உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Showing posts with label வி.ஐ.பி. Show all posts
Showing posts with label வி.ஐ.பி. Show all posts

Tuesday, January 09, 2018

சுபா - நட்புக்கு மரியாதை!

ராஜேஷ்குமாரின் எழுத்தில் உள்ள விறுவிறுப்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்தில் உள்ள ஜிலுஜிலுப்பு இரண்டும் கலந்தாற்போன்ற ஒரு தனித்துவ நடை இரட்டை எழுத்தாளர்கள்சுபாவினுடையது. விறுவிறுப்பு, ஜிலுஜிலுப்பு இரண்டில் சு எதற்குச் சொந்தக்காரர்,பா எதற்குச் சொந்தக்காரர் என்பது எனக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமேகூடத் தெரியாத ஒரு சுவாரஸ்ய ரகசியம்.

ஒரு பேச்சுக்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர,சுபாவைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரே! அதுமட்டுமல்ல, தங்களைசுவாகவும்பாவாகவும் மற்றவர்கள் பிரித்துப் பார்ப்பதைக்கூட விரும்பாத இறுகிய நட்பு அவர்களுடையது என்பதும் எனக்குத் தெரியும்.

இசையுலகில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போன்று இந்தித் திரையுலகிலும் பல இசை ஜோடிகள் இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்திலோ கேட்கவேண்டாம், சகோதரர்கள், சகோதரிகள் என சங்கீத ஜோடிகள் பலர் உண்டு. ஆனால், எழுத்துலகில்சுபாவைத் தவிர, எனக்குத் தெரிந்து வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இருவரின் முதலெழுத்தும் இணைந்துசுபாஎன்னும் அழகான ஒரு பெயர் இசைவாக அமைந்தது எனக்கு ஓர் ஆச்சர்யம்! கல்லூரிக் காலத்திலிருந்து தொடரும் இவர்களின் நாற்பதாண்டுகளுக்கும் மேலான நட்பு, நட்பை போஷிக்கத் தெரியாத எனக்கு மற்றுமொரு ஆச்சர்யம்!

இருவரும் இணைந்து குறைந்தபட்சம் 300 சிறுகதைகளாவது எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கருணை, தீர்ப்பு, நிழல் நர்த்தனம், சிம்மாசனம், கல்வெட்டுகள் கரையும்... எனப் பலப்பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன்.கோழிக்குஞ்சு என்று ஒரு சிறுகதை. சுஜாதாவின்காகிதச் சங்கிலிகள் கதையைப் படித்திருக்கிறீர்களா? கதையின் முடிவில் உறவினர்கள் யாருமே கிட்னி தராமல் ஒருவர் சாக நேரிடுவதைப் படிக்க நேர்கிறபோது, நம் மனசு பாரமாய் வலிக்குமல்லவா, அத்தகைய ஒரு வலியை சுபாவின்கோழிக்குஞ்சு சிறுகதை ஏற்படுத்தியது. 

ஊனமுற்ற குழந்தையாகப் பிறப்பதன் வலிகளை இந்தக் கதை நெடுக விவரித்திருப்பார்கள். தம்பி, தங்கைகள் இந்த மூத்த குழந்தையைப் படுத்துகிற பாடு, படிக்கிற நமக்கே கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் பெரியவர்களாக வளர, அப்பாவும் அம்மாவும் இறந்துபோக, ஊனமுற்ற தன் அண்ணனைக் கொண்டுபோய் விடுதியில் சேர்த்துவிடுவார்கள். கடைசியில், ஒருநாள் தம்பி தேடி வருவான். பாச மழை பொழிவான். விடுதியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வான். அண்ணனின் வாயில் ஒழுகும் எச்சிலைக்கூடத் துடைத்துவிடுவான்.ஆஹா, என் தம்பி எவ்வளவு நல்லவன்!என்று அண்ணனின் மனசு நெகிழும். டாக்டர் வருவார். அண்ணனின் உடம்பைச் சோதனை செய்வார்.மருந்து, மாத்திரை கொடுத்து நம்மை குணப்படுத்திவிடப் போகிறார்கள்என்று அண்ணனின் மனம் சந்தோஷத்தில் குதிக்கும். ஆனால்... தன் மனைவியின் தம்பிக்கு அண்ணனின் கிட்னியை எடுத்துப் பொருத்தும் உத்தேசத்தில்தான் அவன் தன் அண்ணனை விடுதியில் இருந்து அழைத்து வந்து, டாக்டரிடம் காண்பித்திருக்கிறான் என்று க்ளைமாக்ஸில் கதை முடியும்போது, நம் நெஞ்சம் இரும்பாய்க் கனத்துப் போய்விடும். அத்தகைய வலுவான எழுத்து சுபாவினுடையது. இந்தக் கதை ஓர் உதாரணம்தான். சுபாவின் பல கதைகள் இத்தகைய ஆழம் மிக்கவை.

சிறுகதையில் தொடர்கதைக்கே உரிய திருப்பங்களைப் புகுத்துவதும், தொடர்கதையில் சிறுகதையில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய மெசேஜை நுழைப்பதும் இவர்களுக்கே உரிய பாணி. கணேஷ்-வசந்த், விவேக்-ரூபலா, பரத்-சுசீலா ஜோடிகள் போன்றுசுபாவின் நரேன்-வைஜெயந்தி ஜோடியும் கதை ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான, பரிச்சயமான துப்பறியும் ஜோடி.

சுபா எழுதிய மாத நாவல் ஒன்றின் தலைப்பு இப்போது என் நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன்னால் படித்த கதை அது. அது ஒரு சரித்திரக் கதை. ஆனால், முழுக்க முழுக்கக் கற்பனைக் கதாபாத்திரங்களாலும், கற்பனைச் சம்பவங்களாலும் சரித்திர நடையில் எழுதப்பட்ட கதை. முன்குறிப்பு கொடுத்திருக்கவில்லையென்றால், நிஜமாகவே சரித்திரத்தில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக்கும் என்று நம்ம்ம்ம்ம்பி ஏமாந்து போயிருப்பேன். ஏற்கெனவே, பள்ளியில் சரித்திரப் பாடத்தில் நான் ரொம்ப வீக். இத்தனை சுவாரஸ்யமாக யாராவது அன்றைக்குச் சரித்திரப் புத்தகப் பாடங்களைத் தொகுத்திருந்தால், நான் நிச்சயம் சரித்திரத்தில் நல்ல மார்க் எடுத்திருப்பேன்.

இன்றைக்குச் சுபாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறேன். நான் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான் என்னை அவர்களுக்குத் தெரியும். ஆனால், நான் சாவியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களை அறிவேன்.

அவர்களை அறிவேன் என்றால், வெறுமே அவர்களின் சிறுகதைகள் மூலமாக மட்டுமே அல்ல; நேரிலேயும் சந்தித்திருக்கிறேன்.
சாவி இதழுக்கு ஒரு சிறுகதை கொடுப்பதற்காகவோ அல்லது தொடர்கதை எழுதுவது தொடர்பாகப் பேசுவதற்காகவோ அவர்கள் சாவி சாரை சந்திக்க வந்திருந்தார்கள். அப்போது சாவி சார் தமது அண்ணா நகர் வீட்டில் மாடிப் போர்ஷன் கட்டியிருந்த புதிது. மாடியில் நுழைந்ததுமே, வலது பக்கம் ஒரு பத்துக்குப் பத்து சதுர அறை இருக்கும். அங்கே நான் ஒரு கோணி மூட்டையைக் கவிழ்த்துப் போட்டு, அதன் பக்கத்திலேயே தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து, போட்டோவோ அல்லது ஏதும் லைன் டிராயிங்கோ தேடிக்கொண்டிருந்தேன். ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால், அவர் எழுதிய பழைய எழுத்துக்களை எடுத்து வெட்டி ஒட்டித் தேவையான புதிய தலைப்பு உண்டாக்கி அவசரத்துக்கு அனுப்புவதும் என் வழக்கம். அப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக நான் மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, சுபா அங்கே வந்தார்கள். சாவி சாரைப் பார்க்கணும் என்றார்கள். இருங்க, கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களை அங்கேயே நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே போய் சாவி சாருக்குத் தகவல் சொன்னேன். பின்பு மீண்டும் வந்து, பழையபடியே தரையில் கால் பரப்பி அமர்ந்து, என் வேலையைத் தொடர்ந்தேன்.

சுபாவுக்கு நான் ஒரு சப்-எடிட்டர் என்றே தோன்றியிருக்காது. யாரோ ஒரு எடுபிடிப் பையன் என்றுதான் நினைத்திருப்பார்கள். காரணம், என் கோலமும் தோற்றமும் அப்படி.

நீங்க இங்கே என்ன பண்றீங்க? என்று கேட்டார் (சு)பா. சப்-எடிட்டரா இருக்கேன் என்றேன்.

அப்புறம் எதுக்கு நீங்க இந்த வேலையைச் செய்யறீங்க? யாராவது அட்டெண்டரைச் செய்யச் சொல்ல வேண்டியதுதானே? என்றார் (சு)பா.

இங்கே இடைச்செருகலாக ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். நான் சாவியில் உதவிஆசிரியனாகச் சேர்ந்திருந்த புதிது. அங்கு ஏற்கெனவே எனக்கு சீனியர்களாக இருந்த திரு.கண்ணன் என்கிற அபர்ணாநாயுடு, ரமணீயன், கே.வைத்தியநாதன் மூவரும் விலகி, நான் ஒருவன் மட்டுமே சாவி ஆசிரியரின் கீழ் உதவி ஆசிரியனாகப் பணியாற்றத் தொடங்கியிருந்த நேரம். அட்டெண்டர் வேலை முதற்கொண்டு எல்லா வேலைகளையும் ஆர்வத்தோடு இழுத்துப் போட்டுப் பரபரவென்று உழைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. தவிர, இளைஞனுக்கே உரிய திமிரும் தெனாவெட்டும்கூட அப்போது என்னிடத்தில் இருந்தன. கூடவே, எதிலும் குதர்க்கம் கண்டுபிடிக்கும் குறுக்குப் புத்தி. பக்குவமடையாத பருவம். அதனால்தானே மூன்று முறை பெருந்தகையாளர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறினேன்.

திரு.பாலா தப்பாக ஒன்றும் கேட்டுவிடவில்லை. சப்-எடிட்டராக இருந்துகொண்டு அதற்கேற்ற வேலையைச் செய்யாமல், வெட்டியாக ஏதோ செய்துகொண்டிருக்கிறேனே என்கிற அக்கறையில்தான் கேட்டார். அதைப் பின்னாளில்தான் நான் உணர்ந்தேன். ஆனால், அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் அவர் யதார்த்தமாக அப்படிக் கேட்டதும், பக்குவமடையாத என் மனசு பரபரவென்று பற்றிக்கொண்டது. சுறுசுறுவென்று ரோஷம் பொங்கியது.

எனக்குச் சம்பளம் கொடுப்பவர் சாவி சார். நான் என்ன வேலை செய்யலாம், என்ன செய்யக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். ஓகே?என்றேன், மனசிலிருந்த கோபத்தைக் கூடுமானவரை குரலில் காட்டாமல்.

அதற்குள் சாவி சார் வந்துவிட்டார். சுபா அவரோடு பேசப் போய்விட்டார்கள். நான் என் வேலையை முடித்துக்கொண்டு, கீழே வந்துவிட்டேன்.

