உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, January 18, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 14

செந்தோஸா சந்தோஷம்!

சாலைப் போக்குவரத்து சீராக இருக்க வேண்டியது முக்கியம்; அதற்கு சாலைகள் ஒழுங்காக இருக்க வேண்டியதும் முக்கியம். எனவேதான், நம் அரசாங்கம் சாலையில் ரோடு போடுகிற வேலையைச் செய்தால்,நாளைக்கு நாம் சுகமாகப் பயணிப்பதற்குத்தானே இத்தனைப் பாடு என்று, எத்தனை சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும், சாலையில் கல்லையும் மண்ணையும் கொட்டிவைத்தாலும், நாம்பாட்டுக்குக் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்கிறோம். சாலையில் விரிசல் ஏற்பட்டுப் பெரும்பள்ளமே உண்டாகி கார் உள்ளே விழுந்தாலும், அதைப் போட்டோ எடுத்து வாட்ஸப்பில் வைரல் ஆக்குவதிலும், மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதிலும்தான் நம் புத்தி போகிறதே தவிர, அரசு இத்தனை அலட்சியமாக வேலை செய்கிறதே என்று நமக்குக் கோபமே வருவதில்லை; வராது. ஏனென்றால், அது நம் எதிர்காலத்துக்கான நற்பணி ஆயிற்றே!

ஆனால், சிங்கப்பூர் அரசு அப்படியல்ல. எந்தப் பொது வேலையாக இருந்தாலும், தன் மக்களுக்கு ஒரு துளி சிரமம்கூடத் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள், சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா? என்று டிரைவரைக் கேட்டதும், அவர் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது.

பக்கத்துல பாருங்க. ஒரு நீல ரெக்ஸின் துணியால் ஆன சுவர் தெரியுதா... அதும்பின்னால புதுசா ரோடு போட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா, இங்கே எதுவும் தெரியலையேன்னு பார்க்கறீங்க. ரோடுல கல்லு மண்ணு எதுவும் சிதறிக்கிடக்கலையே, புழுதி எதுவும் பறக்கலையேன்னு நினைக்கறீங்க. சாலையில புழுதி வரக்கூடாதுங்கிறதுக்காக எக்ஸாஸ்ட் ஃபேன் மாதிரி ஒரு டெக்னாலஜி வெச்சிருக்காங்க. அதேபோல, அங்கே சிமென்ட், கருங்கல் ஜல்லியைக் கொண்டு போற லாரிகள் வெளியே வரும்போது அப்படியே தூசு தும்போட வெளியே வராது; டயர்கள்ல ஒட்டியிருக்கிற மண் போக நல்லா கழுவி, சுத்தமா குளிச்சிட்டுதான் வெளியே வரும்என்றார் சைனீஸ் கலந்த ஆங்கிலத்தில்.

