உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

போரை நிறுத்திய யோகி!

1962-ம் ஆண்டு, இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. சீனப்படையினர் இந்திய வீரர்களை வேட்டையாடி, வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆன்மிகத் துறவி ஒருவர் இங்கிலாந்தில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் அப்போது அங்கிருந்த மக்களிடம், “நான் உடனடியாக இந்தியா செல்ல வேண்டும். போரைத் தடுத்து நிறுத்த என்னாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்” என்று கூறி, விடைபெற்றுக்கொண்டு இந்தியா வந்தார். இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தைச் சந்தித்து, “இந்தப் போரைத் தடுத்து நிறுத்த என்னால் முடியும். ஆனால், போர் நடக்கும் இடத்தில் நான் சொல்கிறபடி சில விஷயங்களை உங்களால் செய்து தர முடியுமா?” என்று கேட்டார்.

“மன்னிக்கவும். அப்படிச் செய்ய இயலாது. ஆளும் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு செய்வார்கள். ஆகவே, அரசு சம்பந்தப்படாமல் நீங்களே தனியாக ஏதாவது செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என்றார் ஜனாதிபதி.

பின்னர் அந்த யோகி தமது செயலாளர் தேவேந்திராவை அழைத்துக்கொண்டு, போர் நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கே அருகில் உள்ள ஒரு மலைக்குகைக்குச் சென்றவர், “இந்தப் போர் நடப்பதற்கு முக்கியக் காரணம், சீனாவில் உள்ள ஒரு மனிதரின் மூளைதான்! அவர் மனத்தை மாற்றிவிட்டால் போதும், போர் நின்றுவிடும். இப்போது நான் அதைத்தான் செய்யப் போகிறேன். தியானம் செய்து அவரின் மூளையில் படிந்திருக்கும் போர் எண்ணத்தை மாற்றப் போகிறேன். தியானம் முடிந்து நான் வெளியில் வரும் வரை இங்கேயே காவலாக இரு. யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று தியானத்தில் அமர்ந்தார்.


24 மணி நேரம் இடைவிடாத தியானம். பின்பு வெளியே வந்த அந்த யோகி, தேவேந்திராவிடம் அருகிலிருந்த ஊருக்குச் சென்று அன்றைய நாளேடு ஒன்றை வாங்கி வரும்படி உத்தரவிட்டார். நாளேட்டை வாங்கிப் படித்த தேவேந்திராவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ஆம்... சீனா சண்டையை நிறுத்தி, தன் படைகளை இந்திய எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதுதான் அதில் தலைப்புச் செய்தியே!

அந்த யோகி வேறு யாருமல்ல... ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுவதும் பரப்பிய ஆன்மிகத் துறவி மகரிஷி மகேஷ் யோகிதான்.

மேலே சொன்ன தகவல், மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட ‘மகரிஷியின் ஆழ்நிலை தியானம்’ என்னும் புத்தகத்தில் உள்ளது.

மத்தியப் பிரதேசம், ஜபல்பூர் அருகே உள்ள ‘சிச்லி’ என்ற கிராமத்தில் பிறந்தவர் மகேஷ் யோகி. இயற்பெயர் மகேஷ் பிரசாத் வர்மா. பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடராகி, தியானம், யோகம் ஆகியவற்றைக் கற்றார். 1953-ம் ஆண்டு இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்து, ஆழ்நிலைத் தியானத்தை போதித்து வந்தார்.

1957-ல் சென்னை, மயிலாப்பூரில் ‘ஆன்மிகப் புத்துணர்வு இயக்கம்’ என்னும் அமைப்பின் சார்பாக தியான மையம் தொடங்கினார். அது பின்னர் ‘மகரிஷி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரியேட்டிவ் இன்டெலிஜென்ஸ்’ என்று விரிந்து பரந்தது. இதன் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தில் மகேஷ் யோகியின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டது.

1958-ல் அமெரிக்கா சென்றார். சாமானியர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரும் இவரது சீடர்களானார்கள். ‘அகில உலக தியான ஸ்தாபனம்’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். அமெரிக்காவில் தமது ஆன்மிக இயக்கம் பிரபலமான பின்பு, ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டார். பின்னர் சீனா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பிரிட்டன், மலேயா, நார்வே, ஆஸ்திரேலியா, கிரேக்கம், இத்தாலி, கிழக்கிந்தியத் தீவுகள் என உலகம் முழுவதும் பல நாடுகளில் தியான மையங்கள் தொடங்கினார். அவை இன்றைக்கும் இயங்கி வருகின்றன.

இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. சயின்ஸ் ஆஃப் பீயிங் அண்ட் தி ஆர்ட் ஆஃப் லிவிங் - டிரான்சென்டென்டல் மெடிட்டேஷன்’, ‘மெடிட்டேஷன்ஸ் ஆஃப் மகரிஷி மகேஷ் யோகி’ எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.

1960-களில் புகழ்பெற்ற ‘பீட்டில்ஸ்’ பாடகர் குழுவினருக்குக் குருவாக விளங்கியவர் மகேஷ் யோகி. அமைதி மற்றும் நல்லிணக்கம் நோக்கி மனித குலத்துக்கு வழிகாட்டும் குருவாகப் போற்றப்பட்ட இவர் 2008-ம் ஆண்டு, தமது 91-வது வயதில் சித்தியடைந்தார்.

மன வலிமையாலும் பிரார்த்தனையாலும் எத்தகைய அற்புதங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொன்ன மகரிஷி மகேஷ் யோகியின் ஜன்ம தினம் இன்று.

 – 12.01.2021

0 comments: