உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, October 27, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 3

பார்க்க முடியுமா, முடியாதா?


‘சிங்கப்பூர் போய் வருவதற்கு, விசா செலவெல்லாம் உள்பட உங்கள் நாலு பேருக்கும் சேர்த்து ரூ.50,000-க்குள் முடித்துத் தருகிறேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்’ என்று திரு.பாலச்சந்தர் நம்பிக்கையும் உத்தரவாதமும் கொடுத்ததுமே - அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் - திரு.சுரேஷ் தவிர, சிங்கப்பூரில் நமக்குத் தெரிந்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள் என்று குடும்பமாக உட்கார்ந்து, ஒரு குட்டி ‘பிக்பாஸ்’ மீட்டிங் போட்டோம்.

மகள் ஷைலு, தன் தோழி ஒருத்தி அங்கே இருக்கிறாள்; ஆனால், எங்கே இருக்கிறாள், அவள் மொபைல் எண் என்ன என்று இனிமேல்தான் யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என்றாள்.

“என் அண்ணன்… அதாங்க, என் பெரியப்பா மகன் கண்ணன் சிங்கப்பூரில்தான் இருக்கிறார்” என்றார் மனைவி. “ஆனா, ரொம்ப நாளாச்சு அவரைப் பார்த்து. சின்ன வயசில் திருச்சியில் எல்லாரும் ஒண்ணா இருந்தோம். அப்புறம் அவர் படிச்சு, சிங்கப்பூரில் வேலை கிடைச்சு, அங்கே போய் செட்டிலாகி 20, 25 வருஷம் ஆயிடுச்சு. அப்புறம் அவங்களோடு டச் விட்டுப் போச்சு. அவருக்குக் கல்யாணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது, வளர்ந்ததுன்னு எதுவுமே தெரியாது. இப்ப அவங்க சிங்கப்பூர்ல எங்கே இருக்காங்க, அவங்க டெலிபோன் நம்பர் என்னனு எதுவுமே தெரியாது. எங்க அக்காகிட்ட வேணா கேட்டுப் பார்க்கிறேன்” என்றார்.

“25 வருஷம் ஆயிடுச்சுன்னா உங்களையெல்லாம் அவர் நினைவு வெச்சிருப்பாரா? அந்நிய மனுஷங்க மாதிரி நாம அங்கே போய்த் தங்கறது சரியா இருக்குமா?” என்று கேட்டேன்.

“போன வருஷம் அவரோட பிள்ளை கல்யாணம் பெங்களூர்ல நடந்ததே… ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு நம்மோட அட்ரஸையெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு, இன்விடேஷன் அனுப்பினாரே? நாமெல்லாரும்கூட அந்தக் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தோமே, ஞாபகம் இல்லையா? அந்தக் கல்யாணத்துலதான் எங்க மன்னியை (அண்ணி) நான் முதன்முதல்ல பார்த்தேன். ஆனா, கல்யாண பரபரப்புல அதிகம் யாரோடயும் பேசிக்க முடியலை…” என்று பேசிக்கொண்டே போன மனைவியைத் தடுத்து, “ஆமா, ஞாபகம் இருக்கு. அந்த இன்விடேஷன் இப்ப இருக்கா உன்கிட்ட?” என்று கேட்டேன்.

அடுத்த பிக்பாஸ் கூட்டத்துக்குள் (சிங்கப்பூர் டூர் தொடர்பான எங்களோட சண்டே பிக்பாஸ் கூட்டத்தைச் சொன்னேங்க!) அந்த இன்விடேஷனைத் தேடி எடுத்துவிட்டார் மனைவி. நான் எதிர்பார்த்ததுபோலவே அதில் திரு. கண்ணனின் சிங்கப்பூர் முகவரியும் மொபைல் எண்ணும் இருந்தன. உடனே, வாட்ஸப் காலில் தொடர்புகொண்டோம். விஷயத்தைச் சொன்னோம்.

“நீங்க எப்போ இங்கே வர்றதா இருக்கீங்க?” என்றார். அப்போது எதுவும் தீர்மானமாகியிருக்கவில்லை. ஜூலை இறுதி வாரத்தில் ஆஃபர் போடுவார்கள் என்றாரே பாலச்சந்தர்… அதை மனதில் வைத்துக்கொண்டு,  “ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் இருக்கலாம். இன்னும் டிக்கெட் புக் செய்யவில்லை” என்றோம். “அடடா…” என்றார். “என்ன..?” என்றோம் புரியாமல்.

“மருமகளின் பிரசவத்துக்காக என் வொய்ஃப் அமெரிக்கா போயிருக்கா. செப்டம்பர் 15 தேதிக்கு மேலதான் வருவா. இப்போ நான் மட்டும்தான் இங்கே தனியா இருக்கேன். நீங்க வந்தீங்கன்னா தங்கிக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்னை இல்லை. மத்தபடி, சாப்பாட்டுக்கு உங்களுக்கு நான் உதவ முடியாதே என்று பார்க்கிறேன்!” என்றார்.

“ஓகே! பரவாயில்லை. சாப்பாட்டுக்கு நாங்க எங்கேயாவது வெளியில பார்த்துக்கறோம்” என்றோம்.

“ஐயோ! இங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லி! அது மட்டுமில்லாம, ஹோட்டல்னு போனீங்கன்னா கடல் ஜந்துக்கள் அத்தனையும் டேபிள்ல கடைபரப்பி வெச்சுடுவாங்க. நீங்க செப்டம்பர் லாஸ்ட் வீக் வர ட்ரை பண்ணுங்களேன்” என்றார். 

“சரி, அப்படியே செய்யறேன்” என்றேன். அதன்பின், சிங்கப்பூர் பயணம் பற்றிய பேச்சு வீட்டிலேயே நின்றுபோயிற்று.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி, டிராவல் ஏஜென்ட் பாலச்சந்தர் அழைத்து, “சார், ஆஃபர் போட்டிருக்கிறார்கள். உடனே வந்தீங்கன்னா சிங்கப்பூருக்கு டிக்கெட் போட்டுடலாம். ரூ.4,000-க்குள்ளதான் ஆகுது. ஆகஸ்ட் 15-லேர்ந்து செப்டம்பர் 20 வரைக்கும் ஆஃபர் போட்டிருக்கான். நான் சொன்னபடி ரூ.50,000-க்குள்ள எல்லா செலவையும் முடிச்சுக்கலாம்” என்றார்.

உடனே போய் டிக்கெட் பதிவு செய்தேன். “ஆகஸ்ட் 10-க்குப் பிறகு விசாவுக்கு அப்ளை பண்ணலாம் சார்! இப்ப ஒண்ணும் அவசரமில்லே” என்றார் பாலச்சந்தர்.

செப்டம்பர் முதல் தேதி சிங்கப்பூர் சென்று இறங்குகிற மாதிரி ஃப்ளைட் டிக்கெட் புக் செய்துவிட்டு, திரு. சுரேஷுக்குத் தகவல் கொடுத்தபோதுதான், எதிர்பாராமல் அவருக்கு நேரிட்ட நெருக்கடியைச் சொன்னார். சுரேஷ் குடும்பத்துக்குச் சிரமம் கொடுக்கிறோமே, வேறு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

அலுவலக நண்பர் ஒருவர் சமீபத்தில் சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்தார். அவர் டூர் பேக்கேஜில் போய் வந்திருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று அவரிடம் விசாரித்தேன். அங்கே உள்ள சிவா என்கிற தன் நண்பரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசிப் பார்க்கச் சொன்னார். பேசினேன். “தாராளமாக வாருங்கள்” என்று அழைத்தார். ஆனால், ‘அங்கே அவர் தங்கியுள்ள இடம் மிகச் சிறிது. நாங்கள் குடும்பமாகத் தங்கியிருக்கத் தோதுப்படாது’ என்று அவருடன் பேசியதில் புரிந்தது.

மற்றபடி, வேறு என்ன செய்யலாம் என்று கையைப் பிசைந்துகொண்டேன்; மண்டையை உடைத்துக்கொண்டேன். ஒரு வழியும் புலனாகவில்லை. சரி, திரு.சுரேஷ் அவர்களிடம் சொல்லி, இருப்பதற்குள் விலை மலிவான ஹோட்டலில் ரூம் புக் பண்ணித் தரச் சொல்ல வேண்டியதுதான் என்கிற எண்ணத்துக்கு வந்துவிட்டேன்.