காற்று மாசு, தண்ணீர் மாசு இவை ஏற்படக்கூடாதென்பதில் கெடுபிடியாக இருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். இங்கே கழிப்பறைகளில் வருகிற தண்ணீரைக் கூடப் பிடித்துக் குடிக்கலாம்; அத்தனை சுத்தமாக இருக்கும் என்றார் அவர் பெருமையாக. குடிதண்ணீரை நன்கு சுத்திகரித்துத்தான் வெளியே பயன்பாட்டுக்கு அனுப்புகிறார்கள் என்றார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை நீர் மாசு, காற்று மாசு இவற்றில் எனக்கு வேறொரு அனுபவம் கிடைத்தது. குடிதண்ணீரைச் சுத்திகரித்துதான் அனுப்புகிறார்கள்; சரி. ஆனால், அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால் அங்குள்ளவர்களுக்குச் சிறுநீரகப் பிரச்னைகள் வருவதாக அறிகிறேன். அது சுத்திகரிப்பால் உண்டாகும் விளைவு. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், அங்கிருக்கும் பலர் சொல்லக் கேள்வி. அதேபோல், எவ்வளவுதான் பணக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் சொந்தமாக ஒரு கார் வாங்கிச் சந்தோஷிக்க முடியாதவாறு ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போட்டு முடக்கி வைத்து, மாசற்ற காற்றுக்காக மெனக்கெடும் சிங்கப்பூர் அரசு, பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. இங்கே நம் சென்னையில், பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை மிக மிக அரிதாகத்தான் பார்க்கிறேன். ஆனால், சிங்கப்பூரிலோ பஸ் ஸ்டாப்பில், பூங்காக்களில், சாலைகளில் எனப் பொது இடங்களில் பலரும் சிகரெட்டும் கையுமாகத்தான் வாயிலிருந்து புகை வழிய வழியச் செல்கிறார்கள். எங்கு திரும்பினாலும் தேவலோகத்தில் இருப்பதுபோலவே இருக்கிறது. எந்த கால் டாக்ஸியைக் கூப்பிட்டு ஏறினாலும், உள்ளே குப்பென்று சிகரெட் வாடை! வண்டி ஓட்டும்போது டிரைவர் சிகரெட் பிடிப்பதில்லை; ஆனால், சற்று முன் அவர் பிடித்த அந்த சிகரெட்டின் நெடி மூச்சை முட்டுகிறது.

சரி, போகட்டும்... வாருங்கள், நாம் செந்தோஸா தீவுக்குச் செல்வோம்.

செப்டம்பர் 7-ம் தேதி காலையில் சாப்பிட்டுவிட்டு, ஜெயஸ்ரீ சுரேஷ் பக்குவமாகப் பேக் செய்துகொடுத்த பிரெட் ப்ளஸ் வேர்க்கடலைச் சட்னி பார்சல்களுடன் கிளம்பிவிட்டோம். பஸ் பிடித்துமவுன்ட் ஃபேபர் என்னும் இட்த்துக்கு வந்தோம். அங்கிருந்து செந்தோஸாவுக்கு கேபிள் கார் செல்கிறது. ஒரு டிக்கெட் வாங்கினால், அதிலேயே திரும்பவும் ஏறி இங்கே வந்து இறங்கிவிடலாம். நாங்கள் நால்வரும் அதில் பயணித்து செந்தோஸா தீவில் சென்று இறங்கினோம்.

சந்தோஷம்என்னும் சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவான சொல்செந்தோஸா. மலாய் மொழியில் இதற்கு அமைதி, மகிழ்ச்சி என்றெல்லாம் பொருள். இதன் பூர்வாசிரமப் பெயர்சாவுத் தீவு. டெட் ஐலேண்டு. ஆமாம்,புலாவ் பிளேக்காங் மாட்டிஎன்னும் மலாய்ச் சொல்லின் பொருள் அதுதான். அப்புறம், 1972-ம் ஆண்டில்தான், மக்கள் விருப்பத்தின்பேரில் இதற்குசெந்தோஸா தீவுஎன்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். மக்கள் விருப்பத்தை எப்படிக் கேட்டறிந்தார்கள் என்று தெரியவில்லை. இங்கெல்லாம், அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள் மக்கள்என்று தனியார் தொலைக்காட்சிகளில் அடிக்கடி சொல்கிறார்களே, அந்த மாதிரி இருக்கலாமோ, என்னவோ!

உள்ளே பார்க்க ஏராளமான சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் டிக்கெட். ஏதேனும் மூன்று, ஏதேனும் ஐந்து, ஏதேனும் எட்டு என பேக்கேஜ்களாகவும் வாங்கிக் கொள்ளலாம். எது பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும்,ஸீ அக்வேரியம்அதாவதுஅண்டர்வாட்டர் வேர்ல்டுகட்டாயம் போய்ப் பாருங்கள்என்று சொல்லி அனுப்பியிருந்தார் சுரேஷ். ஐந்து அயிட்டங்கள் கொண்ட பேக்கேஜ் டிக்கெட் வாங்கினோம்.