அதன்பின்பு, ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2000-வது ஆண்டிலிருந்துதான் அவர்களுடனான பழக்கம் ஏற்பட்டு, இன்றைக்கு இறுகிய நட்பாக முகிழ்த்திருக்கிறது. சாவி காலத்துச் சம்பவத்தை அவர்கள் அன்றே மறந்து போயிருக்கலாம்; நினைவிலேயே பதியாமலும் இருந்திருக்கலாம். நானும் இதுவரை அதுபற்றி அவர்களிடம் சொல்லியதில்லை. இதோ, இந்தப் பதிவின்மூலம் அவர்கள் அறிந்தால்தான் உண்டு. அன்றைய இளம்பிராயத்து ரவியின் அதிகப்பிரசங்கித்தனமான பதிலுக்கு இன்றைய பக்குவப்பட்ட ரவியாக திரு.பாலாவிடம் மானசிகமாகஸாரி கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீவேணுகோபாலன் என்னும் ஆன்மிக எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையாக அவதாரம் எடுத்து, ஜிலுஜிலு கதைகள் எழுதிக் கலக்கியது சீனியர் வாசகர்களுக்குத் தெரியும். சுபா அப்படியே உல்டா. க்ரைம் கதைகள் எழுதி அசத்திக் கொண்டிருந்தவர்கள் காஷ்யபன் அவதாரம் எடுத்து, ஆன்மிக குருமார்களைப் பற்றியும், திருத்தல மகிமைகள் பற்றியும் கட்டுரைகளும் தொடர்கட்டுரைகளும் எழுதிக் கலக்கினார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டுஅத்தனைக்கும் ஆசைப்படுஎன்று இவர்கள் எழுதிய தொடருக்கு வாசகர்களிடம் அத்தனை வரவேற்பு.

பொதுவாக, ஆனந்த விகடன் தீபாவளி மலரை ஆசிரியர் குழுவில் உள்ளவர்களேதான் தயாரிப்பது வழக்கம். ஒரே ஒருமுறை,வேறு ஒரு பிரபல எழுத்தாளரை வைத்துத் தயாரித்தால் என்ன என்று ஆசிரியர் குழுவில் முடிவெடுத்தோம். எழுத்தாளர்கள் சுபாவைக் கேட்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சுபாவைத் தொடர்புகொண்டு நான் இந்தத் தகவலைச் சொன்னேன். உடனே ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார்கள்.

அந்தக் கணத்திலிருந்து பரபரவென்று இயங்கினார்கள். ஐடியாக்களைக் கொட்டினார்கள். அசைன்மென்ட்டுகளைப் பிரித்து வழங்கினார்கள். கட்டுரைகளைத் தேடித் தேடிப் பெற்றார்கள். எழுத்தாளர் சுஜாதாவையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும்சினிமாவுக்கான ஒரு திரைக்கதையை எழுதுவது எப்படி?என்று கட்டுரை எழுத வைத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் அதை காட்சி, பிராப்பர்ட்டீஸ், டயலாக் என்று விவரித்து எழுத, சுஜாதா படக் கதையாகவே தன் கட்டுரையை வழங்கினார். முன்பு ஒருமுறை ஓவியர் ஸ்யாமை அழைத்துக்கொண்டு சுஜாதா வீட்டுக்குச் சென்றேன் என்று என் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேனல்லவா, அது இந்தப் படக் கதைக்காகத்தான்.

மேலும், மலரை அழகுபடுத்த சின்னச் சின்ன நகாசு வேலைகளுக்கும் ஐடியா கொடுத்தார்கள் சுபா. மொத்தத்தில், ஒரு முழுமையான மலருக்குண்டான அத்தனை விஷயங்களையும் அட்டை டு அட்டை அவர்களே திட்டமிட்டார்கள். அட்டைப்படத்திலும் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தினார்கள். வழக்கமாக சினிமா நடிகர் அல்லது நடிகையின் படத்தை வெளியிடாமல், விகடன் தாத்தா ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து,கோபியர் கொஞ்சும் ரமணாபோன்று இரண்டு அழகிகளோடு ஜாலியாக ஆடிப்பாடுகிற மாதிரி இளமைத் துள்ளலோடு ஓவியர் ஸ்யாமிடம் படம் வரைந்து வாங்கி, வெளியிட்டார்கள்.

சிறுவர்களிடம் அவர்களின் கற்பனைக்கேற்ப ஏதேனும் படம் வரையச் சொல்லி வாங்கி, அவற்றுக்கேற்ப பிரபல கதாசிரியர்களிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிட்ட சுபாவின் யோசனை மிகப் புதுமையானதாக அந்நாளில் வாசகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வரைந்த சிறுவர்களில் என் மகன் ரஜ்னீஷும் ஒருவன். அவனுக்கு அப்போது நான்கு வயது. அவனுடைய ஓவியத்துக்குப் பொருத்தமாகச் சிறுகதை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன்.

இந்த மலர் தயாரிப்புப் பணி மொத்தத்தையும் சுபா தூக்கிச் சுமக்க, நான் ஓர் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருந்து அவர்களுக்கு உதவினேன். மலர் பணிகள் முடிக்கும் க்ளைமாக்ஸ் நாட்களில் தொடர்ந்து இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் அவர்கள் விகடன் அலுவலகத்திலேயே இருந்து, பசி நோக்கார், கண் துஞ்சாராகி, கருமமே கண்ணாயினராக இருந்து முடித்துக்கொடுத்த அவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் செய்நேர்த்தியும் இன்றைக்கும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

சுபா தயாரித்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியான ஆண்டு 2005. சிறுகதை மன்னர்களான சுபா தயாரித்த இந்த மலரில் அவர்களின் சிறுகதை எதுவும் இடம்பெறவில்லை என்பது ஒரு முரண். ஆமாம், தாங்கள் இதில் சிறுகதை எழுதுவதில்லை என்பதில் அவர்கள் அத்தனை உறுதியாக இருந்தார்கள். இருப்பினும், கதை எழுதாவிட்டால் போகிறது. ஒரு கட்டுரையாவது எழுதுங்கள்என்று நான் வற்புறுத்தியதன்பேரில்என் நாடு, என் மக்கள் என்னும் தலைப்பில் இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை எழுதினார்கள்.

அது சரி, அவர்கள் ஏன் இந்த மலரில் கதை எழுதத் தயங்கினார்கள்?

அதற்கு அவர்கள் சொன்ன பதில்...

நாங்களே ஒரு மலரைத் தயாரித்து, அதில் நாங்களே ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டுக்கொள்வது கொஞ்சம்கூட நியாயமே இல்லை, ரவிபிரகாஷ்!

அவர்களுக்குள் ஊறியிருந்தபத்திரிகை அறம்தான் அவர்களை அப்படிச் சொல்ல வைத்தது.

ஹேட்ஸ் ஆஃப் சுபா!


Tuesday, December 26, 2017

நான் பழகிய எழுத்தாளர்!

சிவசங்கரி - கம்பீர நாயகி!

சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி மூவரையும் தமிழ் எழுத்துலகின் முப்பெரும்தேவியர் என்றே சொல்வேன். இதைச் சில வருடங்களுக்கு முன்புகூட ஒரு ஃபேஸ்புக் பதிவில் சொல்லியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்து இம்மூவரின் சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் நான் படித்து, இவர்களின் ரசிகனாகவே ஆகியிருந்தேன்.

மூவரில், மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் எனக்கு நல்ல பழக்கம். திருமதி இந்துமதியுடன் போனில்கூடப் பேசியதில்லை. திருமதி சிவசங்கரியைப் பற்றித்தான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.

கம்பீரமான பெயர்; பெயருக்கேற்ற கம்பீரமான மனுஷியாக என் மனதில் பதிந்தவர் திருமதி சிவசங்கரி. இவரைப் பார்க்கும்போது ஒரு மிடுக்கான கலெக்டராகவோ, கண்டிப்பான ஒரு கல்லூரிப் பேராசிரியராகவோதான் என மனதில் ஒரு பிம்பம் எழும்.

அந்தக் காலத்தில் பெரிய சைஸ் தினமணிகதிரில் இவரின் பல சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.சியாமா என்கிற தன் நாயைப் பற்றிக்கூட இவர் அதில் எழுதியிருந்ததைப் படித்து வியந்திருக்கிறேன். சுவாரஸ்யமாக எழுதுவதற்குப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டாம், நம்மைச் சுற்றி நடப்பதை வைத்தே அற்புமாக எழுத முடியும் என்பதை இவரின் எழுத்துகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

ஒரு சிறுகதை; இதுவும் பெரிய சைஸ் தினமணிகதிரில் வந்ததுதான். ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு ஒரு நபரின் பெயர் மறந்துபோய்விடும். அவர் அல்லது அவளின் அன்றாட வேலையே பாதிக்கும் அளவுக்கு, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயர் என்னவாயிருக்கும் என்று நாள்பூரா சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். சிறுகதை முழுக்க அவர் அல்லது அவளின் இந்த ஊசலாட்டம்தான்! இதை ஒரு சுவாரஸ்யமான சிறுகதையாக இன்றைக்குக்கூட என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அத்தனை பிரமாதப்படுத்தியிருப்பார் சிவசங்கரி. நமக்கே அந்தப் பெயரைத் தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துபோய்விடும் அளவுக்குக் கதையில்பெப் ஏறியிருக்கும்.

கடைசியில், மாடிப்படிகளின் கடைசி படி அருகில் உள்ள கைப்பிடிச் சுவர் மீது கை வைக்க, அதன் பந்து போன்ற தலைப்பகுதி ஆடும். என்ன இது, ஆடுகிறதே! இதைச் சரிசெய்ய வேண்டும் என்று அவர் அல்லது அவள் நினைக்கும்போதே, சட்டென்று அந்த நபரின் பெயர் நினைவுக்கு வந்துவிடும். ஆடு… ஆடு… ஆடிய… ம்… ஆடியபாதம்!

ஆஹா… சிறுகதையின் விவரணை கொஞ்சம் முன்னேபின்னே இருக்கலாம்; ஆனால், அந்தச் சிறுகதையைப் படித்த மாத்திரத்தில், அந்தப் பெயரைத் தெரிந்துகொண்ட மாத்திரத்தில், அந்தக் கதாபாத்திரம் அடைந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் நானும் அடைந்தேன் என்பதுதான் நிஜம். (இந்தஎன்பதுதான் நிஜம் என்கிற சொல்லாடல், மொழிநடைகூட சிவசங்கரி அவர்களுடையதுதான். அவரின் கதைகளில் அடிக்கடி இந்த நிஜம் வரும். அங்கிருந்து எனக்குத் தொற்றிக்கொண்டது.)

நான் பி.யூ.சி-யில் கோட் அடித்துவிட்டு, அரியர்ஸ் முடிப்பதில் மும்முரமாக இருந்த 1975-ம் ஆண்டு. விழுப்புரத்தில் இருந்த என் மாமா வீட்டில்தான் தங்கிப் படித்து வந்தேன். அப்போது சிவசங்கரி, விழுப்புரத்துக்கு அருகில் உள்ள வழுதரெட்டியில் வசித்துவந்தார்.

