உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, May 19, 2016

என் புகுந்த வீடு - 17




கடல்... சிகரம்... வானம்!
நான் விகடனில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு வரையில் (என நினைக்கிறேன்) சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் ஒவ்வொரு திங்களன்றும் நடக்கும் ஆசிரியர் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பேறு பெறவில்லை. 

“வழக்கமான எடிட்டோரியல் மீட்டிங்தானே? அதற்குப் போய் ‘பேறு பெறவில்லை’ என்கிற பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு?’ என்கிற கேள்வி மற்றவர்களின் மனதில்
வேண்டுமானால் உதிக்கலாம்; அந்தக் கூட்டத்தில் ஒருமுறையேனும் கலந்துகொண்டவர்களின் மனதில் உதிக்காது. காரணம், ஆசிரியரின் தலைமையில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதென்பது ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; ஒரு கவியரங்கத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; சினிமா டிஸ்கஷன் ஒன்றில் கலந்துகொள்வதற்குச் சமம்; ஓர் உபன்யாசத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; அறிவியல் விளக்கக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்குச் சமம்; இயற்கை ஆர்வலர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு சமம்; சட்ட நுணுக்க விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் சமம்; நகைச்சுவை உரையாடலில் கலந்துகொள்வதற்குச் சமம்; புதிர் விளையாட்டில் பங்கு பெறுவதற்குச் சமம்.

என்றைக்கு நமக்கு என்ன வாய்க்கும் என்று தெரியாது. ஆசிரியர் உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டால், அனுபவங்கள் மழையாகப் பொழியும். பறவைகள் பற்றிப் பேச ஆரம்பித்தால், நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை, நுணுக்கமான தகவல்களைக் கொட்டுவார். கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு இறக்கைகள் முளைத்து, நாமும் ஒரு பறவையாகி, பறவைகள் உலகில் சங்கமித்துவிட மாட்டோமா என்றிருக்கும். சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தால், உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

ஒருமுறை, அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்று விளக்கத் தொடங்கினார் ஆசிரியர். நடிகர் பாடிக்கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கும்போதே அதை ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு எல்லாம் ஏக காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லத் தொடங்கியவர், “எல்லாரும் கொஞ்சம் எழுந்திருக்கோ, சொல்றேன்!” என்றார். எதற்கு என்று புரியாமல் எழுந்தோம்.

காலியாக இருந்த இடத்துக்கு எங்களை அழைத்து வந்தார். “இப்போ நான்தான் தியாகராஜ பாகவதர்னு வெச்சுக்கோங்க. கண்ணன், நீங்கதான் மியூஸிக் டைரக்டர். நான் பாடிக்கிட்டே வரும்போது நீங்களும் கூடவே உங்க வாத்தியக் கோஷ்டியோட மியூஸிக் போட்டுக்கிட்டே வரணும். ஆனா, காமிராவுல விழுந்துடாம எல்லைக் கோட்டுக்கு அப்பாலதான் வரணும், புரியுதா? அப்புறம்... அசோகன், நீங்க இங்க வாங்கோ. நீங்கதான் ஒலிப்பதிவாளர். உங்க கையில நீளமான ஸ்டிக் இருக்கும். அதன் நுனியில மைக் இருக்கும். அதை, நான் பாடிக்கிட்டு வரேனில்லையா,  என் முன்னாடி பிடிச்சுக்கிட்டே வந்தாதான் என் குரல் பதிவாகும். எங்கே, சரியா பிடியுங்கோ பார்க்கலாம். ஜாக்கிரதை, இந்த மைக்கும் காமிராவுல விழுந்துடக்கூடாது...” என்று எல்லாருக்கும் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு, பாகவதரின் பாட்டு ஒன்றைப் பாடியபடி நடந்து வரத் தொடங்கினார். அனைவரும் அவரவர் ரோல்களைச் செய்தபடி அவரைப் பின்தொடர்ந்தோம். 

நடுவில் பாடுவதை நிறுத்தி, ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தவரைப் பார்த்து, “என்ன, மைக் காமிராவுல விழுந்துடுச்சா?” என்று கேட்டுவிட்டு, சட்டென்று தானே டைரக்டராக மாறி, “யோவ், சவுண்ட் இன்ஜினீயர்! மைக்கை காமிராவுக்குள்ளே நீட்டாதே, நீட்டாதேன்னா கேக்கறியா? போ, போய் முதல்லேர்ந்து சரியா செய்!” என்று கடிந்துகொண்டுவிட்டு, மீண்டும் பழைய இடத்துக்குப் போய் நின்றுகொண்டு, “காமிரா ஆன்!” என்று சொல்லிவிட்டு, பழையபடி பாகவதராக மாறி பாடத் தொடங்கினார். மியூஸிக் டைரக்டரும் முதலிலிருந்தே பின்னணி இசை கொடுத்துக்கிட்டு வரத் தொடங்கினார். பின்னர், “இப்படித்தான் அந்த நாள்ல ஷூட்டிங் நடக்கும். நடிகரே பாடிக்கிட்டு வருவார். அதை அப்போதே ஒலிப்பதிவு செய்யணும். மியூஸிக்கும் கூடவே ஒலிப்பதிவாகணும். நடிகரை மட்டும்தான் காமிரா பதிவு செய்யணும். அதுல, பக்கத்துல இருக்கிற இசைக் கலைஞர்களோ, குச்சியில நீட்டியிருக்கிற மைக்கோ விழுந்துடக்கூடாது. யாராவது ஒருத்தர் தப்பு பண்ணாலும், மறுபடியும் முதல்லேர்ந்து எல்லாத்தையும் வரிசைக்கிரமாகப் பண்ணியாகணும்.” என்று விளக்கினார்.

எங்களுக்கு இந்த டிராமா தமாஷாக இருந்தாலும், டெக்னாலஜி வளராத அந்த நாளில் ஒரு திரைப்படம் எடுக்க எந்த அளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை அனுபவபூர்வமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

மிருகங்கள், பறவைகள் பற்றிப் பேசத் தொடங்கினாலும் இப்படித்தான்!  தான் சிறுத்தை வளர்த்த அனுபவம் பற்றிச் சொல்லுவார். அவருடன் சரிக்குச் சரி வாயாடும் அவரின் வளர்ப்புக் கிளி பற்றிப் பேசுவார். கசோவாரி பறவையின் கேரக்டர் பற்றி விளக்குவார். ஒரு வகைப் பறவை மிகவும் டேஸ்ட்டாக இருக்கிறதென்று அவற்றைக் கொன்று தின்று, லட்சக்கணக்கில் பல்கிப் பெருகும் அந்த இனத்தையே பூண்டோடு அழித்துவிட்ட மனிதனின் சுயநலத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப்படுவார். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோ என்று ஆச்சரியமாக இருக்கும்.

ஆக மொத்தத்தில், திங்கள்தோறும் ஆசிரியரின் தலைமையில் நடைபெறும் எடிட்டோரியல் கூட்டம் ஒரு பல்சுவைக் கூட்டமாகவே திகழும். ஆரம்பத்தில் ஒரு
அரை மணி நேரம் மட்டும், அன்றைக்கு வெளியான ஆனந்த விகடன் பற்றியும், அதில் உள்ள நிறைகுறைகள் பற்றியும் விளக்கிவிட்டு, அதைத் தொடர்ந்து மேலே சொன்னது போல் தனது அனுபவங்களை ஒரு கதை போல ஆசிரியர் விளக்கியதால், ஒவ்வொரு மீட்டிங்கும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். எதிர்பாராத காரணத்தால் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள், மறுநாள் வந்ததும் முதல் வேலையாக மற்றவரிடம், “நேற்று ஆசிரியர் என்ன சொன்னார்?” என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

எனக்கு முன் இருந்த சீனியர்கள் இன்னும் கொடுத்து வைத்தவர்கள். நான் விகடனில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகுதான் ஆசிரியரின் கூட்டத்தில் பங்குபெறும் பாக்கியம் பெற்றேன். 

ஆரம்பத்தில், கூட்டத்தில் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தாலும், போகப் போக அவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கிவிட்டேன். நான் சொல்லும் கருத்துக்கள் சில வேளைகளில் சேர்மனின் கருத்துக்கு நேர் எதிராகவும் இருந்துவிடுவதுண்டு. ‘என்ன இவர் இப்படிச் சொல்றார்? வேற  யார் யாரெல்லாம் இவர் கருத்தை ஆமோதிக்கிறேள்?’ என்பதுபோல் உஷ்ணமாகிவிடுவார் சேர்மன். அப்போது அசோகன் என்னை நைஸாகக் கிள்ளி, “பேசாம இருய்யா!” என்று அடக்கப் பார்ப்பார். அதெல்லாம் எனக்கு உறைக்கவே உறைக்காது. நான்பாட்டில் எனக்குத் தோன்றியதைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

அப்படித்தான் ஒரு தடவை, தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றிப் பேச்சு வந்தது.

ஆசிரியர் தினமும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, அலுவலகத்தின் போர்டிகோவில் அவர் கார் நுழையும்போது சரியாக  காலை 8:30 மணி ஆகியிருக்கும். அன்றைக்கும் அவர் சரியான நேரத்தில் அலுவலகம் வந்துவிட்டார். அவரிடமிருந்து கைப்பையை வாங்கிக் கொள்ள அட்டெண்டர் தயாராக நின்றிருந்தார். ஆனால், கார் போர்டிகோவில் வந்து நின்ற பிறகும், ஆசிரியர் காரிலிருந்து இறங்கவில்லை. உள்ளேயே அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே, பொறுமையாக இறங்கினார். அவரின் இந்த நடவடிக்கை எங்களுக்குப் புதிதாக இருந்தது. காரணம் புரியவில்லை.

அன்றைய கூட்டத்தில் ஆசிரியரே இது குறித்துப் பேசத் தொடங்கினார். “கார் நின்னவுடனே இறங்கிடுவாரே இவர், இன்னிக்கு என்ன ரெண்டு நிமிஷம் கழிச்சுப் பொறுமையா இறங்கறார்னு நீங்கெல்லாம் நினைச்சிருப்பேள். அது வேற ஒண்ணுமில்லே! கார்ல ரேடியோவுல தென்கச்சி கோ. சுவாமிநாதனுடைய ’இன்று ஒரு தகவல்’ கேட்டுண்டு வருவேன். கார் இங்கே நுழையவும், அவர் முடிக்கவும் சரியா இருக்கும். உடனே இறங்கிடுவேன். இன்னிக்கு அவ்வளவா டிராஃபிக் இல்லை. சீக்கிரமா வந்துட்டேன். அதனால தென்கச்சியோட இன்று ஒரு தகவல் முடியலே. அதான், அதைக் கடைசி வரைக்கும் கேட்டுட்டு அப்புறமா இறங்கினேன்” என்றார்.