ஆகஸ்ட் 15 தேதி வாக்கில், திரு.கண்ணன் அவர்களிடமிருந்து போன். “உங்க சிங்கப்பூர் ட்ரிப் எந்த அளவுல இருக்கு?”

“செப்டம்பர் முதல் தேதி காலையில சிங்கப்பூர் வர மாதிரி டிக்கெட் புக் பண்ணியிருக்கோம். பத்து நாள் அங்கே இருப்போம். ஆனா, எங்க தங்கறதுன்னு, சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு எதுவும் பிளான் பண்ணலை…”

நான் முடிப்பதற்குள்ளாக அவரே குறுக்கிட்டார்… “செப்டம்பர்ல வரீங்களா? நல்லதா போச்சு. தாராளமா வாங்க. என் வொய்ஃபும் ஆகஸ்ட் லாஸ்ட்ல வந்துடுவா. வெளியில எல்லாம் சாப்பிட வேணாம். எல்லாம் மீன், நண்டுன்னு கடல்வாழ் உயிரினமாதான் இருக்கும். செலவும் எக்கச்சக்கமா ஆயிடும். அதெல்லாம் வேணாம். இங்கேயே தாராளமா எத்தனை நாள் வேணாலும் தங்கிக்கலாம்; சாப்பிட்டுக்கலாம். கீதா (அண்ணி) உங்களுக்குக் கையிலயும் அழகா பேக் பண்ணிக் கொடுத்துடுவா. டோண்ட் வொர்ரி! நீங்க கிளம்பி வாங்க, மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!” என்று உற்சாகக் குரலில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தார்.

கூடவே, “உங்க ஃப்ளைட் நாலேகால் மணிக்கு சாங்கி ஏர்போர்ட்டுக்கு வருதுன்னு நினைக்கிறேன். நானே வந்து உங்களைப் பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றார்.

விஷயத்தை திரு.சுரேஷிடம் சொன்னேன். ஆனால், உறவினர் வீட்டில் தங்கப்போவதாகச் சொல்லவில்லை. அவரைப் போலவே ஒரு நண்பர் வீட்டில் தங்கப்போவதாகச் சொன்னேன். காரணம் உண்டு.

சுரேஷ் தம்பதி, என் உறவினர்களுக்கும் மேலானவர்கள். நாங்கள் சிங்கப்பூர் பயணத்துக்குத் திட்டமிட்டதிலிருந்து சிங்கப்பூர் விசா பெறுவதற்கு, அங்கே யார் வீட்டில் தங்கப்போகிறோமோ அவரிடமிருந்து முறைப்படி ஒரு கடிதம் கேட்பார்கள் என்பதிலிருந்து, அங்கே சிங்கப்பூர் டாலருக்கு என்ன செய்வது, போக்குவரத்துக்கு என்ன செய்வது என்பது வரை, எல்லாவற்றிலும் அவர்கள்தான் எங்களைச் சரியான முறையில் வழிநடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு நெருக்கடி ஏற்பட்டும்கூட, ‘பரவாயில்லை, அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்’ என்று அழைத்த அன்புக்கு முன், “இல்லை. என் உறவினர் ஒருவர் அங்கே இருக்கிறார். நான் அங்கேயே தங்கிக் கொள்கிறேன்” என்று சொல்ல எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. எனவேதான், மற்றொரு நண்பர் வீட்டில் தங்கிக்கொள்வதாகச் சொன்னேன்.  

“இல்ல சார், எங்களுக்குச் சங்கடமா இருக்கு. அங்கே உங்களுக்கு வசதிப்படுமோ, படாதோ… நீங்க கிளம்பி இங்கேயே வந்துடுங்க. என் உறவுக்காரங்க 5-ம் தேதி கிளம்பிப் போயிடுவாங்க. அப்புறம் 6, 7, 8 மூணு நாளும் ஃப்ரீதான். இதுக்கிடையில மலேசியா போகணும்னு பிளான் பண்ணியிருந்தீங்களே, அதையும் முடிச்சுக்குங்க. ஆக, முதல்ல ஒரு மூணு நாள்தான். அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம். நீங்க வேற எங்கயும் தங்க வேணாம். இங்க வாங்க, பார்த்துக்கலாம்!” என்று அன்போடு வற்புறுத்தினார்கள் சுரேஷ் தம்பதியர்.