ஒருமுறை, விழுப்புரம் திரு.வி.க ரோட்டில் இருந்த ஒரு புத்தகக் கடையில் நான் ஏதோ நோட்ஸ் வாங்கிக்கொண்டு இருந்தபோது, பக்கத்தில் இருந்த பல்பொருள் அங்காடி வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யார் இறங்குகிறார்கள் என்று கவனித்தபோது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். என் அபிமான எழுத்தாளர் சிவசங்கரிதான் இறங்கிக் கடைக்குள் சென்றார்கள். கூடவே, அவருக்கு பி.ஏ. போன்று ஒரு லேடியும் சென்றார். அந்த லேடி சுடிதாரோ சல்வார்கமீஸோ அணிந்திருந்ததாக நினைவு. எனவே, அவரை ஆங்கிலோ இண்டியன் என்று நான் நினைத்துக்கொண்டதும் இப்போதும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அப்பெல்லாம் சல்வார்கமீஸ் போட்டாலே அவர் ஆங்கிலோ இண்டியன்தானே?!

சிவசங்கரியிடம் சென்று அவரின் அபிமான வாசகன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரின் ஆட்டோகிராஃப் பெற வேண்டும் என்று எனக்கு ஆசையான ஆசை. ஆனால், தயக்கம், பயம் காரணமாக நான் அதைச் செய்யவில்லை. அவர் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு, காரில் ஏறிக் கிளம்பிப் போகிற வரையில் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.

அந்நாளில் சிறுகதைகள், பத்திரிகைகள்மீது எனக்கு இருந்த நாட்டத்தை அறிந்த என் மாமா, சிவசங்கரியிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்றியாடா, சேர்த்துவிடவா? எனக்கு அவங்களை நல்லா தெரியும்என்றார் ஒருநாள். என் மாமா விழுப்புரத்தில் பிரபல சிவில் இன்ஜினீயர். அந்த வகையில் சிவசங்கரி அவர்களைத் தெரிந்திருக்கக்கூடும். அல்லது, சிவசங்கரியின் கணவர் சந்திரசேகர் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்திவந்ததாக ஞாபகம். (இந்தப் பதிவைப் படித்துவிட்டு, சிவசங்கரி அவர்கள் எனக்குப் போன் செய்து, தன் கணவரின் நிறுவனம், பாலங்கள் கட்டப் பயன்படுத்தும் கான்க்ரீட் பைப்புகளைத் தயார் செய்யும் நிறுவனம் என்று திருத்தம் சொன்னார்.) அவரும் என் மாமாவும் சிநேகிதர்களாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. எப்படியோ… என் மாமா மூலமாக நான் திருமதி சிவசங்கரியிடம் உதவியாளனாகச் சேர்ந்துவிட்டதாகவே கனவு கண்டேன். அவர் சிறுகதைகளை டிக்டேட் செய்ய, நான் அவற்றை முத்துமுத்தாக எழுத, என் கையெழுத்தை அவர் பாராட்ட… இப்படியெல்லாம் என் கற்பனைக் குதிரை சிலகாலம் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது. ஆனால், எதுவும் நம்ம கையிலா இருக்கிறது? சூழ்நிலைகள் மாற, சிவசங்கரியிடம் உதவியாளனாகச் சேரும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவே இல்லை.

பின்னாளில் நான் சாவி பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இரண்டு முறை சிவசங்கரி அவர்களைச் சந்திக்கும் பேறு கிட்டியது. ஒருமுறை, சாவியின் அழைப்பின்பேரில் அவரின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். மறுமுறை அவரைச் சந்தித்தது, சிறுகதைப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக.

இரண்டு முறையும் அவரை நான் அதே பள்ளிச் சிறுவன் மனோநிலையில்தான் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர, அறிமுகம் செய்துகொண்டு உரையாடும் தைரியம் எனக்கு வரவேயில்லை.

சிவசங்கரியுடன் முதன்முறையாக நான் பேசியது ஒரு துயரமான சூழ்நிலையில்.

அப்போது நான் ஆனந்த விகடனில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன். சாவி சாரின் 85-வது வயது நிறைவையொட்டி, சாவி-85என்ற தலைப்பில் அவரின் சுயசரிதைப் புத்தகத்தைத் தொகுத்திருந்தார் திரு.ராணிமைந்தன். அதன் வெளியீட்டுவிழா நாரத கான சபாவில் நடைபெற்றது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய கலைஞருக்கு நன்றி சொல்லிப் பேசிக்கொண்டிருந்தபோதே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, மயங்கிச் சரிந்தார் சாவி. சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த விழா நிகழ்ச்சிகள் உடனே சோக மயமாக மாறின. சாவி சார் உடனடியாக அப்போலோவில் சேர்க்கப்பட்டார். பல நாள்கள் கோமாவில் இருந்தார்.

அவரை அப்போலோ ஐ.சி.யூ-வில் இரண்டு முறை போய்ப் பார்த்தேன். அப்படிச் சென்றிருந்தபோதுதான் அங்கே சிவசங்கரியைச் சந்தித்தேன். சிவசங்கரியின் கண்கள் கலங்கியிருந்தன. மாமியுடனும் (சாவி சாரின் துணைவியார்) மகள்களுடனும் பேசிக்கொண்டிருந்தார். எழுத்துலகில் சாவி சார் தனக்குத் தந்த அதீத ஊக்கத்தைப் பற்றித்தான் அவர் அப்போது பகிர்ந்துகொண்டிருந்தார். பேச்சினிடையே நான் முன்பு சாவி சாரிடம் பணியாற்றியதைப் பற்றியும், தற்போது விகடனில் பணிபுரிந்துவருவது பற்றியும் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்துகொண்டேன்.

ஆனந்த விகடனில் பொக்கிஷம் புத்தகத் தயாரிப்புக்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், சிவசங்கரி எனும் ஆளுமையின் விஸ்வரூபம் எனக்குப் புலப்படலாயிற்று.

ஆனந்த விகடனில் அவர் எழுதியஒரு மனிதனின் கதை மறக்கக்கூடியதா என்ன? அந்தத் தொடர்கதையைப் படித்தபின்பும் ஒருவன் குடிப் பழக்கத்தைத் தொடர்ந்தான் என்றால், அவனை இனி ஆண்டவனால்கூடத் திருத்த முடியாது என்று அடித்துச் சொல்லலாம். அந்தத் தொடர்கதைக்கான அறிவிப்பை விகடன் ஆசிரியர் அவர்கள் மவுன்ட்ரோட்டில் ஒரு சினிமா பேனர் அளவுக்குப் பெரியதாக, பிரமாண்டமாக சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் வைத்திருந்ததாக ஞாபகம். எனக்குத் தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தனை பெரிய கௌரவம் கிடைத்ததில்லை.

விகடனில் சிவசங்கரி எழுதிய மூன்று தலைமுறைக் கதைபாலங்கள் தொடர்கதையும் அந்த நாளில் வாசகர்களிடையே மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. மூன்று தலைமுறைக்கும் கோபுலு, மாருதி, ஜெயராஜ் என மூன்று ஓவியர்களைப் படம் போடச் செய்திருந்தார் விகடன் ஆசிரியர். ஒரே தொடருக்கு மூன்று ஓவியர்கள் படம் வரைந்ததுவும் அந்நாளில் ஒரு புதுமை.

சிவசங்கரியை வெறுமே கதாசிரியராக மட்டுமே கொள்ள முடியாது. மிகச் சிறந்த கட்டுரையாசிரியரும் ஆவார்.

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரைச் சந்தித்து மிக விரிவான தொடர்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நடிகையர் திலகம் சாவித்திரி உடல்நலிவுற்று கோமாவில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படுத்திருந்தபோது, அவர் கிடந்த கோலத்தைக் கண்ணீர் வரிகளால் கட்டுரையாக்கியிருக்கிறார். கண் தானம் செய்வதன் அவசியம் பற்றி அவர் எழுதிய கட்டுரை அத்தனை அற்புதம்! அதைப் படித்ததுமே விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் முதல் வேலையாக தம் கண்களை தானம் செய்ய எழுதிவைத்தார் என்று சொல்வார்கள். அத்தனை வீரியமுள்ள எழுத்து சிவசங்கரியுடையது. 

இன்றைக்கு நாம் பேசுகிறோமே, திருநங்கைகளுக்கு உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று… அதை அந்தக் காலத்திலேயே விரிவாக, திருநங்கைகளின் துயர வாழ்க்கையை அவர்களின் பக்கமாக நின்று கட்டுரையாக்கியிருக்கிறார்.  

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி.

சமீபத்தில் இரண்டு மூன்று முறை அவரது இல்லத்துக்குச் சென்று அலுவல் நிமித்தமாகப் பேச வேண்டிய சூழல் வந்தது. அப்போதும் மாறாத, அந்தப் பள்ளிச் சிறுவன் மனோபாவத்துடன்தான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன்.

சாவி சாருக்கு 100 வயது பூர்த்தியானதையொட்டி, ஜிம்கானா கிளப்பில் ஒரு சின்ன கெட்டுகெதர் நடத்தினார்கள் சாவி சாரின் அன்பு மகள்கள். என்னையும் அழைத்துப் பெருமைப்படுத்தியிருந்தார்கள். அந்த நிகழ்விலும் திருமதி சிவசங்கரியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். பின்பு, சாகித்ய அகாடமி அமைப்பும் சாவி சாருக்கு விழா ஒன்று எடுத்தது. அதிலும் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்விலும் சிவசங்கரியைச் சந்தித்துப் பேசினேன். இப்படிக் கடந்த ஆண்டில் அவரை ஏழெட்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். என்றாலும், ஒரு கலெக்டருடன் பேசுகிற மரியாதையோடும், ஒரு கல்லூரிப் பேராசிரியரோடு பேசுகிற பயபக்தியோடும்தான் அவருடன் பேசியிருக்கிறேன்.

இந்தச் சந்திப்புகளுக்கெல்லாம் முன்பு, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், திருமதி சிவசங்கரியிடமிருந்து போன்கால். அதாவது, அப்போலோவில் அவரைச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, ரவிபிரகாஷ் என்கிற ஒரு நபரே அவர் நினைவில் பதியாத சூழ்நிலையில், எங்கிருந்தோ என் மொபைல் எண் வாங்கி, என்னைத் தொடர்புகொண்டார் அவர்.

சொல்லுங்க மேடம், என்றதும், கடகடவென மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசினார். ஆம், என் வலைப்பூவில் சாவி சார் பற்றி நான் எழுதியிருந்த பதிவுகளைப் படித்துவிட்டுத் தன் பாராட்டுகளைத் தெரிவிக்கவே அவர் போன் செய்திருந்தார்.

சிவசங்கரி மேம் அன்று என்னைப் பாராட்டியதை, முப்பெருந்தேவியருள் முதலாவதான அன்னை உமையாள் பாராட்டியதாகவே உணர்ந்தேன்; நெகிழ்ந்தேன்.

அவர் என்னைப் பாராட்டியது ஒருபக்கம் இருக்கட்டும்; சாவி சார் பற்றி அவர் அப்போது மகிழ்வும் நெகிழ்வுமாகப் பகிர்ந்துகொண்டவை… அந்த நன்றி விசுவாசம், அது ஒரு நல்ல குருவின் மிகச் சிறந்த சிஷ்யைக்கான அடையாளம்!

அதுதான் சிவசங்கரி!




Wednesday, December 13, 2017

என் வணக்கத்துக்குரிய காதலனே!

