உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, March 20, 2009

நன்றி... நன்றி... நன்றி..!

பிளாக் எழுதத் தொடங்கியது முதலே, எனது ஜிமெயில் இன்பாக்ஸில் தினசரி இரண்டு மூன்று புதியவர்களின் இ-மெயில் களாவது வந்து விழுகின்றன. புதிய புதிய முகம் தெரியாத நண்பர்கள் தினம் தினம் கிடைப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என் பிளாக் குறித்து எனது ஜிமெயிலுக்கு வந்த ஒரு சிலரின் கடிதங்களை இங்கே கொடுத்துள்ளேன். தவிர, என் பிளாகிலேயே காமென்ட்ஸ் பகுதியில் சிலர் தங்கள் அபிப்ராயங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

பிளாக் எழுதுவது பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிருந்தேனே தவிர, அது எப்படி என்ன என்று தெரியாது. சமீபகாலமாகத்தான் அது பற்றிய ஆர்வம் வந்து, விகடனில் என்னுடன் பணியாற்றிய நண்பர் தளவாய் சுந்தரத்திடம் கேட்டேன். 'அது ஒன்றும் பெரிய வித்தை இல்லை' என்று, பிளாக் அமைப்பது பற்றிக் குறிப்புகள் தந்தார்.

வீட்டுக்குச் சென்றதும் என் குழந்தைகளிடம் (ஷைலஜா - 10-ஆம் வகுப்பு; ரஜ்னீஷ் - 8-ஆம் வகுப்பு) பிளாக் எழுதவிருப்பது பற்றிச் சொன்னேன்.
"ஐயே! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லேப்பா! உனக்கு பிளாக்தானே பண்ணித் தரணும். நான் பண்ணித் தரேன்" என்றான் மகன் ரஜ்னீஷ்.

"எப்படிடா உனக்குத் தெரியும்?" என்றேன் நம்பமுடியாமல்.

"ஏற்கெனவே நானே எனக்கு ஒரு பிளாக் பண்ணி வெச்சிருக்கேனே!" என்று தன் பிளாகைக் காண்பித்தான். கம்ப்யூட்டரில் தான் வரைந்த படங்கள், ஏதேதோ போட்டோக்கள் என்று நிஜமாகவே, சுமாராக ஒரு பிளாக் வைத்திருந்தான்.

"சரி, எனக்கு ஒரு பிளாக் பண்ணிக் கொடுடா!" என்றேன்.

அதன்பின் என் மகள், மகன் இருவருமாக டிஸ்கஸ் செய்து எனக்கான பிளாகை வடிவமைத்துக் கொடுத்தார்கள். "பிளாகுக்குத் தலைப்பு என்ன வைக்கட்டும்?" என்று கேட்டார்கள். 'ஏடாகூடம்' என்று வைக்கச் சொன்னேன். முதலில் அப்படித்தான் வைத்தார்கள். பிறகு, "பிளாக் டிஸ்ப்ளேவில் அப்படி வந்தால் நன்றாக இல்லை. பெயர் மட்டும் அப்படி இருக்கட்டும். மற்றபடி, ரவிபிரகாஷ் என்ற உன் பெயர் பெரிதாக வருகிற மாதிரி பிளாகை டிஸைன் செய்கிறோம்" என்று சொல்லி, அப்படியே மாற்றிவிட்டார்கள். தவிர, ஆனந்தவிகடன் சம்பந்தப்பட்ட செய்திகள் பக்கவாட்டில் வருகிற மாதிரி, ஏதோ காமெடி படங்கள் ஓடுகிற மாதிரி, இயற்கைக் காட்சிகள் ஸ்லைடு ஷோவாக மாறுகிற மாதிரி, மேட்டருக்குக் கீழே நியூஸ் ரீல் ஓடுகிற மாதிரி என்று என்னென்னவோ விஷயங்கள் சேர்த்து, மேட்டரை போஸ்ட் பண்ணுவது எப்படி என்றும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களால் ஆங்கில மேட்டர்கள்தான் போஸ்ட் செய்ய முடிந்தது.

மீண்டும் நண்பர் தளவாயிடம், தமிழில் எழுதி போஸ்ட் செய்வது எப்படி என்று கேட்டேன். "முதலில், நெட்டிலிருந்து முரசு அஞ்சல் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பிறகு..." என்று அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை. "கொஞ்சம் இருங்கள்" என்று சொல்லிவிட்டு, செல்லில் மகனை அழைத்து, அவனையே அவரிடம் விளக்கமாகக் கேட்டுக்கொள்ளச் சொன்னேன். அவர் அவனிடம் விளக்கினார். புரிந்துகொண்டு, அதன்படியே கச்சிதமாகப் பண்ணி முடித்துவிட்டான்.

இரவு நான் வீட்டுக்குப் போனதும், கம்போஸ் செய்யும் மேட்டரை எப்படி முரசு அஞ்சல் மூலம் யூனிகோடாக மாற்றி, பிளாகில் போஸ்ட் செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தான்.

இன்றுவரையிலும், நான் என் கட்டுரைகளைக் கம்போஸ் செய்து, பிளாகில் போஸ்ட் செய்வது தவிர, மற்ற செட்டிங்ஸ்களை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியாது. பிளாகை வடிவமைத்தது என் மகன் என்றால், 'அதை இப்படி இப்படிச் செய், இயற்கைக் காட்சிகள் படத்தை ஸ்லைடு ஷோவாகப் போட்டு இயற்கையை நேசிப்போம் என்று தலைப்பு வை, அரவிந்த அன்னை படத்தைப் பக்கவாட்டில் போட்டு அதன் கீழே 'எங்களை வாழவைக்கும் தெய்வம்' என்று கேப்ஷன் கொடு, ஆனந்த விகடன் நியூஸ் வருகிற மாதிரி வை' என அவனை வழிநடத்தி, அழகுபடுத்தியது பூரா என் மகள். மேட்டருக்குள்ளும் படங்கள் போடலாம் என்று சொல்லி, அந்த டெக்னிக்கைக் கற்றுக்கொடுத்தது என் மகள்தான். முதல்முறையாகப் பதிந்த சிறுகதைக்கு நெட்டிலிருந்தே ஒரு படத்தை வைத்ததோடு மட்டுமின்றி, அதை எப்படியோ ஓடவும் விட்டிருக்கிறாள் என் மகள்.

இன்றைக்கு நிறையப் பேர் என் பிளாகைப் பார்த்துப் படித்துப் பாராட்டுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் என் மகனும் மகளும்தான் என்பதை மகிழ்ச்சியோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலில் என் பிளாகைப் பார்த்து, சுஜாதா கட்டுரையை தமது பிளாகில் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டவர் திரு.தேசிகன். எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். இன்று என் பிளாகைப் பார்த்துவிட்டுக் கடிதம் எழுதும் பல பேர், அவர் பிளாக் மூலமாகத் தெரிந்துகொண்டவர்கள்தான். அவருக்கு என் நன்றி!

இனி...

Dear Sir,
My Name is desikan, fan of sujatha.
I read your article in your blog. I would like to consolidate the same in my website.
Can I reproduce it ?
- Desikan

** **

Hi,
I am not sure if you remember me, but I am Sakunthala Athai's daughter. I came across you blog (and your mail id) from Deskian's blog (Desikan pakkam), which I read on and off. I was filled with old memories and nostalgia, when I came across your name.
Amma used to think of you fondly and I always associate the magazine (and the editor himself) Saavi with you. Just wanted to send you a note, I am sure it is a long shot and won't blame you if you don't remember me :)
Hope your parents, wife and kid (or is kids?) are doing well.
Cheers,
Akila

**
அன்புள்ள திரு. ரவிபிரகாஷ்,

நலம். நாடலும் அதுவே!

