உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, August 06, 2016

சாவி-100 (VI)

த்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்களின் சிஷ்யனாக ஒன்பது ஆண்டுக் காலம் அவரிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் பெரும் பேறு. என் வாழ்க்கையின் முக்கியத் திருப்புமுனையே என் 30-வது வயதில், 1986-ல் சாவி பத்திரிகையில் நான் உதவி ஆசிரியனாகச் சேர்ந்ததுதான். இதோ... 30 ஆண்டுக் காலம் விளையாட்டுப் போல் ஓடிவிட்டது. ஆனாலும், இந்த நிமிடம் வரையில் என்னை நான் சாவியின் மாணவனாகத்தான் உணர்கிறேன். அவரைப் பற்றி நேரடியாக அவரிடமே கேட்டறிந்த தகவல்களையும், பிறர் மூலம் அறிந்த தகவல்களையுமே இங்கே சாவி-100 என்னும் தலைப்பில் குட்டிக் குட்டித் தகவல்களாகத் தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் மாலதி (சாவி அவர்களின் கடைசி புதல்வி) மற்றும், வெகு காலம் முன்பே அங்கே சென்று நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்றிக்கொண்டிருக்கும் சாவியின் மூத்த புதல்வர் ’பாச்சா’ என்கிற திரு.பாலச்சந்திரன்... இருவரும் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வருகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். மாலதி ஃபேஸ்புக் வழியே இன்பாக்ஸில் தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திரு.பாச்சா இன்று காலையில் மொபைலில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். சாவி அவர்கள் அமரராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்றைக்கும் அவரின் குடும்பத்தார் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினனாகக் கருதி அன்பு பாராட்டுவதற்கு ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்தான் இருக்க வேண்டும். சாவியின் மாணாக்கனாக நான் போய்ச் சேர்ந்ததே ஒரு பூர்வ ஜென்ம பந்தம்தான், இல்லையா?!

இனி, சாவி-100-ன் ஆறாவது பத்து:

51) பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் சாவி. வெளிநாடு செல்லும்போதெல்லாம் தம்மோடு எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை, ஓவியர் ஜெயராஜ் என யாரையாவது உடன் அழைத்துச் செல்வார். தவிர, எடிட்டோரியல் மீட்டிங் என்கிற சாக்கில், தனது உதவி ஆசிரியர்களை அழைத்துக்கொண்டு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பெங்களூர், ஊட்டி, குன்னூர் என இரண்டு மூன்று நாட்கள் சென்று தங்கி வருவது வழக்கம். சிங்கப்பூர் சென்று வருவதென்பது சாவி சாருக்கு அண்ணா நகரிலிருந்து மந்தைவெளி சென்று வருகிற மாதிரி!

52) ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ். வாசன் தமது காரில் கல்கி, துமிலன், ஓவியர் மாலி என தமது சகாக்களை அழைத்துக்கொண்டு அடிக்கடி சென்னை, மவுண்ட் ரோடில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்புக்குச் சென்று, சிற்றுண்டி வாங்கித் தருவது வழக்கம். அந்நாளில் விகடனில் கற்றுக்குட்டி உதவி ஆசிரியராகச் சேர்ந்த சாவியின் மனதில் இது அழுத்தமாகப் பதிந்தது. பின்னாளில் தமது சகாக்களையும் அதே போல் தமது காரில் அதே காஸ்மோபாலிடன் கிளப்புக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கித் தருவதை வழக்கமாக்கிக் கொண்டார் சாவி.

53) எஸ்.எஸ்.வாசன், கல்கி, சதாசிவம் எனத் தம்மோடு பழகியவர்களைப் போலவே மிமிக்ரி செய்து பேசுவதில் வல்லவர் சாவி. எஸ்.எஸ்.வாசன் போலவே நடந்து, அவரைப் போலவே சாவி மிமிக்ரி செய்து பேசும்போது அமரர் வாசனையே நேரில் பார்த்ததுபோல் இருக்கும்.

54) மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்பச் செட்டியார், பேராசிரியர் கல்கி, அறிஞர் அண்ணா, முஜிபுர் ரஹ்மான், இசைக்குயில் லதா மங்கேஷ்கர், கிருபானந்த வாரியார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி எனப் பல முக்கியப் பிரபலங்களுடனும் நெருங்கிப் பழகியவர் சாவி. வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் இத்தகைய அபூர்வ வாய்ப்பு கிட்டியதில்லை.

55) தமது குரு பேராசிரியர் கல்கி மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் சாவி. சின்ன வயதில் சில்க் ஜிப்பா அணிவதென்றால் சாவிக்கு அத்தனை இஷ்டம். ஆனால், தேசியத்தில் பற்றுடையவரான கல்கி, ‘ஜிப்பாவெல்லாம் கூடாது. நல்ல கதர்ச் சட்டையாக வாங்கி அணிந்து கொள்!’ என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, தனது முதல் சம்பளத்தில் ஆசை ஆசையாக வாங்கி அணிந்த சில்க் ஜிப்பாவை அன்றைக்குக் கழற்றிப் போட்டவர்தான்... அதன்பின்  சாவி தமது வாழ்நாள் முழுவதும் சில்க் ஜிப்பா அணியவே இல்லை என்பதோடு, பெரும்பாலான நாட்களில் கதர்ச் சட்டையே அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

56) ஆனந்த விகடனில் பணியாற்றுவதையே சாவி பெரிதும் விரும்பினார் என்றாலும், கல்கி அங்கிருந்து வெளியேறியதும், குருவின் மீதுள்ள அபிமானத்தால் தானும் அங்கிருந்து வெளியேறி, குருவின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றார் சாவி.

57) கல்கியுடன் ஏற்பட்ட ஒரு சின்ன மன வருத்தத்தில், அவரின் கல்கி பத்திரிகையிலிருந்து விலகி, சொந்தமாக ‘வெள்ளிமணி’ பத்திரிகையைத் தொடங்கினார் சாவி. இருந்தாலும், முதல் இதழை தன் குருநாதர் கல்கிக்கு அர்ப்பணம் செய்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார். வெகு சீக்கிரமே, சாவியின் மனசு புரிந்து கோபம் தணிந்த கல்கி, சாவி கேட்டுக்கொண்டதன்பேரில் ‘வெள்ளிமணி’க்கும் கட்டுரைகள் எழுதித் தந்துள்ளார். அது மட்டுமல்ல, தானே ஆசிரியராக இருந்து ‘வெள்ளிமணி’யை நடத்தித் தருவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். கூடவே, ‘வெள்ளிமணி’ பத்திரிகையை இன்னும் சிறப்பாகக் கொண்டு வர,  தமக்குப் பழக்கமான செல்வந்தர்கள் சிலரிடமிருந்து நிதி உதவி பெற்றுத் தரும் முயற்சியிலும் இறங்கினார் கல்கி. ஆனாலும், வேறு பல காரணங்களால், ‘வெள்ளிமணி’ பத்திரிகையை சாவியால் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது.

58) ‘சுப்புடு’வை அற்புதமான சங்கீத விமர்சகராக வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக் காண்பித்தவர் சாவிதான். அவருக்கும்கூட ஒரு பாராட்டு விழா எடுத்திருக்கிறார் சாவி.

59) சென்னை, அண்ணா நகரில் புது வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்தபோது, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சாவி. சாவியின் அன்பு அழைப்பின்பேரில் பெருந்தலைவர் காமராஜ் வந்திருந்து அந்தக் கச்சேரியை முழுக்க இருந்து கேட்டு ரசித்துவிட்டுப் போனார்.

60) ஆனந்த விகடனில் சாவிக்கு சீனியராக இருந்தவர் துமிலன். பின்னாளில் அவர் சிரமதசையில் இருந்த காலத்தில், காமராஜரிடமும் தனக்கு நெருக்கமான காங்கிரஸ் அன்பர்களிடமும் தொடர்ந்து பேசி, ‘சுதந்திரச் சங்கு’ என்ற வாரப் பத்திரிகையை ஆரம்பித்து, துமிலனை அதன் ஆசிரியராக்கினார் சாவி.

(தொடரும்)

1 comments:

அமரர் சாவி அவர்களைப் பற்றி தாங்கள் எழுதி வரும் தொடர் ஒரு கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது. இன்றைய தலைமுறைக்கு சென்ற தலை முறை எழுத்தாளர்களை பற்றிய தகவல் களஞ்சியமாக திகழும். பல தகவல்கள் சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும் இருக்கின்றது. இத்தகைய ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தமான விஷயம். நன்றி! தொடர வாழ்த்துக்கள்!