உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, March 14, 2016

என் புகுந்த வீடு - 11

மனமும் மானமும்!
னந்த விகடனிலிருந்து வந்த அதிர்ச்சிக் கடிதத்தின் சாராம்சம் இதுதான்:

‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியிருந்தீர்கள். அதைப் படித்துப் பரிசீலித்ததில், அந்தக் கதை சில ஆண்டுகளுக்கு முன் ‘தீபம்’ பத்திரிகையில் நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ என்னும் சிறுகதையோடு பெரிதும் பொருந்திப் போவது தெரிய வந்தது. அவர் தனக்கே உரிய வட்டார மொழியில் அந்தக் கதையை எழுதியிருந்தார். தாங்கள் பிராமண பாஷையில் எழுதியுள்ளீர்கள். அது மட்டுமே இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். ஆக, வேறு ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய சிறுகதையைக் காப்பி அடித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், அதை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள். இந்நிலையில், பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களின் மற்ற சிறுகதைகளை நாங்கள் ஏன் நிராகரிக்கக்கூடாது? இது குறித்துத் தங்களின் விளக்கத்தை உடனடியாக எதிர்பார்க்கிறோம்!’

கடிதத்தின் கீழே ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் கையொப்பம் இட்டிருந்தார். இதுதான் அவரது கையொப்பம் தாங்கி எனக்கு வரும் முதல் கடிதம்.

இதற்கு முன்னர் என் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டபோதோ, நிராகரிக்கப்பட்டபோதோ, கதைக்கு அனுப்பும் மணியார்டர் ஃபாரத்தின் அடியில் தகவல் அனுப்பும் பகுதியிலோ எஸ்.வரதராஜன், கே.சுந்தரம் என உதவி ஆசிரியர்கள்தான் கையொப்பம் இட்டு அனுப்புவது வழக்கம். இந்நிலையில், ஆசிரியரிடமிருந்து வரும் முதல் கடிதமே என் மீதான அபாண்டக் குற்றச்சாட்டைத் தாங்கி வரும் கடிதமாக அமைந்தது கண்டு நான் மிகவும் துடிதுடித்துப் போனேன்.

என்னைவிட அப்பாதான் மிகவும் மனம் நொந்து போனார். ‘ஆசிரியரே கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். எனவே, இதற்கு அவசியம் உன் நிலையைத் தன்மையாக எடுத்துச் சொல்லி, விளக்கி ஒரு கடிதம் போடு!’ என்றார் அப்பா.

‘சரி, சரி’ என்றேனே தவிர, என் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தது. அப்போது ‘காணை’ என்னும் கிராமத்தில், நான் ‘பிரகாஷ் டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்’ என்னும் பெயரில் தட்டச்சுப் பயிலகம் வைத்து நடத்திக்கொண்டிருந்தேன். எனவே, அந்த லெட்டர் பேடிலேயே எனது பதில் கடிதத்தை டைப் செய்தேன்.

‘மதிப்பு மிக்க ஆசிரியருக்கு,

வணக்கம்.  வேறு ஒருவரின் கதையைக் காப்பி அடித்து எழுதியுள்ளதாக என் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளீர்கள். எந்த ஒரு வழக்கிலும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி எனக் குறிப்பிடக்கூடாது என்பது விதி. ஆனால், தாங்களோ நான் அந்தக் கதையைக் காப்பி அடித்துதான் எழுதினேன் என்று தீர்ப்பே எழுதிவிட்டீர்கள். அது மட்டுமின்றி, ‘அதை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த ‘அனுப்பியும்’ என்பதில் உள்ள ‘உம்’ என்னைப் பெரிதும் உறுத்துகிறது.

தங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்க நான் தயாராக இல்லை. மேலும், தங்களுக்குத் திருப்தியளிக்கும் விதமாக என்னிடம் எந்த விளக்கமும் இல்லை. திட்டமிட்டுக் குற்றம் செய்பவனால்தான் ‘அலிபி’ தயாரித்து வைத்துக் கொள்ள முடியும். என்னிடம் அப்படி எந்த விளக்கமும் இல்லை.

எனவே, தங்கள் வசம் உள்ள என் சிறுகதைகள் அனைத்தையும், பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டுமின்றி பரிசீலனையில் உள்ள என் மற்ற கதைகளையும் சேர்த்து உடனடியாக எனக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எழுத்துலகம் என்பது ஒரு கடல். அதில் சில நீர்க்குமிழிகள் உடைந்து போவதால் கடலுக்குப் பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை!’

