உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, January 09, 2018

சுபா - நட்புக்கு மரியாதை!

ராஜேஷ்குமாரின் எழுத்தில் உள்ள விறுவிறுப்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்தில் உள்ள ஜிலுஜிலுப்பு இரண்டும் கலந்தாற்போன்ற ஒரு தனித்துவ நடை இரட்டை எழுத்தாளர்கள்சுபாவினுடையது. விறுவிறுப்பு, ஜிலுஜிலுப்பு இரண்டில் சு எதற்குச் சொந்தக்காரர்,பா எதற்குச் சொந்தக்காரர் என்பது எனக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமேகூடத் தெரியாத ஒரு சுவாரஸ்ய ரகசியம்.

ஒரு பேச்சுக்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர,சுபாவைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரே! அதுமட்டுமல்ல, தங்களைசுவாகவும்பாவாகவும் மற்றவர்கள் பிரித்துப் பார்ப்பதைக்கூட விரும்பாத இறுகிய நட்பு அவர்களுடையது என்பதும் எனக்குத் தெரியும்.

இசையுலகில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போன்று இந்தித் திரையுலகிலும் பல இசை ஜோடிகள் இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்திலோ கேட்கவேண்டாம், சகோதரர்கள், சகோதரிகள் என சங்கீத ஜோடிகள் பலர் உண்டு. ஆனால், எழுத்துலகில்சுபாவைத் தவிர, எனக்குத் தெரிந்து வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இருவரின் முதலெழுத்தும் இணைந்துசுபாஎன்னும் அழகான ஒரு பெயர் இசைவாக அமைந்தது எனக்கு ஓர் ஆச்சர்யம்! கல்லூரிக் காலத்திலிருந்து தொடரும் இவர்களின் நாற்பதாண்டுகளுக்கும் மேலான நட்பு, நட்பை போஷிக்கத் தெரியாத எனக்கு மற்றுமொரு ஆச்சர்யம்!

இருவரும் இணைந்து குறைந்தபட்சம் 300 சிறுகதைகளாவது எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கருணை, தீர்ப்பு, நிழல் நர்த்தனம், சிம்மாசனம், கல்வெட்டுகள் கரையும்... எனப் பலப்பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன்.கோழிக்குஞ்சு என்று ஒரு சிறுகதை. சுஜாதாவின்காகிதச் சங்கிலிகள் கதையைப் படித்திருக்கிறீர்களா? கதையின் முடிவில் உறவினர்கள் யாருமே கிட்னி தராமல் ஒருவர் சாக நேரிடுவதைப் படிக்க நேர்கிறபோது, நம் மனசு பாரமாய் வலிக்குமல்லவா, அத்தகைய ஒரு வலியை சுபாவின்கோழிக்குஞ்சு சிறுகதை ஏற்படுத்தியது. 

ஊனமுற்ற குழந்தையாகப் பிறப்பதன் வலிகளை இந்தக் கதை நெடுக விவரித்திருப்பார்கள். தம்பி, தங்கைகள் இந்த மூத்த குழந்தையைப் படுத்துகிற பாடு, படிக்கிற நமக்கே கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் பெரியவர்களாக வளர, அப்பாவும் அம்மாவும் இறந்துபோக, ஊனமுற்ற தன் அண்ணனைக் கொண்டுபோய் விடுதியில் சேர்த்துவிடுவார்கள். கடைசியில், ஒருநாள் தம்பி தேடி வருவான். பாச மழை பொழிவான். விடுதியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வான். அண்ணனின் வாயில் ஒழுகும் எச்சிலைக்கூடத் துடைத்துவிடுவான்.ஆஹா, என் தம்பி எவ்வளவு நல்லவன்!என்று அண்ணனின் மனசு நெகிழும். டாக்டர் வருவார். அண்ணனின் உடம்பைச் சோதனை செய்வார்.மருந்து, மாத்திரை கொடுத்து நம்மை குணப்படுத்திவிடப் போகிறார்கள்என்று அண்ணனின் மனம் சந்தோஷத்தில் குதிக்கும். ஆனால்... தன் மனைவியின் தம்பிக்கு அண்ணனின் கிட்னியை எடுத்துப் பொருத்தும் உத்தேசத்தில்தான் அவன் தன் அண்ணனை விடுதியில் இருந்து அழைத்து வந்து, டாக்டரிடம் காண்பித்திருக்கிறான் என்று க்ளைமாக்ஸில் கதை முடியும்போது, நம் நெஞ்சம் இரும்பாய்க் கனத்துப் போய்விடும். அத்தகைய வலுவான எழுத்து சுபாவினுடையது. இந்தக் கதை ஓர் உதாரணம்தான். சுபாவின் பல கதைகள் இத்தகைய ஆழம் மிக்கவை.

சிறுகதையில் தொடர்கதைக்கே உரிய திருப்பங்களைப் புகுத்துவதும், தொடர்கதையில் சிறுகதையில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய மெசேஜை நுழைப்பதும் இவர்களுக்கே உரிய பாணி. கணேஷ்-வசந்த், விவேக்-ரூபலா, பரத்-சுசீலா ஜோடிகள் போன்றுசுபாவின் நரேன்-வைஜெயந்தி ஜோடியும் கதை ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான, பரிச்சயமான துப்பறியும் ஜோடி.

சுபா எழுதிய மாத நாவல் ஒன்றின் தலைப்பு இப்போது என் நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன்னால் படித்த கதை அது. அது ஒரு சரித்திரக் கதை. ஆனால், முழுக்க முழுக்கக் கற்பனைக் கதாபாத்திரங்களாலும், கற்பனைச் சம்பவங்களாலும் சரித்திர நடையில் எழுதப்பட்ட கதை. முன்குறிப்பு கொடுத்திருக்கவில்லையென்றால், நிஜமாகவே சரித்திரத்தில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக்கும் என்று நம்ம்ம்ம்ம்பி ஏமாந்து போயிருப்பேன். ஏற்கெனவே, பள்ளியில் சரித்திரப் பாடத்தில் நான் ரொம்ப வீக். இத்தனை சுவாரஸ்யமாக யாராவது அன்றைக்குச் சரித்திரப் புத்தகப் பாடங்களைத் தொகுத்திருந்தால், நான் நிச்சயம் சரித்திரத்தில் நல்ல மார்க் எடுத்திருப்பேன்.

இன்றைக்குச் சுபாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறேன். நான் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான் என்னை அவர்களுக்குத் தெரியும். ஆனால், நான் சாவியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களை அறிவேன்.

அவர்களை அறிவேன் என்றால், வெறுமே அவர்களின் சிறுகதைகள் மூலமாக மட்டுமே அல்ல; நேரிலேயும் சந்தித்திருக்கிறேன்.
சாவி இதழுக்கு ஒரு சிறுகதை கொடுப்பதற்காகவோ அல்லது தொடர்கதை எழுதுவது தொடர்பாகப் பேசுவதற்காகவோ அவர்கள் சாவி சாரை சந்திக்க வந்திருந்தார்கள். அப்போது சாவி சார் தமது அண்ணா நகர் வீட்டில் மாடிப் போர்ஷன் கட்டியிருந்த புதிது. மாடியில் நுழைந்ததுமே, வலது பக்கம் ஒரு பத்துக்குப் பத்து சதுர அறை இருக்கும். அங்கே நான் ஒரு கோணி மூட்டையைக் கவிழ்த்துப் போட்டு, அதன் பக்கத்திலேயே தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து, போட்டோவோ அல்லது ஏதும் லைன் டிராயிங்கோ தேடிக்கொண்டிருந்தேன். ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால், அவர் எழுதிய பழைய எழுத்துக்களை எடுத்து வெட்டி ஒட்டித் தேவையான புதிய தலைப்பு உண்டாக்கி அவசரத்துக்கு அனுப்புவதும் என் வழக்கம். அப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக நான் மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, சுபா அங்கே வந்தார்கள். சாவி சாரைப் பார்க்கணும் என்றார்கள். இருங்க, கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களை அங்கேயே நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே போய் சாவி சாருக்குத் தகவல் சொன்னேன். பின்பு மீண்டும் வந்து, பழையபடியே தரையில் கால் பரப்பி அமர்ந்து, என் வேலையைத் தொடர்ந்தேன்.

சுபாவுக்கு நான் ஒரு சப்-எடிட்டர் என்றே தோன்றியிருக்காது. யாரோ ஒரு எடுபிடிப் பையன் என்றுதான் நினைத்திருப்பார்கள். காரணம், என் கோலமும் தோற்றமும் அப்படி.

நீங்க இங்கே என்ன பண்றீங்க? என்று கேட்டார் (சு)பா. சப்-எடிட்டரா இருக்கேன் என்றேன்.

அப்புறம் எதுக்கு நீங்க இந்த வேலையைச் செய்யறீங்க? யாராவது அட்டெண்டரைச் செய்யச் சொல்ல வேண்டியதுதானே? என்றார் (சு)பா.

இங்கே இடைச்செருகலாக ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். நான் சாவியில் உதவிஆசிரியனாகச் சேர்ந்திருந்த புதிது. அங்கு ஏற்கெனவே எனக்கு சீனியர்களாக இருந்த திரு.கண்ணன் என்கிற அபர்ணாநாயுடு, ரமணீயன், கே.வைத்தியநாதன் மூவரும் விலகி, நான் ஒருவன் மட்டுமே சாவி ஆசிரியரின் கீழ் உதவி ஆசிரியனாகப் பணியாற்றத் தொடங்கியிருந்த நேரம். அட்டெண்டர் வேலை முதற்கொண்டு எல்லா வேலைகளையும் ஆர்வத்தோடு இழுத்துப் போட்டுப் பரபரவென்று உழைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. தவிர, இளைஞனுக்கே உரிய திமிரும் தெனாவெட்டும்கூட அப்போது என்னிடத்தில் இருந்தன. கூடவே, எதிலும் குதர்க்கம் கண்டுபிடிக்கும் குறுக்குப் புத்தி. பக்குவமடையாத பருவம். அதனால்தானே மூன்று முறை பெருந்தகையாளர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறினேன்.

திரு.பாலா தப்பாக ஒன்றும் கேட்டுவிடவில்லை. சப்-எடிட்டராக இருந்துகொண்டு அதற்கேற்ற வேலையைச் செய்யாமல், வெட்டியாக ஏதோ செய்துகொண்டிருக்கிறேனே என்கிற அக்கறையில்தான் கேட்டார். அதைப் பின்னாளில்தான் நான் உணர்ந்தேன். ஆனால், அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் அவர் யதார்த்தமாக அப்படிக் கேட்டதும், பக்குவமடையாத என் மனசு பரபரவென்று பற்றிக்கொண்டது. சுறுசுறுவென்று ரோஷம் பொங்கியது.

எனக்குச் சம்பளம் கொடுப்பவர் சாவி சார். நான் என்ன வேலை செய்யலாம், என்ன செய்யக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். ஓகே?என்றேன், மனசிலிருந்த கோபத்தைக் கூடுமானவரை குரலில் காட்டாமல்.

அதற்குள் சாவி சார் வந்துவிட்டார். சுபா அவரோடு பேசப் போய்விட்டார்கள். நான் என் வேலையை முடித்துக்கொண்டு, கீழே வந்துவிட்டேன்.

அதன்பின்பு, ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2000-வது ஆண்டிலிருந்துதான் அவர்களுடனான பழக்கம் ஏற்பட்டு, இன்றைக்கு இறுகிய நட்பாக முகிழ்த்திருக்கிறது. சாவி காலத்துச் சம்பவத்தை அவர்கள் அன்றே மறந்து போயிருக்கலாம்; நினைவிலேயே பதியாமலும் இருந்திருக்கலாம். நானும் இதுவரை அதுபற்றி அவர்களிடம் சொல்லியதில்லை. இதோ, இந்தப் பதிவின்மூலம் அவர்கள் அறிந்தால்தான் உண்டு. அன்றைய இளம்பிராயத்து ரவியின் அதிகப்பிரசங்கித்தனமான பதிலுக்கு இன்றைய பக்குவப்பட்ட ரவியாக திரு.பாலாவிடம் மானசிகமாகஸாரி கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீவேணுகோபாலன் என்னும் ஆன்மிக எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையாக அவதாரம் எடுத்து, ஜிலுஜிலு கதைகள் எழுதிக் கலக்கியது சீனியர் வாசகர்களுக்குத் தெரியும். சுபா அப்படியே உல்டா. க்ரைம் கதைகள் எழுதி அசத்திக் கொண்டிருந்தவர்கள் காஷ்யபன் அவதாரம் எடுத்து, ஆன்மிக குருமார்களைப் பற்றியும், திருத்தல மகிமைகள் பற்றியும் கட்டுரைகளும் தொடர்கட்டுரைகளும் எழுதிக் கலக்கினார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டுஅத்தனைக்கும் ஆசைப்படுஎன்று இவர்கள் எழுதிய தொடருக்கு வாசகர்களிடம் அத்தனை வரவேற்பு.

பொதுவாக, ஆனந்த விகடன் தீபாவளி மலரை ஆசிரியர் குழுவில் உள்ளவர்களேதான் தயாரிப்பது வழக்கம். ஒரே ஒருமுறை,வேறு ஒரு பிரபல எழுத்தாளரை வைத்துத் தயாரித்தால் என்ன என்று ஆசிரியர் குழுவில் முடிவெடுத்தோம். எழுத்தாளர்கள் சுபாவைக் கேட்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சுபாவைத் தொடர்புகொண்டு நான் இந்தத் தகவலைச் சொன்னேன். உடனே ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார்கள்.

அந்தக் கணத்திலிருந்து பரபரவென்று இயங்கினார்கள். ஐடியாக்களைக் கொட்டினார்கள். அசைன்மென்ட்டுகளைப் பிரித்து வழங்கினார்கள். கட்டுரைகளைத் தேடித் தேடிப் பெற்றார்கள். எழுத்தாளர் சுஜாதாவையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும்சினிமாவுக்கான ஒரு திரைக்கதையை எழுதுவது எப்படி?என்று கட்டுரை எழுத வைத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் அதை காட்சி, பிராப்பர்ட்டீஸ், டயலாக் என்று விவரித்து எழுத, சுஜாதா படக் கதையாகவே தன் கட்டுரையை வழங்கினார். முன்பு ஒருமுறை ஓவியர் ஸ்யாமை அழைத்துக்கொண்டு சுஜாதா வீட்டுக்குச் சென்றேன் என்று என் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேனல்லவா, அது இந்தப் படக் கதைக்காகத்தான்.

மேலும், மலரை அழகுபடுத்த சின்னச் சின்ன நகாசு வேலைகளுக்கும் ஐடியா கொடுத்தார்கள் சுபா. மொத்தத்தில், ஒரு முழுமையான மலருக்குண்டான அத்தனை விஷயங்களையும் அட்டை டு அட்டை அவர்களே திட்டமிட்டார்கள். அட்டைப்படத்திலும் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தினார்கள். வழக்கமாக சினிமா நடிகர் அல்லது நடிகையின் படத்தை வெளியிடாமல், விகடன் தாத்தா ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து,கோபியர் கொஞ்சும் ரமணாபோன்று இரண்டு அழகிகளோடு ஜாலியாக ஆடிப்பாடுகிற மாதிரி இளமைத் துள்ளலோடு ஓவியர் ஸ்யாமிடம் படம் வரைந்து வாங்கி, வெளியிட்டார்கள்.

சிறுவர்களிடம் அவர்களின் கற்பனைக்கேற்ப ஏதேனும் படம் வரையச் சொல்லி வாங்கி, அவற்றுக்கேற்ப பிரபல கதாசிரியர்களிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிட்ட சுபாவின் யோசனை மிகப் புதுமையானதாக அந்நாளில் வாசகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வரைந்த சிறுவர்களில் என் மகன் ரஜ்னீஷும் ஒருவன். அவனுக்கு அப்போது நான்கு வயது. அவனுடைய ஓவியத்துக்குப் பொருத்தமாகச் சிறுகதை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன்.

இந்த மலர் தயாரிப்புப் பணி மொத்தத்தையும் சுபா தூக்கிச் சுமக்க, நான் ஓர் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருந்து அவர்களுக்கு உதவினேன். மலர் பணிகள் முடிக்கும் க்ளைமாக்ஸ் நாட்களில் தொடர்ந்து இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் அவர்கள் விகடன் அலுவலகத்திலேயே இருந்து, பசி நோக்கார், கண் துஞ்சாராகி, கருமமே கண்ணாயினராக இருந்து முடித்துக்கொடுத்த அவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் செய்நேர்த்தியும் இன்றைக்கும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

சுபா தயாரித்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியான ஆண்டு 2005. சிறுகதை மன்னர்களான சுபா தயாரித்த இந்த மலரில் அவர்களின் சிறுகதை எதுவும் இடம்பெறவில்லை என்பது ஒரு முரண். ஆமாம், தாங்கள் இதில் சிறுகதை எழுதுவதில்லை என்பதில் அவர்கள் அத்தனை உறுதியாக இருந்தார்கள். இருப்பினும், கதை எழுதாவிட்டால் போகிறது. ஒரு கட்டுரையாவது எழுதுங்கள்என்று நான் வற்புறுத்தியதன்பேரில்என் நாடு, என் மக்கள் என்னும் தலைப்பில் இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை எழுதினார்கள்.

அது சரி, அவர்கள் ஏன் இந்த மலரில் கதை எழுதத் தயங்கினார்கள்?

அதற்கு அவர்கள் சொன்ன பதில்...

நாங்களே ஒரு மலரைத் தயாரித்து, அதில் நாங்களே ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டுக்கொள்வது கொஞ்சம்கூட நியாயமே இல்லை, ரவிபிரகாஷ்!

அவர்களுக்குள் ஊறியிருந்தபத்திரிகை அறம்தான் அவர்களை அப்படிச் சொல்ல வைத்தது.

ஹேட்ஸ் ஆஃப் சுபா!


0 comments: