
எனக்கு நினைவு தெரியத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் சிவாஜி ரசிகனாகத்தான் வளர்ந்தேன். நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, என்னைப் போன்று சிவாஜி ரசிகர்களாக இருக்கும் பிள்ளைகளுடன்தான் நட்பு பாராட்டுவேன். எம்.ஜி.ஆரை ஒரு பையன் ரசிக்கிறான் என்றால், அவன் நிச்சயம் ஒரு ரவுடியாகத்தான் இருப்பான் என்று என்னவோ இனம்புரியாத பயம் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் என் மனதில் எழுந்திருந்தது. சிவாஜியின் படப் பாடல்களை ரசித்துக் கேட்கும் நான், எம்.ஜி.ஆர். பாடலையும் உள்ளுக்குள் ரசிப்பேன். வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டேன். சிவாஜியே சொந்தக் குரலில் பாடுகிறார் என்பது என் அப்போதைய எண்ணம். சிவாஜி அளவுக்கு எம்.ஜி.ஆரும் பாடிவிடுகிறாரே என்று மனசுக்குள் ஒரு காழ்ப்பு உணர்வு எழும். இருவருக்குமே டி.எம்.எஸ். என்கிற ஒரு காந்தர்வக் குரலோன்தான் பின்னணி பாடுகிறார் என்கிற உண்மை எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் தெரிய வந்தது. டி.எம்.எஸ்ஸின் அற்புதமான பாடல்களாலேயே நான் என்னையும் அறியாமல் எம்.ஜி.ஆரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ‘குமரிக் கோட்டம்’. என் சின்ன வயதில் மிகவும் அரிதாகத்தான் நான் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் சிவாஜி படங்கள்தான். இல்லையென்றால் பக்திப் படம். பத்தாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான், நான் தனியே சென்று திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கினேன். சிவாஜிக்கு அடுத்தபடியாக நான் அப்போது சென்று ரசித்துப் பார்த்தவை ஜெய்சங்கர் படங்கள்தான்.

சிவாஜி நடிப்போடு எம்.ஜி.ஆர். நடிப்பை ஒப்பிடக் கூடாது. சிவாஜி படத்தோடு எம்.ஜி.ஆர். படத்தை ஒப்பிடக் கூடாது. இட்லி இட்லிதான்; தோசை தோசைதான்; பொங்கல் பொங்கல்தான்; பூரி பூரிதான். ஒவ்வொன்றும் ஒவ்வொறு சுவை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடக் கூடாது. இந்த ஞானம் வந்த பின், நான் நிறைய எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் ஆனதிலிருந்து அவர் மறையும் வரையில் நான் அ.தி.மு.க. விசுவாசியாகத்தான் இருந்தேன். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றைக்கும் என் ஓட்டு அவருக்குத்தான்.
எனக்குத் தெரிந்து அவரின் ஆட்சி, பொற்கால ஆட்சிதான். அவரின் ஆட்சியிலும் எத்தனையோ போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள், கொலை, கொள்ளை போன்றவை நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இன்று போல் ஒட்டு மொத்தமாகச் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய்விடவில்லை. எம்.ஜி.ஆர். இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்; ஜனங்களுக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும்; அவர் ஒரு முடிவு எடுத்தால், அது சரியாகவே இருக்கும். அவர் ஏழை எளியவர்களைக் கைவிட மாட்டார்; தவறு செய்கிறவர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனிடமும் அன்றைக்கு இருந்தது.
1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன்... வருடம் சரியாக நினைவில் இல்லை; அப்போது நான் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தங்கிக்கொண்டு, டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸுக்குப் படித்துக்கொண்டு இருந்தேன். ஆறு வார கோர்ஸ் அது. கோடை விடுமுறையில், அந்தப் பள்ளி வளாகத்தின் வகுப்பறைகளை எங்களைப் போன்ற மாணவர்கள் குழுக் குழுவாகத் தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தார்கள். ஆறு வார முடிவில் அந்தப் பள்ளியிலேயே தேர்வு நடத்தப்பட்டது.
மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருந்த அரசுப் பள்ளி அது. காபி, டிபன், சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் நீள, நெடுக நடந்து ‘வெற்றி’ தியேட்டர் வரை வர வேண்டும். அப்படி ஒரு நாள் காலையில் 8 மணி சுமாருக்கு, நானும் என் நண்பர்களுமாக வந்து டிபன், காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பிச் செல்கிறபோது, அங்கேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரே கூட்டமாக இருந்ததைப் பார்த்தோம். கூட்டம் என்றால் பெருங்கூட்டம் இல்லை; ஒரு முப்பது நாற்பது பேர் இருப்பார்கள். என்னவென்று அறிய ஆவலோடு போய் எட்டிப் பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். வந்திருந்தார். காவல்துறை உயர் அதிகாரிகளோடு அவர் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தார். அவர் முகத்தில் கவலை படிந்திருந்தது. என்ன பிரச்னை என்று அப்போது தெரியவில்லை. நான் எம்.ஜி.ஆரை மிக அருகே பார்த்தது அப்போதுதான்! அவர் கிளம்பிச் செல்கிறவரைக்கும் இருந்து, அவரைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டுப் பின்னர் நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.
பின்புதான், அகரம் நாராயணன் என்கிற ஒரு ரவுடி அன்றைக்கு அதிகாலையில் குரோம்பேட்டையில் சாலையோரம் இருந்த ரிக்ஷாக்காரர், பங்க் கடைக்காரர் என ஐந்தாறு பேரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டான் என்கிற விஷயம் தெரிய வந்தது. அதற்காகத்தான் நிலைமையை ஆராய எம்.ஜி.ஆரே நேரில் வந்துவிட்டுப் போயிருந்தார். அகரம் நாராயணன் காலில் ஸ்ப்ரிங் பூட்ஸ் அணிந்திருப்பான், எத்தனை உயரமான சுவரானாலும் சுலபமாக எகிறித் தாவிப் போய்விடுவான், அவனைப் பிடிக்கவே முடியாது என்றெல்லாம் வதந்திகள். எம்.ஜி.ஆர் போலீஸ் படையை முடுக்கிவிட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவனைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டார். குரோம்பேட்டை மக்களுக்கு நெடு நாளாக இருந்த ஒரு தலைவலி ஓய்ந்தது.
என்றாலும்கூட, கலைஞருக்கு இன்று தொட்டதற்கெல்லாம் பாராட்டு விழாக்கள் நடக்கிற மாதிரி எம்.ஜி.ஆருக்கு நடந்ததாகவே தெரியவில்லை. இத்தனை ஜால்ரா சத்தங்கள் அன்றைக்கு நம் காதைக் கிழிக்கவில்லை. துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!
எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.
யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.
ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.
எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!
.