Image may contain: 1 person, standing, eyeglasses and outdoor

ன்றைக்கு (12.12.17) எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் நினைவு நாள் என்பதை வேதாகோபாலன் அவர்களின் பதிவு மூலமும், ராஜேந்திர குமாரின் மகன் திரு.நாகராஜ்குமாரின் பதிவு மூலமும் அறிந்துகொண்டேன்.
தொப்பி அணிந்த பிரபலங்கள் என்றதும் எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் தமிழ்வாணன், எம்.ஜி.ஆர்., பாலுமகேந்திரா மற்றும் ராஜேந்திர குமார்.
அப்போதெல்லாம் பத்திரிகைகளில், தொப்பி அணிந்து, தலையைக் குனிந்து, பாதி முகம் மறைந்திருக்க, உள்ளுக்குள்ளிருந்து கூர்ந்து நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ராஜேந்திர குமாரின் புகைப்படங்கள்தான் வெளியாகும். கிட்டத்தட்ட ஒரு டிரேட் மார்க்காகவே அவர் அந்தத் தொப்பியையும் அந்த போஸையும் வைத்திருந்தார்.
நான் அதிகம் பழகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று ஜெயகாந்தன் உள்ளிட்ட சில முக்கிய எழுத்தாளர்களை நினைத்து இன்றைக்கும் வருத்தப்படுவதுண்டு. அவர்களில் ராஜேந்திர குமாரும் ஒருவர்.
எனவே, ‘நான் பழகிய எழுத்தாளர்கள்’ வரிசையில் இவரைப் பற்றி எழுத எனக்கு இவரோடு அதிக அனுபவம் இல்லை. ஆனால், இவரை ஒரே ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இவரின் மகன் திரு.நாகராஜ் குமார் என் இனிய நண்பர். சாவி காலத்து நண்பர்.
நான் சாவி பத்திரிகையில் பணியில் சேர்ந்த புதிதில் அங்கே டிடிபி-யில் கம்போஸிங் செய்பவராக நாகராஜ் குமார் பணியாற்றிக்கொண்டிருந்தார். ‘தானுண்டு தன் வேலை உண்டு’ என்று மிக சாதுவாகப் பணியாற்றிக்கொண்டிருப்பார். சாவி சார் என்னை உள்பட அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த எல்லோரையும் திட்டிப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவரை ஒருமுறையேனும் சாவி சார் திட்டிப் பார்த்ததில்லை. காரணம் இவர் அவ்வளவு பொறுமை; வேலையில் அத்தனை கச்சிதம்!
அப்போது இவர் பிரபல எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் மகன் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், இவரை அப்போதே சிநேகம் பிடித்து, ராஜேந்திர குமார் அவர்களோடு பழகி, இன்றைக்கு என் பெருமைகளில் ஒன்றாக, ‘நான் ராஜேந்திர குமாரின் அன்புக்குப் பாத்திரமானவனாக்கும்’ என்று நீளமாக ஒரு பதிவு போட்டிருப்பேன். ஹூம்... அதற்கு வாய்ப்பில்லாமல் போனது என் துரதிர்ஷ்டம்!
திரு.ராஜேந்திர குமாரின் எழுத்துக்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன் என்று பொய்யாக எழுத விரும்பவில்லை. அவரின் ‘வணக்கத்துக்குரிய காதலியே’, ‘பைரவன் அழைக்கிறேன்’, ‘நான் ஒரு A' ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே படித்துள்ளேன்.
‘வணக்கத்துக்குரிய காதலியே’ படிக்கப் படிக்கத் திகட்டாத நாவல். மிக ஜாலியான, சுவாரஸ்யமான எழுத்து நடையில், கதை ஜிலுஜிலுவென்று நகரும். இது பின்னர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி (இரட்டை வேடம்) நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது. படத்தையும் நான் பார்த்து ரசித்தேன்.
‘நான் ஒரு A' புத்தகத்தை சாவியின் ‘மோனா’ பப்ளிகேஷன் வெளியிட்டதென்று ஞாபகம். எனவே அதையும் படித்திருக்கிறேன்.
எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் எழுத்தை சாவி சார் சிலாகித்துப் பேசிக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் அங்கே பணியாற்றிய கால கட்டத்தில் ராஜேந்திர குமார் சாவியில் எந்தத் தொடர்கதையும் எழுதவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இரண்டு மூன்று முறை அவர் வந்து, சாவி சாருடன் நட்பு ரீதியில் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பின்னர் நான் சில மாத காலம் அமுதசுரபியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அதன் ஆசிரியர் திரு.விக்கிரமனின் உத்தரவின்பேரில் எழுத்தாளர் ராஜேந்திர குமாரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளேன். ஒரே ஒரு முறை சந்தித்திருப்பதாக ஆரம்பத்தில் சொன்னது அதைத்தான்.
அமுதசுரபிக்கென ஒரு சரித்திரக் கதை எழுதித் தந்திருந்தார் ராஜேந்திர குமார். சரித்திரம் என்றால் நிஜ சரித்திரம் இல்லை. கற்பனைக் கதாபாத்திரங்கள், கற்பனைச் சம்பவங்களால் ஆன கற்பனைச் சரித்திரக் கதை. அதை அவருக்கே உரிய பாணியில் ஜிலுஜிலு நடையில் எழுதியிருந்தார்.கதை என்னவோ எனக்குப் படிக்க ரொம்பவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
ஆனால், சரித்திரக் கதை எழுதுவதில் மன்னரான திரு.விக்கிரமனுக்கு அந்த நடை உவப்பாயில்லை. சரித்திரக் கதைக்கென்றே பிரத்யேகமான ‘புரவிகள்’, ‘கழஞ்சு’, ‘ஜாஜ்வல்யம்’, ‘பொற்கிரணங்கள்’, ‘உதயாதி நாழிகை’, ’நடுச்சாமம்’ போன்ற வார்த்தைகள் ஏதுமில்லாமல் எழுதப்பட்டிருந்ததை சரித்திரக் கதையாகவே அவரால் ஏற்க முடியவில்லை. இப்படியான ‘சரித்திர நடை’யில் அந்தக் கதையை மாற்றி எழுதித் தருமாறு கேட்டு, அந்தப் பிரதியை திரு.ராஜேந்திர குமாரிடம் கொடுத்துவிட்டு வருமாறு என்னை அனுப்பினார்.
அதன்படி நான் போய் திரு.ராஜேந்திர குமாரைச் சந்தித்தேன். அப்போது அவர் வீடு பெசன்ட் நகரில் இருந்ததாக ஞாபகம்.
கதையைக் கொடுத்துவிட்டு, திரு.விக்கிரமன் சொல்லியனுப்பியதை அப்படியே அவரிடம் ஒப்பித்தேன். அப்போது திரு.ராஜேந்திர குமார் என்னைப் பார்த்த பார்வை... ‘ஐயா, நான் சொல்லலை. விக்கிரமன் சார் சொன்னதை அப்படியே வந்து உங்ககிட்ட சொல்றேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்கலாமா என்று என்னை யோசிக்க வைத்தது.
Image may contain: 1 person, eyeglasses and closeupபுகைப்படங்களில் பார்த்தது மாதிரியே தலையைக் குனிந்து, தொப்பிக்குக் கீழேயிருந்து, மேல்வெட்டாக என்னைக் குறுகுறுவென்று சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் திரு.ராஜேந்திர குமார். நானும் உள்ளுக்குள் நடுக்கத்தோடு அமைதியாகக் காத்திருந்தேன்.
திடீரென்று, “நாகராஜ்... நாகராஜ்... இங்கே வாடா! இவர் என்னவோ சொல்றார். இங்கே வா. எனக்கொண்ணும் புரியலே” என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.
அடுத்த அறையிலிருந்து ஓடி வந்தார் திரு.நாகராஜ் குமார். ‘அடேடே, இவர் சாவியில் பணியாற்றியவரல்லவா!’ என்று அப்போதுதான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்.
“என்னப்பா, என்ன?” என்றார் நாகராஜ்குமார்.
“இவர் என்னவோ சொல்றாரே! இது சரித்திர நடையிலேயே இல்லையாமே? மாத்தி எழுதித் தரச் சொல்றாராமே? ஏண்டா, ராஜேந்திர குமார் ராஜேந்திர குமார் மாதிரிதாண்டா எழுத முடியும்? விக்கிரமன் மாதிரியா எழுத முடியும்? அதுக்கு நான் எதுக்கு?” என்றவர்,
“சரி, நீங்க போங்க! நான் அவர்கிட்ட பேசிக்கறேன்” என்று என்னை அனுப்பிவைத்தார்.
திரு.ராஜேந்திர குமாரை புகைப்படங்களில் சிரித்த போஸில் நான் பார்த்ததே இல்லை. ’உர்ரென்று’ ஒரு குறுகுறுப்பான முக பாவனையோடுதான் காணப்படுவார். நேரிலும் கோப உணர்ச்சியோடுதான் அவரைப் பார்த்தேன். ‘எனக்கு அந்தக் கதையும் நடையும் பிடித்திருக்கிறது. நான் உங்கள் ரசிகன்’ என்று சொல்ல மனமிருந்தாலும், பயத்தில் வாய் வரவில்லை.
“சரி சார்” என்று எழுந்துகொண்டேன்.
அவரின் அறைக் கதவைத் தாண்டியிருப்பேன். “எதுல வந்தீங்க?” என்று கேட்டார். “பஸ்லதான் சார்” என்றேன். “உங்க வீடு எங்கே?” என்றார். “மேற்கு மாம்பலத்தில் சார்!” என்றேன். உடனே, “டேய், இவரை உன் டூவீலர்ல அழைச்சுட்டுப் போய் இவர் வீட்டுல விட்டுட்டு வா!” என்று மகன் நாகராஜ் குமாரிடம் சொன்னார்.
சடக்கென்று திரு.ராஜேந்திர குமார் மீதான இனம்புரியாத பயம் அகன்று, என் மனசுக்குள் அவர் மிக நெருக்கமாக வந்ததுபோல் நெகிழ்ந்தேன்.
நாகராஜ்குமாரிடம் ‘என்னை பெசன்ட் நகர் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுடுங்க. நான் பஸ் பிடிச்சுப் போய்க்கறேன். நீங்க அவ்ளோ தூரம்லாம் வர வேணாம்’ என்று, அவரோடு வந்து இறங்கிக் கொண்டேன்.
இன்றைக்கு, இதோ இப்போது, இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிற இந்த விநாடியில், ‘திரு.ராஜேந்திர குமார் அவர்களோடு பழகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே’ என்று பரிதவிக்கிறது என் மனம்.
என்ன செய்வது... எல்லா பாக்கியங்களும் எல்லா நேரமும் ஒருவருக்கே கிடைத்துவிடுமா என்ன?!
(திரு.ராஜேந்திர குமாரின் புகைப்படம்: வேதாகோபாலனின் பதிவிலிருந்து சுட்டது - அவரின் முன் அனுமதியின்றி, கோபித்துக்கொள்ள மாட்டார் என்கிற தைரியத்தில், உரிமையில்!)

எடிட்டர் எஸ்.ஏ.பி.


Image may contain: one or more people, sunglasses and closeup

ன்று (12.12.17) குமுதம் எடிட்டர் அமரர் எஸ்.ஏ.பி அவர்களின் பிறந்த நாள் என்பதை எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்களின் முகநூல் பதிவு மூலம் அறிந்தேன்.
'நான் பழகிய எழுத்தாளர்கள்' வரிசையில் வைத்து எழுதும் அளவுக்கு திரு.எஸ்.ஏ.பி-யுடன் நான் அதிகம் பழகியதில்லை. ஆனால், அவர்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்த என் ஆசான் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்கள் சொல்லி, திரு.எஸ்.ஏ.பி-யின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறேன். தவிர, எஸ்.ஏ.பி. அவர்கள் மறைந்த 1994-ம் ஆண்டில், அவரைப் பற்றி 'எடிட்டர்' என்னும் தலைப்பில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கட்டுரை வாயிலாகவும் திரு.எஸ்.ஏ.பி. பற்றி அறிந்திருக்கிறேன். மேலும், என் மரியாதைக்குரிய நண்பர் அமரர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் மூலமாகவும் எஸ்.ஏ.பி அவர்களின் பெருமைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நான் திரு.எஸ்.ஏ.பி அவர்களை நேரில் சந்தித்துப் பேசியது ஒரே ஒருமுறைதான். அந்த ஒரே சந்திப்பே, அவர் எத்தகைய மாமனிதர் என்பதை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.
அப்போது 'சாவி' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தமுடியாமல் பொருளாதார ரீதியாக நிறைய சிரமங்களை அனுபவித்து வந்தார் சாவி. நான் இந்தப் பத்திரிகை தொடர்ந்து நடக்குமா, என் எதிர்காலம் என்ன ஆகும் என்று பயந்து, தவித்து, குமுதத்தில் வேலை கேட்கலாம் என்ற உத்தேசத்தில், அப்போது குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மூலமாக திரு.எஸ்.ஏ.பி அவர்களை குமுதம் அலுவலகத்தில் சந்தித்தேன்.
"குமுதத்தில் சேர விரும்புவதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார் எஸ்.ஏ.பி.
"சாவி இதழ் தொடர்ந்து நடக்குமா என்று தெரியவில்லை. என் எதிர்காலத்தை உத்தேசித்தே இங்கே சேர விரும்புகிறேன்" என்றேன்.
"ஒருவேளை, அதை அவர் தொடர்ந்து நடத்துவதாக இருந்தால் இங்கே சேருவீர்களா?" என்று கேட்டார்.
"மாட்டேன். அங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை. அவர் சாவி இதழைக் கண்டிப்பாகத் தொடர்ந்து நடத்துவார் என்றால், அவரிடமேதான் வேலை செய்வேன்" என்று என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னேன்.
எஸ்.ஏ.பி. அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார். ஒரு புன்னகையுடன் திரும்பி அருகில் இருந்த சுஜாதாவைப் பார்த்தார்.
'இவனையெல்லாம் நம்பி எப்படி வேலைக்கு எடுப்பது?' என்று எண்ணுகிறாரோ, என்று நான் அவரின் அந்தப் புன்னகைக்கு அர்த்தம் செய்துகொண்டேன்.
"சரி, நீங்க இங்கே வந்துட்டா, சாவி பத்திரிகையை யார் கவனிச்சுப்பா?" என்று கேட்டார் எஸ்.ஏ.பி.
"அடுத்த சில வார காலம் சாவி சாரே பார்த்துப்பார். அப்புறம் மூடிடுவார். சில காலம் கழிச்சு எடுக்க வேண்டிய முடிவை, இதைச் சாக்கிட்டு உடனே எடுத்துடுவார். ஏன்னா, இப்போதைக்கு எடிட்டோரியலில் சாவி சாரும் நானும் மட்டும்தான் இருக்கோம்" என்றேன்.
எஸ்.ஏ.பி. யோசனையில் ஆழ்ந்தார். பிறகு "சமீபத்துல ஒரு ஏழெட்டு நாளைக்கு முன்னால சாவி சாரை ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். பத்திரிகையை நடத்த முடியாம சிரமப்படறதைப் பத்திச் சொன்னார். எனக்கு ரொம்பவும் பிடித்த பத்திரிகை சாவி. அதனால நான் அவர்கிட்டே, 'சார், பிரதிகள் விற்பனை குறைவா இருக்குங்கிறதுக்காக பத்திரிகையை நிறுத்திடாதீங்க. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷம், உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காக 2000-மாவது வருஷம் வரைக்குமாவது இதை நீங்க தொடர்ந்து நடத்தணும்னு கேட்டுக்கறேன்'னு அவரிடம் சொன்னேன். அவர் சிரிச்சுக்கிட்டே 'ஆகட்டும். நீங்க இப்படிச் சொன்னதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. எஸ்.ஏ.பி என்கிற பெரிய வாசகருக்காகவே இதை நான் நடத்தறேன்'னு உற்சாகமா சொன்னார். அப்படியிருக்கும்போது, இப்போ நான் உங்களை இங்கே வேலைக்கு எடுத்துக்கிட்டா அது நல்லாருக்குமா? 'ஏய்யா... 2000 வரைக்கும் சாவியை நடத்தணும்னு எங்கிட்ட சொன்ன கையோடு, என்கிட்டே இருக்கிற ஒருத்தனையும் பிடுங்கிக்கிட்டா எப்படி?'னு சாவி சார் கேட்டா, நான் என் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வெச்சுப்பேன்?" என்றார்.
எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாக அவரே ஒரு முடிவு சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
"சரி, நீங்க போய் பழையபடியே அவர்கிட்டே உற்சாகமா வேலை செய்யுங்க. அவர் எப்போ பத்திரிகையை மூடறாரோ, அப்போ வாங்க. உங்களுக்கான இடம் எப்பவும் இங்கே காலியா இருக்கும்" என்றார்.
அதுதான் எஸ்.ஏ.பி.
அதன்பின் அடுத்த ஆண்டே, பொருளாதார நெருக்கடிகளால் சாவி இதழைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டார் சாவி. ஏற்கெனவே கடும் சிரமத்தில் இருந்த அவரின் கோபத்தைத் தூண்டுவதுபோல் நான் என்னையறியாமல் நடந்துகொண்டுவிட்டேன் என்பதும் ஒரு காரணம். எஸ்.ஏ.பி அவர்கள் அதற்கு முன்பே அமரராகிவிட்டதால், அதன்பின் அங்கே செல்ல விரும்பாமல், ஆனந்த விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு இரண்டே வரிகளில் என் நிலையைத் தெரிவித்து வேலை வாய்ப்பு கேட்டேன். அவர் உடனே என்னைச் சேர்த்துக்கொண்டார். அதன்பின் ஒருநாள், "உங்களை இங்கே வேலையில சேர்த்துக்கறதுக்கு முன்னாடி சாவி கிட்டே கேட்டேன், 'பையன் எப்படி, ஊக்கமா வேலை செய்வானா?'ன்னு. அவர் உடனே, "தங்கமான பையன். அவனை நீங்க வேலைக்கு எடுத்துக்கிட்டீஙகன்னா அவன் உங்களுக்கு ஒரு 'அஸெட்'டாகவே இருப்பான்'னு உங்களைப் பத்தி ரொம்பவும் புகழ்ந்து சொன்னார்" என்றார். எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! ஏனென்றால், என்மீது சாவி சார் கடுங்கோபத்தில் இருப்பார் என்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் அதையெல்லாம் மறந்து என்னைப் பற்றி உயர்வாக விகடன் சேர்மனிடம் சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்தபோது என் கண்கள் கலங்கியேவிட்டன.
எத்தகைய மாமனிதர்களுடன் பழகியிருக்கிறேன் என்கிற நினைப்பு ஒன்றே போதும், இந்த என் ஜென்மத்தை அர்த்தமுள்ளதாக்க!

Friday, December 08, 2017

அவரின் அணுக்கம், எனது ‘பாக்கியம்’!

நான் பழகிய சில எழுத்தாளர்களுடனான என் அனுபவங்கள் பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். அந்த வரிசையில் அடுத்ததாக, நகைச்சுவை மாமன்னர் பாக்கியம் ராமசாமி பற்றிக் கொஞ்சம் எழுதிவைத்திருந்தேன். அதை பிரின்ட் அவுட் எடுத்து, நாளைய சனிக்கிழமையன்று (9.12.17) அவரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் காண்பித்து, அவரிடம் பேசி, கூடுதலாக வேறு ஏதேனும் விஷயங்கள் சேர்த்துவிட்டுப் பதிவிடலாம் என்று எண்ணியிருந்த நேரத்தில், எதிர்பாராத அதிர்ச்சியாக இன்று காலையில் என்னை அதிர வைத்தது அவரின் மரணச் செய்தி!

சந்தோஷமான ஒரு பதிவாக வலைதளத்தில் ஏறியிருக்க வேண்டிய இந்தக் கட்டுரை, அஞ்சலிக் கட்டுரையாக மாறிய கொடுமையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

பாக்கியம் ராமசாமி சார் “ரவ்வி… ரவ்விப்ரகாஷ்ஷ்..” என்று என் பெயரை அழுத்தி உச்சரித்து அழைக்கும்விதமே என்னை அவர் இறுக அணைத்துக்கொள்வதுபோல் இருக்கும். அவரின் கலகல சிரிப்பு, நம் இதயப் புண்கள் எல்லாவற்றையும் ஆற்றும் மாமருந்து.

இதயம், நுரையீரல் என என் உள்ளுறுப்புகளில் ஏதோ ஒன்று கழன்று காணாமல் போய், அந்த இடம் காலியாக இருப்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது அவரின் இழப்பு.   

oooooooo

சின்ன வயசில் அப்பா எனக்கு அறிமுகப்படுத்திய பெயர் ‘பாக்கியம் ராமசாமி’. குமுதம் பத்திரிகையில் வெளியான ‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ தொடர்களுக்கு என் அப்பா பெரிய ரசிகர். தான் அவற்றைப் படித்து ரசித்துச் சிரிப்பதோடு என்னையும் படிக்கச் சொல்வார்.

அன்றைக்கு, ஜோக்குகளில் உள்ள நகைச்சுவையையே புரிந்துகொள்ள முடியாத என்னால் ஒரு கதையைப் படித்து அதில் உள்ள நகைச்சுவையை அனுபவிக்கத் தெரியவில்லை. ஆனாலும் படித்தேன். ஒரு கதையின் அத்தியாயத்தில், அரபு ஷேக் ஒருவரின் முன் மண்டியிட்டு அவரின் மந்திரி நீளமாக பீடிகை போட்டு வசனங்களாகப் பேசி வணக்கம் தெரிவித்து மன்னிப்புக் கேட்பது போன்ற பகுதி இடம்பெற்றிருந்தது. புரியவில்லை என்றாலும், அது எனக்கு ஏனோ மிக சுவாரஸ்யமாக இருந்தது. அதுதான் ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்’ தொடர்கதை.

அதன்பின், கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும், அதாவது நான் பத்தாம், பதினொன்றாம் வகுப்புகளில் படிக்கும்போது, அப்புசாமி – சீதாப்பாட்டி படக்கதைப் புத்தகங்களாக வெளியானவற்றையெல்லாம் வாங்கிப் படித்தேன். அதில், அப்புசாமிதான் சீதாப்பாட்டிக்கு (அப்போது பாட்டியல்ல! இளம்பெண் சீதா) ஏ-பி-சி-டி புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அவளின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதாகவெல்லாம் கதைகள் இருக்கும்.

பின்னாளில், ‘சாவி’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் ‘பாக்கியம் ராமசாமி’ அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அப்போது குமுதம் பத்திரிகையிலிருந்து விலகியிருந்த நேரம். சாவி அவரைத் தம் பத்திரிகையில் எழுத அழைத்தார்.

சாவி அவர்களின் இல்லம் அப்போது அண்ணா நகரில், ஆதர்ஷ் காலேஜுக்கு எதிரில் இருந்தது. கீழே சாவி பத்திரிகை அலுவலகமும், மாடியில் சாவி சாரின் வீடும்.

அப்போது நான் சாவி இதழில் ‘இளவட்டம்’ என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதிக்கொண்டிருந்தேன். சாவி எழுதித் தரும் பதில்களில் சில நேரம் ஓரிரு பதில்களைச் சற்றே எடிட் செய்தோ அல்லது வேறு ஒரு பதிலையோ எழுதி அவரிடம் காட்டுவதுண்டு. வேறு எந்தப் பத்திரிகையாளரிடமாவது இப்படி என்னால் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று யோசிக்கக்கூட முடியவில்லை. அப்படி நான் செய்யும் திருத்தங்களைப் பார்த்துவிட்டு, “நீயே கேள்வி-பதில் எழுதேன், ரவி!” என்றார் சாவி ஒருநாள். திடுக்கிட்டுப் போனேன்.

“ஏன் பயப்படறே? நல்லாதானே எழுதறே! ட்ரை பண்ணு. எல்லாம் சரியா வரும்” என்று ஊக்கப்படுத்தினார். அவரேதான் ‘இளவட்டம்’ என்று பெயர் வைத்தார். சாவி இதழில் ஒரே நேரத்தில் சாவி பதில்கள், இளவட்டம் பதில்கள் என இரண்டுமே வெளியாகின. ஒருமுறை, கொஞ்சம் செக்ஸியான கேள்வி ஒன்று சாவி சாருக்கு வந்தபோது, ‘ரீ-டைரக்ட் டு இளவட்டம்’ என்று பதில் கொடுத்திருந்தார்.

அந்தக் கேள்வி… “டெபோனிர் பத்திரிகையை வாங்கியதும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்தப் பக்கத்தை?”

டெபோனிரில் அப்போது நடுப்பக்கத்தில் முழு நிர்வாணப் படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதை மனதில் கொண்டுதான் அந்த வாசகர் குறும்பாக இந்தக் கேள்வியை எழுதி அனுப்பியிருந்தார். இதற்குத்தான் ‘ரீ-டைரக்ட் டு இளவட்டம்’ என்று தன் கேள்வி-பகுதியில் பதில் கொடுத்திருந்தார் சாவி.

அந்தக் கேள்வி அதே இதழில் ‘இளவட்டம் பதில்கள்’ பகுதியில், ‘அக்கம்பக்கத்தை’ என்னும் பதிலோடு வெளியானது. அந்த பதிலும் சாவி சொன்ன பதில்தான்!

அதன்பின், சாவி சார் இரண்டாவது முறையாக ‘குங்குமம்’ பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பேற்றபோது, அதில் ‘அசரீரி’ என்னும் தலைப்பில் என்னைக் கேள்வி-பதில் பகுதி எழுதச் சொன்னார். எழுதினேன். பின்னர், ‘அசரீரி’ என்னும் தலைப்பை ‘கதிர் பதில்கள்’ என கலைஞர் மாற்றிவிட்டார். அதன்பின் சில மாதங்களில், சாவி சாரே அங்கிருந்து விலகிவிட்டார். இது தனிக் கதை.

திரு.பாக்கியம் ராமசாமி, சாவி அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, தான் இளவட்டம் பதில்களைத் தொடர்ந்து படிப்பதாகச் சொல்லி, அந்த இளவட்டத்தைச் சந்திக்க வேண்டுமே என்று சாவி சாரிடம் கேட்டார். அருகில் நின்றிருந்த என்னைக் காட்டி, “இதோ, இவன்தான்!” என்றார் சாவி. “மத்தவங்க..?” என்று பா.ரா. கேட்க, “இவன் ஒருத்தன்தான். வேறு யாரும் இல்லை!” என்று சாவி சார் சொன்னதும், பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! “நான் ஏதோ இளைஞர் பட்டாளம் ஒண்ணு உள்ளே வந்திருக்குன்னல்லவா நினைச்சேன்!” என்றார்.

சாவி சாரைப் போலவே மனசு திறந்து பாராட்டக்கூடியவர் பாக்கியம் ராமசாமி.

ஒருமுறை, A4 சைஸ் தாள்களைப் பாதியாகக் கிழித்து என் டேபிளில் அடுக்கி வைத்திருந்தேன். “இது என்ன?” என்று கேட்டார் பா.ரா. “கதை, கட்டுரை ஏதாவது எழுதறதுக்கு சார்!” என்றேன். “இதை எதுக்கு வேலை மெனக்கெட்டு பாதிப் பாதியா கிழிச்சு வெச்சிருக்கே? அப்படியே எழுத வேண்டியதுதானே?” என்றார். “இல்ல சார், முதல்ல ஒரு பாரா எழுதின பிறகுதான், என்னால ஒரு ஃபார்முக்கு வர முடியும். அதுக்கப்புறம் கடகடன்னு எழுதி முடிப்பேன். ஆனால், அந்த முதல் பாராவை சரியா எழுதறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடும். A4 ஷீட்டுல எழுதினா, அடிச்சுட்டு மறுபடி எழுதணும். அது என் மூடை அப்செட் பண்ணிடும். தொடர்ந்து அதுல எழுத முடியாது. அதனால நான் இந்த ட்ரிக்கைக் கைப்பிடிக்கிறேன்” என்றேன். “இது நல்லாருக்கே! நானும் இனிமே இதை ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்” என்றார்.

பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே என்மீது அவ்வளவு வாஞ்சை கொண்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி. “ரவி, நீ வீட்டுக்கு எப்படிப் போவே?” என்று கேட்டார்.

நான் அப்போது ஒரு ஓட்டை உடைசல் டூ வீலர் வைத்திருந்தேன். அதில் போவதாக அவரிடம் சொன்னேன்.

“என்னைக் கொஞ்சம் பனகல் பார்க்ல இறக்கி விட்டுடறியா?” என்றார்.

எனக்குத் திடுக்கென்றது. நானே சுமாராகத்தான் ஓட்டுவேன். அதிலும் வண்டி வேறு சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. இவ்வளவு பெரிய எழுத்தாளரை எப்படி அதில் அழைத்துச் செல்ல முடியும்? அவர் போன்ற மாமனிதர் உட்காரச் சற்றும் தகுதியான வண்டியே இல்லை அது. எனவே, தயங்கினேன்.

“என்ன தயங்கறே? விழுந்துடுவேன்னு பார்க்கறியா? விழ மாட்டேன். தைரியமா வா!” என்றார். தயக்கமே இல்லாமல் என் டி.வி.எஸ். எக்ஸெல் வண்டியில் என் பின்னால் அமர்ந்துகொண்டார். டொர்… டொர்ரென்று ஒரு மொக்கை வண்டியில் அவரை உட்கார வைத்து அழைத்துச் செல்ல எனக்குத்தான் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. அவர் அதுபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

தான் பெரிய எழுத்தாளர் என்கிற கர்வமோ பந்தாவோ கொஞ்சம்கூட இல்லாதவர் பாக்கியம் ராமசாமி சார்.

அவரை அறிமுகம் செய்துவைக்கவும், அந்த மாமனிதரின் ஆசிகளைக் கிடைக்கச் செய்யவும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் நான் என் மகனை அழைத்துப் போயிருந்தேன். அவன் சின்ன பையன் என்றெல்லாம் பாராமல், சரிக்குச் சமமாக அவனோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் பா.ரா.

“ஏதோ ஃபேஸ்புக்னு என்னவோ சொல்றாங்களே… உனக்குத் தெரியுமா? எனக்குக் கொஞ்சம் சொல்லித் தாயேன்” என்றார்.

என் மகன் அங்கேயே, அவரின் சிஸ்டத்திலேயே அமர்ந்து ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஓப்பன் செய்து, கவர் பிக்சர், புரொஃபைல் பிக்சர் எல்லாம் செட் செய்து, அவர் சொன்ன சில வரிகளை முதல் பதிவாகப் பதிவேற்றியும் கொடுத்தான். அவரின் உதவியாளர் அனில் கேட்ட சில சந்தேகங்களுக்கு விளக்கமும் தந்தான். (இதை பா.ரா-வின் மகன் யோகேஷும் அனிலும் இன்றைக்கு நினைவுகூர்ந்து பேசினார்கள்.).

அதன்பின் அந்த ஃபேஸ்புக்கை அனிலே சிறப்பாகக் கையாளத் தொடங்கினார். பா.ரா. அதை ஒரு பத்திரிகை போலவே நடத்தி, பரிசுப் போட்டி எல்லாம் அதில் வைத்து, வெகு விரைவில் 5000 நட்புகளைத் தாண்டிவிட்டார்.

ஆனந்த விகடனில் அவரின் நகைச்சுவைக் கதைகள் பலவற்றைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன். குறிப்பாக, பஃபே விருந்தில் நின்றுகொண்டே சாப்பிடும் சங்கடம், எதை முதலில் எடுத்துச் சாப்பிடுவது என்கிற குழப்பம் ஆகியவற்றை வைத்து அவர் எழுதிய ஒரு சிறுகதையும், நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் எதையாவது ஒன்றுகிடக்க ஒன்று சொல்லி நோயாளிக்கு பீதி ஏற்படுத்துவது பற்றி அவர் எழுதிய ஒரு சிறுகதையும் அத்தனை நகைச்சுவையாக இருக்கும்.

வீட்டுக்கு வீடு சிஸ்டமும், கணினிப் பயன்பாடும் தொடங்கிய அந்த ஆரம்ப காலத்தில், கந்த சஷ்டி கவசம் பாணியில் விகடனில் ‘கணினி சிஸ்ட கவசம்’ ஒன்று எழுதினார் பா.ரா. அது வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

கதைகள் எழுதியது மட்டுமல்லாமல், ஒருசில ஆங்கில கார்ட்டூன் படங்களுக்கு தமிழ் வசனமும் எழுதியிருக்கிறார் பா.ரா. என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

அவரின் குருநாதர் எஸ்.ஏ.பி. பற்றிப் பல சிலிர்ப்பான, ரசனையான விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பா.ரா. தன் நண்பர் ரா.கி.ரா. பற்றி, புனிதன் பற்றியெல்லாம்கூடச் சொல்லியிருக்கிறார்.

அவர் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்கிற உறுத்தலும் வருத்தமும் எனக்கு இருக்கிறது.

ஒன்று… அவர் அன்போடு பலமுறை அழைத்தும், அவர் நடத்திய அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு ஒரு தடவைகூட நான் போனதில்லை. போகக்கூடாது என்றில்லை; ஏதோ வேலை, என்னவோ ஒரு காரணம்!

மற்றொன்று… நான் மிகத் தீவிர டி.எம்.எஸ். ரசிகன் என்று என் ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாக அவருக்குத் தெரியும். ஆனால், நேரில் பார்க்கும்போதெல்லாம் கதை, கட்டுரை, பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் என்றுதான் பேச்சு ஓடுமே தவிர, டி.எம்.எஸ். பற்றி நாங்கள் பேசிக்கொண்டதில்லை.

சில மாதங்களுக்கு முன்னால், அவர் வழக்கம்போல் ஒருநாள் போன் செய்திருந்தார்.