தொடர்ந்து, “ஆஹா! எவ்ளோ அழகா சொல்றார். ரொம்பப் பிரமாதமா இருக்கு அவர் பேசறது. அவர் பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும்...” என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அடக்கமுடியாமல் குறுக்கிட்டுவிட்டேன் நான்.

“என்ன சார், காலங்கார்த்தால தூக்கம் கலையாதவர் மாதிரி, ‘ஊர்ல... ஒருத்தரு...’னு சோம்பல் குரல்ல பேசுவார் சார் தென்கச்சி. அவர் பாணியா உங்களுக்குப் பிடிக்கும்னு சொல்றீங்க? எனக்குப் பிடிக்கவே பிடிக்காது அவர் பேசற பாணி. அவர் பேசறதைக் கேட்டேன்னா, அந்த நாளே டல்லாயிட்ட மாதிரி ஆயிடும் எனக்கு.” என்று சொல்லிவைத்தேன்.

அவ்வளவுதான்... “என்னதிது... இவர் என்ன சொல்றார்? தென்கச்சி பேசறது பிடிக்காதுங்கறாரே! எனக்கு மட்டும்தான் இங்கே அவர் பாணி பிடிக்குமா? அசோகன், நீங்க சொல்லுங்கோ, உங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா?” என்று படபடக்கத் தொடங்கிவிட்டார் ஆசிரியர்.

“சார், நீங்க வேற. டைட்டானிக் படத்தையே குப்பைன்னு சொன்னவர் ரவி. அவர் ரசனையே தனி. அவர் பேச்சை எடுத்துக்கவே வேண்டாம். தென்கச்சி உண்மையிலேயே மிக நல்ல பேச்சாளர், சார். எங்களுக்கெல்லாம் அவரைப் பிடிக்கும்” என்று அவரைச் சமாதானம் செய்தபடி, ரகசியமாகப் பல்லைக் கடித்து, ‘பேசாம இருய்யா’ என்று என்னை அடக்கினார் அசோகன்.

அப்போதும் சமாதானமாகவில்லை ஆசிரியர். “கண்ணன், நீங்க சொல்லுங்கோ! உங்களுக்காவது தென்கச்சியைப் பிடிக்குமா, பிடிக்காதா?’ என்று கேட்டார். “பிடிக்கும் சார்! இதமா மனசை வருடற மாதிரி அழகா பேசுவார். அவர் பாணி அவ்ளோ ரசனையா இருக்கிறதாலதான் இத்தனை பெரிய ஹிட் ஆகியிருக்கு அந்த புரொகிராம்! ஆனா, ரவியோட டேஸ்ட்டே தனி, சார்! ஐஸ்வர்யா ராய் அழகியே இல்லைன்னுவார். சிம்ரன்கிட்ட கூட ஐஸ் வரமுடியாதுன்னுவார். அது அவர் கருத்து! அவ்வளவுதான்!” என்றார்.

ஆசிரியர் அடுத்து என்னைப் பார்க்க, “எங்க அப்பாவும் தென்கச்சியோட ரசிகர்தான் சார்! அப்படி விரும்பிக் கேட்பார். ஆனா என்னவோ, எனக்கு மட்டும் அவர் பேச்சு பிடிக்கவே இல்லே!” என்றேன் நான் அப்போதும் விடாப்பிடியாக. 

“ரசனையை வளர்த்துக்கோங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அந்தப் பேச்சுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்தார் சேர்மன்.

அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொன்னாலும், அதற்காக என்னிடம் கருத்தே கேட்காமல் இருந்துவிட மாட்டார் சேர்மன். என் கருத்தை ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ, மற்ற சீனியர்களிடம் அபிப்ராயம் கேட்பது போல், என்னையும் ஒரு பொருட்டாக மதித்துக் கருத்து கேட்பார். அவர் கேட்காவிட்டாலும் நான் எனக்குத் தோன்றியதைச் சொல்லிவிடுவேன்.

விகடன் பவள விழா சமயத்தில் மலர் ஒன்றை வெளியிட்டோம். அது பற்றிப் பேச்சு வந்தது. “பவள விழாவா? பவழ விழாவா? எது சரி?” என்று கேட்டார் எம்.டி. மெஜாரிட்டி கருத்து பவள விழா என்பதாகத்தான் இருந்தது. வழக்கம்போல் என்னையும் அபிப்ராயம் கேட்டார்.

“பவழம், பவழமல்லி என்றெல்லாம் வழக்கத்தில் உள்ளது. பவழக்காரத் தெரு என்றுதான் உள்ளது. பவளக்காரத் தெரு என்றில்லை. ஆக, பவழம் என்பதே என்னைப் பொறுத்தவரையில் சரி. ழகரம் வாயில் நுழையாதவர்கள் பவளம் என்று பயன்படுத்தத் தொடங்கி, காலப்போக்கில் அதுதான் சரி என்று ஆகிவிட்டிருக்க வேண்டும். இன்றைக்கு இரண்டுவிதமாகவும் பயன்படுத்துகிறார்கள்” என்று என் கருத்தைச் சொன்னேன்.

ஆசிரியர் என் கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்த மலருக்குப் ’பவழ விழா மலர்’ என்றே பெயர் வைத்தார்.

 மாற்றுக் கருத்தை யாரேனும் சொன்னால், அந்தக் கருத்தையொட்டித்தான் ஆசிரியரின் கோபம் இருக்குமே தவிர, தன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லிவிட்டாரே என்கிற கோபம் துளியும் இருக்காது. அதேபோல், புத்திசாலித்தனமாக யாரேனும் ஏதேனும் ஐடியா சொன்னால், அதை மனமுவந்து பாராட்டுவதிலும் சளைக்க மாட்டார் ஆசிரியர். விகடன் ஆசிரியர் குழுவில் இருக்கும் பலருக்கும், அவரிடம் பணியாற்றியபோது அவரின் பாராட்டு கிடைத்திருக்கும். 

