உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, December 29, 2011

சாவி எனும் மகான்!

சாவி சாரின் அபூர்வ படம். தன் மகன்கள் பாச்சா (எ) பாலசந்திரன், மணி மற்றும் மகள்கள் ஜெயந்தி, உமா, ஜெயஸ்ரீ மற்றும் மாலதியுடன் சாவி சார். கடைக்குட்டிப் பெண்தான் மாலதி.

‘சா
வி’ என்று அந்த மாமனிதரின் பெயரை தட்டச்சு செய்யும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது. அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியது நான் செய்த பாக்கியம். ஆனால், அவரிடம் பணியாற்றிய காலத்தில் அதை நான் பூரணமாக உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்.

அவர் என்னிடம் உரிமையோடு கோபித்துக்கொண்டபோதெல்லாம் அது என் நன்மைக்காகவே என்பது புரியாமல், மோதிரக் கையால் பெறப்படும் குட்டுக்கள் அவை என்பதை உணராமல், பதிலுக்கு பதில் நானும் அவரிடம் முறைத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பு கூசுகிறது. என்னை நானே எதாலாவது அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

சாவி பத்திரிகையை முழுக்க முழுக்க என்னை நம்பி விட்டிருந்தார் சாவி. அவர் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே கவனிப்பார். மற்ற விஷயங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், வடிவமைப்புகளை எல்லாம் என் விருப்பத்துக்கேற்பத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். ஒரு முறை, சிறுகதை ஒன்றின் படத்தை சாவி பத்திரிகை அட்டையில் வெளியிட்டு, அதன் கீழேயே கதையின் ஆரம்பச் சில வரிகளைப் பெரிய எழுத்தில் பிரசுரித்து, தொடர்ச்சி உள்ளே எனக் குறிப்பிட்டேன். அவ்வளவு ஏன்... இம்ப்ரிண்ட் என்று சொல்லப்படும் ஆசிரியர் குழுப் பட்டியலை சாவி பத்திரிகை அட்டையிலேயே ஒருமுறை வெளியிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்குமே மாற்றுக் கருத்து சொன்னதில்லை அவர். ‘இம்ப்ரிண்ட்டை அட்டையில் வெளியிடணும்கிற விசித்திரமான யோசனை யாருக்குமே தோணாது, ரவி!’ என்று புன்னகைத்துப் பாராட்டத்தான் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் என் மீது அக்கறை கொண்டு உரிமையோடு கோபித்துக் கொண்டபோது அதை ஆசீர்வாதமாக ஏற்காமல், பதிலுக்கு நானும் முறுக்குக் காட்டியதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

ஒருமுறை, எஸ்.சங்கரநாராயணன் என்கிற எழுத்தாளர் ‘அன்றிரவு’ என்று ஒரு சிறுகதையை என்னிடம் பரிசீலனைக்கு நேரில் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அண்ணா நகரில், சாவி இல்லம் - கம் - அலுவலகத்துக்கு அருகில் இருந்த போஸ்ட் அண்ட் டெலகிராஃப் ஆபீஸில் அப்போது பணியாற்றிக்கொண்டு இருந்தார். எனவே, தனது படைப்புகளைப் பொடி நடையாக நேரிலேயே வந்து கொடுப்பது அவர் வழக்கம். அவர் தந்த ‘அன்றிரவு’ கதையை அன்றிரவே படித்து, அந்த வார சாவி இதழிலேயே பிரசுரித்துவிட்டேன்.

சாவி இதழுக்கு பரிசீலனைக்கு வரும் சிறுகதைகள் மொத்தத்தையும் என் ஒருவனால் படிக்க முடியாது என்பதால், அவற்றை சாவி சாரின் கடைசி மகள் மாலதிக்கு அனுப்பி வைப்பேன். அவர் படித்துத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சிறுகதைகளையும் வெளியிடுவேன். ஆனால், அப்படி அனுப்புவதற்கு முன்பு, உடனடி தேவைக்காக, நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை நானே பரிசீலிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

‘அன்றிரவு’ சிறுகதை ‘சாவி’யில் வெளியாகி, இரண்டு நாட்கள் கழித்து, சாவி சார் என்னை அழைத்தார். “இந்த வார இஷ்யூவுல வந்திருக்கிற ‘அன்றிரவு’ கதையை யார் படிச்சு செலக்ட் செஞ்சது?” என்று கேட்டார். “நான்தான் சார்” என்றேன். “கதை அப்படி ஒண்ணும் நல்லா இல்லையாமே? எப்படி இதை செலக்ட் பண்ணினே?” என்றார். “இல்ல சார், நல்ல கதைதான்...” என்றேன். “ம்ஹூம்! கதை ரொம்ப சுமாரா இருக்குப்பான்னு மாலதிதான் போன் பண்ணிச் சொன்னா!” என்றார் சாவி. “இல்ல சார், அந்தக் கதை அப்படி ஒண்ணும் மோசமான கதை இல்லே!” என்றேன். “மோசமான கதை இல்லேங்கறியே தவிர, நல்ல கதைன்னு சொல்ல மாட்டேங்கிறே பார்த்தியா?” என்று என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்கியவர், “கதை செலக்ட் பண்றதுல நீ இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும் ரவி! சுமார் ரகக் கதைகளை எல்லாம் யோசிக்காம தள்ளிடு. நல்ல கதைகள் மட்டும்தான் சாவியில் வெளியாகணும். பக்கத்துல இருக்கிறவங்க நேர்ல கொண்டு வந்து கொடுத்தாங்கன்னு முக தாட்சண்யத்துக்காக எல்லாம் சிறுகதைகளைப் பிரசுரிச்சோம்னா பத்திரிகை பேர் கெட்டுடும்” என்றார் சாவி.

அவர் பேசப் பேச, எனக்குள் சுறுசுறுவென்று கோபம் ஏறிக்கொண்டு இருந்தது.

அடுத்து அவர் சொன்னதுதான், கட்டுப்பாட்டை மீறி என்னை வெகுண்டு எழச் செய்துவிட்டது.

“ரவி, இனிமே எல்லாக் கதைகளையும் மாலதிக்கு அனுப்பிச்சுடு! அவ படிச்சு செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதை மட்டும் போடு, போதும்!” என்றார்.

அடுத்த விநாடி, அவர் அடுத்து என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கவனிக்காமல், விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். மாடியில் சாவி சார் வீடு; கீழே அலுவலகம்.

விறுவிறுவென்று கீழே இறங்கி வந்தேன். ஐம்பது ஐம்பது கதைகளாகக் கட்டி வைத்திருந்த இரண்டு மூன்று கட்டுகளை சுமக்க முடியாமல் மாடிக்குத் தூக்கிச் சென்றேன். சற்றும் இங்கிதமோ, மரியாதையோ இல்லாமல், சாவி சார் முன்பு தொப்பென்று சத்தம் வரும்படி தரையில் போட்டேன். “சார், இதுல 150 கதைகள் இருக்கு. ஏற்கெனவே உங்க பொண்ணு கிட்டே 300 கதைகள் வரை இருக்கு. எல்லாத்தையும் படிச்சு செலக்ட் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அடுத்த இஷ்யூவுக்குக் கையில ஒரு கதை கூட இல்லை” என்றவன், “இனிமே நானாக ஒரு கதை கூட செலக்ட் பண்ணிப் போட மாட்டேன். ஆனா, இஷ்யூவுக்குக் கதைகள் இல்லேன்னா என்ன பண்ணலாம்னு நீங்கதான் சொல்லணும்” என்று வீராப்பாகச் சொல்லிவிட்டு, அவர் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மீண்டும் தடதடவென்று கீழே இறங்கி வந்து என் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, படபடப்பு அடங்காமல் சக தோழர்களிடம் புலம்பித் தீர்த்தேன்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்திருக்கும். சாவி சார் மெதுவாக நடந்து வந்து, என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “ரவி! எனக்கு உன் கோபம் புரியுது. நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்துக்கிட்டிருப்பேன். என் கோபம் அப்படியே உன் கிட்டே இருக்கு” என்றவர், சற்று இடைவெளி விட்டு, “இனிமே கதைகளை நீயே படிச்சுத் தேர்ந்தெடு. நான் எதுவும் கேட்க மாட்டேன். உன் சுதந்திரத்துல நான் குறுக்கிட மாட்டேன். உன் மேல எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கு. என்னவோ, அவள் சொன்னாளேன்னு அவசரப்பட்டுக் கேட்டுட்டேன். அதை ஒண்ணும் நீ மனசுல வெச்சுக்காதே! உனக்கு உதவியா இருக்கும்னா, கதைகளை மாலதிக்கு அனுப்பு. அவ செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதையும் அப்படியே போடணும்னு அவசியம் இல்லே. உனக்குத் திருப்தியா இருந்தா போடு! இதை ஏதோ உன் மனச்சாந்திக்கு சொல்றதா நினைக்காதே! மனப்பூர்வமா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