“இல்லை, உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்? அந்த நண்பரே ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார் என்றேன். அவரின் முகவரியைக் கேட்டார் சுரேஷ்.

சொன்னதும், “வேண்டாம் சார், அவர் சாங்கி ஏர்போர்ட்லேர்ந்து 30 மைல் தொலைவுல இருக்கார். அவர் அவ்ளோ தூரம் அங்கிருந்து வர வேணாம். நாங்க இங்கே பக்கத்துல இருக்கோம். நாங்களே வந்து உங்களைப் பிக்கப் பண்ணிக்கிறோம். நாலு மணி நேரம் பிளேன்ல உட்கார்ந்துட்டு வர்றது உங்களுக்கு ரொம்ப டயர்டா இருக்கும். இங்கே விடியற்காலை நாலேகால் மணின்னாலும் உங்க நேரப்படி மணி 2. அதனால, இங்கே வந்து படுத்து, ஒரு நாலு மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறம் டிபன் சாப்பிட்டுட்டுக் கிளம்பிப் போங்க. அப்பத்தான் அன்னிக்கு ஒரு அரை நாளாவது வேஸ்ட் பண்ணாமல் சுத்திப் பார்க்க முடியும்” என்றார் சுரேஷ்.

“அப்படியே செய்கிறோம்” என்றேன். அதன்பின், சுரேஷ் தம்பதியின் ஆலோசனைப்படி முதல் மூன்று நாள்கள், அதாவது செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ‘நண்பர்’ வீட்டில் தங்குவதென்றும், 4, 5 இரண்டு நாட்களும் மலேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேரே திரு.சுரேஷ் வீட்டுக்கு வந்துவிடுவது என்றும், பின் அங்கே 6, 7, 8 ஆகிய நாள்களில் மீண்டும் சிங்கப்பூரை ஒரு வலம் வருவது என்றும், பின் அங்கிருந்தே சென்னைக்குப் பயணமாவது என்றும் ஏற்பாடாகியது.

ஆக, இடத்துக்கோ சாப்பாட்டுக்கோ பிரச்னை இல்லை என்று தெளிவானதும், சிங்கப்பூரின் லேண்ட்மார்க்கான பிரசித்தி பெற்ற அந்த நீருமிழும் சிங்கச் சிலையையும், மலேசியாவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பத்துமலை முருகனையும் நேரிலேயே போய்ப் பார்த்துவிட்ட வந்த மாதிரியே ஒரு மனநிறைவும் சந்தோஷமும் உண்டானது.

ஆனால், சிங்கப்பூர் கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு… அந்தச் சந்தோஷம் அடியோடு காணாமல் போனது.


(பயணம் தொடரும்)

Friday, October 20, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 2

தங்க முடியுமா, முடியாதா?


சிங்கப்பூருக்கான ஃப்ளைட் டிக்கெட், விமானத்தின் தரத்தைப் பொறுத்து, ரூ.9,000-லிருந்து தொடங்கி, ரூ.30,000, ரூ.40,000, ரூ.60,000 என நீள்கிறது. சில நேரங்களில், சில விமான சேவைகளில் ‘ஆஃபர்’ போடுவார்கள். ரூ.1000, ரூ.2,000 எனக் குறைப்பார்கள். ஆக, போக வர ஒருவருக்கு எப்படியும் குறைந்தபட்சம் ரூபாய் 14,000 ஆகும். நாலு பேருக்கு அதுவே ரூ.56,000. அப்புறம் விசா செலவு. சிங்கப்பூர் விசா தனி, மலேசியா விசா தனி. சிங்கப்பூர் மல்ட்டிபிள் விசா என்று எடுக்க வேண்டும்; அப்போதுதான் இடையில் மலேசியா போய் தலைகாட்டிவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். மலேசிய விசா ஆறு மாதத்துக்கானது. ஏற்கெனவே விசாரித்த டிராவல் ஏஜென்ட்டுகள் இந்த விசா செலவே ரூ.40,000 வரை ஆகும் என்றார்கள். ஆக, பயணச் செலவு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.