நான் விகடனில் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்த சமயம்... தலைமைத் தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன், ஆனந்த விகடனில் ஒரு தொடர் கட்டுரை எழுதுவதாக முடிவானது. ஆனால், என்ன எழுதப் போகிறார் என்றெல்லாம் விரிவாக வாசகர்களுக்குச் சொல்லாமல், மதன் சார் தன் பாணியில் சஸ்பென்ஸாக ஓர் அறிவிப்பை வெளியிடச் செய்தார். 


ஒரு முழுப்பக்கம் சேஷனுடைய படத்தை வெளியிட்டு, “ஓகே, நான் ரெடி!” என்று அவர் சொல்வது போல் எழுத்துக்களை வெளியிடச் சொன்னார் மதன். கீழே, “என்னவாம்?” என்று ஒரு கேள்வி. இவ்வளவுதான் அறிவிப்பு!

லே-அவுட்டெல்லாம் பிரமாதமாக ரெடியாகி, மதன் சார் பார்த்து, லீடர் ஃபாரத்தில்,
(ஆரம்ப 16 பக்கங்களும் கடைசி 16 பக்கங்களும் கொண்ட இறுதியாக முடித்தனுப்பும் ஃபாரத்தை லீடர் ஃபாரம் என்போம்) கடைசி பக்கத்தில் அதை இடம்பெறச் செய்து, அச்சுக்குப் போய்விட்டது. முதல் பக்கம் எத்தனை முக்கியமானதோ, கடைசி பக்கமும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், முக்கியமான புதிய தொடர் அறிவிப்புகளை கடைசி பக்கத்தில் வெளியிடுவது பத்திரிகை வழக்கம்.

பணிகள் முடிந்து, அலுவலகத்தை விட்டுக் கிளம்புகையில், என் மனசுக்குள் ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது. எங்கோ, ஏதோ பிரச்னை என்றால், இப்படி இனம்புரியாத நெருடல் எனக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்று. யோசித்தேன். சட்டென்று ஒரு ஃப்ளாஷ் அடித்த மாதிரி மனசுக்குள் அந்தக் குதர்க்கமான கேள்வி எழுந்தது.

அப்போதெல்லாம் ’கோஹினூர் காண்டம்’ விளம்பரங்கள் விகடனில் வெளியாகிக்கொண்டு இருந்தன. வேறு சில பத்திரிகைகளிலும் அந்த விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. இலக்கியப் பத்திரிகை ஒன்றில் முன் அட்டையில் காஞ்சி மகா பெரியவர் படமும், பின் அட்டையில் சில்க் ஸ்மிதா படத்துடன்கூடிய காண்டம் விளம்பரப் படமும் வெளியாகியிருந்தது. அது மடங்கி, பின் அடிக்கப்பட்டுப் புத்தகமாகும்போது தவறாகத் தெரியாது. ஆனால், பிரஸ்ஸில் அட்டை மட்டும் அச்சாகும்போது இரு படங்களும் நேருக்கு நேர் இருக்க, பார்ப்பதற்குக் கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கும்.

இந்தச் சம்பவம் என் மனத்தில் அப்போது எழ, டி.என்.சேஷன் விளம்பரத்தில், “ஓகே, நான் ரெடி!” என்று மட்டும் வார்த்தைகளை வைத்திருக்கிறோமே, எதிர் பக்கத்தில் ஏடாகூடமான வாசகங்களோடு காண்டம் விளம்பரம் வந்து தொலைத்தால், வாசகர்கள் இரண்டையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது தப்பாகத் தெரியாதா என்று எண்ணினேன். நினைக்கவே கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.

என் எண்ணத்தை திரு.வீயெஸ்வி சாரிடம் பகிர்ந்துகொண்டேன். “என்னய்யா, குண்டைத் தூக்கிப் போடறே? இரு, எதுக்கும் மூன்றாவது அட்டையில் (இதுதான் கடைசி பக்கத்துக்கு எதிரே வரும்) என்ன விளம்பரம் வருதுன்னு கேட்டுடுவோம்” என்று பிரஸ்ஸில் யாரிடமே விசாரித்தார். அந்த விளம்பரத்தின் புரூஃபை உடனே கொண்டு வரும்படி சொன்னார்.

நான் என்ன பயந்தேனோ, அதுவேதான் நடந்தது. பதறிப்போன வீயெஸ்வி அவர்கள், அதை உடனே ஆசிரியரிடம் கொண்டு சென்றார். அடுத்த சில நிமிடங்களில் பரபரப்புடன் வெளியே வந்து, லீடர் ஃபாரம் அச்சாக வேண்டாம், சில திருத்தம் இருக்கிறது என்று பிரஸ்ஸுக்குச் சொல்லிவிட்டு, “ஆசிரியர் நீங்கள் சொன்னதைப் பாராட்டினார். இந்த விளம்பரத்தின் எதிரே சேஷன் அறிவிப்பு கட்டாயம் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால், முதல் பக்கம் ‘உள்ளே’ எனப் பொருளடக்கம் போட்டிருக்கிறோம்; அதை எடுத்துவிட்டு, இந்த சேஷன் அறிவிப்பை முதல் பக்கத்தில் வைத்துவிடலாம். கடைசி பக்கத்துக்கு வேறு ஏதாவது இருக்கும்படி ஃபார்ம் லிஸ்ட்டில் மாற்றம் செய்துவிடலாம்” என்றார். அடுத்த சில நிமிடங்களில் கச்சிதமாக ஃபார்ம் லிஸ்ட்டை மாற்றியமைத்து அச்சுக்கு அனுப்பினார் வீயெஸ்வி.

