உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, April 01, 2016

என் புகுந்த வீடு - 13


பார்த்தேன்... படித்தேன்... அதிர்ந்தேன்..!

னந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து வந்திருந்த மூன்றாவது கடிதம் எனக்கு அவர் மீது உண்டாகியிருந்த வருத்தத்தை அறவே போக்கியதோடு, அத்தனை பெரிய மனிதரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று என் மீதே என்னைக் கோபம் கொள்ளச் செய்தது. ‘எங்களின் கடிதம் தங்கள் மனத்தைப் புண்படுத்தியிருப்பின் அதற்காக வருந்துகிறோம்’ என்று ஒரு பெரிய பத்திரிகையின் ஆசிரியர் தம் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதிய பின்னரும், அந்தப் பெருந்தன்மையை உணராத அறிவிலியாய் ‘வேண்டாம். என் கதைகளைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்’ என வீம்பு பிடித்து மீண்டும் கடிதம் எழுதிய என் புத்தியைச் செருப்பால் அடித்துக்கொள்ளத் தோன்றியது.

ஆசிரியர் தமது மூன்றாவது கடிதத்தில், “எங்களின் கடிதம் உங்கள் மனத்தை எந்த அளவுக்குக் காயப்படுத்தியுள்ளது என்பது புரிகிறது. அதற்காக மீண்டும் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களின் கதைகள் எதையும் நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. தங்களின் நேர்மையின்மீது கடுகளவும் சந்தேகம் இல்லாமல், முழு மனத்தோடுதான் அவற்றைப் பிரசுரிப்பதாக உள்ளோம். ‘இன்னொரு முறையும் இப்படியான அனுபவம் நேராது என்பதற்கு என்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை’ என்கிற தங்களின் வரியும் புரிந்துகொள்ளக்கூடியதே!  ஆனால், அப்படி ஏதேனும் நேர்ந்தாலும், அதற்காக தங்களின் நேர்மையைச் சந்தேகப்படமாட்டோம் என்று என்னால் உத்தரவாதம் தர இயலும். தங்களின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பேன், எவ்வளவு தூரம் கண்கலங்கியிருப்பேன் என்பதற்குக் கணக்கு வழக்கே இல்லை. பின்பு நிதானமாக விகடன் ஆசிரியருக்கு பதில் கடிதம் எழுதினேன். 

“மதிப்பு மிக்க ஐயா, வணக்கம். தங்களின் கடிதம் கண்டேன். தங்கள் பெருந்தன்மைக்கு முன்னால் என்னைத் தூசினும் கீழாக உணர்கிறேன். தங்களுக்கு நான் எழுதிய பதில்களின் நகல்களை இப்போது எடுத்துப் பார்க்கும்போது, அவை பொறுப்பற்ற பதில்களாகவும், அதிகப்பிரசங்கித்தனமாகவும் இருப்பது கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன். கூசிப்போகிறேன். என் பதில்களை, 22 வயதே ஆன, பக்குவமடையாத மனம் கொண்ட ஓர் இளைஞனின் பிதற்றல்களாக எடுத்துக்கொண்டு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இப்படிக்கு, ரவிபிரகாஷ்.

ஆனால், இந்தக் கடிதத்தை நான் எழுதுவதற்கு முன்பே, நண்பர் மார்க்கபந்துவுக்கு நான் எழுதிய நீண்ட புலம்பல் கடிதத்தின் நகலை அப்பா ஆனந்த விகடன் ஆசிரியருக்கு போஸ்ட் செய்திருந்தார் எனப் பின்னர் அப்பா சொல்லித் தெரிந்துகொண்டேன்.

“ரவிபிரகாஷின் தந்தை எழுதுகிறேன். என் மகன் அந்தக் கதையை எதைப் பார்த்தும் காப்பி அடிக்கவில்லை என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். அவன் பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்பது என் விருப்பம். இந்த விவகாரம் ஏதோ திருஷ்டிப் பரிகாரம்போல் அமைந்துவிட்டது. இத்துடன் ரவி தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தின் நகலை இணைத்துள்ளேன். இதைப் படித்தால், அவன் மீது தவறில்லை என்பது உங்களுக்குப் புரியும். நியாயமாக அவன் இந்த விளக்கங்களைத்தான் முன்பே உங்களுக்கு எழுதியிருக்க வேண்டும். எத்தனையோ எடுத்துச் சொல்லியும் பொறுப்பற்று ஏதேதோ எழுதிவிட்டான். அவன் சிறு பையன். அவனுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தானும் ஒரு கடிதம் எழுதி இணைத்து அனுப்பியதாக அப்பா சொன்னார்.