சிங்கப்பூரில் ஆரம்ப ஹோட்டல் ரூம் செலவே ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நம்ம ரூபாய் மதிப்பில் ரூ.18,000 அல்லது ரூ.20,000. ஏழு நாட்களுக்கென்றால், அதுவொரு ஒண்ணரை லட்சம் ரூபாய். அப்புறம் இருக்கவே இருக்கிறது சாப்பாட்டுச் செலவு. சிங்கப்பூரில் நம் சைவ உணவுகள் கிடைப்பது அரிது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான லிட்டில் இந்தியா, சிராங்கூன் தெரு போன்றவற்றில் சங்கீதா, சரவணபவன் போன்ற சைவ உணவகங்கள் இருக்கக்கூடும். ஆனால், சிங்கப்பூரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சாப்பாட்டுக்கென்று பல கிலோமீட்டர் பயணித்து இங்கே வந்துகொண்டிருக்க முடியுமா?

தவிர, சிங்கப்பூரில் எல்லாமே காஸ்ட்லி! நம்ம ஊர் மதிப்பில் நான்கு மடங்கு. இங்கே ரூ.50-க்கு ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட முடியுமானால், அங்கே அதற்கு சிங்கப்பூர் பணத்தில் ஐந்து டாலர் எடுத்து வைக்க வேண்டும். அதாவது, கிட்டத்தட்ட 250 ரூபாய். ஆக, ஏழு நாள் சாப்பாட்டுக்கு எங்கள் நால்வருக்கும் ரூ.70,000 தேவைப்படும்.

ஆக, அப்படியிப்படி மூணேகால் லட்ச ரூபாய். அவ்வளவுதான் செலவா?

காசை செலவழித்துக்கொண்டு அவ்வளவு தூரம் போகிறோம்; சிங்கப்பூரில் பிரசித்திபெற்ற ஸ்கைபார்க் ஹோட்டலின் உச்சியில் ஏறி நின்று, சிங்கப்பூரை ஏரியல் வியூவில் பார்க்காவிட்டால் எப்படி? ஜெயன்ட் வீல் மாதிரி பிரமாண்ட ஃப்ளையர் நம்மை உயரே கொண்டுபோய் ‘எங்கள் ஊரைப் பார், அதன் அழகைப் பார்’ என்று காட்டிக்கொண்டிருக்கிறது. அதில் ஏறிப் பார்க்காவிட்டால் ஜென்மம் எப்படிச் சாபல்யமாகும்? அதை விடுங்கள், யுனிவர்சல் ஸ்டுடியோ, செந்தோஸா பார்க் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டாமா? 

ஒவ்வொன்றுக்கும் அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 35 டாலர், 25 டாலர் என்கிற அளவிலேயே இருந்தன. நாலு பேருக்கு சராசரியாக 100 டாலர். ஏழு நாட்களுக்கு இப்படிச் சுற்றிப் பார்க்கிற செலவு மட்டுமே 700 சிங்கப்பூர் டாலர். நம்ம ஊர் மதிப்பில் ரூ.35,000.

இதற்கு நடுவில் மலேசியா போய் வருகிற ஐடியாவும் இருக்கிறது. அங்கே போய் வருவதற்கான போக்குவரத்து செலவு, ஓட்டல் ரூம் செலவு, சாப்பாட்டுச் செலவு, சுற்றிப் பார்க்கிற செலவு என, என்னதான் குறைந்த பட்ஜெட் போட்டாலும் ரூ.50,000-வது ஆகும்.

இப்படியாக விழிபிதுங்கிக்கொண்டிருந்த நிலையில்தான், டிராவல் ஏஜென்ட் பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானார். அவரிடம் என்னுடைய சிங்கப்பூர் கனவைச் சொன்னேன். “நீங்க எப்போ சிங்கப்பூர் போவதாக பிளான் வெச்சிருக்கீங்க?” என்று கேட்டார்.

“பிளானெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எப்ப வேணா போகலாம். ஃப்ளைட் டிக்கெட் விலையெல்லாம் சகாயமா அமையறப்போ போய்க்கலாம். பட்ஜெட் டூர்தான் என் பிளான்!” என்றேன்.

“அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஜூலை மாசக் கடைசியில ஆஃபர் போடுவாங்க. ஆகஸ்ட், செப்டம்பர்னு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ள போயிட்டு வர மாதிரி பிளான் பண்ணிக்கலாம். பாதிக்குப் பாதி டிக்கெட்ல போயிட்டு வந்துடலாம்!” என்று நம்பிக்கை ஒளி ஊட்டினார் பாலச்சந்தர்.