அந்தக் குறிப்பிட்ட இதழ் வெளியான அன்று காலை, ஆசிரியர் என்னை அழைத்ததாகச் சொல்லி வீயெஸ்வி அழைத்துப் போனார்.

ஆசிரியரின் அறைக்குள் நுழைந்ததும், “வாங்கோ! உங்களால ஆனந்த விகடனுக்கு நேரவிருந்த ஒரு தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டது. அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். இந்தாங்கோ!” என்று ஒரு என்வலப்பை நீட்டினார்.

வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். அவர் வாய் வார்த்தையாகச் சொன்ன அந்தப் பாராட்டும் நன்றியும் கடித வடிவில் இருக்க, கூடவே ‘இந்த நன்றிக்கான சிறு அடையாளமாக ரூ.1000 தங்களுக்கு என்னுடைய அன்பளிப்பாக வழங்கியுள்ளேன். பெற்றுக்கொள்ளவும்.” என்றும் குறிப்பிட்டு,  கீழே ஆசிரியர் கையெழுத்திட்டிருந்தார். கூடவே ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டிருந்தது.

“எதுக்கு சார் இதெல்லாம்? இது என்னுடைய கடமைதானே? இதற்கு எதற்கு தனி அன்பளிப்பெல்லாம்?” என்று விடாப்பிடியாக மறுத்தேன். உடன் இருந்த மதன் சார், “வாங்கிக்குங்க ரவிபிரகாஷ், உங்களோட வேலையைத் தாண்டி ஸ்மார்ட்டா யோசிச்சு செயல்படுத்தினதுக்குதான் இந்த அன்பளிப்பு. இங்கே இதெல்லாம் சகஜம். விகடனுக்கு நீங்க புதுசுங்கிறதால உங்களுக்கு இது ஆச்சரியமா இருக்கலாம். இந்த மாதிரி இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் போகப் போக இன்னும் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்” என்று அந்த செக்கை மீண்டும் என் கையிலேயே திணித்துப் புன்னகைத்தார்.

அன்றைக்கு என் மாதச்சம்பளமே ரூ.1,200/-தான். இந்நிலையில் உபரியாக ஒரு ஆயிரம் ரூபாய் என்பது எத்தனை பெரிய அன்பளிப்பு எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் ஞானம் கடலைப் போல் ஆழமானது; அவரது பண்பு எவரெஸ்ட்டைப் போல் உயரமானது; அவரது பெருந்தன்மை வானத்தைப் போல் விசாலமானது!

குற்றாலக் குளியல் போல அவரின் பேரன்பில் திளைத்தவர்கள் பலருண்டு; நான் அவ்வளவுக்கு இல்லையென்றாலும், கும்பாபிஷேகத்தின்போது கோபுரத்தின் உச்சியிலிருந்து தெளிக்கப்படும் கலச நீரின் சில துளிகளையேனும் தலையில் தாங்கியவன் போல் அவரின் அன்பில் நனைந்தவன் என்கிற பெருமிதம் எனக்குண்டு.

(இன்னும் சொல்வேன்)


Sunday, May 08, 2016

என் புகுந்த வீடு - 16


மயக்கம் நிற்கவில்லை!


ரண்டு தும்மல் போட்டாலே, “என்னப்பா, பச்சைத் தண்ணியில குளிச்சியா? இல்லே, வெளியில எங்கேயாவது ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டியா? டாக்டர்கிட்டே காமிக்கிறதுதானே? இல்லே, கஷாயம் வெச்சுத் தரவா?” என்று அக்கறையோடு ஆயிரம் கேள்வி கேட்கிறவர் தாயார்தான்.

அப்படியான தாயன்பை என் குருநாதர் சாவி, விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் இருவரிடம் கண்டு வியந்திருக்கிறேன்; நெகிழ்ந்திருக்கிறேன். சாவி சார் குறித்த தகவலை அவரைப் பற்றிய தொடர் பதிவுகள் எழுதும்போது குறிப்பிடுகிறேன். இங்கே விகடன் சேர்மனின் தாயன்பில் நனைந்த சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.

விகடனில் சேர்ந்த ஆரம்ப சில ஆண்டுகளில் எனக்கு அடிக்கடி தலைவலி, தும்மல், மயக்கம் என வந்துகொண்டிருந்தது. அல்சரும் இருந்தது. அதனால் அடிக்கடி வயிற்று வலியும் வரும்.

எம்.டி. (சேர்மன் பாலசுப்ரமணியன்) இது பற்றிக் கேள்விப்பட்டு, ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, அல்சரைப் போக்க நான் சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டியதன் அவசியம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார். உண்மையில், குடும்ப மருத்துவர் ஒருவருக்கு அடிப்படையாகத் தெரிந்திருக்கக்கூடிய மருத்துவ விஷயங்கள் அனைத்தும் எம்.டி-க்குத் தெரியும். 

எனக்குத் தும்மல் வந்தால் தொடர்ச்சியாக பத்துப் பன்னிரண்டு தும்மல்கள் போட்டுவிட்டுத்தான் ஓய்வேன். அதுவும், என் உடம்பையே உலுக்கிப் போட்டு,  கட்டடமே இடிந்து விழுகிற மாதிரியான சத்தத்துடன் தும்மல்கள் வெளியேறும். எம்.டி-யுடனான கூட்டத்தில் கலந்துகொள்கிற சமயத்திலும் என்னால் தும்மலைக் கட்டுப்படுத்த முடியாமல், கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிற விதமாகத் தும்மல்கள் வந்துகொண்டே இருக்கும்.

அப்படி ஒருமுறை தும்மியபோது, எம்.டி. என்னிடம் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு மாத்திரையின் பெயரை எழுதிக் கொடுத்து, ‘ஒருவித அலர்ஜியினால் உங்களுக்கு இப்படியான தொடர் தும்மல்கள் வருகிறது. இதை வாங்கிச் சாப்பிடுங்கள். அதன்பின் வராது!’ என்றார். 

பொதுவாக நான், டாக்டர் அல்லாத வேறு யார் எந்த மாத்திரையைப் பரிந்துரைத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுவிட மாட்டேன். என் அம்மா, அப்பாவேகூட சிலமுறை மாத்திரைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். வாங்கிச் சாப்பிட்டதில்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை, எம்.டி. சொன்னபோது மறுக்கத் தோன்றவில்லை. உடனே வாங்கிச் சாப்பிட்டேன். சின்ன அரிசி போன்று இருந்தது அந்த மாத்திரை. ஆச்சரியம்... உடனடியாகத் தும்மல் நின்றது. 

சாவி சார்கூட, அவரிடம் பணியாற்றிய காலத்தில் என் உடம்பு பலவீனமாக இருப்பதைப் பார்த்து, தான் தினமும் போட்டுக்கொள்ளும் விட்டமின் மாத்திரைப் பட்டை ஒன்றைக் கொடுத்து, “தினமும் காலையில் சாப்பிட்டதும் இதில் ஒரு மாத்திரை போட்டுக் கொள்! உடம்பு தேறும்” என்று சொல்லியிருக்கிறார். நான் தயங்கியதைப் பார்த்துவிட்டு, “ஒண்ணும் ஆகாதுய்யா! பயப்படாதே! விட்டமின் மாத்திரைதான்! தைரியமா போட்டுக்கோ” என்று அவர் வற்புறுத்திய பின்புதான் அரை மனத்தோடு போட்டுக்கொள்ளத் தொடங்கினேன். பின்னர் சாவி சாரே மாதாமாதம் ஞாபகமாக தனக்கு அந்த மாத்திரை வாங்கும்போது எனக்கும் சேர்த்து ஒரு அட்டை வாங்கிவிடுவார். கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகள் அந்த மாத்திரையைச் சாப்பிட்டு வந்தேன். ஒருமுறை அவருடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய பின்பு, அந்த மாத்திரைப் பழக்கம் விட்டுப் போயிற்று. 

சரி, எம்.டி. விஷயத்துக்கு வருகிறேன். அதன்பின், அடுத்த வாரம், அடுத்த வாரம் என இரண்டு மூன்று முறை தொடர் தும்மல் வந்தபோதெல்லாம் அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டேன். அதன்பின், இன்று வரை அப்படியான தொடர் தும்மல்கள் தலைகாட்டவே இல்லை.

இன்னொரு நாள், மதன் சார், வீயெஸ்வி சார் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எனக்குக் கை காலெல்லாம் நடுநடுங்கி, மயக்கம் வருகிற மாதிரி இருந்தது. முன்பே சொன்னது மாதிரி அப்போதெல்லாம் எனக்கு இப்படித் திடீர் திடீரென மயக்கம் வந்துகொண்டிருந்தது.

’ஷுகர் செக் பண்ணிக் கொள்ளுங்கள்’, ‘நேரத்துக்குச் சாப்பிடுங்கள்’ என்றெல்லாம் முன்பு அறிவுரை சொல்லியிருந்தார் எம்.டி.  ஷுகர் செக் செய்துகொள்ளவில்லை; என்றாலும், எம்.டி. சொன்னதுபோல் காலை, மதியம், இரவு எனத் தவறாமல் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இருப்பினும், மயக்கம் வருவது தொடர்ந்துகொண்டே இருந்தது.

அன்றைக்கு மதன், வீயெஸ்வி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, எனக்கு மயக்கம் வர, வீயெஸ்வி சார் உடனடியாக என்னை அழைத்துக்கொண்டு எம்.டி. அறைக்குச் சென்றார்.

“சார், இவர் தன் உடம்பைக் கவனிச்சுக்கவே மாட்டேங்கறார். அடிக்கடி மயக்கம் வருது. இப்பவும் இவரால நிக்க முடியலே; பேச முடியலே! டாக்டர் கிட்டே கொண்டு காட்டுங்கன்னாலும் போக மாட்டேங்கறார்” என்று நான் என் உடல் நலத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டுவதுபோல் சொன்னார்.

அப்படித்தான் நான் இருந்தேன். இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் போவதை நான் விரும்புவதில்லை, அன்றும், இன்றும்.

வீயெஸ்வி சார் அப்படிச் சொன்னதும், “உக்காருங்கோ” என்று எங்கள் இருவரையும் தம் எதிரில் உட்காரச் சொல்லிவிட்டு, இன்டர்காமில் தன் டிரைவரை அழைத்தார் எம்.டி.

பின்னர் தம் குடும்ப டாக்டருக்கு போன் செய்தார். அவர் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்! அவருடைய மகனும் ஒரு டாக்டர். காது, மூக்கு, தொண்டை நிபுணர்.

அவரிடம், “என்னோட உதவி ஆசிரியர். ரவிபிரகாஷ்னு பேரு. அவருக்குக் கொஞ்ச நாளா அடிக்கடி மயக்கம் வந்துட்டிருக்கு. என்ன, ஏதுன்னு அவரை தரோவா செக் பண்ணி ட்ரீட்மென்ட் கொடுங்கோ! இப்போ உடனே அவரை அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.

டிரைவர் வந்ததும், அவரிடம் “என்னோட ஃபேமிலி டாக்டர் வீடு உனக்குத் தெரியுமில்லே, இவரை அவர்கிட்டே நம்ம கார்ல அழைச்சுட்டுப் போய் அறிமுகப்படுத்தி வை! ஒரு மணி நேரமானாலும் இருந்து அழைச்சுட்டு வா!” என்று சொன்னார்.

அப்போது. நான் எம்.டி-யுடன் அதிகம் பழகியிராத காலம் என்பதால், அவரின் இந்தச் செயல் எனக்கு மிகுந்த வியப்பையே அளித்தது. அவரிடம் பணியாற்றுபவர்களில் நான் பத்தோடு பதினொன்று அல்ல; நூற்றோடு நூற்று ஒன்று! என் மீது இத்தனை
அக்கறை எடுத்து, தமது காரிலேயே என்னை டாக்டரிடம் சிகிச்சை பெற அனுப்பி வைக்கவேண்டிய அவசியமே இல்லை. தம்மோடு ஓரிரு முறையே பழகியிருந்தாலும், அவர்கள் மீது மிகவும் வாஞ்சையும் தனி அன்பும் அக்கறையும் எடுத்துக்கொண்டு செயல்படுபவர் எம்.டி. என்பதைப் பின்னாளில் புரிந்துகொண்டேன்.

டிரைவருடன் கிளம்புவதற்கு முன், எம்.டி-யிடம், “சார், டாக்டர் எவ்வளவு ஃபீஸ் கேட்பாருன்னு தெரியலையே? இப்ப என் கையில ஒரு பைசாவும் இல்லை!” என்றேன்.

“அதெல்லாம் ஒண்ணும் கொடுக்க வேண்டாம்! நான் சொல்லியிருக்கேன் அவர் கிட்டே!” என்றார் எம்.டி.

அதன்பின், டிரைவருடன் எம்.டி-யின் குடும்ப டாக்டர் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய மகன்தான் என்னைச் சோதித்தார்.  காதில் பிரச்னை இருந்தாலும் மயக்கம் வரும் வாய்ப்பு இருக்கிறதென்று சொல்லி, காது சம்பந்தமான சோதனைகளைச் செய்தார். ’பின்ச்சர்’ மாதிரி ஒரு பொருளைக் காதின் அருகில் தட்டி, எனது கேட்கும் திறன் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கிறது என்று கணக்கிட்டார். பிபி எடுத்துப் பார்த்தார்.

சோதனைகள் எல்லாம் முடிந்த பின்னர், தன் ஸீட்டில் வந்து அமர்ந்துகொண்டு, பிரிஸ்கிருப்ஷன் எழுதி என்னிடம் நீட்டினார். “இந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டுட்டு, ஒரு மாசம் கழிச்சு வந்து காட்டுங்க” என்றார்.

“சரி சார்” என்று நான் கிளம்பவும், “ஃபீஸ் 200 ரூபாயை அங்கே கவுன்ட்டர்ல கட்டிடுங்க” என்றார். துணுக்குற்றேன். “இல்லையே! எங்க எம்.டி-தான் அனுப்பிச்சாரு! அவர் எதுவும் கொடுக்க வேண்டாம்னாரே...” என்றேன்,  பரிதாபமாக. “சார் நம்பருக்கு வேணா போன் போட்டுக் கேளுங்களேன்” என்றேன்.

“அதெப்படி...” என்று தயங்கிய டாக்டர், “சரி, போங்க! நான் அவர்கிட்டே பேசிக்கறேன்” என்று என்னை அனுப்பினார்.

நான் டிரைவருடன் காரில் அலுவலகம் திரும்பினேன். நேரே எம்.டி. அறைக்குச் சென்றேன். டிரைவரும் என்னுடன் எம்.டி. அறைக்கு வந்தார்.

“என்ன, போனீங்களா? டாக்டரைப் பார்த்தீங்களா? என்ன சொன்னார்? ஏன் மயக்கம் அடிக்கடி வர்றதாம்?” என்று கேட்டார் எம்.டி.

சொன்னேன். டாக்டரின் மகன்தான் என்னைச் சோதித்தார் என்றேன். காதுக்கான சோதனைகளை நடத்தி, ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதித் தந்துள்ளார்; ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து பார்க்கச் சொன்னார் என்றேன்.

அப்போது டிரைவர் குறுக்கிட்டு, “கிளம்பறப்போ ஃபீஸ் 200 ரூபாய் கட்டிட்டுப் போங்கன்னுட்டார் டாக்டர். தம்பிக்கு என்ன பண்றதுன்னே தெரியலே ஒரு நிமிஷம்! உங்களுக்கு வேணா போன் பண்ணிக் கேளுங்கன்னுச்சு!” என்று சொன்னார்.

“எனக்கு எதுவும் போன் பண்ணலியே?” என்ற எம்.டி-க்கு சுறுசுறுவென்று கோபம் ஏறிவிட்டது. “அப்படியா ரவி? உங்க கிட்டே அவர் பணம் கேட்டாரா? நான்தான்  உங்க கிட்டே எதுவும் கேக்க வேணாம்னு அவர் கிட்டே படிச்சுப் படிச்சு சொன்னேனே? அப்புறம் எப்படிக் கேப்பார்?” என்றார்.