அண்டர்வாட்டர் வேர்ல்டுவாங்கினாலே, கூடவே கொசுறாக ஹோலோகிராம் நடன நிகழ்ச்சி என்ற ஒன்றையும் தலையில் கட்டிவிடுகிறார்கள். அதற்கான காரணம், அந்த நாளின் இறுதியில்தான் தெரிந்த்து. இந்த இரண்டும் போக, ஸ்கைலைன் லூஜ், இரண்டு த்ரீ-டி படங்கள் ஆகியவை கொண்ட பேக்கேஜ் டிக்கெட்டை வாங்கிக்கொண்டோம். பட்டர்ஃப்ளை பார்க் ஃப்ரீ. மெழுகுப் பொம்மை மியூஸியம் பார்ப்பதில் எங்களுக்கு அத்தனை சுவாரஸ்யமில்லை.

செந்தோஸா தீவில் உள்ளேயே அழகான மினி பஸ்கள் ஓடுகின்றன. எதில் வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ஃப்ரீ!

மெகா ஸிப்என்னும் சாதனை விளையாட்டுக்கு மகனும் மகளும் டிக்கெட் வாங்கியிருந்தார்கள். முதலில் அங்கே போனோம்.

நாலு மாடி கொண்ட ஒரு கட்டடத்தின் உச்சிக்கு ஏற வேண்டும்; அங்கே நம் வெயிட்டைச் சோதித்து, அதற்கேற்ப இடுப்பில் ஒரு பெல்ட் கட்டி, கொக்கி ஒன்றை இணைத்துவிடுவார்கள். அவர்கள் ரெடி சொன்னதும், அங்கிருந்து கீழே குதிக்க வேண்டும். தரையை நெருங்குகையில் கயிறு இழுவிசை மூலமாக வேகம் குறைந்து, பத்திரமாகத் தரை இறங்கலாம். கிட்டத்தட்ட பஞ்சி ஜம்ப்பிங் போலத்தான்.

கீழே குதித்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பலரும்வென்று அலறிக்கொண்டே குதித்தார்கள். அவர்களில் யாரும் தரையில் காலூன்றி நிற்கவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தார்கள். என்னதான் பாதுகாப்பாக பாராசூட்டில் குதித்தாலும், கீழே காலூன்றும்போது பிடிப்பில்லாமல் விழுவார்கள் அல்லவா, அதுபோலத்தான்! என் மகளும் மகனும் அடுத்தடுத்துக் குதித்தார்கள். விழுந்து எழுந்தார்கள்.

மெகா ஸிப்பில் அடுத்தது இன்னும் சுவாரஸ்யம், த்ரில் நிறைந்தது. மேலே நீண்டு செல்லும் கம்பியிலிருந்து தொங்கும் கொக்கியை இடுப்பில் மாட்டித் தள்ளிவிடுவார்கள். மிக உயரத்தில், அந்தரத்தில் சர்ரென்று கம்பியில் விஞ்ச் போல சறுக்கிக்கொண்டே ஒரு கி.மீ. தூரம் செல்ல வேண்டியதுதான். மகன், மகள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து கம்பியில் கேபிள் கார் போலச் சறுக்கிச் சென்றார்கள்.

இப்படி மெகா ஸிப் ரைடு செல்பவர்களைக் கீழே இருந்து ஒரு ஜீப்பில் அழைத்துக்கொண்டு வந்து ஆரம்ப இடத்துக்கு விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்தோம். மகன், மகள் இருவரும் வந்ததும், செந்தோஸாவின் மினி பஸ் பிடித்து, அடுத்த இடத்துக்குச் சென்றோம்.