சரி, சிங்கப்பூரில் ஏழு நாள்கள் தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமே?

சட்டென்று என் நினைவுக்கு வந்தவர் திரு. சுரேஷ். என் நாற்பதாண்டு கால நண்பர் திரு.மார்க்கபந்து அவர்களின் இரண்டாவது புதல்வர்.

இங்கே ஒரு சின்ன தகவல். ஆனந்த விகடனில் நான் எழுதிய முதல் சிறுகதை ‘விளக்கில் விழுந்த விட்டில்’. அது 1980-ல் வெளியானது. அந்தக் கதையைப் படித்துவிட்டு, ரொம்ப இம்ப்ரெஸ்ஸாகி, விகடன் அலுவலகத்தில் என் முகவரியை வாங்கி, நீளமான பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார் திரு.மார்க்கபந்து. அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. கதையில் ஓரிடத்தில் நான், ‘கதாநாயகியைப் பெண்பார்த்துவிட்டுப் போன இளைஞர்கள் பட்டியல் சுந்தர், சுரேஷ், மகேஷ் என நீண்டது’ என எழுதியிருந்தேன். ‘வேடிக்கை பார் ரவி, என் மூத்த மகன் பேரு சுந்தர்; இரண்டாவது மகன் பேரு சுரேஷ்; மூன்றாவது பையன் மகேஷ்’ என்று குறிப்பிட்டிருந்தார் மார்க்கபந்து. இந்த யதேச்சையான ஒற்றுமை, அவருக்கும் எனக்குமான நட்பை மேலும் இறுக்குவதில் ஓர் காரணியாகச் செயல்பட்டது.

1981-ல் நான் வேலை தேடி சென்னைக்கு வந்திருந்தபோது, திரு.மார்க்கபந்துவின் இல்லத்துக்குச் சென்றேன். அவர் அப்போது தலைமைச் செயலகத்தில் செக்‌ஷன் ஆபீசராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரின் தந்தையார் திரு.கல்யாணராமன் அவர்கள் பழம்பெரும் எழுத்தாளர். 1938, 40-களில் ஆனந்த விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவரது ஜென்ம நட்சத்திரம் ‘மகரம்’ என்பதால், மகரம் என்கிற புனைபெயரில் அவர் கட்டுரைகள் எழுதிவந்தார்.

திரு.மார்க்கபந்துவின் மூத்த மகன் அப்போதுதான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தார் என நினைக்கிறேன். மற்ற இரண்டு பிள்ளைகளும் 9-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம்.

அந்த 9-ம் வகுப்பு மாணவரான சுரேஷ்தான் இன்றைக்கு சிங்கப்பூரில் ஸ்டேண்டர்ட் சார்ட்டர்டு பேங்க்கில் பணிபுரிகிறார். அவரின் துணைவியார் ஜெயஸ்ரீ, நம்ம ஊர் ரேவதி சங்கரன், மெனுராணி செல்லம் போல கிச்சன் கில்லாடி. குங்குமம் தோழி, அவள் விகடன், மங்கையர் மலர் எனப் பல பத்திரிகைகளில் சுவையான ரெசிப்பிக்களை வழங்கியுள்ளார். சமையல் கலை தொடர்பாகப் பல புத்தகங்களும் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட அவரின் ‘சிறுதானிய உணவுகள்’ விற்பனையில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வரும் புத்தகக் காட்சிக்கு இதன் நான்காவது பதிப்பு வெளியாகிறது.

அந்த ஜெயஸ்ரீ - சுரேஷ் தம்பதியைத் தொடர்புகொண்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

“தாராளமாக வாங்க. இடத்தைப் பத்தியோ, சாப்பாட்டைப் பத்தியோ கவலைப்படவே வேணாம். இங்கேயே தங்கிக்கலாம். என்னிக்கு வரீங்கன்னு சொல்லுங்க” என்று உற்சாகமாக வரவேற்றார்கள்.

ஆனால், ஃப்ளைட் டிக்கெட்டை புக் செய்துவிட்டு, ‘ஆகஸ்ட் 31 புறப்பட்டு செப்டம்பர் முதல் தேதி காலை சிங்கப்பூர் வருகிறோம். முழுசாக ஒன்பது நாள்கள் அங்கே இருக்கிறோம். பின்பு அங்கிருந்து செப்டம்பர் 9-ம் தேதி சென்னை புறப்படுகிறோம்’ என்று தகவல் கொடுத்ததும், அவர்கள் சற்று தர்மசங்கடத்துக்குள்ளானார்கள்.

அவர்களின் சங்கடத்துக்குக் காரணம் இருந்தது. நாங்கள் ஆகஸ்ட் மாதம் வருவோம் என்று எண்ணியிருந்தார்கள் அவர்கள். ஆனால், செப்டம்பர் முதல் ஒன்பது நாள்கள் சிங்கப்பூரில் தங்கப்போகிறோம் என்றதும், அவர் தர்மசங்கடமுற்றதற்குக் காரணம், சரியாக அதே தினங்களில் அவரின் உறவினர்கள் சிலர் அங்கே வந்து தங்குவதாக இருந்ததுதான்.

இருந்தாலும் பெரிய மனதோடு, “பரவாயில்லை வாங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!” என்று அன்போடு அழைத்தார்கள் ஜெயஸ்ரீசுரேஷ் தம்பதியர். எங்களை முழுமையாக உபசரிக்க முடியாமல், தேவையான வசதி செய்துகொடுக்க முடியாமல் போகுமே, எங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் அவர்களின் குரலில் இழையோடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவர்களுக்குச் சிரமம் தர விரும்பாமல், சிங்கப்பூரில் தங்குவதற்கான மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தேன்.

(பயணம் தொடரும்)

Saturday, October 14, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 1

போகமுடியுமா, முடியாதா?

சிங்கப்பூர் என்றதுமே உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? எனக்குச் சட்டென்று, “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நாலே ஆண்டுகளில் தமிழ்நாட்டை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தேர்தலுக்குத் தேர்தல் நம் அரசியல்வாதிகள் விடும் வாய்ச்சவடால் வாக்குறுதிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. ‘அப்படியென்ன சிங்கப்பூர் உசத்தி? ஏன் இந்த அரசியல்வாதிகள் எல்லாரும் சொல்லிவைத்தாற்போல் தமிழ்நாட்டை அமெரிக்காவாக ஆக்கிக் காட்டுகிறேன் என்றோ, லண்டன் மாதிரி ஆக்கிக் காட்டுகிறேன் என்றோ சொல்லாமல், சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறேன் என்றே சொல்கிறார்கள்?’ என்று மனசுக்குள் ஒரு சந்தேகமும் எழுவதுண்டு.

இந்தச் சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது சிங்கப்பூரில் என்று ஒருமுறை நேரிலேயே போய்ப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையும் தோன்றியிருக்கலாம். எனக்கும் தோன்றியது.

‘ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா’ என்று பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பாடுகிற பாட்டு மட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போதிலிருந்தே சிங்கப்பூருக்கு ஒருமுறை போய்வந்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால், ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு வக்கு வேண்டுமே?

மிக எளிமையான, நடுத்தரத்தைவிட ஒருபடி கீழான குடும்பத்தில் பிறந்த எனக்கு அதைப் பற்றிக் கனவு காணக்கூட யோக்கியதை இல்லை என்பதால், ஆசையை அப்படியே மனசுக்குள் அமுக்கிவிட்டேன்.

இயல்பாகவே பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவன் நான். பள்ளி வயதில் நான் போன ஒரே சுற்றுலாத் தலம் திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூர். சாத்தனூரில் பல திரைப்படங்களின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. நான் டூர் சென்றபோது, ‘அடேடே, இந்த இடத்தில்தானே எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ‘மாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன..’ என்று பாடி ஆடுவார்கள்? ஆஹா, இங்கேதானே ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்’ என்று எம்.ஜி.ஆர் பாட, ‘என் இடது கண்ணும் துடித்தது, உன்னைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்’ என்று ஜெயலலிதா பாடுவார்? அடடே… இந்த இடத்தில்தானே ‘காதல் மலர்க் கூட்டம் ஒன்று வீதி வழி போகுமென்று யாரோ சொன்னார், யாரோ சொன்னார்’ என்று பாடியபடி சிவாஜி கணேசன் ஸ்டைலாக நடந்து வருவார்?’ என்று சினிமாவோடு அந்த இடங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தேன். அதனால் சாத்தனூருக்குச் சென்று வந்ததே ஸ்விட்சர்லாந்துக்குப் போய் வந்ததான ஒரு திருப்தியை எனக்குக் கொடுத்திருந்தது அந்தச் சின்ன வயதில்.