தங்கள் ப்ளாக் கண்டேன், திரு. சுஜாதாபற்றிய உங்கள் அனுபவங்கள் மிகவும்நெகிழ்வூட்டும்வகையில் எழுதப்பட்டிருந்தன, சுஜாதா அவர்களின் எண்ணற்ற வாசகர்கள், அவரைப் பார்த்து எழுத வந்தவர்களில் ஒருவனாக, அதனை மிகவும் உணர்ச்சியுடன் வாசித்தேன், மனம் கனத்துப்போனது!

இந்தப் பதிவுகளுக்காக, உங்களுக்குத் தனிப்பட்டமுறையில் நன்றி
சொல்லவேண்டும் என விரும்புகிறேன், அதற்காகவே இந்த மின்னஞ்சல்.

என் பெயர் நாகசுப்ரமணியன், 'என் சொக்கன்' என்ற பெயரில் எழுதிவருகிறேன்,பல மாதங்கள்முன் விகடனில் எழுதிக்கொண்டிருந்தபோது உங்களுடன் சிலமுறை
தொலைபேசியில் பேசியிருக்கிறேன், உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை!

நேரம் இருக்கும்போது, முடிந்தால் பதில் எழுதுங்கள், நன்றிகள்!

என்றும் அன்புடன்,

என். சொக்கன்,
பெங்களூர்.

** **
அன்பின் ரவிபிரகாஷ் அவர்களுக்கு!

சுஜாதா குறித்த தங்கள் நினைவலைகளை தங்களது வலைப்பூவில் கண்டேன். ஒப்பாரியாக இல்லாமல் மிக இயல்பாக எழுதியிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. கட்டுரைக்கு நன்றி!

அன்புடன்

லக்கிலுக்.

** **
அன்புள்ள ரவிபிரகாஷ்,

வணக்கம். தற்செயலாக இன்றைக்கு உங்கள் Blog பார்த்தேன். மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. நீங்கள் வலைப்பதிவில் எழுதுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. கூகுள் தேடலில் சுஜாதாவைக் குறிச்சொல்லாக இட்டு யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தபோது உங்களுடையது அகப்பட்டது.

இது ஒரு சிறந்த மனப்பயிற்சி. நமக்குத்தோன்றுவதை எழுதிப் பார்த்துக்கொண்டே இருப்பதன்மூலம் எண்ணத்தையும் எழுத்தையும் சுத்திகரித்துக்கொண்டே இருக்கலாம்.

பத்திரிகைப் பணி அவசர நெருக்கடிகளிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளவும் இந்தப் பயிற்சி கைகொடுக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள். நான்கு வருடங்களுக்கு முன்னர் நானும் எழுதிக்கொண்டிருந்தேன். இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்திவிட்டு இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறேன்.

சொந்தமாக ஓர் இணையத்தளம் கட்டி, வேர்ட் ப்ரஸ் நிறுவி எழுதத் தொடங்கியுள்ளேன். (http://www.writerpara.net/) என்னைப் பொறுத்தவரை தொடர்கள் எழுதும் பணிக்கு இடையில் என் எழுத்தை நானே உரசிப் பார்த்து மதிப்பிட்டுக்கொள்ள வலையில் எழுதுவது பேருதவியாக இருக்கிறது.

ரிப்போர்ட்டரில் மாயவலை 200 அத்தியாயங்களைத் தொடுகிறது. போதும் என்று நினைக்கிறேன். ஏப்ரலுடன் நிறுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். வேறு ஏதாவது எழுதலாம் என்கிற எண்ணம்.
நீங்கள் கேட்ட இலங்கை குறித்த கட்டுரைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். கெடு தேதி மீறாமல் திங்களன்று தந்துவிடுகிறேன்.

மிக்க அன்புடன்

பா. ராகவன்

** **
அன்புள்ள ரவிபிரகாஷ்,

இன்றுதான் முதல்முறையாக உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். மகிழ்ச்சியோடு உங்களை வலைப்பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.