“இல்லே சார், அவருக்குத் தெரியாதா இருக்கும். நான் சொன்னதும்தான் சரி, போங்கன்னுட்டாரே!” என்றேன்.

“கேட்டதே தப்புங்கறேன்! இருங்க, அவருக்கு இப்பவே போன் பண்றேன்” என்று நம்பர்களை டயல் செய்ய ஆரம்பித்தார் எம்.டி.

எனக்குக் கவலையாகிவிட்டது, என்பொருட்டு அவர்களுக்குள் ஏதும் மனஸ்தாபமோ பிரச்னையோ உண்டாகிவிடக்கூடாதே என்று.

எம்.டி. அதற்குள் எதிர்முனையைத் தொடர்பு கொண்டுவிட்டார். 

“ஆமாம்... பாலுதான் பேசறேன். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சொன்னேன், ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன், பூரணமா செக் பண்ணி அனுப்புங்கோன்னு. ஃபீஸ் சம்பந்தமா அவர் கிட்டே எதுவும் கேக்க வேணாம்னு சொன்னேன். நான் பார்த்துக்கறேன்னு அவ்வளவு தெளிவா சொல்லி அனுப்பியிருக்கிறப்போ, அவர் கிட்டே ஃபீஸைக் கட்டிட்டுப் போங்கன்னு சொன்னீங்களாமே?..... அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வேலை மெனக்கிட்டு உங்களுக்குப் போன் பண்ணி சொன்ன பிறகும் அவர் கிட்டே ஃபீஸ் கேட்டா, அவர் என்னைப் பத்தி என்ன நினைச்சுப்பார்?..... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நீங்கதான் உங்க பையன் கிட்டே சொல்லிட்டுப் போயிருக்கணும்?..... இல்லே, இது தப்பா இருக்கு! ஸாரி, உங்க பதில் பொறுப்பான பதிலா எனக்குத் தெரியலே! நான் இப்பவே டிரைவர் கிட்டே 200 ரூபா கொடுத்தனுப்பறேன். கணக்கை செட்டில் பண்ணிடுங்கோ!” என்று படபடவெனப் பொரிந்தார்.

டிரைவரிடம் ரூ.200 கொடுத்து அனுப்பியதோடு, “ரவி கிட்டேர்ந்து அந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கிண்டு போய், அந்த மாத்திரைகளையும் வரும்போது வாங்கிண்டு வந்து அவர் கிட்டே கொடுத்துடுங்கோ!” என்றார் எம்.டி.

பிறகு என்னிடம், “ரொம்ப ஸாரி! உங்களுக்குத் தர்மசங்கடமா போயிருக்கும். இத்தனைக்கும் நான் அவர்கிட்டே படிச்சுப் படிச்சு சொல்லியிருந்தேன். பையன் கிட்டே சொல்ல மறந்துட்டேங்கறார்! சரி, இதை நான் பார்த்துக்கறேன். நீங்க உடம்பைக் கவனிச்சுக்குங்கோ! அவர் சொன்னாப்ல ஒரு மாசம் கழிச்சுக் கொண்டு காட்டுங்கோ!” என்றார் எம்.டி.

அதன்பின்பும் எனக்கு மயக்கம் தொடர்ந்துகொண்டிருந்தது. எம்.டி. அடுத்த முறை என்னை வேறு ஒரு டாக்டரிடம் அனுப்பினார். அந்த டாக்டர் எனக்கு லோ ஷுகர் இருக்கலாம் என அபிப்ராயப்பட்டு அதற்கான டெஸ்ட்டுகளை எடுக்கச் சொன்னார்.

குளுகோஸ் டெஸ்ட், ஃபாஸ்ட்டிங் டெஸ்ட், எம்.ஆர்.சி. டெஸ்ட் என விதம்விதமாக எடுத்தேன்.  ரூ.1,500/-க்கு மேல் செலவானது. அதையும் எம்.டி. எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். டெஸ்ட்டுகளில் எனக்கு லேசாக ஷுகர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதற்கான ரிப்போர்ட்டை எடுத்துப் போய் எம்.டி-யிடம் காண்பித்தேன். ஒரு தேர்ந்த மருத்துவர் போன்று அதை முழுவதுமாகப் பார்த்து, “பயப்பட வேண்டியதே இல்லே! ஷுகர் வரக்கூடிய வாய்ப்பு இருக்குன்னுதான் ரிப்போர்ட்ல இருக்கு. இதுக்கப்புறம் லெவல் ஒன், லெவல் டூ-ன்னு வரிசையா இருக்கு. இதையெல்லாம் கடந்து வரதுக்குப் பல வருஷங்களாகும். அதுக்குள்ளே உணவு விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்தா ஷுகரே வராம பார்த்துக்கலாம்!” என்று சொன்னார்.

அதன்பிறகு, எம்.டி. சொன்ன உணவுக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன். உடம்பில் தண்ணீர் அதிகம் இல்லையென்றாலும், மயக்கம் வர வாய்ப்புள்ளது என்று சொல்லி, அடிக்கடி தண்ணீர் குடிக்கச் சொன்னார். அதையும் செய்தேன். சில காலத்துக்குப் பின்பு மயக்கம் வருவது அடியோடு நின்று போனது.

ஆனால், ஆனந்த விகடன் என்கிற நிறுவனத்தின் மீதான மயக்கமும், அதன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் என்கிற மாமனிதரின் மீதான மயக்கமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

(இன்னும் சொல்வேன்)