ஆனால், அப்பா இந்தக் கடிதத்தை அனுப்பியதாகச் சொன்ன தினத்துக்கு மறுநாளே ஆசிரியரின் மூன்றாவது கடிதமும் வந்துவிட்டதால், அப்பாவின் கடிதத்தையோ, நண்பர் மார்க்கபந்துவுக்கு நான் எழுதிய கடிதத்தின் நகலையோ பார்த்து, அதன்பேரில் ஆசிரியர் எனக்கு அந்த மூன்றாவது கடிதத்தை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தோம்.

அந்தப் பிரச்னை அத்தோடு ஓய்ந்தது. என் சிறுகதைகளும் மாதத்துக்கு ஒன்றாக அடுத்தடுத்து ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகின. அப்பாவுக்குச் சந்தோஷமான சந்தோஷம்!

பின்னாளில் நான் விகடனில் வேலைக்குச் சேர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிரியருடன் சற்று நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, ஒரு நாள் இந்த ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை - முரண்டு’ சிறுகதை விவகாரம் குறித்து அவருடன் பகிர்ந்துகொண்டேன். அவர் எந்த வியப்பையும் காட்டவில்லை.

“தெரியுமே!” என்று சொல்லிப் புன்னகைத்தார். ‘தெரியுமா?!’ என்று நான்தான் வியப்பால் விழிகளை விரித்தேன்.

“எப்படித் தெரியும்னு பார்க்கறேளா... வேலை கேட்டு நீங்க அப்ளிகேஷன் போட்டப்பவே, உங்க பேரைப் பார்த்ததும் கேள்விப்பட்ட பேரா இருக்கேனு தோணிச்சு. வேலுச்சாமியைக் கூப்பிட்டு விசாரிச்சேன். விகடன்ல நீங்க நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கீங்கன்னு சொன்னவர், கூடவே இந்த விஷயத்தையும் சொன்னார்” என்றார் ஆசிரியர்.

வேலுச்சாமி என்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்டவர் கவிஞரும் நல்ல எழுத்தாளருமான இரா.வேலுச்சாமி. ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். முரண்டு கதையோடு என் சிறுகதை ஒத்துப்போகிற விஷயத்தைக் கண்டுபிடித்து ஆசிரியரிடம் சொன்னவர் அவர்தான்.

“அது மட்டுமில்லே... விகடன்ல வெளியான உங்களோட இன்னொரு கதை சம்பந்தமாகவும் நீங்க ரொம்பக் கோபப்பட்டுக் கடிதம் எழுதினீங்கன்னும் வேலுச்சாமி சொன்னார்” என்று சொல்லி மர்மமாகப் புன்னகைத்தார் ஆசிரியர்.

தர்மசங்கடமாகத் தலைகுனிந்துகொண்டே, “ஆமாம் சார்” என்றேன். அது பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

ஆக, பிரச்னைக்குரிய நபர் என்று தெரிந்தும் தயங்காமல் என்னை வேலையில் சேர்த்துக்கொண்ட ஆசிரியரின் பெருந்தன்மையை என்னவென்பது?

எல்லாம் சரி; இப்போது, இந்தக் கட்டுரையை கம்போஸ் செய்துகொண்டிருக்கிறேனே, இந்த நிமிடம் எனக்கு ஒரு புதிய பிரச்னை - பிரச்னை என்று சொல்ல முடியாது - குழப்பம் உண்டாகியிருக்கிறது.

நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதையை, 35 ஆண்டுகளுக்கு முன்னால், ஆசிரியர் அனுப்பி வைத்த இலக்கிய சிந்தனைப் புத்தகத்தில் படித்ததோடு சரி; அதற்குப் பிறகு அந்தக் கதையை நான் படிக்கவில்லை; அதற்கான வாய்ப்போ வேளையோ வரவில்லை. ஆனால், இந்தப் பதிவை எழுதும்போது அந்தக் கதையை மீண்டும் தேடியெடுத்துப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் உண்டாகியது. முன்னெல்லாம் அதற்கு வாய்ப்பு கிடையாது. இப்போதுதான் கூகுளாண்டவர் துணை இருக்கிறதே! தேடினேன். கிடைத்தது. படித்ததும் பலத்த அதிர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் ஒரு சேர ஆளானேன். 

மனதில் தேங்கியிருந்த பழைய ஞாபக அடுக்குகளைப் புரட்டி, அந்தக் கதையை ஒருவாறு நினைவுக்குக் கொண்டு வந்து, கீழ்க்கண்டவாறு அதன் சுருக்கத்தை போன பதிவில் தந்திருந்தேன்.

//ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞன். தான் செய்வது இன்னதென்று அவனுக்குத் தெரியாது. ஆனால், அடிக்கடி கள்ளு குடிக்கப் போய்விடுவான். அவனை வைத்துக்கொண்டு அவன் அம்மா போராடுவாள். உறவுக்காரப் பெண் ஒருத்தியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டால், அவனுக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட நிம்மதி தனக்குக் கிடைக்கும் என்று நினைத்து, அதற்கு முனைவாள். அதற்குள் அவன் கள்ளு குடிக்கக் காசு புரட்டுவது எப்படி என்று யோசித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ரூபாய் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அங்கே போய் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு விடுகிறான். அம்மாவின் ஆசை நிராசையாகிறது. அவ்வளவுதான் கதை!//

நன்றாக நினைவிருக்கிறது, அன்று நான் படித்த கதை இதுதான். நான் மட்டுமல்ல, என் அப்பாவும் அந்தக் கதையைப் படித்தார். இருவரும் அது பற்றி விவாதம் செய்திருக்கிறோம்.

இலக்கிய சிந்தனைப் புத்தகத்தில் அந்தக் கதை குறைந்தபட்சம் 15, 16 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது. வளவளவென்று நீண்டிருந்த கதை. மொழிநடையும் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. புரியாத வட்டாரச் சொற்கள் நிறைய இடம்பெற்றிருந்தன.


ஆனால், சற்று முன்பு நான் கூகுளில் தேடி எடுத்துப் படித்த ‘முரண்டு’ கதை மிகச் சிறிய கதை. நறுக்கென்று கச்சிதமாக எழுதப்பட்டிருந்த கதை. அதிகபட்சம் நாலைந்து பக்கங்கள் வரலாம். இதில் தெரியாத, புரியாத வார்த்தைகள் என்று எதுவும் தட்டுப்படவில்லை. 

முக்கியமாக, இந்த ‘முரண்டு’ கதை என் கதையோடு பெரிதும் ஒத்துப்போகிறது. அதுதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின விஷயம். (முரண்டு கதையின் யூ.ஆர்.எல். இணைப்பைக் கீழே தந்துள்ளேன்.)

எனில், அன்று புத்தகத்தில் நான் படித்த கதை என்ன? ‘முரண்டு’ கதைக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு கதையைப் படித்துக் குழப்பிக்கொண்டுவிட்டேனா? 

அன்று அந்தப் புத்தகத்தில் ‘முரண்டு’ கதையைத் தவிர வேறு எந்தக் கதையையும் நான் படிக்கவில்லை. அன்றிருந்த மன நிலையில் எனக்கு வேறு எதையும் படிக்கத் தோன்றவில்லை. ‘முரண்டு’ கதையை பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் மிக நீண்ட கதையாகப் படித்தது நன்கு நினைவிருக்கிறது. அதில் புரியாத வட்டாரச் சொற்கள் கலந்திருந்ததும் நினைவிருக்கிறது. கதையில் வரும் மூளை வளர்ச்சியற்ற கதாநாயகன் அடிக்கடி கள்ளு குடிக்கப் போய்விடுவான், அவன் அம்மா விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு ஓடுவாள் என்று படித்த ஞாபகமும் இருக்கிறது.

ஆனால், சற்று முன் படித்த ‘முரண்டு’ கதையில் இது எதையுமே காணவில்லையே? ஒருவேளை, புத்தகம் தயாராகும்போது தவறுதலாக வேறு ஒரு ஃபாரம் இடையில் நுழைந்துவிட்டதா? அதற்கென நியமிக்கப்பட்ட பணியாட்கள்தான் கையால் ஒவ்வொரு ஃபாரமாக எடுத்து அடுக்கி, பைண்டுக்குக் கொடுப்பது வழக்கம் என்பதால், சில புத்தகங்களில் ஃபாரம் மாறிப் போகிற, விட்டுப் போகிற தவறுகள் நடப்பதுண்டு. எனக்கு அனுப்பப்பட்ட இலக்கிய சிந்தனை புத்தகத்திலும் அப்படி ஏதேனும் குளறுபடி நடந்து, நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேனா?

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது என்ன புதுக் குழப்பம்?

(தொடர்ந்து சொல்வேன்)

https://nanjilnadan.com/2011/04/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

2 comments:

இரண்டு வாரம் காக்க வச்சுட்டீங்களே. தினமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து இன்று படித்ததில் மிக்க மகிழ்ச்சி.
 
Yes sir...In Murandu story....End of the story seems to be same as your story. May be coincidence.