வளர்ந்து பெரியவனாகி, திருமணம் ஆனதும், மனைவியை அழைத்துக்கொண்டு நான் முதன்முதலில் போன இடமும் சாத்தனூர் டேம்தான்.

சாவி பத்திரிகையில் பணியாற்றும்போது, சாவி சார் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை எங்களை (எங்களை என்றால் ஆசிரியர் குழுவிலிருந்த ஒரு நாலைந்து பேர்) ஊட்டி, வெலிங்டன், குன்னூர், பெங்களூரு என ஏதேனும் ஓர் ஊருக்கு, பத்திரிகை புதுப்பொலிவுக்கான டிஸ்கஷன் என்கிற பெயரில் அழைத்துச் செல்வார். அப்படித்தான் என் பால்ய கால பயண விருப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறத் தொடங்கின.

பின்னர் குடும்பத்தோடு ஊட்டி, கொடைக்கானல், ஹைதராபாத், பெங்களூரு, மைசூர், கேரளா எனப் பல இடங்களுக்கு ஆண்டுக்கொருமுறை பயணப்பட்டேன். போன ஆண்டு இன்னும் கொஞ்சம் அகலக்கால் வைத்துப் பார்க்கலாமே என்று டெல்லி, ஆக்ரா, சண்டிகர், மாண்டி, குலு-மனாலி, ரோட்டாங்பாஸ் என ஒரு நடை போய்வந்தேன்.

இந்த ஆண்டு கொஞ்சம் பொருளாதாரத் தெம்பு வந்து, சிங்கப்பூர்-மலேசியா சென்று வரலாம் என்று என் சிறு வயதுக் கனவை நிறைவேற்றும் உத்தேசத்துடன், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தேன். அடிவயிற்றில் கத்தி சொருகின மாதிரி உணர்ந்தேன்.

டெல்லி டூருக்குக் கிட்டத்தட்ட ஒண்ணேகால் லட்சம் ரூபாய் செலவானது. இந்த முறை சிங்கப்பூர் டூருக்கு ரூ.2 லட்சம் வரை செலவழிக்கலாம் என்று பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தேன். ஆனால், ஃப்ளைட் டிக்கெட், விசா செலவு, அங்கே தங்குகிற செலவு, சாப்பாட்டுச் செலவு, சுற்றிப் பார்க்கிற செலவு என எல்லாமாகக் கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஒரு வார கால சிங்கப்பூர்-மலேசியா சுற்றுலாவுக்கு, எங்கள் நாலு பேருக்குக் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் தேவை எனத் தெரிந்தது.

‘இது நமக்குச் சரிப்பட்டு வராது. மிஷன் கேன்சல்… மிஷன் கேன்சல்’ என்று அலறி, சிங்கப்பூர் டூரையே கேன்சல் செய்துவிட்டேன். ஆக, குடும்பத்தாரை ஆசை காட்டி மோசம் செய்துவிட்டேன்.

ஏக குஷியில் இருந்தவர்கள் சோர்ந்து போனார்கள். ‘எங்கேயும் போக வேண்டாம். இந்த வெண்டைக்காயையும் வத்தக் குழம்பையும் சாப்பிட்டுக்கிட்டு இங்கேயே வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்கிறோம் நாங்க’ என்று கடுப்புடன் உணவு பரிமாறினார் மனைவி. சிங்கப்பூர் டூர் போகவில்லை என்கிறபட்சத்தில், ஏற்கெனவே போன இந்திய டூர்கள் அனைத்தும் பிரயோஜனமற்றவை என்பதான எண்ணம் அனைவருக்குமே வந்திருந்தது.

நானும் இதற்கு என்ன செய்யலாம், சிங்கப்பூர் பயணத்தை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்று யோசனையில் ஆழ்ந்தேன்.

ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்தார் டிராவல் ஏஜென்ட் பாலச்சந்தர்.


(பயணம் தொடரும்)