சர்வாங்கமும் கூனிக் குறுக அமைதியாக உட்கார்ந்திருந்தேன். வேறு என்ன எதிர்வினையாற்றுவது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அன்றைக்கு ராத்திரி முழுக்க, நடந்த சம்பவத்தை நினைத்து நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தேன். பெருந்தகையாளர் சாவி அவர்களின் முன்னால் நான் வெறும் தூசு. தூசினும் தூசு. அப்படிப்பட்டவர் அன்று என்னிடம் நடந்து கொண்ட விதம், அவரை ஒரு மகானாகவே எனக்குக் காட்டியது.

இந்த நிகழ்வு ஒரு சாம்பிள்தான்! இன்னும் இருக்கிறது. இதெல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்துத்தான், சாவி சார் இறந்த அன்றைக்கு அவர் உடம்பின் அருகில் அமர்ந்து அடக்கமாட்டாமல் கதறித் தீர்த்தேன். அன்றைக்கு நான் விட்ட ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இதே போன்று நடந்த ஒவ்வொரு சம்பவத்தை முன்னிட்டும் அது நாள் வரை நான் அடக்கி வைத்திருந்த கண்ணீர்தான்!

பின்குறிப்பு: அந்த ஆண்டு ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பால் சிறந்த சிறுகதை எனத் தேர்வு செய்யப்பட்டது ‘அன்றிரவு’.
.

Sunday, December 25, 2011

இரண்டு ‘பொ’ புத்தகங்கள்!

கவனிக்க: இந்தப் பதிவின் இறுதியில் ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கிறது.

நீண்ட நாட்களாக வலைப்பூ பக்கம் வரவில்லை; பதிவு எதுவும் எழுதவில்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. “ஏன் சார் இப்பெல்லாம் எழுதறதே இல்லே?” என்று ஆர்வத்தோடும், அக்கறையோடும், ஆதங்கத்தோடும் கேட்போரிடமெல்லாம், “அலுவலகத்தில் வேலை பளு அதிகம்” என்று நேற்று வரை சொல்லிக்கொண்டு இருந்தேன். ‘அப்படியானால், நான் மட்டும்தான் உழைப்பாளி, ஓய்வின்றிப் பணியாற்றுபவன்; தொடர்ந்து பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவு எழுதிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்களா?’ என்று இந்த நிமிடம் மனசுக்குள் ஒரு கேள்வி எழ, என் பதில் எனக்கே அதிகப்பிரசங்கித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் தோன்றுகிறது. இப்படியொரு பதிலைச் சொன்னோமே என்று கூச்சமாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதானால், நான் பதிவு எழுதாததற்குக் காரணம் அசிரத்தையும் ஆர்வமின்மையும்தான். இன்னும் உடைத்துச் சொன்னால், சோம்பேறித்தனம்.

சமீபத்தில், மதிப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களை, எழுத்தாள நண்பர் பாலகிருஷ்ணன் (சுபா) அவர்களின் மகள் திருமண விழாவில் சந்தித்துப் பேசினேன். “ஏன் பிளாக் எழுதுவதில்லை?” என்று கேட்டார். அவரிடம் “வேலை பளு” என்று சொல்லத் தயக்கமாக இருந்தது; “சோம்பேறித்தனம்” என்று சொல்லவும் கூச்சமாக இருந்தது. “எழுதணும் சார். எழுதறேன்” என்று மையமாக பதில் சொன்னேன். “எழுதணும். கட்டாயம் எழுதுங்க. நம்ம சந்தோஷத்துக்காகவாவது எழுதணும்” என்றார். “ஆகட்டும் சார்!” என்று வாக்குக் கொடுத்தேன்.

கண்டிப்பாக வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்பதை 2012 புத்தாண்டுத் தீர்மானமாக எடுத்துக் கொள்கிறேன்.

கூடவே, இந்த இரண்டு மூன்று மாதங்களாக பதிவு எழுதக் கூட நேரமில்லாமல்... தப்பு, தப்பு... ஆர்வமில்லாமல் அப்படி வேறு என்ன வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

முக்கியமாக இரண்டு விஷயங்கள். ஒன்று - ஆனந்த விகடன் பொக்கிஷம். இந்த ஆண்டு ஜனவரி புத்தகச் சந்தைக்கு ‘காலப் பெட்டகம்’ புத்தகம் வெளியானது. அதற்கு வாசகர்கள் தந்த ஏகோபித்த வரவேற்புதான், 2012 ஜனவரி புத்தகச் சந்தைக்கு ‘பொக்கிஷம்’ புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.

காலப் பெட்டகம் புத்தகத்தில், விகடன் பிறந்த 1926ஆம் ஆண்டு முதல். 2000-வது ஆண்டு வரை, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை விகடன் பதிவு செய்திருப்பதை வருட வாரியாகத் தொகுத்திருந்தேன். அது நல்லதொரு ஆவணப் புத்தகமாக உருவாகி, வாசகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றது. ஆனால், ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத்தான் அதில் விஷயங்கள் கொடுக்கப்பட்டிருந்தனவே தவிர, முழுமையான கட்டுரையாக எதுவும் இல்லை’ என்பது பலரின் ஆதங்கம். வாசகர்களின் அந்த மனக் குறையை ஆனந்த விகடன் பொக்கிஷம் நிச்சயம் போக்கும்.

இதில் வருட வாரியாக இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஆரம்ப காலத்தில் இருந்து சமீப காலம் வரையில் விகடனில் வெளியான படைப்புகளைத் தொகுத்துள்ளேன். காந்தி முதல் கருணாநிதி வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் வடிவேலு வரை, செம்மங்குடி முதல் கே.ஜே.யேசுதாஸ் வரை... எனப் பார்த்துப் பார்த்துத் தொகுத்துள்ளேன். தவிர, ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஸ்டார் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் உண்டு. இது நிச்சயம் ஒரு சோறு பதமாக இல்லாமல், முழுமையான தலைவாழை விருந்தை உண்டு மகிழும் திருப்தியை வாசகர்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன்.

நான் மும்முரமாக ஈடுபட்டிருந்த இரண்டாவது விஷயம் - பொன்னியின் செல்வன். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஒரு கோடை விடுமுறையில், அமரர் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ புத்தகத்தை ஒரே மூச்சில், இரண்டு முழு நாளில் படித்து முடித்துள்ளேன். ஆனால், பொன்னியின் செல்வனை அப்படிப் படிக்கும் பேறு எனக்கு இதுவரை கிடைக்காமல் இருந்தது. அந்தக் காலத்தில் ஓவியர் மணியம் வரைந்த அதே படங்களோடு, அமரர் கல்கியின் மாஸ்டர் பீஸான பொன்னியின் செல்வனை ஒரு எழுத்து கூட எடிட் செய்யாமல், அப்படியே முழுமையாக, வரும் புத்தகச் சந்தைக்குக் கொண்டு வருகிறது விகடன் பிரசுரம். அத்தியாயங்களுக்கான கறுப்பு - வெள்ளைப் படங்களோடு, இந்தத் தொடருக்காக மணியம் வரைந்த அழகிய வண்ணப்படங்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதை வரிக்கு வரி படித்து, பிழை திருத்தம் செய்து, அத்தியாயங்களுக்கேற்ற படம்தான் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. ஆக, ஐந்து பாகங்களாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வனை தினந்தோறும் படித்து மகிழும் பாக்கியம் பெற்றேன். தொகுப்பில் உதவியோர் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது எனக்குப் பெருமையைத் தருவதாகவும், அமரர் கல்கியின் சுண்டு விரலைப் பற்றி நடப்பது போன்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்க விரும்பி அட்வான்ஸ் தொகை அனுப்பியுள்ளவர்களின் எண்ணிக்கை இப்போதே ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்று கேள்வி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

விகடன் பிரசுரம், வரும் புத்தகச் சந்தைக்கு இருபதுக்கும் மேற்பட்ட புதிய, முக்கியமான, அருமையான புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. அவற்றில் பொக்கிஷம், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு புத்தகங்கள் தலைசிறந்த புத்தகங்களாக, ஸ்டார் புத்தகங்களாகத் திகழும் என்பது நிச்சயம்.

‘பொக்கிஷம்’ புத்தகத்தில் இடம்பெறும் என் முன்னுரையையும், பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றிய என் வாசிப்பு அனுபவத்தையும் ‘என் டயரி’யில் தனிப் பதிவாகப் பதிவு செய்வேன்.

இனி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த சுவாரஸ்யத்துக்கு வருவோம்.

வரும் புத்தாண்டை, என் வலைப் பதிவு நேயர்களுக்கு - குறிப்பாக, தொடர்ந்து என் வலைப்பதிவுகள் அனைத்தையும் வாசித்திருப்பவர்களுக்கு ஒரு பரிசுப் போட்டி வைத்துப் பரிசு அளிப்பதன் மூலம் தொடங்கலாம் என்பது என் விருப்பம்.

உங்கள் ரசிகன், என் டயரி ஆகிய என் இரண்டு வலைப்பூக்களில் இதுவரை நான் எழுதியுள்ள பதிவுகளிலிருந்து ஒரு கேள்வி கேட்பேன். அதற்கான சரியான விடையை உடனடியாக எனக்குப் பின்னூட்டம் இடவேண்டும். முதலில் வரும் சரியான விடைக்குப் பரிசு. தவிர, பொதுவாக என் பதிவுகள் பற்றிய நிறை, குறை, மற்றும் ஆலோசனைகளோடு கூடிய உங்கள் விமர்சனத்தை விரிவாக எழுதி அனுப்ப வேண்டும். சிறப்பான விமர்சனக் கட்டுரையை என் வலைப்பூவில் பதிவதோடு, அதை எழுதியவருக்கும் ஒரு பரிசு.

சரி, என்ன பரிசு?

வேறென்ன? புத்தகம்தான். ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் பரிசாக வழங்கலாம் என்று மனசில் ஆசை இருந்தாலும், அது என் பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. எனவே, சுமார் 180 ரூபாய் மதிப்புள்ள (சரியான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை) ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ புத்தகத்தை இரண்டு பேருக்கு அளிப்பதென்று முடிவு செய்துள்ளேன்.

போட்டி தொடர்பான முழுமையான விவரங்கள் அடுத்த பதிவில்.

அன்பு வாசகர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


.