நான் எழுதிய இந்த அதிகப்பிரசங்கித்தனமான பதிலைப் படித்ததும், என் அப்பா மிகக் கோபமடைந்தார். ‘ஒரு பெரிய பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியரே விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார் என்றால், தகுந்த காரணம் இல்லாமலா இருக்கும்? அதற்குப் பொறுமையாக உன் நிலையை எடுத்துச் சொல்வதை விட்டு, இப்படியா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கடிதம் எழுதுவது?’ என்று கண்டித்தார். ஆனாலும், நான் அந்தக் கடிதத்தை விகடனுக்கு அனுப்பவே செய்தேன்.

அதன்பின்பும் என் மனம் ஓயவில்லை. அதுபற்றியே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.

‘விளக்கில் விழுந்த விட்டில்’ என்னும் தலைப்பில், விகடனில் வெளியான என் முதல் சிறுகதையைப் படித்துவிட்டு, ஆனந்த விகடன் அலுவலகத்தில் என் முகவரியைக் கேட்டு வாங்கி, அந்தக் கதையைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதியவர் திரு.மார்க்கபந்து அவர்கள். பிரபல பத்திரிகையாளர் ‘மகரம்’ அவர்களின் புதல்வர். எனக்கு அவர் ஞாபகம்தான் அப்போது வந்தது. என் மன வேதனையை அவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி, உடனடியாக ஒரு கடிதத்தை டைப் செய்யத் தொடங்கினேன்.

சிங்கிள் லைன் ஸ்பேஸில் தட்டச்சு செய்தும்கூட, ஏ-4  ஷீட்டில் நான்கு பக்கங்கள் கொண்ட கடிதமாக உருவெடுத்தது அது.

அதில் நான் குறிப்பிட்டிருந்த சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

தினமணி கதிருக்கு ‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை நான் அனுப்பியிருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகும் அங்கிருந்து அது தொடர்பாக எந்த பதிலும் வராததால், என் கதை என்ன ஆயிற்று, பரிசீலனையில் உள்ளதா, காத்திருக்கவா என்று கேட்டுக் கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. மேலும் ஒரு மாதம் காத்திருந்தும் பதில் இல்லை. பின்னர், அந்தக் கதையை வேறு பத்திரிகையின் பரிசீலனைக்கு அனுப்பப்போவதாகவும், எனவே நீங்கள் அதைப் பரிசீலிக்க வேண்டாம் என்றும் சொல்லி, இன்னொரு கடிதம் அனுப்பினேன். அதற்கும் அங்கிருந்து பதில் இல்லை.

சில நாட்கள் கழித்து, அதே கதையை வேறு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கே சில மாத காலம் பரிசீலனையில் இருந்து திரும்பியதும், அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். இப்படியாக ஒன்றரை வருடங்களில் அந்தக் கதை ஐந்தாறு பத்திரிகைகளுக்குப் போய்,கடைசியாக ஒரு பத்திரிகையின் பரிசீலனையில் இருக்கும்போது, நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, முதன்முதலில் நான் அந்தக் கதையை அனுப்பிய தினமணி கதிர் பத்திரிகையிலேயே பிரசுரமாகி, புத்தகம் என் வீட்டுக்கு வந்தது.

பெரிய சைஸ் தினமணி கதிர். அதில் என் கதை ஒரு வரி கூட எடிட் செய்யப்படாமல், திருத்தம் எதுவும் செய்யப்படாமல், ஐந்து முழுப் பக்கங்களுக்கு மிகப் பெரிய கதையாகப் பிரசுரம் ஆகியிருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியை நான் அனுபவிக்க முடியாமல், உண்மையில் பதறிப் போய், என் நிலைமையை விளக்கி, அந்தக் கதையை அடுத்தடுத்து நான் பரிசீலனைக்கு அனுப்பிய பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரு தன்னிலை விளக்கக் கடிதம் அனுப்பினேன். அந்தக் கதையை அந்தப் பத்திரிகைக்கு அனுப்புவதற்கு முன் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்ததோடு, அந்தக் கதை அவர்களின் பரிசீலனையில் இருந்தால் தவிர்த்துவிடுமாறும், இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் அதில் எழுதியிருந்தேன். இந்தக் கடிதத்தை அப்போது ஆனந்த விகடன் பத்திரிகைக்கும் அனுப்பியிருந்தேன். இந்தக் கடிதங்களை ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் போஸ்டிங்’ மூலம் அனுப்பியிருந்தேன். ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் போஸ்டிங்’ என்பது வேறொன்றுமில்லை. நாம் கடிதம் அனுப்பும் முகவரிகளை ஒரு தாளில் எழுதி, அவற்றை நான் போஸ்ட் செய்ததற்குச் சாட்சியாக போஸ்ட் ஆபீஸில் ஒரு முத்திரை வைத்துத் தருவார்கள். மேற்படி கடிதம் போய்ச் சேர்வதற்கு அது உத்தரவாதமில்லை என்றாலும், நான் அனுப்பினேன் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கும்.

இன்னொரு சம்பவம். ‘மானம்’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி, வழக்கம்போல் ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருந்தேன். கதைச் சுருக்கம் இதுதான்...

வேலையின்றித் தவிக்கும் ஒருவன் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறான். கடன்காரர்களின் தொல்லை; உறவினர்களின்   கேலிப் பேச்சு; மனைவியின் குத்தல் மொழிகள்.

அவன் ஓர் எழுத்தாளன். அவனது சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் அவனும் கலந்துகொண்டு ஒரு சிறுகதை அனுப்பி வைக்கிறான். பரிசீலனையில் அவனது கதை முதற்பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரசுரமாகிறது. கூடவே அதற்கான காசோலையும் வருகிறது. மிகவும் மகிழ்கிறான். ஐயாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை. கடன்களை அடைத்துவிடலாம். ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை ஒரு இரண்டு மூன்று மாதங்கள் குடும்பத்தை ஓட்டலாம் என்று கணக்குப் போடுகிறான்.

அவன் அந்தக் காசோலையை பக்கத்து ஊரில் இருக்கும் டவுனில் உள்ள பேங்க்கில் (அவனது ஊர் மிகக் குக்கிராமம்) டெபாசிட் செய்ய எண்ணியிருக்கும் நேரத்தில் ஒரு வாரம் கடந்து, அந்தப் பத்திரிகையின் அடுத்த இதழும் கடைகளில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. தன் கதை குறித்து ஏதேனும் வாசகர் கடிதம் வந்திருக்கிறதா என ஆர்வத்தோடு வாங்கிப் பார்க்கிறான். அதில் ஒரு வாசகர் கடிதம் கட்டம் கட்டிப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. முதற்பரிசு பெற்ற கதை ஏற்கெனவே மலையாளப் பத்திரிகை ஒன்றில் வந்த கதையின் அப்பட்டமான காப்பி; சின்னச் சின்ன மாற்றங்கள் தவிர, அதன் தமிழாக்கம்தான் இது என்கிறது அந்தக் கடிதம். அதிர்கிறான்.

உடனடியாக அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தனக்கு மலையாள மொழி தெரியாது என்றும், மேற்படி கதை தனது சுய கற்பனையில் உருவான கதையே என்றும், இருப்பினும் இதே போன்ற கருத்து கொண்ட கதை வேறு ஒருவரின் கற்பனையில் உருவாகிவிட்டது என்பதால் தார்மிகமாக தனது கதை முதற்பரிசுக்குரிய தகுதியை இழக்கிறது என்று  தான் கருதுவதாகவும், எனவே முதற்பரிசுக்கான காசோலையை இத்துடன் திருப்பி அனுப்புவதாகவும் அதில் எழுதி, காசோலையைத் திருப்பி அனுப்பிவிடுகிறான்.

வாக்களித்திருந்தபடி அவனால் கடன்களை அடைக்க முடியாமல் நாளை அவன் மானம் கப்பலேறும். ஆனால், இலக்கிய உலகில் தனது மானம் பறிபோகாமல் காப்பாற்றிக்கொண்ட பெருமையும் மகிழ்வும் அவனுக்கு உண்டு என்பதாகக் கதையை முடித்திருந்தேன்.

இந்த இரண்டு சம்பவங்களையும் விலாவாரியாக என் நண்பர் மார்க்கபந்துவுக்கு எழுதி, இப்படி அத்தனை பத்திரிகைகளுக்கும் சிரத்தையாகக் கடிதம் எழுதியவன், ‘மானம்’ என்கிற கதைக் கருவை மனதில் யோசித்தவன் வேறு யாரோ எழுதிய கதையைக் காப்பி அடித்து எழுதத் துணிவேனா என்று மனம் நொந்து கேட்டிருந்தேன்.

அடுத்த சில நாட்களில், ஆனந்த விகடன் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதமும், கூடவே எனது ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ சிறுகதையும், தவிர இலக்கிய சிந்தனை வெளியிட்ட ஒரு புத்தகமும் எனக்கு வந்து சேர்ந்தது.

(இன்னும் சொல்வேன்)

1 comments:

விறுவிறு.. தொடர்கிறேன்.