அண்டர்வாட்டர் வேர்ல்டு! மிகப் பிரமாண்ட அக்வேரியமான இதைஓஷனேரியம்என்று அழைக்கிறார்கள். நாம் வெளியே நின்று, தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்த்ததுபோக, நாம் உள்ளே இறங்க, பெரிய பெரிய சுறா மீன்கள் எல்லாம் நம்மைக் கிட்டே வந்து வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்லும் இடம்தான் இந்த அண்டர்வாட்டர் வேர்ல்டு. 1991-ல் தொடங்கப்பட்டதாம் இது.

உள்ளே இறங்கி கண்ணாடி குகைப் பாதைகள் வழியாக நடந்தோம். மிகப் பெரிய கண்ணாடிச் சுவருக்கப்பால் ராட்சத சுறா மீன்கள், நீள நீளமான பாம்புகள் போன்ற மீன்கள், கலர்ஃபுல்லான பற்பல மீன் வகைகள், நட்சத்திர மீன்கள், பூக்கள் உதிர்ந்த மாதிரியான மீன்கள், ஜெல்லி மீன்கள், ராட்சத நண்டுகள், கடல் ஆமைகள், தண்ணீர்ப் பாம்புகள் என என்னென்னவோ காணக் கிடைத்தன. நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.

உள்ளே, அடுத்தடுத்து வெவ்வேறு கூடங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தோம். ஓரிடத்தில் பெரிய கப்பல் ஒன்று உடைந்து கிடந்ததைப் பார்த்தோம். டைட்டானிக் படத்தின் ஆரம்பக் காட்சி போன்று இருந்தது. மற்றொரு இடத்தில், ஸ்டார் ஃபிஷ் ஒன்றைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார்கள். பார்த்தேன். மிருதுவாக, மெத்து மெத்தென்று இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, செங்கல் ஓட்டைத் தொட்டதுபோன்று கடினமாக இருந்தது. அதை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். உயிர் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல், கட்டையாக இருந்தது. 

இப்படியாக, அண்டர்வாட்டர் வேர்ல்டில் இரண்டு மணி நேரம் ஓடிப்போனது. அதன்பின், தியேட்டருக்குச் சென்றோம்.

அடுத்தடுத்து இரண்டு தியேட்டர்களில் 3D, 4D படங்கள். ஒன்று, ‘Journey 2 – The Mysterious Island’ என்னும் படம். 3D கண்ணாடி கொடுத்து, உள்ளே அனுப்பினார்கள். கதை புரியவில்லை. தேவையுமில்லை. அந்தப் படம் அதன் கதைக்காக இல்லை; எஃபெக்ட்ஸுக்காக. ஐந்து பேர் எதையோ தேடி, ஒரு தீவுக்குச் செல்கிறார்கள். வழியில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், அவற்றிலிருந்து அவர்கள் தப்பிப்பது ஆகியவை தத்ரூபமாக 3D முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காட்சிகளுக்கேற்றவாறு நம் மீது மழைச்சாரல் நிஜமாகவே தெளித்தது. ஜீப் கரடுமுரடான பாதையில் தடதடத்து ஓடும்போது, நமது நாற்காலியும் ஆடியது. அங்கே அவர்கள் காலைச் சுற்றிப் பாம்பு ஊர்ந்தால், இங்கே அமர்ந்திருக்கும் நம் காலைச் சுற்றியும் ஏதோ ஊர்ந்தது. தூக்கிவாரிப் போட்ட்து. கிட்டத்தட்ட 20 நிமிடப் படம். நல்ல அனுபவம்!