உங்களது 'சாவி' நாட்கள் பற்றிய பதிவு பல நினைவுகளைக் கிளறிவிட்டது.சாவியின் இயல்புகள் பலவற்றை மிகையின்றியும் காழ்ப்பின்றியும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கண்ணன் மகேஷ் - சங்கரநாராயணன் 'சர்ச்சை'யைப் படித்து முறுவலித்தேன். அறிவு ஜீவி எழுத்தாளர்களிலிருந்து அற்ப ஜீவி எழுத்தாளர்கள் வரை நம் எழுத்தாளர்களை அவர்களது ஈகோ தின்று கொண்டிருக்கிறது. தங்களைத் தாண்டி உலகைப் பார்க்க அறியாத சிறுபிள்ளைகள் அவர்கள்.Subjectiveஆக சிந்திப்பத்னாலேயே அவர்கள் எழுத்தாளனாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாமெல்லாம் பத்திரிகையாளனாக மலரக் கிடைத்தது நம்முடைய நல்ல விதி. பததிரிகையாளன் எப்போதும் முழுச் சித்திரத்தையும் பார்க்க வேண்டியவனாக இருக்கிறான். தன்னுடைய கதைப் பக்கங்களை மட்டுமல்ல, இதழின் 96 பக்கத்தையும் ஒருமையுடன் பார்க்க வேண்டிய கடமை அவன் முன் நிற்கிறது. இது அவனுக்குத் தன்னைத் தாண்டிச் செல்லும் மனவிரிவையும், துணிச்சலையும் தருகிறது. சாவி சார் தன் பதில்களைக் கிழித்துப் போட்டது இதனால்தான்.

ஒரு எழுத்தாளன் பத்திரிகையாளனாக மலர்வது ஒரு பரிணாம வளர்ச்சி என்று நான் பல முறை சொல்லியிருக்கிறேன். அதை உங்கள் பதிவைப் படித்து மீண்டும் நினைவிற் கொண்டேன்.

அன்புடன்

மாலன்.

** **

அன்புள்ள ரவிபிரகாஷ் ஸார்,

வணக்கம், நலமா?
உங்கள் பிளாக் பார்த்தேன். ஒன்றிரண்டு பதிவுகளிலேயே பேசப்படும் பிளாக்குகளில் ஒன்றாகிவிட்டது.

'சுஜாதாவும் நானும்' ஒரு வாசகர் குறிப்பிட்டுள்ளது போல், முக்கியமானது. ஆங்காங்கே, இதுபற்றி பின்னால் விரிவாக எழுதுவேன் என நீங்கள் குறிப்பிட்டு செல்பவை படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.
தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் அனுபவங்கள், புதிய பத்திரிகையாளர்களுக்கு பாடமாக இருக்கும்.

அன்புடன்

தளவாய் சுந்தரம்.

** **
அன்புள்ள ரவிப்ரகாஷ்,

வணக்கம்.

உங்கள் வலைப்பூ பார்க்க நேர்ந்தது. உங்களுடன் பரிச்சயமிருந்த நாட்களில் அறிந்ததை விடவும் இப்போது உங்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது. உங்களை நேரில் சந்தித்திருக்கா விட்டாலும் [ஒரு முறை முயன்றும் முடியாமல் போனது :-) ],
நான் நிறைய எழுதி வந்த சமயத்தில் நீங்கள் நிறைய ஊக்குவித்ததால் ஒரு நெருக்கமான நண்பராகவே என் மனதில் உருவகமாகியிருக்கிறீர்கள் (என்னை எழுதியவர்கள் - பாகம் 8).அதனாலேயே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைப்பூவில் பார்த்தவுடன் எழுதிவிடும் ஆவல் எழுந்தது.

அப்போதெல்லாம் எழுத்தை நம்பி வாழ்ந்து விடலாமோ என்ற நப்பாசை கூட இருந்தது. முடியாது என்று உள்மனம் உறுத்திக் கொண்டே இருந்ததால், பணிக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து எழுத்தை மிகவும் குறைத்துக் கொண்டேன். இப்போது கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறேன்.

என் இணையத் தளத்தில் (http://www.sathyarajkumar.com) அமெரிக்க குட்டிக் கதைகள் பத்துப் பதினைந்தும், தமிழோவியம் மின்னிதழில் படைத்த வித்தியாசமான 3D கதைகளும் தவிர பெரிதாய் எதுவும் எழுதவில்லை. முக்கியமாய் இங்கிருந்து தபாலில் கதை எழுதி அனுப்பிக் கொண்டிருக்க சோம்பல்தான் காரணம்.

மூன்று வருடங்களுக்கு முன் விகடனுக்கும் குமுதத்திற்கும் மின்னஞ்சலில் அனுப்பிப் பார்த்தேன், அது என்னானதென்றே தெரியாததால் விட்டு விட்டேன். இப்போது பத்திரிகைகளின் இணைய வசதியைப் பார்க்கிற போது மீண்டும் எழுதலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டு சோதனைக்காக அமெரிக்க பின்னணியிலான ஒரு சிறுகதையை விகடனுக்கு இரண்டொரு வாரங்களுக்கு முன் மின்னஞ்சலில் அனுப்பினேன். அக்கதையை உங்கள் பார்வைக்காகவும் இத்துடன் இணைத்துள்ளேன்.

நேரமிருப்பின் இரண்டொரு வரிகள் எழுதுங்கள்.

மிக்க அன்புடன்,

சத்யராஜ்குமார்.

சத்யராஜ்குமாரின் 'என்னை எழுதியவர்கள்' தொடரிலிருந்து ஒரு பகுதி...

‘...நான் கதை எழுதி மிகப் பெரிய ஆள் ஆகப் போகிறேன் என்று நம்பியவர்களில் ராஜேஷ்குமாருக்கு அடுத்தபடியாக சாவி பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷைச் சொல்லலாம். இப்போது விகடனில் இருக்கிறார்.

குமுதத்திற்கு மாலைமதி போல சாவி பத்திரிகைக்கு மோனா.
அதில் கார் ரேஸை வைத்து நான் எழுதிய 60 கிலோ மீட்டர் அதிர்ச்சி என்ற குட்டி நாவலை நான் ஆரம்பத்தில் ஆசைப்பட்ட மாதிரியே அட்டையில் கொட்டை கொட்டையாய் என் பெயரைப் போட்டு வெளியிட்டிருந்தார்.

Indy 500 எனப்படும் சர்வதேச கார் பந்தயத்துக்குப் புகழ் பெற்ற இண்டியானாபொலிசில் இப்போது குடியிருக்கிறேன். அந்தக் கதையை இன்னும் விஷயச் செறிவோடு இப்போது எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அடிப்படையில் நான் ஆட்டோமொபைல் என்ஜினீயர் என்பதால் ஒரு க்ரைம் கதையின் நடுவே கார் சங்கதிகள் இழையோட விட்டு, முடிந்த மட்டும் நன்றாகவே எழுதியிருந்தேன்.

அதற்கப்புறம் ‘நகராதே நட்சத்திரா’ என்ற சயன்ஸ் ·பிக்க்ஷன். இரண்டு பாகங்கள் கொண்ட கதை. அறிவிப்பு வெளியிட்டு விட்டேன் சீக்கிரம் இரண்டாவது பாகம் அனுப்புங்கள் என்று அவர் வெள்ளிக் கிழமை கேட்டு, சனிக் கிழமை எழுதி முடித்து, திங்கட்கிழமை அனுப்பி, செவ்வாய்க் கிழமை அவர் கைக்குக் கிடைத்து விட்டது.

அந்தக் கதைகளை நான் எழுதி அனுப்பிய வேகத்தைப் பார்த்து, பத்திரிகையுலகில் ஒரு பெரிய ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கப் போகிறீர்கள் என்று வியப்புடன் வாழ்த்தினார் ரவிபிரகாஷ்.’

** **

அனைவருக்கும் மீண்டும் என் இதயபூர்வமான நன்றிகள்!

0 comments: