உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 08, 2016

சாவி-100 (VIII)

நேற்றைய ஞாயிற்றுக்கிழமை, மரியாதை நிமித்தமாக, நகைச்சுவை எழுத்தாளர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களை, அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது பேச்சு சாவி சார் பற்றியே ஓடியது. பாக்கியம் ராமசாமி அவர்களும் கடைசி சில வருடங்களில் சாவி பத்திரிகையில் பணிபுரிந்திருக்கிறார். சாவி சாரின் பெருந்தன்மை, சிறந்த படைப்பைக் கண்டால் உடனே கூப்பிட்டு மனம் திறந்து பாராட்டும் பெருங்குணம், பணியில் சின்சியர் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டவர், சாவி அவர்களின் அதீத கோபம் பற்றியும் சொன்னார். 

"சாவி சாரின் கோபம் நம் மீதுள்ள அக்கறையினால் என்பது புரியாமல் இருந்த காலத்தில், மனம் பக்குவப்படாமல் இருந்த அந்த இளம் வயதில், நானும் பதிலுக்கு அவர் மீது கோபப்பட்டுள்ளேன். அவர் எத்தனை பெரியவர், அவர் முன்னால் நான் எத்தனை தூசு என்று எனக்குப் புரியாமல் இருந்த காலம் அது. அவர் நினைத்திருந்தால் என்னைத் தூக்கிப் போட்டுவிட்டு, வேறு ஒருவரை அமர்த்திக்கொண்டு சாவி பத்திரிகையை நடத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை. என்னை அழைத்து வர அட்டெண்டரை அனுப்பி, நான் போய் அவர் முன் நின்றதும், 'என்ன, உங்க அப்பா திட்டினா வீட்டை ஓடிப் போயிடுவியா?' என்று உரிமையோடு கோபித்துக்கொண்டு, எதுவுமே நடக்காத மாதிரி, "போ! போய் வேலையைப் பாரு!" என்று பழையபடியே தன் பத்திரிகையில் பணியாற்ற அனுமதித்த அந்தப் பெருந்தகையாளர், தாயுள்ளத்தோடு என்னை வழிநடத்தியிருக்கவில்லை என்றால், நான் இன்று இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன் என்பது சத்தியம்!" என்று திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடம் சொன்னேன். 

எத்தனையோ பேர் சாவி சாரின் கோபத்தை மட்டுமே பார்த்தார்கள். நான் அவரின் கோபத்தின் பின்னணியில் ஒளிந்திருந்த அன்பைப் பார்த்தேன். சிலிர்த்து நிற்கும் பிடரி, சிங்கத்துக்கு அழகு! அதேபோல், கோபம் எனும் குணமும் சாவி சாருக்கு ஒரு தனி அழகையும், கம்பீரத்தையும் கொடுப்பதாகவே நான் உணர்கிறேன்.

இனி, சாவி-100-ன் அடுத்த பத்து:

71) கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் சாவி என்பது ஒருபுறம் இருக்க, அவர் ஒன்றும் எம்.ஜி.ஆரின் விரோதியாக ஆக வேண்டும் என்று எண்ணிச் செயல்படவில்லை. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அப்படி அமைந்துவிட்டன. பெரம்பூரில் நடந்த 'வாஷிங்டனில் திருமணம்' நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். ஒருமுறை தலைமை தாங்கினார். சாவியும் சென்று கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர், சாவியின் இல்லத்துக்கு வரப்போவதாகத் தகவல் வந்ததால், நாடகத்துக்குச் செல்வதை கேன்சல் செய்துவிட்டு, காமராஜரை வரவேற்க வீட்டிலேயே இருந்துவிட்டார் சாவி. 'என்னைவிட காமராஜர் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டாரா?' என்று எம்.ஜி.ஆருக்கும் கோபம் உண்டானதில் வியப்பில்லை.

72) எம்.ஜி.ஆர். சாவி மீது கோபப்படும்படியான இன்னொரு பெரிய விஷயமும் நடந்தது. தினமணி கதிரில் வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சில வாரங்களுக்குப் பின்னர், திரு.சோ-வைத் தாக்கி அடிக்கடி பதில் சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அந்தக் குறிப்பிட்ட பதில்களைப்  பிரசுரிக்காமல் நிறுத்திவிட்டார் சாவி. இப்படிச் சில வாரங்கள் கடந்தன. பின்னர், அந்த வாரத்துக்கான பதில்களோடு சாவியைத் தேடி வந்தார் எம்.ஜி.ஆரின் உதவியாளர் வித்வான் வே.லட்சுமணன். எம்.ஜி.ஆரின் பதில்களைக் கொடுத்துவிட்டு, "நீங்கள் அவர் எழுதும் சில பதில்களைப் பிரசுரிப்பது இல்லையாம். கட்டாயம் அவற்றைப் பிரசுரிக்கும்படி சொன்னார்" என்றார். "மாட்டேன். ஒருவரைக் குறிப்பிட்டு காயப்படுத்துகிற மாதிரியான பதில்களை நான் பிரசுரிக்க மாட்டேன். பத்திரிகை ஆசிரியராக ஒன்றைப் பிரசுரிப்பதும், நிறுத்தி வைப்பதும் என் உரிமை!" என்றார் சாவி. "அப்படியானால், எம்.ஜி.ஆரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். அடுத்த வாரம் அவர் பதில்கள் எழுதித் தருவதைக்கூட நிறுத்திவிடலாம்" என்றார் வே.லட்சுமணன். இது சாவியை கோபப்படுத்திவிட்டது. "அடுத்த வாரம் என்ன... இந்த வாரமே அவரின் பதில்களை நான் நிறுத்திவிட்டேன் என்று அவரிடம் போய்ச் சொல்லுங்கள்" என்று வந்த பதில்களையும் கையோடு வே.லட்சுமணனிடம், பிரித்துப் பார்க்காமலே திருப்பி அனுப்பிவிட்டார் சாவி. அன்றிலிருந்து எம்.ஜி.ஆரும் சாவியும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள்!

73) ஒரு பத்திரிகையாளராக நடுநிலையுடன் செயல்படத்தான் எப்போதும் விரும்பியிருக்கிறார் சாவி. தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்று முதலமைச்சராக ஆன பின்பு, அவரை வரவேற்று தம் பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டார் சாவி. மேலும், 'தோட்டம் முதல் கோட்டை வரை' என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் குறித்துச் சில வாரங்களுக்கு அற்புதமான தொடர் கட்டுரையையும் வெளியிட்டு கௌரவித்தார்.

74) ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.

75) எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.

76) நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும், தனக்கு நியாயமென்று பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம் உள்ளவர் சாவி. அப்படித்தான் ஒருமுறை, கலைஞர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியதும், அந்த நகரங்களைப் பற்றி என்னென்னவோ கருத்துக்களை வெளியிட்டார். சாவி அது குறித்துத் தன் பத்திரிகையில், "ஓரிரு நாட்கள் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டாலே, அந்த நகரங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாது" என்பதாக விமர்சித்து எழுதிவிட்டார். இதனால் கோபமுற்ற கலைஞர் கருணாநிதி, தமது முரசொலியில் பதிலுக்கு சாவியை விமர்சித்து, 'கூவுகிற கோட்டான்கள் கூவட்டும்; இந்தக் குயிலுக்கு என்ன வந்தது கேடு?' என்று சாடினார். பின்னர், சாவி சென்று கலைஞரைச் சந்தித்து விளக்கம் அளிக்கவும், கலைஞரின் கோபம் தணிய, பழையபடி நட்பு கனிந்தது.

77)  ஆரம்ப காலங்களில் சாவி அவர்கள் சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து பணம் ஈட்டியதைச் சொன்னேன். அதேபோலவே, அவர் ஏர் ரெய்ட் வார்டன் வேலையையும் ஏற்றுச் செய்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த நேரம். காற்றில் யுத்த அபாயம் கலந்திருந்தது. சென்னையிலிருந்து பல குடும்பங்கள் காலி செய்து, வெவ்வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டன. சாவிதான் துணிச்சல்காரராயிற்றே..! சென்னையைவிட்டு நகர விரும்பவில்லை. அங்கேயே ஏதேனும் ஒரு வேலை தேடிக்கொண்டு செட்டிலாகிவிடவேண்டும் என்ற உறுதியான முடிவில் இருந்தார். யுத்த அபாயம் இருந்த காலம் என்பதால், ஏர் ரெய்ட் வார்டன் வேலை அவரைத் தேடி வந்தது.  ஏ.ஆர்.வி. யூனிஃபார்ம் அணிந்து, கையில் விசிலுடன் தெருத்தெருவாகச் சென்று, விசிலை பலமாக ஊதி, வீட்டுக் கதவுகளை மூடும்படியும், விளக்குகளை அணைக்கும்படியும் பொதுமக்களை எச்சரிக்க வேண்டும். இதுவே ஏர் ரெய்ட் வார்டனின் வேலை. இதையும் சவாலாக ஏற்றுச் செய்திருக்கிறார் சாவி.

78) இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று, மண்ணடி போஸ்ட் ஆபீஸ் வெளியில் இருந்த போஸ்ட் பாக்ஸில் நெருப்பைக் கொளுத்திப் போட்டுவிட்டு, தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, தபாலாபீஸைக் கொளுத்திவிட்டதாகவும், மண்ணடி போஸ்ட் ஆபீஸ் வாசலிலேயே, தான் காந்தி குல்லாயும் கதர்ச் சட்டை, வேட்டியும் அணிந்து காத்திருப்பதாகவும், உடனே வந்து தன்னை கைது செய்து அழைத்துப் போகும்படியும் சொன்னார் இளைஞனாக இருந்த சாவி. அதன்படியே அவரைக் கைது செய்து, பெல்லாரி அருகில் உள்ள அலிபுரம் சிறையில் அடைத்தது போலீஸ். இந்தச் சம்பவத்தைதான் ‘இந்தியன்’ படத்தில் நெடுமுடி வேணு பேசுகிற வசனமாக வைத்திருப்பார் எழுத்தாளர் சுஜாதா.

79) எளிமையான அமைச்சருக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் இன்றைக்கும் காமராஜ், கக்கன்ஜி இருவரின் பெயர்கள்தான் சட்டென நம் நினைவுக்கு வரும். அந்த மாமனிதர் கக்கன்ஜியை சாவி சந்தித்துப் பழகியது இந்த அலிபுரம் சிறையில்தான்.

80) சிறையில் கைதிகள் அனைவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட வேலையைப் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். சாவி அவர்கள் நூலகத்தைப் பராமரிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

(தொடரும்)

2 comments:

//கோபம் எனும் குணமும் சாவி சாருக்கு ஒரு தனி அழகையும், கம்பீரத்தையும் கொடுப்பதாகவே நான் உணர்கிறேன்.//

.
கோபம் இருக்குமிடத்தில்தான்...
குணமும் இருக்கும்!
சாவி!!!
.
 
தெரியாத பல தகவல்கள்.