உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, June 23, 2012

தந்தையானார் சாவி; மகளானேன் நான்!

சென்ற பதிவின் தொடர்ச்சி...

றுநாள்-

வேறு எந்த பத்திரிகைக்கு அப்ளிகேஷன் தட்டிவிடலாம் என்கிற யோசனையோடு நான் கண்விழித்தேன்.

காலை மணி 10. மற்றவர்கள் சாவி அலுவலகம் போயிருப்பார்களா, என்ன நடந்திருக்கும் என்கிற யோசனை வந்தது.

12 மணி சுமாருக்கு, அட்டெண்டர் ஃபிரான்சிஸ் சைக்கிளில் என் வீடு தேடி வந்தார். “சார், உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க!” என்றார். “யாரு?” என்றேன். “நம்ம ராணிமைந்தன் சார், மோகன் எல்லாரும்தான்!” என்றார். “சாவி சார் கூப்பிட்டாரா? எல்லாரும் ஆபீஸுக்கு வந்துட்டாங்களா?” என்று கேட்டேன்.

சாவி அலுவலகம் அப்போது முரசொலி அலுவலகத்தை ஒட்டிய மாதிரி இருந்த ஒரு சின்ன தெருவில் இயங்கிக்கொண்டு இருந்தது.

“இல்லை சார்! கதவைப் பூட்டி வீட்டுல கொண்டுவந்து கொடுத்துடுன்னு சாவி சார் சொல்லிட்டாரு. எல்லாரும் இப்ப சாவி சார் வீட்டு வாசல்லதான் இருக்காங்க. உங்களையும் அங்கே வரச் சொன்னாங்க” என்றார்.

“எதுக்கு?” என்றேன்.

“சாவி சார் கிட்ட ஸாரி கேட்கறதுக்குதான்! வாங்க சார், கையோடு உங்களை அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க!” என்றார் ஃபிரான்சிஸ். “சரி, நீங்க கிளம்புங்க! நான் பின்னாடியே வரேன்!” என்றேன்.

பின்னர் சில நிமிடங்களில் தயாராகி, சைக்கிளில் புறப்பட்டேன். சாவி சார் அப்போது அண்ணா நகரில் இருந்த தனது பெரிய வீட்டை விற்றுவிட்டிருந்தார். லயோலா கல்லூரிக்கு எதிரே நீளும் சாலையில், வசதியானதொரு அப்பார்ட்மெண்ட்டில் நான்காவது தளத்தில் வாடகைக்குக் குடியிருந்தார்.

நான் அங்கே போன சமயத்தில், அனைவரும் (ஆர்ட்டிஸ்ட் மோகனைத் தவிர, வேறு யார் யாரென்று தற்சமயம் பெயர்கள் நினைவில்லை.) அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தார்கள். நான் போய் இறங்கியதும், “வாங்க, போகலாம்! போய்ப் பார்த்து சாரை சமாதானப்படுத்தி, மறுபடியும் பத்திரிகையை நடத்தச் சொல்லிக் கேட்போம்!” என்றார்கள்.

“நான் வரலை. நீங்க போய்ப் பேசுங்க. என்ன சொல்றார்னு கேளுங்க. தொடர்ந்து நடத்துறதா சொன்னார்னா, நானும் மேல வந்து அவரைப் பார்க்கிறேன். இல்லேன்னா நான் இப்படியே கிளம்பறேன்!” என்றேன். அவர்கள் என்னையும் வரச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் தீர்மானமாக சாவி சாரைப் பார்க்க மறுத்துவிட்டேன்.

அவர்கள் மட்டும் மேலே சென்று, சாவி சாரைப் பார்த்துப் பேசிவிட்டு, அரை மணி நேரம் கழித்துக் கீழே வந்தார்கள்.

“என்ன சொன்னார் சாவி சார்?” என்றேன்.

“என்ன... நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்க. ரவி வரலையான்னு கேட்டார். வந்திருக்கார் சார். கீழே நின்னுட்டிருக்கார்னோம். ஓஹோ, சார் வரமாட்டாராமான்னு கொஞ்சம் கோபமாயிட்டார்!”

“சரி, பத்திரிகையை மறுபடி நடத்துறதா சொன்னாரா?” என்று கேட்டேன்.

“எல்லாரும் சேர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா நடத்துறதா சொன்னார்!” என்றார் மோகன்.

“தேவையில்லை. நான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கத் தயாராக இல்லை. நான் கிளம்பறேன்!” என்று மற்றவர்கள் தடுத்தும் கேட்காமல் கிளம்பிவிட்டேன்.

மற்றவர்கள் மட்டும் சாவி சார் கேட்டது போலவே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், நான் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதால், சாவியை மீண்டும் நடத்தப்போவது இல்லை என்று சாவி சார் சொல்லிவிட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

“தப்பு செய்தது நான்; அதனால் என்னைத் தண்டிக்கட்டும். ஆனால், மற்றவர்களைத் தண்டிப்பது போல் பத்திரிகையை மூடுவானேன்?” - இதுதான் என் கேள்வி.

அதே போல், வேறொன்றையும் பின்னர் ராணிமைந்தன் மூலமாகக் கேள்விப்பட்டேன். அன்றைக்கு, சாவி சாரின் துண்டு பற்றி ராணி மைந்தன் என்னிடம் பேசியபோது, நடந்த தவறுக்கு மன்னிக்கச் சொல்லி நான் கேட்பேன் என்று எதிர்பார்த்திருந்தாராம் சாவி. நான் வேறெதுவும் சொல்லவில்லை என்றதும், ‘வேற ஒண்ணுமில்லையா ரவி?’ என்று ராணி கேட்டது அதை மனதில் கொண்டுதான். அப்போதே நான், “ஸாரி சார்! தெரியாம நடந்து போச்சு. மன்னிச்சுக்குங்க!” என்று சொல்லியிருந்தால், நடந்தது அனைத்தையும் மறந்து உடனே ஹோட்டல் அறைக்குக் கிளம்பி வரும் உத்தேசத்தில்தான் இருந்தாராம் சாவி. நான் நடந்த செயலுக்கு வருந்தவில்லை என்றதும், அவரின் கோபம் மேலும் அதிகமாகிவிட்டதாகச் சொன்னார் ராணி.

ஆக, எப்படியோ... ஒரு பத்திரிகை நின்ற பழி என் மீது விழுந்தது!

இங்கே ஒரு முக்கிய உண்மையையும் நான் சொல்லவேண்டியுள்ளது. பத்திரிகையை நிறுத்தியதற்கு சாவி சாருக்கு நான் ஒரு சாக்குதான். நிஜத்தில் நிர்வகிக்க ஆளில்லாமல், விற்பனையைக் கவனிக்க ஆளில்லாமல், ஏஜெண்ட்டுகளிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் ஆளில்லாமல் பத்திரிகையின் விற்பனை சரிந்து, நஷ்டத்தில் தள்ளாடிக்கொண்டு இருந்தது. எனவே, அதை மேலும் தொடர்வதில் அர்த்தமில்லை என்கிற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் சாவி. நான் மன்னிப்புக் கேட்டிருந்தால், ஒருவேளை மேலும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு நடத்தியிருப்பாரோ என்னவோ!

மூன்றாம் முறை சாவி சாரிடம் நான் வேலை கேட்டு நின்றபோது, “இவன் அடிக்கடி கோவிச்சுக்கிட்டு வேலையை விட்டு நின்னுடறவனாச்சே! மறுபடியும் ஒழுங்கா இருப்பான்கிறது என்ன நிச்சயம்னு நீங்க நினைக்கலாம், சார்! ஆனா, உறுதியா சொல்றேன். நீங்களா என்னை வேண்டாம்னு வெளியே அனுப்புற வரைக்கும் நானா வேலையை விட்டு நிக்க மாட்டேன்!” என்று வாக்குறுதி தந்திருந்தேன்.

அதை நான் காப்பாற்றிவிட்டேன்தான் என்று நினைக்கிறேன்.

அதன்பின், நான் ஆனந்த விகடனில் சேர்ந்ததை அறிந்து, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து மிகவும் சந்தோஷப்பட்டார் சாவி சார் என்று அறிந்தேன்.

என் மீதிருந்த கோபமெல்லாம் தணிந்து, என்னை வீட்டுக்கு வரச் சொல்லி பலமுறை அழைப்பு விடுத்தார் சாவி சார். எனினும், விகடனில் சேர்ந்து ஆறு மாத காலத்துக்கு அவரை நான் போய்ப் பார்க்கவே இல்லை.

காரணம், ஒருவேளை அவர் மீண்டும் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தப்போவதாகச் சொல்லி, என்னை வந்து கவனித்துக்கொள்ளும்படி அழைத்தால், மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் நான் மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு, அவரிடமே போய்விடுவேன் என்கிற பயம்தான்.

சாவி மிகச் சிறந்த பத்திரிகையாளர்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் பத்திரிகையைத் திறம்படக் கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. எனவே, அதை நம்பிச் செல்வது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போல்தான் என்று எனக்குத் தோன்றிவிட்டது.

என் காலை நான் அழுத்தமாக ஊன்றிக்கொள்ள வேண்டியது அப்போது எனக்கு அவசியமாக இருந்தது. எனவே, ஆனந்த விகடனில் என்னை நிரந்தர ஊழியனாக அங்கீகரிக்கும் வரை, அதாவது அடுத்த ஆறு மாத காலத்துக்கு அவரை நான் போய்ச் சந்திக்கவே இல்லை.

அதன்பின், அவருக்கு சதாபிஷேகம் வந்தது. அதற்கு அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன். பிரிவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து அப்போதுதான் அவரைச் சந்திக்கிறேன்.

மேடையில் மாலையும் கழுத்துமாக தம்பதி சமேதராக உட்கார்ந்திருந்த சாவி சாரை நெருங்கி, கைகூப்பி வணக்கம் சொன்னேன்.

அவர் என்னை அருகில் அழைத்தார். குனியச் சொன்னார். என் காதருகில் கிசுகிசுப்பாகக் கேட்டார்...

“அவா உன்னை நன்னா வெச்சுண்டிருக்காளா?”

மகளைத் திருமணம் செய்துகொடுத்து, அவள் தன் புகுந்த வீட்டில் குடியேறி, சில ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்துவீட்டுக்கு வரும்போது, ஒரு பாசமிக்க தந்தை வாஞ்சையோடு கேட்கும் கேள்வியல்லவா இது!
.

7 comments:

ரவி, என்ன ஆச்சரியம். உங்கள் கடைசி பாரா தொடர்பான என் இன்னொரு அனுபவம். இன்னொரு பத்திரிகை ஆசிரியருடன். எம்.டி எனப்படும் விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனை எங்கள் இருவருக்கும் பொதுவான ஒருவர் வீட்டு விழாவில் சந்தித்தேன். அப்போதுதான் விகடனில் என் ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்டு சில மாதங்கள் ஆகியிருந்தன. முப்பது வருட கால விகடன் உறவு முறிந்து, முப்பது வருடத்துக்கும் மேலாக நான் எழுதியே இராத குமுதம் இதழில் ஓ பக்கங்கள் வந்துகொண்டிருந்தன. விகடனில் ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்டபோது எம்.டி பொறுப்புகளில் இல்லை. ஏறத்தாழ எல்லாவற்றிலிருந்தும் மெல்ல மெல்ல விலகத்தொடங்கியிருந்தார்.

என்னை விழாவில் சந்தித்ததும் வாஞ்சையோடு கைகளைப் பற்றிக் கொண்டார். அவர் வெளியே போய் காரில் ஏறும்வரை என் கையைப் பற்றியபடியே நடந்துவந்தார். பேசியது ஒரே ஒரு வாககியம்தான் :”குமுதத்துல பாக்கறேன். ஆர் தே ட்ரீட்டிங் யூ வித் ரெஸ்பெக்ட்?” என்று கேட்டார். யெஸ் சார் என்றேன். புன்னகையுடன் ‘ யூ டிசர்வ் இட் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்..
 
ithan parivu paasam enbathu ..grt sir
 
//
“அவா உன்னை நன்னா வெச்சுண்டிருக்காளா?”

மகளைத் திருமணம் செய்துகொடுத்து, அவள் தன் புகுந்த வீட்டில் குடியேறி, சில ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்துவீட்டுக்கு வரும்போது, ஒரு பாசமிக்க தந்தை வாஞ்சையோடு கேட்கும் கேள்வியல்லவா இது!
.//

அக்கறை !
 
இந்தத் தொடர் உண்மையில் ஒரு அழகான சிறுகதை போல் அமைந்துவிட்டது. முடிவு மனதை நெகிழச் செய்துவிட்டது. கண்ணின் ஓரங்களில் கண்ணீர் துளிர்க்கச் செய்தது உண்மை. ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள பாசப் பிணைப்பு அதிசயிக்கச் செய்கிறது.
 
ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு அதிசயிக்கத் தக்கதாக அமைந்திருப்பது உண்மையில் ஒரு வரம்தான். முடிவு நெகிழச் செய்கிறது. பிரிந்தபோதிலும் மனத்தால் பிரியாத உறவு வாய்ப்பது சிரமமே. உங்களுக்கு வாய்த்தது வரமே.
 
சாவி சார் எத்தனை உன்னத மனிதர் என்பதை உணர முடிந்தது உங்களால். பகிர்வுக்கு மிக்க நன்றி.
 
//“அவா உன்னை நன்னா வெச்சுண்டிருக்காளா?”//

கலங்கவைத்துவிட்டது இந்த வரி...