“ரவி, ஃபேஸ்புக்ல நீ டி.எம்.எஸ். பத்தி அடிக்கடி எழுதறதைப் பார்த்து, இன்னிக்கு ஒரு டி.எம்.எஸ். பாட்டை முழுசா கேட்டே ஆகணும்னு தோணிடுச்சு. அடிக்கடி டி.வி-யில டி.எம்.எஸ். பாட்டு ஏதாவது காதுல விழும்னாலும், இன்னிக்கு வேற யோசனை எதுவும் இல்லாம, அப்படியே முழுசா உட்கார்ந்து ஒரு பாட்டைக் கேக்கணும்னு நினைச்சேன். எங்கிருந்தோ புடிச்சு, எனக்காக டி.எம்.எஸ்ஸின் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…’ பாடலைப் போட்டுக் காண்பிச்சார் அனில். ஹப்பா… என்னமா பாடறார்! நீ அவரோட ரசிகனா இருக்கிறது ரொம்பச் சரிதான். அடேங்கப்பா… என்னா பக்தி, என்னா குரல்… இனிமே ஒருத்தன் பிறந்துகூட வரமுடியாது இவர் போலப் பாட…” என்று டி.எம்.எஸ்ஸை வானளாவப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் பாக்கியம் ராமசாமி. நான் காது குளிரக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பேச்சின் தொடர்ச்சியாக, “ஒரு இடத்துல ‘கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…’னு பாடறார் பாரு. ‘அடடா’ன்னு இருக்கு. ரவி, நீயும் நானும் சேர்ந்து டி.எம்.எஸ் நினைவா ஏதாவது செய்யணும். தணிகை மலையில் கல்லாவேன்னு பாடினாரே, சும்மா வெறுமே பாட்டுக்காக இல்லை; மனசுலேர்ந்து அவர் அந்த வரியைப் பாடற மாதிரி எனக்குத் தோணிச்சு. அதனால, அவர் ஆசைப்பட்டதை நிறைவேத்தி வைக்கணும்னு எனக்கு ஆசை. திருத்தணிகை மலையில் ஏறுற படிக்கட்டுகள்ல ஒரு படிக்கட்டாவோ, அல்லது அங்கேயிருக்கிற ஏதாவது ஒரு கருங்கல் தூணாவோ தயார் செஞ்சு, டி.எம்.எஸ்., பாடகர், முருக பக்தர், தோற்றம்-மறைவு எல்லாம் போட்டு, நிரந்தரமா அங்கே வெச்சுடணும். என்ன சொல்றே… திருத்தணி போற பக்தர்கள் கண்ணுல எல்லாம் அது படணும். அவ்வளவு பெரிய பாடகருக்கு ஓர் உண்மையான ரசிகனா இதை நான் செய்யணும்னு ஆசைப்படறேன். இதுக்கான செலவு மொத்தத்தையும் நான் ஏத்துக்கறேன். இதுக்கு யார்கிட்டே பர்மிஷன் கேக்கணும், அறநிலையத்துறைல யார்கிட்டே இதுபத்திப் பேசணும், என்ன பட்ஜெட் ஆகும்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்” என்றார்.

அதற்குப் பின்பும் இரண்டு மூன்று தடவை பேசியபோதும், வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் இந்த விஷயத்தையும் ஞாபகப்படுத்துவார். ஆரம்பத்தில் நானும் முயற்சி எடுத்து அது குறித்து விசாரித்தேன். ‘சொல்லின் செல்வர்’ திரு. பி.என்.பரசுராமன், ‘இமயத்துடன்’ சீரியலை இயக்கிய இயக்குநர் விஜய் ஆகியோருடனும் இதுபற்றிக் கலந்தாலோசித்தேன். அப்புறம், என் வேலை மும்முரத்தில் அது மறந்தே போனது.

அவரின் ஆசையை நிறைவேற்றித் தர இயலாமல் போனதில் எனக்கு உள்ளபடியே வருத்தம்தான்.

பாக்கியம் ராமசாமி எவ்வளவுக்கெவ்வளவு நகைச்சுவையாளரோ அவ்வளவுக்கவ்வளவு தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். பெரியவர்களுக்கே லேசில் புரியாத தத்துவ விசாரங்கள் அடங்கிய ‘பகவத் கீதை’யை இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வதுபோல அவர்கள் மொழியில் மிக எளிமையாக அவர் எழுதிய ‘பாமர கீதை’யே இதற்கு சாட்சி!   

ஒருமுறை, என்னிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர், “ரவி, இப்ப நான் சிலரோட பெயர்களைச் சொல்லிக்கிட்டே வரேன். கவனமா கேளு. கடைசியில ஒரு கேள்வி கேட்பேன். பதில் சொல்லணும். சரியா?” என்றார்.

“சரி சார்” என்று தயாரானேன்.

“காஞ்சிப் பெரியவர், கிருபானந்த வாரியார், எஸ்.ஏ.பி., எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் காந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சில்க் ஸ்மிதா, ஸ்மிதா பாட்டீல், டி.ஆர்.ராஜகுமாரி, ராம்சுரத்குமார், சாவித்திரி, தேவிகா, ஜெமினி கணேசன், மகாராஜபுரம் சந்தானம், ஜி.கே.மூப்பனார், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, மைக்கேல் ஜாக்சன், ராஜ்கபூர், ராஜேஷ்கன்னா, தேவ் ஆனந்த், வி.பி.சிங், வாஜ்பாய், வேதாத்ரி மகரிஷி, சத்யசாயி பாபா, சுஜாதா, சாவி, நாகேஷ், குன்னக்குடி வைத்தியநாதன், லா.ச.ராமாமிருதம்…” என, ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் எல்லாம் கலந்துகட்டி, கடகடவென ஐம்பது அறுபது பெயர்களுக்கு மேல் சொல்லிக்கொண்டுபோய், மூச்சு வாங்க நிறுத்தினார் பா.ரா.

பின்பு, “இப்ப நான் சொன்ன அத்தனை பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்னன்னு சொல்லு, பார்க்கலாம்!” என்றார்.

என்ன யோசித்தும், இந்தக் கலவையான பட்டியலில் இருப்பவர்களுக்கிடையே என்ன ஒற்றுமை இருக்கிறது என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை.
“தெரியலை சார், நீங்களே சொல்லிடுங்க!” என்று சரண்டரானேன்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பின், “இவங்க அத்தனை பேரும் நம் சம காலத்தவங்க. இவங்கள்ல யாரும் இப்ப உயிரோட இல்லைங்கிறதுதான் ஒத்துமை!” என்றார்.

அவர் இதைச் சொன்னதும், என் நெஞ்சு ஒரு தடவை திடுக்கெனத் தூக்கிப்போட்டது.

வாழ்க்கையின் அநித்யத்தை இதைவிட யாரும் சுலபமாக, சுருக்கமாகச் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது என்று தோன்றியது.

“நான் சொன்னது கொஞ்சம்தான். இன்னும் யோசிச்சா நம் சம காலத்துல, நம் கண்ணெதிரே வாழ்ந்து மறைஞ்ச இன்னுமொரு ஆயிரம் பேரை நம்மால பட்டியல் போட முடியும். அப்படின்னா, வாழ்க்கைங்கிறது எவ்ளோ சின்னது பாரு! இதுக்குள்ளேதான் மனுஷங்களுக்குள்ளே அத்தனை போட்டி, பொறாமை, சண்டை!” என்றார்.

அவர் சொன்ன இந்த விஷயம் இன்னமும் என் மண்டைக்குள் குடைந்துகொண்டிருக்கிறது.

இப்போது அந்தப் பட்டியலில் மேலும் ஒரு பெயர் சேர்ந்துகொண்டதில், என் மனக் குடைச்சல் அதிகமாகிவிட்டது.

Tuesday, September 22, 2015

(அசோக) மித்திரனின் மித்திரன் நான்!

(செப்டம்பர் 22 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்த நாள்)

அசோகமித்திரன் என்ற பெயர் எனக்கு 30, 35 ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சயம்.

1980-81-ல் வேலை தேடி நான் சென்னையில் அலைந்துகொண்டிருந்த காலகட்டம். மாம்பலத்திலிருந்து கே.கே.நகர் பஸ் ஸ்டாண்டைக் கடந்து எம்.ஜி.ஆர். நகரை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். எதற்காக நடந்தேன் என்று தெரியாது. கிட்டத்தட்ட, காரணமின்றி இங்கேயும் அங்கேயும் சுறுசுறுப்பாக நடைபோடும் நாயின் நிலைதான் என் நிலையும்!

கே.கே.நகர் பஸ் ஸ்டாண்டைக் கடந்ததும் ஒரு ரவுண்டானா. அதைக் கடந்தால், ஒரு பள்ளிக்கூடம் வரும். அதன் வாசலில் ஒரு கரும்பலகையில் ‘இன்று மாலை 4 மணிக்கு, எழுத்தாளர் அசோகமித்திரன் உரையாற்றுகிறார்’ என்று சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தது. மணி அப்போது 4-தான் இருக்கும். உள்ளே ஆரவாரமாக இருந்தது. கதவைத் திறந்து உள்ளே போனேன். பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களுமாக கூட்டம் அதிகம் இருந்தது. மேடையில் நாலைந்து நாற்காலிகள் போட்டு, ஆசிரியப் பெருமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் யார் அசோகமித்திரன் என்று எனக்குத் தெரியவில்லை.
பின்னர் ஒருவர் மைக் பிடித்து, “இப்போது திருவாளர் அசோகமித்திரன் அவர்கள் நம்மிடையே உரையாற்றுவார்” என்றதும், அசோகமித்திரன் எழுந்து வந்தார். இலக்கியம், தமிழ், கல்வி, மாணவர்களின் கடமை எனப் பேசினார். அன்றிருந்த என் சூழ்நிலையில் அவரின் உரையை சுவாரஸ்யமாகக் கேட்கும் மனநிலை எனக்கு இல்லை. சற்று நேரம் கேட்டுவிட்டு, போரடிக்கவே, அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

பின்னர், 1987-ல் சாவி பத்திரிகையில் பிழை திருத்துவோனாகச் சேர்ந்து, 89-ல் அதன் முழுப் பொறுப்பையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தேன்.

ஒருநாள் சாவி சார், “அடுத்த இதழ்லே ஒரு புதிய தொடர்கதை ஆரம்பிக்கிறோம். ‘மானசரோவர்’னு தலைப்பு. இந்த இதழ்லே ஒரு பக்கம் அறிவிப்பு வெச்சுடு” என்றார். “யார் சார் எழுதப் போறாங்க?” என்றேன். 

”அசோகமித்திரன்” என்றார் சாவி.

அசோகமித்திரனின் சில சிறுகதைகளை அதற்கு முன்பு நான் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவற்றுள் குறிப்பாக, புலிக்கலைஞன், எலி ஆகிய கதைகள் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை.

மானசரோவரின் முதல் அத்தியாயத்தை அவர் தன் மகனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். அடுத்தடுத்த அத்தியாயங்களை தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினார். சில நேரங்களில் கதை ரெடியாகிவிட்டதென்று போன் செய்வார். அட்டெண்டரை அனுப்பி வாங்கி வரச் செய்வேன்.

வழக்கமாக தொடர்கதை அத்தியாயங்களை முன்கூட்டியே கொடுத்துவிடுவார். ஒருமுறை, அத்தியாயம் கிடைக்கத் தாமதமாகிவிட்டது. மறுநாள் காலையில் தந்துவிடுவதாக அட்டெண்டரிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.

அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன். அப்போது தி.நகரில் கிருஷ்ணவேணி தியேட்டருக்குப் பக்கத்துத் தெருவில் (தாமோதரன் தெரு என்று ஞாபகம்) குடியிருந்தார். நான் மேற்கு மாம்பலத்தில், கோதண்டராமர் கோயில் தெருவில் குடியிருந்தேன். ஓராள் நிற்கும்படியான கிச்சன்; ஐந்துக்கு ஐந்து உள்ள ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் (பல குடித்தனங்கள் கொண்ட பகுதி அது) என் சகோதரி குடும்பத்துடன் நானும் தங்கியிருந்தேன்.

மறுநாள் காலையில் அத்தியாயம் ரெடியாகிவிடும் என்று சொன்னதாலும், எனக்கு தி.நகர் பக்கம் என்பதாலும், கதை அவசரம் என்பதாலும், மறுநாள் நானே நேரில் சென்று வாங்கி வரலாம் என்று எண்ணினேன்.

மாலை 6 மணி இருக்கும். ஆபீசிலிருந்து வீடு திரும்பி, வீட்டில் ரிலாக்ஸ்டாக காபி குடித்தபடி அமர்ந்திருந்தேன்.


சார்என்று வாசலில் குரல் கேட்டது. எழுந்து போய்ப் பார்த்தேன். பெரியவர் ஒருவர் கையில் ஒரு கவருடன் நின்றிருந்தார். “இது ரவிபிரகாஷ் வீடுதானே?” என்று கேட்டார். “ஆமாம். நான்தான். என்ன விஷயம் என்று சொல்லுங்கள்என்று கேட்டேன்.

அசோகமித்திரன் வீட்டிலிருந்து வரேன். இந்த வாரத்துக்கான அத்தியாயத்தைக் கொடுத்துட்டு வரச் சொன்னார்என்று அந்த கவரை என்னிடம் நீட்டினார். ‘சரிஎன்று வாங்கி வைத்துக்கொண்டேன். “இந்த முறை லேட்டானதுக்கு ஸாரி சொல்லச் சொன்னார்என்றார். “அதனாலென்ன, பரவாயில்லை!” என்றேன். அந்தப் பெரியவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

எண்ணியிருந்தபடி நானே நேரில் போய் அசோகமித்திரனைச் சந்தித்து அத்தியாயத்தை வாங்கி வரலாம் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் போனதில் வருத்தம்தான்.

ஆனால், அடுத்த வாரம் கதை ரெடியானதாக அசோகமித்திரனிடமிருந்து போன் வந்ததும், அட்டெண்டரை அனுப்பவில்லை. நானே போய் வாங்கி வர முடிவு செய்தேன். அதன்படி மறுநாள், தி.நகரிலுள்ள அவரின் இல்லத்துக்குச் சென்றேன்.

வழியை அடைத்தாற்போல் ஒரு பெஞ்சு போடப்பட்டு, அதில் முழுக்கப் புத்தகங்கள் இரைந்து கிடந்தன. உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. “எழுத்தாளர் அசோகமித்திரன் இருக்காரா?” என்று குரல் கொடுத்தேன்.

எழுத்தாளர் கிழுத்தாளர்னெல்லாம் இங்கே யாரும் கிடையாது. நான் தியாகராஜன் இருக்கேன். உங்களுக்கு யார் வேணும்?” என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தது. பின்னாடியே அவர் வந்தார்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவர்தான் எழுத்தாளர் அசோகமித்திரன். அவர்தான் அசோகமித்திரன் என்பதில் தூக்கிவாரிப் போட என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? அவர்தான் முந்தின வாரம் என் வீடு தேடி வந்து, யாரோ ஒரு பெரியவர் மாதிரி, அத்தியாயம் கொடுத்துச் சென்றவர்.

அதற்கு முன்பு அசோகமித்திரனை நான் எம்.ஜி.ஆர். நகர் பள்ளியில், தூரத்தில் மேடையில் பார்த்திருக்கிறேன். தவிர, அது நடந்து பல வருடங்களாகிவிட்டன. எனவே, அன்றைக்கு என் வீடு தேடி வந்தவர் அவர்தான் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், சந்தேகத்துக்கே இடமில்லாதபடி, அசோகமித்திரன் வீட்டிலிருந்து வருவதாக அவர் அன்று சொன்னதால், யூகிக்கவும் இடம் இல்லாது போயிற்று. இல்லம் தேடி வந்த அத்தனைப் பெரிய இலக்கியவாதிக்கு ஒரு காபி கூட உபசரிக்காமல் அனுப்பிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி என்னைப் பிடுங்கியெடுத்தது.

அதற்குப் பிராயச்சித்தமாக, அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் நானே அவர் வீடு தேடிச் சென்று, ‘மானசரோவர்அத்தியாயங்களை வாங்கி வருவது என வழக்கத்தில் வைத்துக்கொண்டேன். மானசரோவர் தொடர் முடியும் வரை அப்படித்தான் வாங்கி வந்தேன்.
அதன்பின், 1995-ல் சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டு, நான் ஆனந்தவிகடனில் பணியில் சேர்ந்தேன். சுமார் ஒரு மாத காலம் கழித்து ஒரு தபால் கார்டு வந்தது. போஸ்ட் கார்டில் இரண்டே வரி... “திரு.ரவிபிரகாஷ், இப்போது எங்கே இருக்கிறீர்கள்? - அசோகமித்திரன். அவ்வளவுதான்.
நான் உடனே அவரைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் அதே தி.நகரில் சிவா-விஷ்ணு கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு தெருவில் இருந்த அப்பார்ட்மெண்ட்டின் தரைத் தளத்தில் குடியிருந்தார் என்று ஞாபகம்.. நான் அங்கே சென்றேன். அவரிடம் நான் ஆனந்த விகடனில் சேர்ந்திருக்கும் விஷயத்தைச் சொன்னேன். “நல்ல இடத்துலதான் போய்ச் சேர்ந்திருக்கீங்க. நானும் அங்கே ஜெமினி ஸ்டுடியோவில் சில காலம் பணியாற்றியிருக்கிறேன்” என்றார்.
பின்னர் சில மாதங்கள் கழித்து, மூன்று பாகங்களாக வந்த ஒரு புத்தகம் குறித்து விகடனில் என்னை விசாரிக்கச் சொல்லியிருந்தார்கள். என்ன புத்தகம், யார் ஆசிரியர் என்பதெல்லாம் நினைவில் இல்லை. (டயரி எழுதுகிற பழக்கமோ, முக்கிய நிகழ்வுகளைக் குறித்து வைக்கிற பழக்கமோ எனக்கு இல்லாததால், நடந்த சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.) அசோகமித்திரன் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று சொல்லி, என்னை விசாரித்து வரும்படி அனுப்பினார்கள்.

அதன்படி, அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் குறிப்பிட்ட ஒரு பிரமுகரின் பெயரைச் சொல்லி (அவர் பதிப்பகத்தாரா, இலக்கியவாதியா என்பது ஞாபகம் இல்லை) அவரைத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன்.

இங்கே பிஞ்சால சுப்பிரமணியன் தெருன்னு ஒரு தெரு இருக்கே, தெரியுமா?” என்றார். தெரியாது என்றேன். (தெரியாது என்று சொல்ல நான் வெட்கப்படுவதே இல்லை.)

அந்தத் தெருவில்தான் அவர் இருக்கார். அவரிடம் அந்தப் புத்தகம் இருக்கும். ஒரு நிமிஷம் இரு!” என்றவர், ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்பினார்.

என்னை அழைத்துக்கொண்டு அந்தத் தெருவுக்குச் சென்றார். தெரு முனையில் இருந்தது அவர் குறிப்பிட்ட வீடு. இந்த வீடா, பக்கத்து வீடா என்று தெரியவில்லை. ஒரு வீட்டில் ஏறி, விசாரித்தார். அவர்கள் பக்கத்து வீடு என்று கை காட்ட, வெளியேறி, பக்கத்து வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

அங்கே, அசோகமித்திரன் குறிப்பிட்ட அந்த நபர் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொல்லி அசோகமித்திரன் கேட்க, அவர் உடனே அந்தப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார்.

பயன்பாடு முடிந்ததும், இரண்டு வார காலம் கழித்து அந்தப் புத்தகங்களை மீண்டும் அந்த பிரமுகரிடமே திருப்பிக் கொண்டு கொடுத்துவிட்டேன்.

திரு.அசோகமித்திரன், பிஞ்சால சுப்பிரமணியன் தெருவுக்கு வழி சொல்லி, என்னை அனுப்பியிருக்கலாம். ஆனால், பொறுப்பாக தானே என்னோடு வந்து, அவரிடம் பேசி, புத்தகங்களைப் பெற்றுத் தந்த அந்த அதீத அக்கறை என்னை நெகிழ வைத்தது.

ஓராண்டுக்கு முன்பு, காலச்சுவடு பத்திரிகை நேர்காணலில் அசோகமித்திரன் என்னைப் பற்றி ஒரு வரி குறிப்பிட்டுள்ளார். மிக நீளமான அந்த பேட்டிக் கட்டுரையில் என்னைக் குறிப்பிடும் பாரா மட்டும் கீழே.

''நான் பல சமயங்களில் நிர்ப்பந்தங்களால்தான் எழுதினேன். மானசரோவர் நான் ஏதோ திட்டம் போட்டு எழுதியதாக நினைக்காதீர்கள். ஒரு சமயம் நான் சாவியைப் பார்த்தேன். நாரதகான சபாவிலோ வேறு எதோ ஒரு நிகழ்ச்சியிலோ அவர் என்னைப் பார்த்துஎன்னப்பா ஒரு கதை கொடுக்கறியாஎனக் கேட்டார். அவர் எல்லோரையும்என்னப்பாஎன்றுதான் கேட்பார். உடனே தலைப்பும் தரச் சொன்னார். நான் உடனே மானசரோவர் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு இவ்வளவு பொறுப்பற்ற தன்மையோடு ஒரு எழுத்தாளன் இருப்பானா என்று தோன்றும். அப்போது பிரதி தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம். அதனால் கார்பன் வைத்துக்கொண்டு பால் பாயிண்ட் பேனாவால்தான் எழுத வேண்டும். அப்படி எழுதியதை ரவி பிரசாத் என்று ஒருவர் வாங்கிக் கொண்டு போவார். அவர் இப்போது ஆனந்த விகடனில் வேலைபார்க்கிறார் என்று சொன்னார்கள். அந்தக் கதையை சாவி படித்ததே இல்லை."
ரவிபிரகாஷ் என்பதை ரவிபிரசாத் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தனை வயதிலும் என்னை நினைவு வைத்திருந்து பேட்டியில் குறிப்பிட்ட அந்த மாமனிதரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பதை ஃபேஸ்புக்கில் போன வாரம்தான் ஒரு ஸ்டேட்டஸாகப் போட்டிருந்தேன். பார்த்தால், இன்று அவருக்குப் பிறந்த நாள்.
அநேகமாக, இம்மாத இறுதிக்குள்ளாக அவரைத் தேடிச் சென்று ஆசி பெறுவேன். அவரின் பிறந்த நாள் நினைவாக இந்தக் கட்டுரையை, என் வலைப்பூவில் வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்துப் பதிவிடுகிறேன்.