இந்தக் காட்சியை எல்லாரும் பார்த்திருப்பீங்க. ஆனா, நாகேஷின் நடிப்பையே உத்துப் பார்த்துட்டிருந்திருப்பீங்க. இப்போ நாகேஷை மறந்துட்டு, அது சிரமம்தான். அப்படியொரு அசாத்திய நடிகர் அவர். இருந்தாலும், எனக்காக இந்த ஒரு தடவை அவரை மறந்துட்டு, பாலையாவின் எக்ஸ்பிரஷன்களை மட்டும் கவனியுங்க. என்ன மாதிரி ஆக்டிங்! இப்படியொரு அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலேன்னா, அந்தக் காட்சியே சொதப்பியிருக்கும்" என்று சொல்லிவிட்டு, அதைத் திரையிட்டார். ஆமாம். பாலையா பின்னிப் பெடலெடுத்திருந்தார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி இரண்டொரு ஹிந்திப் படங்களிலிருந்தும், இரண்டொரு ஆங்கிலப் படங்களிலிருந்தும்கூட காட்சிகளைத் திரையிட்டார் மோகன்ராமன். அனைத்தும் அவர் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுலபமாக, இன்னும் தெளிவாக விளக்கின.

'சிவாஜி' பட விழாவில் ரஜினியின் பேச்சிலிருந்தும் ஒரு துண்டுக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. நமது வேலை என்ன, நமது இலக்கு என்ன, அதை எப்படிச் சாதிப்பது, அதற்குத் தகுதியானவர்களின் உதவியை எப்படி ஒருங்கிணைப்பது என்று அத்தனை அழகாக, அத்தனைத் தெளிவாக, தனக்கே உரிய ஸ்டைலில் விளக்குகிறார் ரஜினி. அசத்தல்! இது அச்சமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, ரஜினியின் பேச்சு என்கிற ஒரு ஆர்வம்தான் இருந்ததே தவிர, மற்றபடி அதில் எத்தனை நுட்பங்கள் பொதிந்துள்ளன என்பது புலப்படவே இல்லை. அதை மோகன் ராமன் விளக்கிச் சொன்னபோது, 'ஹா!'வென்று வாய் பிளந்து கேட்கத் தோன்றியது.

டீ பிரேக்கில் நான் அவரிடம் சென்று, அவரின் கைகளைப் பற்றிக் குலுக்கி, "எத்தனையோ பேரின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். வொர்க்-ஷாப்களில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், இதுவரைக்கும் இப்படி ஒரு பேச்சை, இப்படி ஒரு அசத்தலான‌ நிகழ்ச்சியை நான் கேட்டதில்லை. அற்புதம் சார்!" என்று இதயத்தின் உள்ளிருந்து பாராட்டினேன். அவரது காமெடி நடிப்பை மட்டுமே பார்த்திருந்தபோதிலும், அது அவரது சுயம் அல்ல என்பது புரிந்திருந்தபோதிலும்... இப்படி ஒரு அசாத்தியத் திறமை அவருள் ஒளிந்திருக்கும் என்று நான் கொஞ்சம்கூட யூகிக்கவில்லையே, அதைத்தான் ஆரம்பத்தில் 'நடிகர் மோகன் ராமன் விஷயத்தில் நான் கொஞ்சம் பிசகிவிட்டேன்' என்று குறிப்பிட்டேன். அதற்கு மானசிகமாக மன்னிப்புக் கோரும் விதமாக அவரது கைகளைப் பற்றியபடியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.‌

அசட்டுக் காமெடிக்காக மோகன் ராமைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் தொலைக்காட்சிகள், அவருடைய அசத்தலான, ரசனையான‌ இன்னொரு முகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். அதை ஏன் இன்னும் செய்ய‌வில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான்! (அல்லது செய்திருந்து எனக்குத்தான் தெரியவில்லையா?)

மோகன் ராமன் தனது அனுபவங்களை http://mohanramanmuses.blogspot.com என்கிற வலைப்பூவில் அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் ஏராளமான, சுவாரஸ்யமான விஷயங்கள் இருப்பதை அவரிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்துகொண்டேன். அவர் தமது அனுபவங்களை இன்னும் அதிகமாகத் தனது வலைப்பூ மூலம் தமிழில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்; தனது அனுபவங்களைத் தொகுத்துப் புத்தகம் ஒன்று வெளியிட வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
.