உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 24, 2012

என்னோடு இருக்கிறார் சாவி சார்!

சாவி சாரின் சதாபிஷேகத்துக்குப் பின்னர், அவரை நான் அதிகம் சந்திக்கவில்லை. சாவி பத்திரிகையை திருவேங்கடம் என்பவர் வாங்கி, நடத்திக்கொண்டு இருந்தார். சாவி சாரே அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார். முன்னர் ஆனந்த விகடனில் பணியாற்றிய எஸ்.வரதராஜன் என்பவர் சில காலமும், பாக்கியம் ராமசாமி அவர்கள் சில காலமும் சாவி சாருக்கு உதவியாக இருந்து நடத்திக் கொடுத்தார்கள். சாவி சாரின் கோப தாபங்கள் தொடர்ந்ததில், அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சீக்கிரமே விலகிக்கொண்டார். பின்பு, திருவேங்கடம் அவர்களே ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார் என நினைக்கிறேன். பின்பு, அவரும் தொடர்ந்து பத்திரிகையை நடத்த இயலாமல் நிறுத்திவிட்டார். எப்படியோ... சாவி பத்திரிகை மறுபிறவி எடுத்தும், இரண்டு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே வெளியாகி நின்று போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

அதற்குப் பின்னர் சாவி சார் மந்தைவெளியில் இருந்த தமது மகள் ஜெயந்தி வீட்டில் செட்டிலாகி, பூரண ஓய்வில் இருந்தார். அங்கே அவரும் மாமியும் மட்டும்தான். மகள் ஜெயந்தியும் மருமகனும் பேரக் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

இந்த நிலையில்தான் சாவி சார் ஒரு நாள் என்னை விகடன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். நெடுநேரம் விகடனில் என் பணிகள் குறித்து விசாரித்தார். விகடனில் என்னைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னைப் பற்றி அவரிடம் விசாரித்ததையோ, அதற்கு சாவி சார் என்னைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டிச் சொன்னதையோ என்னிடம் சொல்லவே இல்லை. அப்போது மட்டுமல்ல; கடைசி வரைக்கும்கூட இது பற்றி சாவி சார் சொல்லவில்லை. நானும்கூட அவரிடம் இது குறித்துப் பேசி, நன்றி தெரிவிக்கவில்லை.

அன்றைய தொலைபேசி உரையாடலின் இறுதியில், முடிந்தால் தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார் சாவி. “கண்டிப்பா ஒரு நாள் வரேன் சார்” என்றேன். “அப்படிப் பொதுவா சொன்னா, என்னிக்காவது ஒரு நாள் போய்க்கலாம்னு தோணும். போகவே கைவராது. அதனால, யாரையாவது போய்ச் சந்திக்கணும்னா என்னிக்குன்னு ஒரு டேட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் அந்தச் சந்திப்பு நிகழும். சரி, உன்னால என்னிக்கு இங்கே வரமுடியும், சொல்லு?” என்றார். “நீங்களே சொல்லுங்க சார், என்னிக்கு வரட்டும்? இந்த ஞாயித்துக்கிழமை வரட்டுமா?” என்றேன். “வா! அவசியம் வா! வரும்போது வொய்ஃபையும் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வா! காலையில 10 மணிக்கு இங்கேயே சாப்பிடற மாதிரி வா!” என்றார்.

அதன்படியே காலையில் ஆட்டோ பிடித்து, மனைவி, குழந்தைகளோடு மந்தைவெளி போனேன். சாவி சாரும், மாமியும் மிகவும் மகிழ்ச்சியோடும் அன்போடும் வரவேற்றார்கள். ஜூஸ் கொடுத்தார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். விகடனில் என் வேலை, குடும்ப விஷயங்கள், குழந்தைகளின் நலன் எனப் பேச்சு பொதுவானதாகவே இருந்தது. விகடனில் தான் பணியாற்றியபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார் சாவி. விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவாற்றல், கருணை உள்ளம், மிக நேர்மையான குணம் எனப் பலவற்றை அனுபவ உதாரணங்களுடன் சொன்னார்.

பிறகு, 11 மணி அளவில், “வா, வெளியே ஓர் ஓட்டலில் போய் சாப்பிட்டுட்டு வரலாம்! மாமியால இப்பல்லாம் வெறும் ரசம் மட்டும்தான் சமைக்க முடியுது!” என்று மாமியையும் எங்களையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினார். முன்பக்கத்தில் டிரைவருக்கு அருகில் சாவி சார் ஏறிக்கொள்ள, பின் சீட்டில் மடியில் குழந்தைகளை அமர்த்திக்கொண்டு நானும் மனைவியும் அமர்ந்துகொண்டோம். அருகில் மாமி.

கார் நேரே அண்ணா சாலையில் இருந்த மதுரா ஓட்டலுக்குச் சென்றது. அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்தார். குழந்தைகள் உள்பட திருப்தியாகச் சாப்பிட்டோம். பின்னர் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் வந்தது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். பின்னர் ஒரு பாக்கெட் நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார். கிளம்பினோம்.

“காரை பீச் ரோடு வழியா மெதுவா விடு!” என்றார். வெயில் இல்லை. நல்ல காற்று வேறு! மீண்டும் சாவி சாரின் இல்லத்துக்குத் திரும்பினோம்.


சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். சாவி சார் ஒரு கணினி வாங்கியிருந்தார். அதில் கம்போஸ் செய்யவும், ஸேவ் செய்யவும் பழகிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார். கணினி அருகேயே நான் போயிராத காலம் அது. எனவே, இந்த வயதில் சாவி சார் கணினி கற்றுக்கொள்கிறாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “கொஞ்சம் காசு சேர்த்து நீயும் ஒண்ணு வாங்கிப் போடு! உன் வேலைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!” என்றார். ‘ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார். எனக்கெதற்கு கம்ப்யூட்டர்? அநாவசியம்!’ என்றுதான் அப்போது நினைத்தேன்.


பிறகு, மாமியை அழைத்து, உள்ளே சென்று பீரோவிலிருந்து என் மனைவிக்காக வைத்திருந்த புடவையை (ஜப்பான் சில்க்) எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி சொன்னார். வெற்றிலை பாக்கு, குங்குமச் சிமிழ், ரவிக்கை பிட் உள்பட ஒரு தட்டில் புடவையை வைத்து என் மனைவியிடம் கொடுத்தார் மாமி. குழந்தைகளுக்கு பலூன் பாக்கெட், குட்டிக் குட்டி பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டி, காற்றுத் தலையணை, ஃபாரின் செண்ட், யூஸ் அண்ட் த்ரோ ரேஸர்கள் 50 அடங்கிய ஒரு பாக்கெட் என என்னென்னவோ தந்தார்.


மணி மதியம் 3 இருக்கும். விடைபெறுகிற நேரம் வந்தது.


“ரவி, நீ குடும்பத்தோடு இங்கே வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அடிக்கடி நீ மட்டுமாவது வந்துண்டு போயிண்டு இரு ரவி!” என்றவர், “உனக்குன்னு நான் ஒண்ணுமே தரலை. இந்தா, இது பழசுதான்! என் ஞாபகார்த்தமா இதை வெச்சுக்கோ!” என்று தன் கையில் பல ஆண்டுகளாகக் கட்டிக்கொண்டிருந்த வாட்ச்சைக் கழற்றி என் கைகளில் தந்தார்.


எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அவரையும் மாமியையும் மனைவியோடு நமஸ்கரித்து எழுந்து, அந்த வாட்சைப் பெற்றுக்கொண்டேன். (படத்தில் இருப்பது சாவி சாரின் வாட்ச்தான்!)

அந்த வாட்ச்சைப் பார்க்கிறபோதெல்லாம், சாவி சாரே என்னோடு இருந்து, தைரியம் சொல்லி, ஊக்கம் கொடுத்து, ஆசீர்வதித்து வழிநடத்துவதான ஒரு திருப்தி எனக்குள் எழுவது உண்மை!
.


Saturday, June 23, 2012

தந்தையானார் சாவி; மகளானேன் நான்!

சென்ற பதிவின் தொடர்ச்சி...

றுநாள்-

வேறு எந்த பத்திரிகைக்கு அப்ளிகேஷன் தட்டிவிடலாம் என்கிற யோசனையோடு நான் கண்விழித்தேன்.

காலை மணி 10. மற்றவர்கள் சாவி அலுவலகம் போயிருப்பார்களா, என்ன நடந்திருக்கும் என்கிற யோசனை வந்தது.

12 மணி சுமாருக்கு, அட்டெண்டர் ஃபிரான்சிஸ் சைக்கிளில் என் வீடு தேடி வந்தார். “சார், உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க!” என்றார். “யாரு?” என்றேன். “நம்ம ராணிமைந்தன் சார், மோகன் எல்லாரும்தான்!” என்றார். “சாவி சார் கூப்பிட்டாரா? எல்லாரும் ஆபீஸுக்கு வந்துட்டாங்களா?” என்று கேட்டேன்.

சாவி அலுவலகம் அப்போது முரசொலி அலுவலகத்தை ஒட்டிய மாதிரி இருந்த ஒரு சின்ன தெருவில் இயங்கிக்கொண்டு இருந்தது.

“இல்லை சார்! கதவைப் பூட்டி வீட்டுல கொண்டுவந்து கொடுத்துடுன்னு சாவி சார் சொல்லிட்டாரு. எல்லாரும் இப்ப சாவி சார் வீட்டு வாசல்லதான் இருக்காங்க. உங்களையும் அங்கே வரச் சொன்னாங்க” என்றார்.

“எதுக்கு?” என்றேன்.

“சாவி சார் கிட்ட ஸாரி கேட்கறதுக்குதான்! வாங்க சார், கையோடு உங்களை அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க!” என்றார் ஃபிரான்சிஸ். “சரி, நீங்க கிளம்புங்க! நான் பின்னாடியே வரேன்!” என்றேன்.

பின்னர் சில நிமிடங்களில் தயாராகி, சைக்கிளில் புறப்பட்டேன். சாவி சார் அப்போது அண்ணா நகரில் இருந்த தனது பெரிய வீட்டை விற்றுவிட்டிருந்தார். லயோலா கல்லூரிக்கு எதிரே நீளும் சாலையில், வசதியானதொரு அப்பார்ட்மெண்ட்டில் நான்காவது தளத்தில் வாடகைக்குக் குடியிருந்தார்.

நான் அங்கே போன சமயத்தில், அனைவரும் (ஆர்ட்டிஸ்ட் மோகனைத் தவிர, வேறு யார் யாரென்று தற்சமயம் பெயர்கள் நினைவில்லை.) அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தார்கள். நான் போய் இறங்கியதும், “வாங்க, போகலாம்! போய்ப் பார்த்து சாரை சமாதானப்படுத்தி, மறுபடியும் பத்திரிகையை நடத்தச் சொல்லிக் கேட்போம்!” என்றார்கள்.

“நான் வரலை. நீங்க போய்ப் பேசுங்க. என்ன சொல்றார்னு கேளுங்க. தொடர்ந்து நடத்துறதா சொன்னார்னா, நானும் மேல வந்து அவரைப் பார்க்கிறேன். இல்லேன்னா நான் இப்படியே கிளம்பறேன்!” என்றேன். அவர்கள் என்னையும் வரச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் தீர்மானமாக சாவி சாரைப் பார்க்க மறுத்துவிட்டேன்.

அவர்கள் மட்டும் மேலே சென்று, சாவி சாரைப் பார்த்துப் பேசிவிட்டு, அரை மணி நேரம் கழித்துக் கீழே வந்தார்கள்.

“என்ன சொன்னார் சாவி சார்?” என்றேன்.

“என்ன... நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்க. ரவி வரலையான்னு கேட்டார். வந்திருக்கார் சார். கீழே நின்னுட்டிருக்கார்னோம். ஓஹோ, சார் வரமாட்டாராமான்னு கொஞ்சம் கோபமாயிட்டார்!”

“சரி, பத்திரிகையை மறுபடி நடத்துறதா சொன்னாரா?” என்று கேட்டேன்.

“எல்லாரும் சேர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா நடத்துறதா சொன்னார்!” என்றார் மோகன்.

“தேவையில்லை. நான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கத் தயாராக இல்லை. நான் கிளம்பறேன்!” என்று மற்றவர்கள் தடுத்தும் கேட்காமல் கிளம்பிவிட்டேன்.

மற்றவர்கள் மட்டும் சாவி சார் கேட்டது போலவே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், நான் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதால், சாவியை மீண்டும் நடத்தப்போவது இல்லை என்று சாவி சார் சொல்லிவிட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

“தப்பு செய்தது நான்; அதனால் என்னைத் தண்டிக்கட்டும். ஆனால், மற்றவர்களைத் தண்டிப்பது போல் பத்திரிகையை மூடுவானேன்?” - இதுதான் என் கேள்வி.

அதே போல், வேறொன்றையும் பின்னர் ராணிமைந்தன் மூலமாகக் கேள்விப்பட்டேன். அன்றைக்கு, சாவி சாரின் துண்டு பற்றி ராணி மைந்தன் என்னிடம் பேசியபோது, நடந்த தவறுக்கு மன்னிக்கச் சொல்லி நான் கேட்பேன் என்று எதிர்பார்த்திருந்தாராம் சாவி. நான் வேறெதுவும் சொல்லவில்லை என்றதும், ‘வேற ஒண்ணுமில்லையா ரவி?’ என்று ராணி கேட்டது அதை மனதில் கொண்டுதான். அப்போதே நான், “ஸாரி சார்! தெரியாம நடந்து போச்சு. மன்னிச்சுக்குங்க!” என்று சொல்லியிருந்தால், நடந்தது அனைத்தையும் மறந்து உடனே ஹோட்டல் அறைக்குக் கிளம்பி வரும் உத்தேசத்தில்தான் இருந்தாராம் சாவி. நான் நடந்த செயலுக்கு வருந்தவில்லை என்றதும், அவரின் கோபம் மேலும் அதிகமாகிவிட்டதாகச் சொன்னார் ராணி.

ஆக, எப்படியோ... ஒரு பத்திரிகை நின்ற பழி என் மீது விழுந்தது!

இங்கே ஒரு முக்கிய உண்மையையும் நான் சொல்லவேண்டியுள்ளது. பத்திரிகையை நிறுத்தியதற்கு சாவி சாருக்கு நான் ஒரு சாக்குதான். நிஜத்தில் நிர்வகிக்க ஆளில்லாமல், விற்பனையைக் கவனிக்க ஆளில்லாமல், ஏஜெண்ட்டுகளிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் ஆளில்லாமல் பத்திரிகையின் விற்பனை சரிந்து, நஷ்டத்தில் தள்ளாடிக்கொண்டு இருந்தது. எனவே, அதை மேலும் தொடர்வதில் அர்த்தமில்லை என்கிற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் சாவி. நான் மன்னிப்புக் கேட்டிருந்தால், ஒருவேளை மேலும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு நடத்தியிருப்பாரோ என்னவோ!

மூன்றாம் முறை சாவி சாரிடம் நான் வேலை கேட்டு நின்றபோது, “இவன் அடிக்கடி கோவிச்சுக்கிட்டு வேலையை விட்டு நின்னுடறவனாச்சே! மறுபடியும் ஒழுங்கா இருப்பான்கிறது என்ன நிச்சயம்னு நீங்க நினைக்கலாம், சார்! ஆனா, உறுதியா சொல்றேன். நீங்களா என்னை வேண்டாம்னு வெளியே அனுப்புற வரைக்கும் நானா வேலையை விட்டு நிக்க மாட்டேன்!” என்று வாக்குறுதி தந்திருந்தேன்.

அதை நான் காப்பாற்றிவிட்டேன்தான் என்று நினைக்கிறேன்.

அதன்பின், நான் ஆனந்த விகடனில் சேர்ந்ததை அறிந்து, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து மிகவும் சந்தோஷப்பட்டார் சாவி சார் என்று அறிந்தேன்.

என் மீதிருந்த கோபமெல்லாம் தணிந்து, என்னை வீட்டுக்கு வரச் சொல்லி பலமுறை அழைப்பு விடுத்தார் சாவி சார். எனினும், விகடனில் சேர்ந்து ஆறு மாத காலத்துக்கு அவரை நான் போய்ப் பார்க்கவே இல்லை.

காரணம், ஒருவேளை அவர் மீண்டும் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தப்போவதாகச் சொல்லி, என்னை வந்து கவனித்துக்கொள்ளும்படி அழைத்தால், மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் நான் மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு, அவரிடமே போய்விடுவேன் என்கிற பயம்தான்.

சாவி மிகச் சிறந்த பத்திரிகையாளர்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் பத்திரிகையைத் திறம்படக் கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. எனவே, அதை நம்பிச் செல்வது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போல்தான் என்று எனக்குத் தோன்றிவிட்டது.

என் காலை நான் அழுத்தமாக ஊன்றிக்கொள்ள வேண்டியது அப்போது எனக்கு அவசியமாக இருந்தது. எனவே, ஆனந்த விகடனில் என்னை நிரந்தர ஊழியனாக அங்கீகரிக்கும் வரை, அதாவது அடுத்த ஆறு மாத காலத்துக்கு அவரை நான் போய்ச் சந்திக்கவே இல்லை.

அதன்பின், அவருக்கு சதாபிஷேகம் வந்தது. அதற்கு அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன். பிரிவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து அப்போதுதான் அவரைச் சந்திக்கிறேன்.

மேடையில் மாலையும் கழுத்துமாக தம்பதி சமேதராக உட்கார்ந்திருந்த சாவி சாரை நெருங்கி, கைகூப்பி வணக்கம் சொன்னேன்.

அவர் என்னை அருகில் அழைத்தார். குனியச் சொன்னார். என் காதருகில் கிசுகிசுப்பாகக் கேட்டார்...

“அவா உன்னை நன்னா வெச்சுண்டிருக்காளா?”

மகளைத் திருமணம் செய்துகொடுத்து, அவள் தன் புகுந்த வீட்டில் குடியேறி, சில ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்துவீட்டுக்கு வரும்போது, ஒரு பாசமிக்க தந்தை வாஞ்சையோடு கேட்கும் கேள்வியல்லவா இது!
.

Tuesday, June 12, 2012

சாவியை நிறுத்தினார் சாவி!


 
டுகடு முகத்துடன் நின்றுகொண்டு இருந்த சாவி சாரைப் பார்த்ததுமே, அடி வயிற்றில் கத்தி சொருகிய மாதிரி ஒருவித பயமும் படபடப்பும் நடுக்கமும் உண்டானது எனக்கு. என்னைப் பார்த்ததுமே கோபத்தில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கிவிட்டார் சாவி சார்.

என்ன நினைச்சுக்கிட்டிருக்கே நீ உன் மனசிலே? இங்கே என்ன வெட்டியா வந்து தின்னுட்டு, குடிச்சுக் கும்மாளம் போட்டுக் கூத்தடிக்கவா உங்களையெல்லாம் செலவு பண்ணிக் கூட்டிட்டு வரேன்? 1 மணிக்கு மீட்டிங்னு சொன்னா டாண்ணு 1 மணிக்கு அத்தனை பேரும் இங்கே வந்து நிக்க வேணாமா? 1 மணிக்கு மீட்டிங்னு சொல்லியிருக்கோமேனு நான் என் வேலையையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு12:30-க்கெல்லாம் வந்து இங்கே தேவுடு காத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? பொறுப்பாசிரியர்னு சொல்லிக்க வெக்கமாயில்லே உனக்கு? போறும்... இங்கேயே இப்பவே சாவி பத்திரிகையை மூடிட்டேன். போய் எல்லார்கிட்டயும் சொல்லு, போ! எக்கேடோ கெட்டுப் போங்க. எனக்குக் கவலை இல்லே! உங்களுக்கே பொறுப்பும் அக்கறையும் இல்லாதப்ப நான் மட்டும் எதுக்கு உங்களைப் பத்திக் கவலைப்படணும்?...” என்று என்னைப் பேசவே விடாமல் சடசடவென்று பொரிந்து தள்ளியவர், ராணிமைந்தன் பக்கம் திரும்பி, “ராணி, எல்லாத்தையும் எடுத்து பேக் பண்ணு. உடனே ரூமை காலி பண்றோம்!” என்றார்.

ராணிமைந்தனும் சாவி சாரின் பெரிய சூட்கேஸில் துணிமணி, பொருள்களை அடுக்கத் தொடங்க, நான் மெதுவாக, “சார், நாங்க 12:30-க்கே வந்துட்டோம். கீழே பார்த்தேன். வழக்கமா நிற்கிற உங்க காரைக் காணலே. அதான், நீங்க இன்னும் வரலையோன்னு...” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, முன்னிலும் உக்கிரத்தோடு என்னைப் பார்த்த சாவி சார், “வரலையோன்னு நினைக்கிறதோட ஏன் நிறுத்திட்டே? அங்கேயே செத்து எனக்குக் காரியம் பண்ணி முடிச்சுட்டாங்கன்னு நினைச்சுக்கிறதுதானே?” என்றார். எனக்கு அடுத்துப் பேசவே வார்த்தை வரவில்லை.

சாவி சாரே தொடர்ந்து, “வந்திருந்தா என்ன பண்ணியிருக்கணும்? நேரே என் ரூமுக்கு வந்திருக்கணுமா இல்லையா? நேரே உங்க ரூம்ல போய் இழுத்துப் போர்த்திட்டுப் படுத்துட்டா என்ன அர்த்தம்? பத்திரிகை மேல உனக்கே அக்கறை இல்லை. வேறென்ன சொல்றது? போ, போ! என் கண்ணு முன்னால நிற்காதே! உன்னைப் பார்க்கப் பார்க்கப் பத்திக்கிட்டு வருது எனக்கு. மேற்கொண்டு ஏதாவது சொல்றதுக்குள்ளே ஓடிப்போயிடுங்க எல்லாரும்! இனிமே யாரும் வேலை அது இதுன்னு அங்கே வந்து நிற்க வேணாம். பத்திரிகையை இழுத்து மூடியாச்சு. நான் சொன்னா சொன்னதுதான்!” என்றவர், தயாரான பெட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொள்ள, ராணிமைந்தன் பெரிய சூட்கேஸை எடுத்துக் கொள்ள, வந்திருந்த சாவியின் உறவினர் மற்ற பொருள்களை எடுத்துக் கொள்ள, அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். சாவி சார் மிகக் கோபமாக கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து, யாரையும் லட்சியமே செய்யாமல் வெராண்டாவில் நடந்து, படிகளில் வேகமாக இறங்கிப் போனார். பின்னாலேயே போய் அவரைச் சமாதானப்படுத்த முயன்ற எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியிடமும் கோபமாக ஏதோ சொன்னார் சாவி. விறுவிறுவென அனைவரும் கீழே இறங்கிப் போய், டாக்ஸி ஒன்றைச் சடுதியில் பிடித்து, மளமளவென்று ஏறிக் கிளம்பிப் போயே போய்விட்டனர். அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. அடை மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. நாங்கள் அநாதைகள் போல் நின்றுகொண்டு இருந்தோம்.

பின்னர், மெதுவாக எங்கள் அறைக்குத் திரும்பினோம். அன்றைக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் எங்களுக்கு டிரெயின். அதுவரை என்ன செய்வது? தெரியவில்லை. அருகில் உள்ள லால்பாக்குக்குப் போய்ப் பொழுதைக் கழிக்கலாம் என்றால், சாவி சார் தன் உறவினர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பின்பு, ஒருவேளை கோபம் தணிந்து போன் செய்தாலும் செய்யலாம் என்று ஒரு எண்ணம் எங்களை வெளியே போக விடாமல் தடுத்தது. சாவி சார் போன் செய்வார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

மூன்று மணி சுமாருக்கு போன் வந்தது. எடுத்துப் பேசினேன். ராணிமைந்தன்தான் பேசினார். “ரவி, கிளம்பி வரும்போது அங்கே எங்க ரூம்ல சாவி சாரோட பெரிய டர்க்கி டவல் ஒண்ணை மறதியா விட்டுட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன். உனக்குத் தெரியுமில்லையா, சார் எப்பவும் தோள்ல போட்டிருப்பாரே, அந்த மஞ்சள் டர்க்கி டவல்தான்! போய் இருக்கான்னு பார்த்து, இருந்தா எடுத்துக்கிட்டு சென்னை வந்துடுங்க!” என்றார்.

துண்டு இருந்தால், அதைக் கொண்டு போய்க் கொடுக்கும் சாக்கிலாவது சென்னையில் சாவி சாரை சந்தித்துச் சமாதானம் செய்யலாம் என்று மெல்லியதாக ஒரு நம்பிக்கை என் நெஞ்சில் துளிர்த்தது.

சரி சார்! ஆனா, சாவி சார் என்ன இப்படிக் கோபப்பட்டுட்டாரு! நாங்க நெஜம்மாவே 12:30-க்கெல்லாம் ரூமுக்கு வந்தாச்சு. சாவி சாரின் குணம் தெரிஞ்சு, எல்லாரையும் விரட்டி அழைச்சுக்கிட்டு வந்தேன். வேணா கேட்டுப் பாருங்க. நான் பண்ணின ஒரே தப்பு, காரைக் காணோம்னதும் சாரும் வரலைபோலன்னு நினைச்சுட்டதுதான்!” என்றேன்.

கார்லதான் வந்தோம் ரவி, வெளியிலேயே சாரையும் என்னையும் இறக்கிவிட்டுட்டுக் கார் போயிடுச்சுநாங்க சார் சொன்ன மாதிரி 12:30-க்கே ரூமுக்கு வந்துட்டோம். மணி ஒண்ணாகியும் உங்களைக் காணோம்னதும் சாருக்கு பிரஷர் ஏறிடுச்சு” என்றார் ராணி.

அப்படியும் உங்க அறைப் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன் சார். கதவு மூடியிருந்தது...”

காலிங் பெல் அடிச்சியா?”

இல்லை சார்! வழக்கமா நீங்க ரெண்டு பேரும் அறைக்குத் திரும்பிட்டீங்கன்னா, அறைக் கதவு விரியத் திறந்துதான் இருக்கும். அதனால தூரத்திலேர்ந்தே பார்த்துட்டு, வரலைன்னு நினைச்சுப் போயிட்டேன். இதெல்லாம் யதேச்சையா நடந்த விஷயங்கள். இதுக்கு சார் இத்தனைக் கோபப்படணுமா? முதல் ரெண்டு நாளும் நல்லாத்தானே போச்சு? இன்னிக்கும் டிரெயின் ராத்திரிதான். அதுவரைக்கும் பத்திரிகை பத்திப் பேசியிருக்கலாமே?” என்றேன்.

சரி, விடு ரவி! சாரோட குணம்தான் உனக்குத் தெரியுமில்லே? அவருக்கு என்னவோ இன்னிக்கு மூடு சரியில்லே! விடு! அறையில சாரோட துண்டு இருந்தா எடுத்துட்டுப் போயிடுங்க. அதைச் சொல்றதுக்காகத்தான் போன் பண்ணினேன்!” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தார் ராணிமைந்தன்.

இன்றைய தினம் போல் அன்றைக்கு செல்போன் வசதிகள் இல்லை. இருந்திருந்தால், ராணிமைந்தனுக்கு போன் போட்டு, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க முடியும். இத்தனைப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது.

சரி, சாவி சார் இடத்திலிருந்து போன் வந்துவிட்டது. இனிமேல் வெளியே லால்பாக் வரை போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு முன்னதாக, சாவி சாரின் அறைக்குள் போய் (சாவியை ஒப்படைக்கவில்லை. எங்களிடம்தான் இருந்தது.) துண்டு இருக்கிறதா என்று பாத்ரூம் உள்படத் தேடிப் பார்த்தேன். இல்லை. இதை போன் போட்டு ராணிமைந்தனிடம் உடனே தெரிவித்துவிட்டேன். “அவ்வளவுதானா, வேற ஒண்ணுமில்லையா?” என்றார். “இல்லை சார்!” என்றேன் நான் வெள்ளந்தியாக. “சரி” என்று போனை வைத்துவிட்டார்.

பின்பு, நடந்தே லால்பாக் போனோம். ஏதேதோ பிடிப்பில்லாமல் பேசிக்கொண்டே சுற்றினோம். மனசெல்லாம் ரணமாக இருந்தது. எதிலும் பிடித்தமில்லாமல் இருந்தது. சீக்கிரம் இரவு 9 மணியாகி, அறைகளைக் காலி செய்து, சாவிகளை ஒப்படைத்துவிட்டு, எப்போதடா ரயில்வே ஸ்டேஷனை அடைவோம் என்றாகிவிட்டது.

ஒருவழியாக மாலை 7 மணி ஆயிற்று.

அவரவர் பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு, கீழே இறங்கிப் போய், ரிசப்ஷனில் சாவிகளை ஒப்படைத்தபோது, ஒரு திடுக்கிடும் விஷயம் தெரிய வந்தது. சாவி சார் அறைகளுக்கான வாடகையை மட்டும்தான் செட்டில் செய்துவிட்டுப் போயிருந்தார். எக்ஸ்ட்ரா பெட் வாங்கியது, அறைக்குள் வரவழைத்து காலை காபி, டிபன் சாப்பிட்டது, மதிய உணவு சாப்பிட்டது என்கிற வகையில் இன்னும் சில ஆயிரங்களை நாங்கள் கட்ட வேண்டியிருந்தது. பதறிவிட்டோம்.

அவரவரிடம் உள்ளதைத் திரட்டினோம். நல்லவேளையாக, அன்றைய தினம் காலையில் சாவி சார் எங்கள் செலவுக்காகக் கொடுத்திருந்த பணத்தை யாரும் முழுசாகச் செலவு செய்திருக்கவில்லை என்பதால், தேவையான பணம் தேறிவிட்டது. ஒருவழியாகக் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, ஆட்டோ பிடித்து, ஸ்டேஷனை அடைந்தோம். சாவி சாரும் ராணிமைந்தனும் மட்டும் மறுநாள் இரவு கிளம்பி வருவதாகத்தான் பிளான்!

மறுநாள் காலையில் சென்னையை அடைந்தோம்.

அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை என்னவென்றால்... ‘சாவி சார் இப்படிக் கோபப்பட்டுக் கத்துவது ஒன்றும் புதிதில்லை; அவரது சுபாவமே இப்படித்தான்! சாவியை மூடிவிடப் போகிறேன் என்று இதற்கு முன்பும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். ஆனால், செய்ய மாட்டார். காரணம், பத்திரிகைதான் அவர் மூச்சு! எனவே, எல்லாரும் நாளை வழக்கம்போல் சாவி அலுவலகத்துக்குச் செல்வோம். பணிகளை வழக்கம்போல் தொடருவோம்!’

ஆனால், எனக்கு மட்டும் அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. சாவி சார் இந்த முறை பத்திரிகையை நிஜமாகவே மூடிவிட்டார் என்று தோன்றியது. என்ன சமாதானம் செய்தாலும் ஏற்கமாட்டார் என்று தோன்றியது. அவருடைய கோபத்தின் உக்கிரம் அந்த அளவுக்கு வீர்யம்!

மறுநாள் - நாங்கள் போய் சாவி சாரைப் பார்த்தோமா?

- சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் மிச்சம் உள்ளது. அடுத்த பதிவில் சொல்கிறேன்.



Sunday, June 10, 2012

கொதித்தார் சாவி; குலைந்தேன் நான்!

ற்கெனவே இரண்டு முறை சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் அவரிடமே சேர்ந்ததற்குக் காரணம், சாவி சார் மீது எனக்கிருந்த அளப்பரிய மரியாதையும் அபிமானமும்தான்! சாவி சாருக்கும் என் மீது மிகவும் அன்பு இருந்தது. அவர் என் மீது கொண்ட கோபமும்கூட என் நன்மைக்காகத்தான் என்பது எனக்கு அந்த வயதில் புரியவில்லை.

இரண்டாம் முறை அவரிடம் சேர்ந்தபோது, சாவி சாரிடம் நான் சொன்னேன்... “என்னடா இவன், அடிக்கடி வேலையை விட்டுட்டு ஓடிடறானே, இவனை எப்படி நம்பி வேலையில சேர்த்துக்கிறதுன்னு நினைக்காதீங்க சார்! எனக்குப் பக்குவமில்லாத வயசு; பக்குவப்படாத மனசு. இனி உங்களை விட்டு நான் விலக மாட்டேன். நீங்களாக என்னை வேண்டாம் என்று வேலையை விட்டு நீக்காதவரை நானாக இந்த வேலையை விட்டுப் போகமாட்டேன். இது சத்தியம்!” என்று சொன்னேன்.

அதன்படியே, அந்த முறை அவரிடம் சேர்ந்து, அவரின் எந்த கோப தாபத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பயணம் அமைந்தது.

வழக்கமாக ஆண்டுக்கு மூன்று முறை, சாவி எடிட்டோரியலில் பணியாற்றும் எங்களை ஊட்டி, வெலிங்டன், பெங்களூர் என மாறி மாறி அழைத்துப் போவார் சாவி சார். எடிட்டோரியல் மீட்டிங்கும் ஆச்சு, எங்களை உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியதாகவும் ஆச்சு! அந்த நாட்கள் எல்லாம் சுகமானவை!

அந்த முறை பெங்களூருக்குச் செல்வது எனத் திட்டமிட்டார் சாவி. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பெங்களூரில் ஒரு வீடு வாங்குகிற யோசனையில் இருந்தார் சாவி. அது தொடர்பாக அங்கே அவருக்குச் சில பல வேலைகள் இருந்தன.

அந்த முறை எங்களோடு ராணிமைந்தனும், நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியும் சுற்றுலாவில் கலந்துகொண்டார்கள். பெங்களூரில் லால்பாக் அருகே உள்ள பிரபல ஹோட்டலான எம்.டி.ஆருக்கு எதிரே ஒரு லாட்ஜில் மூன்று ரூம்கள் போடப்பட்டன. ஒன்றில் சாவி சாரும் ராணி மைந்தனும் தங்கிக் கொள்ள, மற்ற இரண்டு அறைகளில் சாவி எடிட்டோரியலைச் சேர்ந்த எங்களோடு பாக்கியம் ராமசாமி தங்கினார்.

சாவி சாரின் உறவினர் ஒருவர் பெங்களூரில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். அவர் சாவி சாரின் உபயோகத்துக்கென ஒரு காரை அளித்திருந்தார். அது எந்நேரமும் அந்த லாட்ஜ் வளாகத்திலேயே டிரைவரோடு காத்திருக்கும். சாவி சாருடன் காலையில் ஒரு சிட்டிங் உட்கார்ந்து டிபன், காபி சாப்பிட்டுக்கொண்டே, சாவி இதழில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும், புதிய பகுதிகள் பற்றியும் விவாதிப்போம். மதியம் 1 மணியை நெருங்கியதும், மீட்டிங்கை முடித்துக்கொண்டு, சாவி சார் காரில் கிளம்பிச் சென்றுவிடுவார், தன் சொந்த வேலைகளைப் பார்க்க. நாங்கள் அந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டுவிட்டு, பெங்களூரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவோம். மாலை ஏழு மணிக்கு அறைக்குத் திரும்பி, டிபன் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் சாவி சார் அறையில் ஒரு சின்ன மீட்டிங் நடத்திவிட்டு, இரவு பத்து மணிக்கு எங்கள் அறைக்குத் திரும்புவோம். வழக்கமாக ஒவ்வொரு சுற்றுலாவிலும் இதுதான் வாடிக்கை.

அந்த முறை பெங்களூர் போன முதல் இரண்டு நாட்களும் எந்தப் பிசிறும் இல்லாமல் அனைத்தும் வழக்கப்படியே நடந்தன. மூன்றாம் நாள் காலையில் எடிட்டோரியல் மீட்டிங்குக்கு உட்கார, நாங்கள் தயாராகி, சாவி சார் அறைக்குச் சென்றோம்.

“இன்னிக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் 1 மணிக்கு மீட்டிங்கை வெச்சுப்போம். நான் அதுக்குள்ளே வந்துடுவேன். நீங்களும் அதுக்குள்ளே போய், ஏதாவது பர்ச்சேஸ் பண்ணணும்னா பண்ணிக்கிட்டு, சாப்பிட்டுட்டு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு, ராணி மைந்தனுடன் காரில் கிளம்பிச் சென்றார்.

நானும் பாக்கியம் ராமசாமியும் மற்றவர்களும் வெளியே கிளம்பினோம். இந்த மாதிரி வெளியூருக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும்போதெல்லாம், எங்கள் செலவுக்கென்று அனைவரின் கைகளிலும் தலா 500 ரூபாய் கொடுப்பார் சாவி சார். மூன்று நாள் தங்கினோம் என்றால், தலா 1500 ரூபாய் கிடைக்கும். அதில் நாங்கள் எங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொள்வோம். எங்களின் தனிப்பட்ட செலவுகளைச் செய்து மகிழ்வோம். சாப்பாட்டுச் செலவு பொதுவானது. அதற்கான தொகையை மொத்தமாக என்னிடம் கொடுத்திருப்பார். லாட்ஜ் ஹோட்டலிலேயே சாப்பிட்டால் அது ரூம் பில் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த மாதிரி வெளியே சாப்பிடுவதைக் கணக்கு வைத்துக்கொண்டு மீதியை, ஊர் திரும்பியதும் சாவி சாரிடம் கொடுத்துவிடுவேன்.

அன்று காலையில், வழக்கம்போல் பெங்களூர் தெருக்களில் சுற்றினோம். நான் அடிக்கடி நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மதியம் 1 மணிக்கு மீட்டிங் என்றிருக்கிறாரே சாவி சார் என்பதால், பதறிப் பதறி அனைவரையும் ‘போதும் பார்த்தது; சாப்பிட்டுவிட்டு ரூம் திரும்புவோம். குறித்த நேரத்துக்குள் வரவில்லையென்றால் சாவி சார் கன்னாபின்னாவென்று திட்டுவார்’ என்று, அனைவரையும் விரட்டி விரட்டி அழைத்துக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தபோது மணி 12:30.

சாவி சாரின் வழக்கமான கார் அங்கே காணோம். ‘சரி வாருங்கள், சார் வருவதற்குள் இங்கேயே சாப்பாட்டை முடித்துக்கொண்டு, அவர் அறைக்குப் போகலாம்’ என்று சொல்லி, அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டோம். மேலே எங்கள் அறைகளுக்கும் சாவி சாரின் அறைக்கும் இடையில் ஏழெட்டு அறைகள் இருந்தன. சாவி சார் அறை பூட்டப்பட்டு இருந்தது.

நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். மணி 1. சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். கீழே கார்கள் நிறுத்தும் பகுதி முழுக்கக் கண்ணுக்குத் தெரிந்தது. சாவி சாரின் கார் மட்டும் இல்லை. திரும்பவும் அறைக்குள் சென்று, “சாவி சார் போன வேலை முடியவில்லை போலிருக்கிறது. அவர் இன்னும் அறைக்குத் திரும்பக் காணோம்!” என்று சொல்லிவிட்டு, டி.வி. பார்க்கத் தொடங்கினோம். சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். அன்றைக்கு இரவு எங்களுக்கு டிரெயின்.

சற்று நேரம் கழித்து, மீண்டும் வெராண்டாவுக்கு வந்து சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சாவி சாரின் காரைக் காணவில்லை. மீண்டும் அறைக்குள் போய்விட்டேன். “1 மணிக்கு மீட்டிங் என்று சொல்லிவிட்டு இன்னும் வராமல் இருக்கிறாரே சார்..? மணி 2 ஆகப் போகிறதே!” என்று அலுத்துக்கொண்டபடி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், எங்கள் அறைக் கதவு தட்டப்பட்டது. எழுந்து போய்த் திறந்தேன். இறுகிய முகத்துடன் நின்றுகொண்டு இருந்தார் ராணி மைந்தன்.

“ரவி, உன்னை சார் கூப்பிட்டார்!” என்றார். “என்னது... சாவி சார் வந்துவிட்டாரா? தெரியாதே! கீழே அவரின் காரை காணோமே?” என்று சொல்லியபடியே ராணி மைந்தனுடன் போனேன்.

சாவி சாரின் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனதுதான் தாமதம், ருத்ரமூர்த்தியாக நின்றுகொண்டு இருந்தார் சாவி சார்.

அவரது முகத்தில் கொதித்த கோபக் கனலைக் கண்டு நடுநடுங்கிப் போனேன் நான்.

- அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
.