அடுத்ததும் படம்தான். ஆனால், இது சற்றுத் திகிலான, த்ரில்லான, ரோலர்கோஸ்டரில் தலைசுற்றிப் போவது போன்ற ஜாலிரைடு படம். Log rider என்று பெயர். 3D கண்ணாடி போட்டுக்கொண்டு, ஐந்து ஐந்து பேர் உட்காரும்படியான கூண்டுகளில் உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்தோம். படம் தொடங்கியது. நாமே எங்கோ ஆகாயத்தில், பல மைல் உயரத்தில், கம்பி மீது சறுக்கியும் தொங்கியும் செல்வது போல வேகமாகக் காட்சிகள் நகர்ந்தன. உயரேயிருந்து தடாலென்று கீழே... கீழே... கீழே... விழுந்தோம். மரத்தில் படர்ந்திருந்த ஒரு கொடியில் தொற்றினோம். தரையில் இழுத்துச் செல்லப்பட்டோம். பெரிய பெரிய மரக்கட்டைகளில் மோதினோம். எங்கள் மீது பாறைகள் உருண்டு விழுந்தன. நெருப்புக் கங்குகள் வீசியடித்தன. எங்கள் கலம் கடலுக்குள் விழுந்து, களக் புளக்கென்று உள்ளே... உள்ளே... உள்ளே... மூழ்கியது. சட்டென்று ஒரு திமிங்கிலம் எங்கள் கலத்தைத் தாக்கித் தூக்கி எறிந்தது. எல்லாம் எஃபெக்ட்ஸ்! கொஞ்ச நேரத்தில் வயிற்றைக் கலக்கிவிட்டார்கள் கலக்கி!

மூன்று அயிட்டங்கள் முடிந்தன. அடுத்து, லூஜ் எனும் ஜாலி ரேஸ் போகலாம் என்று முடிவு செய்தோம். மினி பஸ் பிடித்து, அந்த இடத்துக்குச் சென்றோம். குழந்தைகள் விளையாடும் ஆட்டம்போல் இருக்கிறது. ஆனால், பெரியவர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டு, ரேஸில் தூள் கிளப்பினார்கள். சிறு சிறு சக்கரங்கள் கொண்ட, தரையோடு தரையாக இருக்கும் சிறு வண்டியில் அமர்ந்துகொண்டு, காலை முன்னே உள்ள பெடலில் வைத்துக்கொள்ள வேண்டும். பெடலை அழுத்த அழுத்த வண்டி வேகமெடுக்கும். காலைப் பின்னுக்கிழுத்துக்கொண்டால் வேகம் குறையும். சிம்பிளான மெக்கானிஸம்தான். ஆரம்பத்தில் சொல்லிக்கொடுத்து, சின்ன டெஸ்ட் வைக்கிறார்கள். ஓகே ஆனதும், சரிவுப் பாதையில் நாம் வண்டியைச் செலுத்திக்கொண்டு பறக்க வேண்டியதுதான். அந்த சிமென்ட் சாலைகள் வளைந்தும் நெளிந்தும் சாய்ந்தும் செல்கின்றன. சின்னச் சின்னக் குழந்தைகள்கூட இந்த ஜாலி விளையாட்டில் பட்டையக் கிளப்புகின்றன. சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டோம்.

மாலை 5 மணி ஆனது. இன்னும் ஒரே ஒரு அயிட்டம். பேக்கேஜ் ரூபத்தில் எங்கள் தலையில் கட்டப்பட்ட அயிட்டம். ஹோலோகிராம் நடன நிகழ்ச்சி.

கே-லைவ் தியேட்டர் என்னும் ஹோலோகிராம் தியேட்டருக்குள் நுழைந்தோம். கும்மிருட்டாக இருந்தது. சோதனையாக நாங்கள் நால்வர் மட்டுமே இருந்தோம். எங்களைத் தவிர வேறு ஈ, காக்காய் இல்லை. எங்களுக்காக மட்டுமே ஷோ தொடங்கப்பட்டது.
எதிரே மேடையில் வண்ண ஒளிகளால் உருவங்கள் தோன்றின. நிஜமாகவே மேடையில் நடனக் கலைஞர்கள் இருப்பது போன்ற மாயத் தோற்றம். பிரபலமான கே-பாப் ஸ்டார்களை இப்படி ஹோலோகிராமாகச் செய்து மேடையில் நடனமாட விடுகிறார்கள். நடனமணிகள் ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் பிரதாபங்களையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். பின்பு பாடியபடியே நடனமாடுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் மோதி, புகையாய்க் கரைந்து காணாமல் போகிறார்கள். பின்பு வேறு இடத்தில் தேவர்கள் மாதிரி தோன்றுகிறார்கள். ஜீன்ஸ் படத்தில்,கண்ணோடு காண்பதெல்லாம்...பாடலில் இரண்டு ஐஸ்வர்யா ராய்களில் ஒருவர் ஹோலோகிராம் உருவம் என்று கதைப்படி சொல்லப்பட்டதல்லவா, அது போன்ற காட்சிதான் இதுவும். எல்லாம் சரி! ஆனால், அந்த நடனக் கலைஞர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை. பாடல்களும் கேள்விப்பட்டவையாக இல்லை. தவிர, அந்த உருவங்கள் ஏதோ டிசம்பர் சீஸன் மாதிரி மேடையிலேயே எல்லாக் கூத்தையும் பண்ணிக்கொண்டிருந்தன. முதலீட்டார்கள் மாநாட்டில் ஹோலோகிராம் குதிரை பறந்து வந்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்ததே... அதுபோல இவர்கள் கீழே இறங்கி வந்து எங்களிடையே புகுந்து நடந்து சென்றிருந்தாலாவது கொஞ்சம் பிரமிப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் மேடையிலேயே நடனம் ஆடிக்கொண்டிருந்தால், அது ஹோலோகிராமாக இருந்தால் என்ன, நிஜமாகவே யாராவது ஆடினால்தான் என்ன... போர் போர்தான்!

அதுவும் பத்து, இருபது நிமிடங்கள் என்றால், தொலைகிறது என்று விடலாம். முக்கால் மணி நேரம் வெச்சு அறு அறுவென்று அறுத்தார்கள். சரியான மொக்கை புரொகிராம்!

இந்த அறுவைக்குப் பயந்துதான் யாரும் வரவில்லை என்பது நிதர்சனம். நாங்கள் அப்பிராணிகளாக மாட்டிக்கொண்டோம். பேக்கேஜ் டிக்கெட்டில் சாமர்த்தியமாக இதைஅண்டர்வாட்டர் வேர்ல்டுடன் சேர்த்துக்கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறதா?! அப்படியே கொடுத்திருந்தாலும், உள்ளே நுழைந்து இதன் லட்சணம் தெரிந்தவுடனேயேபோதுமடா சாமிஎன்று வெளியேறியிருந்தால், இன்னும் வேறு சில சுவாரஸ்யமான இடங்களையாவது பார்த்திருக்கலாம். நாங்கள் தப்பு பண்ணிவிட்டோம். அந்த நடனமணிகள் இறங்கி வந்து எங்கள் எதிரில் நிற்கத்தான் போகிறார்கள் என்று கற்பனை கண்டுகொண்டிருந்தோம். அப்படி எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை. தவிர, எங்கள் நால்வருக்காக மட்டுமே ஒரு ஷோ மெனக்கெட்டுப் போடுகிறபோது,சகிக்கவில்லைஎன்று வெளியேறுவதும் சங்கடமாக இருந்தது. அது அவர்களை இன்சல்ட் செய்கிற மாதிரி ஆகும் என்று மகனும் மகளும் கருதியதால், கடனே என்று அந்த ஷோவைப் பார்த்தோம். ஆக, முக்கால் மணி நேரம் தண்டம்.

விட்டால் போதும் என்று வெளியேறியபோது மணி மாலை 7.நாளை ஒருநாள்தான் இருக்கிறது நமது சிங்கப்பூர் டூரின் மிச்சம்என்கிற எண்ணம் ஏக்கமாக உருவெடுக்க, மீண்டும் கேபிள் கார் பிடித்து, எம்.டி.ஆர். டிரெயின் பிடித்து, பஸ் பிடித்து, வீடு வந்து சேர்ந்தோம்.

(பயணம் தொடரும்) 

0 comments: