உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, February 26, 2012

பத்திரிகை உலக ஜாம்பவான்!


சாவி என்னும் இரண்டெழுத்து மாமனிதர் என்னுள் இருநூறு ஆண்டுகளுக்கான நினைவுகளை விதைத்துச் சென்றிருக்கிறார். பத்திரிகைத்துறையின் மீது அவர் எவ்வளவு ஆர்வமும் பிடிப்பும் கொண்டிருந்தார் என்பதை நேரடியாகப் பார்த்து ரசித்தவன் நான்.

ஒருமுறை, சாவி சார் அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாத கால பிரயாணம் முடிந்து அன்றுதான் சென்னை திரும்புகிறார். அவரது மகள்கள், மகன் பாச்சா உள்பட அனைவரும் அவரது வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து காரை எடுத்துக்கொண்டு அவரது இளைய மருமகன் ராமமூர்த்தி ஏர்ப்போர்ட் சென்று சாவி சாரை அழைத்து வந்தார்.

அன்றைய தினம்தான் வழக்கமாக நாங்கள் சாவி இதழ் வேலைகளைப் பூர்த்தி செய்யும் தினம். இரவு பத்து மணி இருக்கும்... சாவி சாரை அழைத்துக்கொண்டு கார் வீடு வந்து சேர்ந்தது.

சொன்னால் நம்பமாட்டீர்கள்... காரிலிருந்து இறங்கிய சாவி சார் வீட்டினுள் போகாமல் நேரே அலுவலக அறைக்கு வந்து, என் எதிரே உட்கார்ந்துவிட்டார்.

“என்ன ரவி, இஷ்யூ வேலைகள்லாம் நன்னாப் போயிண்டிருக்கா? இந்த வாரம் இஷ்யூவை முடிச்சுட்டியா? ரெடியான பக்கங்களையெல்லாம் கொடேன். பார்த்துட்டுத் தரேன்” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. விமானத்தில் அத்தனை தூரம் அலுப்பும் களைப்புமாக வந்த 70 வயதுப் பெரியவர், நேரே வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்காமல், தமது மனைவி, மகள்களைப் பார்த்துப் பேசாமல், அலுவலகம் வந்து சாவி இதழ் பக்கங்களைப் பார்க்கலாமா என்று கேட்கிறாரே என்று வியப்பாக இருந்தது.

முடித்து வைத்திருந்த பக்கங்களை எடுத்துக் கொடுத்தேன். ஒவ்வொரு மேட்டரையும் நிதானமாக, முழுதாகப் படித்தார். தேவைப்பட்ட இடங்களில் சின்னச் சின்ன திருத்தங்கள் செய்தார். “அவ்வளவுதானே? நான் கிளம்பலாமில்லையா?” என்று கேட்டுக்கொண்டு, எழுந்து போனார்.

“என்னய்யா இந்த மனுஷர்... நாமாக இருந்தா எப்படா போய்ப் படுக்கைல விழுவோம்னு பறப்போம்! இவர் என்னடான்னா, வந்ததும் வராததுமா ஆபீஸுக்கு வந்து மேட்டரைப் படிச்சுத் திருத்தம் வேற பண்ணிட்டுப் போறாரே?” என்று ஆர்ட்டிஸ்ட் மோகனிடம் என் வியப்பைப் பகிர்ந்துகொண்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என் வியப்பை இன்னும் பல ஆயிரம் மடங்கு கூட்டிவிட்டது.

“இதுக்கே சொல்றீங்களே... ஒரு தடவை அவருடைய மருமகன் அசோக் உடல்நிலை மோசமாகி, மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். நிறையப் பேர் ரத்தம் கொடுத்தார்கள். சாவி பத்திரிகையில் வேலை செய்யும் நாங்களும்கூடப் போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தோம். ஆனா, சிகிச்சை எதுவும் பலனளிக்காம மருமகன் இறந்துபோயிட்டார். தகவல் அறிந்து, பதறிப்போய் உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடினார் சாவி சார். அழுதுகொண்டிருந்த தன் மகளுக்கு ஆறுதல் சொன்னார்.

அன்று சாவி இதழை முடிக்கவேண்டிய நாள். நாங்கள் மும்முரமாக அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு முந்தைய ஃபாரங்களையெல்லாம் சாவி சார் பார்த்துத் திருத்திக் கொடுத்தார். லீடர் ஃபாரம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் மருத்துவமனையிலிருந்து தகவல் வந்து, உடனே புறப்பட்டுப் போனார். அவர் வருவதற்குள் நாங்கள் ஃபாரத்தை முடித்து, அச்சுக்குக் கொடுத்து அனுப்பிவிட்டோம்.

சாவி சார், தமது மருமகனின் உடலை வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாட்டையெல்லாம் செய்துவிட்டு, நேரே அலுவலகம் வந்தார். உதவியாசிரியர் கண்ணனின் எதிரே உட்கார்ந்துகொண்டு, “முடிச்சு வெச்சிருக்கிற ஃபாரத்தை எடுங்க” என்றார். அதிர்ந்து போனார் கண்ணன். தயங்கித் தயங்கி, “சார், நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சு எல்லாத்தையும் அச்சுக்கு அனுப்பிட்டோம்..!” என்றார். அப்போது சாவி சார் கேட்டாரே ஒரு கேள்வி - “ஏன்... நான்தான் செத்துப்போயிட்டேனோன்னு நினைச்சுட்டீங்களா?” திடுக்கிட்டுப் போன கண்ணன், “அதில்லை சார்! ஃபாரம் பாக்கிற மூட்ல இருக்க மாட்டீங்கன்னுதான்...” என்று மெதுவாகச் சொல்ல, “வீட்டுல ஒருத்தர் இறந்துட்டா, அம்மாவைக் கவனிக்க மாட்டீங்களா? அவ எக்கேடோ கெடட்டும்னு விட்டுடுவீங்களா?” என்று கோபமாகக் கேட்ட சாவி சார், அனுப்பிய பக்கங்களைத் திரும்ப வாங்கி வரச் சொல்லி, அவை வந்ததும் அனைத்தையும் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்து அனுப்பிவிட்டுப் பின்பு தமது மருமகனின் அந்திம கிரியைகளில் ஈடுபட்டார்” என்று மோகன் விவரித்தபோது, ‘இப்படியும் ஒரு மனுஷரா! பத்திரிகை மீது இத்தனை ஈடுபாடா!’ என்று வியந்து போனேன்.

ஒருமுறை, சாவி சாருக்குக் கொஞ்சம் தூரத்து உறவினரான ஓர் அம்மையார், ஒரு சிறுகதை எழுதி, அதை சாவி சாரிடமே பரிசீலனைக்குத் தந்திருந்தார். சாவியின் துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லாதபோதெல்லாம், சாவி சாருக்கு அவர் வீட்டிலிருந்துதான் கேரியரில் டிபன், சாப்பாடு எல்லாம் வரும். சாவியின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர் அவர்.

சாவி சார் அந்தக் கதையை என்னிடம் கொடுத்து, “படிச்சுப் பார்த்துட்டு நல்லா இருந்தா, சாவியில் போடு!” என்று கொடுத்தார்.

நான் அதைப் படித்துப் பார்த்தேன். சாவி பத்திரிகையில் வெளியிட்டால் 16 பக்கங்கள் வரும் அளவுக்குப் பெரிதாக, வளவளா, கொளகொளா என்றிருந்தது. பிரசுரிக்க இயலாத கதை அது. அதனால் அதை எடுத்துக் கிடப்பில் போட்டுவிட்டேன்.

சில வாரங்கள் கழித்து, சாவி சார் கூப்பிட்டு, அந்தக் கதை என்ன ஆயிற்று என்று கேட்டார். “கொஞ்சம் கூட நல்லாவே இல்லை சார்! திருப்பிக் கொடுத்துடலாம்” என்றேன். அவர் கொஞ்சம் தயக்கமான குரலில், “அப்படியா சொல்றே... எடிட் கிடிட் பண்ணி, அதை எப்படியாவது பப்ளிஷ் பண்ணமுடியுமா பாரேன்!” என்றார்.

“சரி” என்றேனே தவிர, அந்தக் கதையில் ஜீவனே இல்லை என்பது, அதை முதல் முறை படித்தபோதே எனக்குப் புரிந்துவிட்டது. எனவே, மீண்டும் அதை அப்படியே கிடப்பில் வைத்திருந்தேன்.

மேலும் இரண்டு வாரங்கள் சென்றதும் சாவி சார் கூப்பிட்டார். “என்னாச்சு ரவி அந்தக் கதை?” என்றார். “சார், கதை கொஞ்சம்கூட நல்லாவே இல்லை. அதை ஒண்ணுமே பண்ண முடியாது. வேணா உங்க கிட்டே கொண்டு வந்து தரேன். நீங்களே படிச்சுப் பாருங்க!” என்றேன்.

“வேண்டாம்... வேண்டாம். நீ சொன்னா சரிதான்! ஆனா...” என்று மீண்டும் தயங்கினார் சாவி. “நல்லா இல்லாத கதையை போடுன்னு நான் உங்கிட்டே சொல்றது பத்திரிகைக்கு நான் பண்ற துரோகம். ஆனா, அந்தம்மா போட்ட சாப்பாட்டை நான் பல தடவை சாப்பிட்டிருக்கேன். என் கஷ்ட காலங்களில் எல்லாம் ரொம்பவும் உதவி செஞ்ச குடும்பம் அது. வேணா எனக்காக ஒண்ணு பண்றியா? அந்தக் கதையை நல்லா எடிட் பண்ணி, ‘மோனா’ மாத நாவல்ல சேர்த்துப் பப்ளிஷ் பண்ணிடு. நான் அந்தம்மா கிட்டே எப்படியாவது சமாளிச்சுக்கறேன்” என்றார் கெஞ்சலாக.

அவர் சொன்னபடியே அந்தக் கதையை (தலைப்பெல்லாம் மறந்துவிட்டது. ஒரு பிராமணத் திருமண நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை அது என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது.) மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி, ‘மோனா’வில் துணைக் கதையாக வெளியிட்டேன்.

பிறகு சில நாட்கள் கழித்து, “அந்தம்மா இதுக்காக ரொம்பவும் வருத்தப்பட்டாங்க. என்னாலயும் எதுவும் சொல்ல முடியலை. ‘சின்ன பையன்; எதுல பப்ளிஷ் பண்ணா என்னன்னு பண்ணிட்டான்’ என்று பழியைத் தூக்கி உன்மேல போட்டுட்டேன். ‘அதில்லை மாமா! கதையை ரொம்பவே எடிட் பண்ணி, ஜீவனையே சிதைச்சுட்டார் உங்க சப்-எடிட்டர்! அவருக்கு எடிட் பண்ணவே தெரியலை. வேற யாராவது நல்ல ஆளா வேலைக்குப் போட்டுக்கக் கூடாதா நீங்க? ஏன் இப்படிப் பண்ணே, என்னான்னு அவர்ட்டே கண்டிச்சுக் கேளுங்கோ’ன்னாங்க. ‘சரி, சரி’ன்னுட்டு வந்துட்டேன். பாவம், எனக்காக நீ அவங்க கிட்டே திட்டு வாங்கிண்டே!” என்றார் சாவி.

பத்திரிகை உலக ஜாம்பவான் என்று பத்திரிகையாளர்கள் எல்லாராலும் போற்றப்படும் ஒரு மாமனிதர் என்னிடம் இப்படியெல்லாம் சொல்லியிருக்க வேண்டியதே இல்லை; ‘இந்தக் கதையைக் கச்சிதமா எடிட் பண்ணி, சாவி இதழ்ல இந்த வாரம் பப்ளிஷ் பண்ணிடுப்பா!’ என்றால் செய்துவிட்டுப் போகிறேன். அவர் இட்ட வேலையைச் செய்வதற்குத்தானே நான் இருக்கிறேன்!

ஆனால், அவர் அப்படிச் சொல்லவே இல்லை. அவருக்கு மிகவும் வேண்டியவரான ஒருவர் தந்த சிறுகதையை நான் சரியில்லை என்று மறுத்த பிறகு, அதை அவருக்குச் சொந்தமான பத்திரிகையில் பிரசுரிப்பதற்கும் அவர் தயங்கினார் என்றால், பத்திரிகைத் துறை மீது அவர் எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்று புரிகிறதல்லவா!
.

Wednesday, February 15, 2012

பொன்னியின் செல்வன் பரிசு யாருக்கு?

மன்னிக்கவேண்டுகிறேன்!

நான் என் வலைப்பூ வாசகர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் ஏதோ மிகக் கடினமான போட்டி வைத்திருப்பது போல நானே எண்ணிக்கொண்டு, முடிவு தேதியை இம்மாதம் 26-ம் தேதி வரை கொடுத்திருந்தேன். ஆனால், ‘காதலும் கலியாணமும்’ என்கிற அந்தக் கட்டுரையை எழுதியவர் யாரென்று சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டார்கள்.

எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. சரியான விடையை முதலில் எழுதியவர் யாரோ வயசானவர் அல்ல! இளைஞர்.

அந்தக் கட்டுரையை எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனந்த விகடன் 4.3.62 இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டுரை ‘சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

யதேச்சையாக இன்றுதான் எனது வலைப்பூ பக்கம் வந்தேன். பத்துப் பன்னிரண்டு பின்னூட்டமாவது வந்திருக்குமா என்று சந்தேகத்துடன் பார்த்தவன் திடுக்கிட்டுப் போனேன். மொத்தம் 100 பின்னூட்டங்கள் வந்திருந்தன. சரியான விடையைப் பலர் குறிப்பிட்டிருந்தாலும், முதலில் ‘ராஜாஜி’ என்று பின்னூட்டம் இட்டிருந்தவர் அதிஷா!

பாராட்டுகள் அதிஷா! எப்படி இத்தனைக் கச்சிதமாக யூகித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? அறிய ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களுக்கான ’பொன்னியின் செல்வன்’ புத்தகம் தயாராக உள்ளது. முகவரி அனுப்பி வைத்தால் தபாலில் உடனே அனுப்பி வைக்கிறேன். அல்லது, நீங்கள் சென்னைவாசி என்றால், நேரில் வந்தும் பெற்றுப் போகலாம்.

சரியான விடையை வாசகர்கள் யூகித்து எழுத கால அவகாசம் கொடுப்போமே என்றுதான் முடிவு தேதியைத் தள்ளி வைத்திருந்தேன். சரியான விடையை முதலாவதாக ஒருவர் பின்னூட்டம் இட்டுவிட்டார் என்றால், அதன்பின்னும் முடிவைச் சொல்லாமல், யார் யார் இன்னும் என்னென்ன பெயர்களைப் பின்னூட்டம் இடுகிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது அராஜகம்! எனவேதான் உடனே முடிவை அறிவித்துவிட்டேன்.

வாழ்க அதிஷா வினோ! வாழ்க இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்!
.

Sunday, February 12, 2012

பரிசு: பொன்னியின் செல்வன் - 5 பாகங்கள்!







‘காதலர்தின’த்தை முன்னிட்டு இங்கே ஒரு சிறப்புக் கட்டுரையைப் பதிந்துள்ளேன். இதை எழுதியது நான் இல்லை. ஒரு முக்கியப் பிரமுகர் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை இது. இதை முழுக்கப் படியுங்கள். இந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்பதைச் சரியாக யூகித்து முதலில் பின்னூட்டம் இடும் வாசகருக்கு ரூ.1350 மதிப்புள்ள, அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ (ஐந்து பாகங்கள்) விகடன் பிரசுரம் புத்தகம் பரிசு!


காதலும் கல்யாணமும்!

“வழுக்கைத் தலை; இருக்கும் நாலைந்து மயிரும் வெளுப்பு. உமக்கென்ன தெரியும் காதலைப் பற்றி? தயவுசெய்து வேறு விஷயம் பேசும். பழைய அனுபவம் பேசப் போகிறீரா? போதும், போதும். நிறுத்தும்! 25 வருஷங்களுக்கு முன் நடந்த சங்கதிகள் என்ன நினைவு இருக்கப் போகிறது? நீர் அக்காலத்தில் காதல் என்ன கண்டீர்? கர்னாடகத்தில் மூழ்கின நாட்கள். உம்மைக் கேட்டு நான் கற்றுக் கொள்ளவா?”

இவ்வாறெல்லாம் வாசகர்கள், அதிலும் பட்டணக்கரை வாலிபர்களும் யுவதிகளும் கேட்டுச் சிரிப்பது என் காதில் படுகிறது. பிறர் நினைப்பதையெல்லாம் என் காதில் சொல்லும் ஒரு யந்திரம் என்னிடம் உண்டு. அதனால் எனக்குக் கஷ்டமேயொழிய சௌகரியம் ஒன்றுமில்லை. ஆகையால்தான் பிறர் போல் பிரசங்கங்கள் செய்யவும் கட்டுரைகள் எழுதவும் முடியவில்லை. எவ்வாறாயினும் இன்று விவாகம், காதல் இவ்விஷயங்களைக் குறித்து எழுதுவதென்று தீர்மானம்.

காதல் என்பது கடினமான விஷயம். ஆனால், விவாகம் என்பதைப் பற்றியாவது யுவர்களுடன் சில பேச்சுக்கள் பேசலாம் என்று உத்தேசம். டிக்கெட்டு வாங்கித்தான் ரயில் ஏறவேண்டும். கூட்டத்தில் புகுந்து ரயிலில் ஏறவோ, ஜன்னலில் டிக்கெட்டு வாங்கவோ என்னால் முடியாது. ஆயினும், இந்த ஊருக்கு இந்த ரயில் ஏற வேண்டும், வண்டியில் ஏறின பின்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றி நான் கொஞ்சம் சொல்லலாம் அல்லவா?

காதலின் கஷ்டம்!

ஆராய்ந்து பார்த்தால், நம் நாட்டில் சரியான காதலுக்கு விளை பூமி இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. ஏனெனில், இந்நாளிலும்கூட தினசரி வாழ்வில் இங்கே ஆண் பெண் தாராளமாகக் கலந்து பழகுவது கிடையாது. என்ன சமாதானம் சொன்னபோதிலும் இது உண்மை உண்மையே! இது நல்லதா, கெடுதலா என்பது வேறு பிரச்னை.

இரண்டாவதாக, நம்முடைய சமூகத்தில் பிறந்த பெண்களுக்கெல்லாம் விவாகம் செய்து தீரவேண்டும். காதல் எனும் நிபந்தனை வைத்துக்கொண்டால் இது முடியாத காரியமாகும். இது பெண்ணைப் பெற்றவர்களுக்கு எளிதில் விளங்கும்.

மூன்றாவதாக, - இது எல்லா நாடுகளுக்கும் பொது - காதல் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டிய மனோநிலை. ஒருவன் ஒருத்தி பேரில் காதல் கொள்ளலாம். அதற்கு ஏற்றாப்போல் அவளுக்கு அவன் பால் காதல் உண்டாவதில்லை. காதலைத் தூண்டும் உருவமும், குணங்களும், செயல்களும் ஒருத்தி அல்லது ஒருவன் படைத்திருப்பின், இந்தப் பைத்தியக்காரப் போட்டி உலகத்தில் பல பேர் அந்த ஒருத்தியையோ அல்லது ஒருவனையோ காதலிக்க முற்படுகிறார்கள். இதற்கு என்ன செய்வது? காமதேவன் நம்முடைய சௌகரியங்களை உத்தேசித்து ஆண், பெண்களைத் தனித்தனி ஜோடிகளாகப் பிரித்துத் தன் பாணங்களை எறிவதில்லை. எல்லாரும் காதல் மணம்தான் செய்ய வேண்டும் என்ற நியதி ஏற்படுத்திக் கொண்டோமானால், பெருங் கலகங்களுக்குத்தான் காரணமாகும். பல பேர் விவாகம் இல்லாமலேயே இருக்க நேரும். ஆகையால், காதல் நிபந்தனை முடியாத காரியம் என்பது விளங்கும்.

மின்னலும் மழையும்!

இதனால், காதல் என்பது ஒரு கனவு என்றல்ல; வாழ்க்கையில் நிறைவேறவே முடியாதது என்றல்ல. காதல் என்பது ஓர் உண்மையான வேகம்; சந்தேகம் இல்லை. சில சமயம் இரு புறமும் காதல் உண்டாகி, விவாகமும் முடிவு பெறுகிறது. மின்னலைக் காண்கிறோம்; அது உண்மையான வேகம். அழகான காட்சி! ஆயினும், மின்னல் மின்னினால்தான் மழை என்ற நியதி கிடையாது. மின்னல் தானாக உண்டாகும். உண்டானால் அழகுதான். ஆனால், மின்னல் இருப்பினும் இல்லையாயினும் மேகங்கள் கூடி மழை பெய்கின்றன. பெய்வதால்தான் வாழ்வு!

விவாகம் செய்துகொண்ட தம்பதிகள் ஒருவரை ஒருவர் மதிக்கவும், நேசிக்கவும், கூட்டாளிகளாக வாழ்க்கை நடத்தவும் பயில வேண்டும். காதல் இல்லை; தாய், தகப்பனார் செய்வித்த மணம்; இது உப்பில்லாச் சோறு என்று ஏங்கி, ஊக்கமில்லாத வாழ்க்கையாகச் செய்துகொள்ள வேண்டாம். பிற நாடுகளில் எவ்வளவோ காதலைக் கதைகளில் படிக்கிறோம்; சினிமாக்களில் பார்க்கிறோம். அதுவல்லவோ உண்மையான வாழ்வு என்று ஏக்கம் அடைந்து ஏமாற வேண்டாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நம் நாட்டிலும் ஆண் பெண் கூடி உயர்வும், அழகும் பொருந்திய வாழ்வு நடத்தலாம்.

வியக்கத்தக்க தைரியம்!

வாலிபனே, உனக்கு ஓர் இளம் மனைவி வீட்டுக்கு வந்திருக்கிறாளா? நீ எப்போதாவது ஆழ்ந்து சிந்தித்ததுண்டா? சிறு வயதில் பெண் தன் தாய், தகப்பனை விட்டுவிட்டுப் புதிய ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு தைரியமாக, எவ்வளவு சந்தோஷமாக வருகிறாள்! அவள் எதை நம்பி, யாரை நம்பி, இவ்வளவு தைரியமும் சந்தோஷமும் முக மலர்ச்சியும் கொண்டிருக்கிறாள்? மணம் புரிந்த ஒவ்வொரு வாலிபனும் இதைத் தனக்குள் யோசித்து வியப்புற வேண்டும். இதைப் போன்ற தைரியத்தையும் திட புத்தியையும் ஆண்களில் யாராவது காட்டியிருக்கிறீர்களா? காட்ட முடியுமா? இவ்வாறு இளம் மனைவியின் ஆத்ம சக்தியையும் தைரியத்தையும் கண்ட பிறகு, அவள்பால் செய்ய வேண்டிய தன் கடமையை ஒவ்வொரு வாலிபனும் உணர்வான். தன் உடல் இன்பத்திற்காக அடைந்த ஒரு கருவியாக அவளை நினைக்க மாட்டான். தன்னை நேசித்த ஒரு நல்ல சிநேகிதியிடம் நடந்துகொள்வது போல் மனைவியிடம் கவனிப்பும் மதிப்பும் சிரத்தையும் காட்டி நடந்து கொள்வான். தான் இட்டதே சட்டமாக வைக்க மாட்டான். தான் எஜமானன், அவள் தொண்டு செய்பவள் என்று எண்ண மாட்டான்.

தோழமைப் பயிற்சி!

கேவலம், உடல் இன்பத்தை லட்சியமாக எண்ணக் கூடாது. இதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், மறந்து விடுகிறார்கள். இந்த உடல் மகிழ்ச்சியைத் தம்பதிகள் ஜாக்கிரதையாக ஆண்டு, அது தமக்குள் நட்பு வளர்க்கக் கடவுளால் படைக்கப்பட்ட ஓர் அருமையான கருவி என்று அறிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆனால், சேர்ந்து வாழ்வதன் பயனே அதுதான் என்று கருதுதல் கூடாது. அது நட்பை வளர்த்து, ஒற்றுமையைப் பூரணமாக்க ஓர் அற்புதமான சக்தி. அது அறிவில்லாதாருக்கும், அறிவு படைத்தோருக்கும் உதவும் ஒரு மேன்மையான கருவி; சாதனம்! அதை மறந்து, அதுவே இன்பம் என்று எண்ணிவிடக் கூடாது.

எவ்வளவோ காலத்திற்கு முன் நமது திருவள்ளுவர், மனைவிக்கு ‘வாழ்க்கைத் துணை’ என்ற அரும் பெயரிட்டு எழுதினார். புருஷனும் மனைவியும் தோழமை பயில வேண்டும். எந்த விஷயத்தையும் இருவரும் கலந்து பேசி முடிக்க வேண்டும். வீட்டு விஷயங்களில் மனைவியின் இஷ்டப்படி விட்டுவிடுதல், உலக விவகாரங்களில் புருஷன் இஷ்டப்படி நடத்தல் என்றெல்லாம் பங்கு போட்டுக் கொள்ள வேண்டாம்.

காதல் ஜுரமன்று; விவாகம் மருந்தன்று!

காதல் கண்டு கூடிய தம்பதிகளானால் மிகவும் நல்லது; கடவுள் படைத்த இருவர், ‘நாம் சேர்ந்து இல்லற வாழ்க்கை நடத்துவோம்’ என்று, காதலின் வேகமின்றி சாதாரணமாய்க் கூடினவர்கள் ஆனாலும் சரி, அவ்வாறு வாழ்ந்து உலகத்தில் அன்பு எனும் செல்வத்தைப் பெருக்கலாம். காதல் என்பது ஜுரமாகவும், விவாகம் என்பது அதற்கு ஒரு மருந்தாகவும் எண்ணக் கூடாது. இது சுத்த மோசம். காதல் என்பது பூவின் மணம் போல் ஓர் இயற்கைச் சக்தி! ஆறாத சக்தி. சில சமயம் அது தானாகப் பொங்கும். இல்லாவிடில் மின்சார சக்தியைப் போல் நாமே உண்டாக்கிக் கொள்ளலாம்.

காதலும் காத்தலும்!

காதலை முதலிலே காண்பது பெரிதல்ல; கண்டோம் என்று நினைத்தனவெல்லாம் உண்மைக் காதல் அல்ல! தேகத்தில் உள்ள பூதத் தொகுதிகள் தங்கள் அன்னகோச வேகத்தை எல்லாம் உயர்ந்த காதலாகக் காட்டிக் கொள்ளும். பகுத்தறிவுடன் பொய்யைத் தள்ளி, உண்மைக் காதலை ஒருவன் கண்டறிந்தாலும், விரும்பினவளிடம் அதற்கொத்த காதல் உண்டாகாமல் இருப்பதையும் காண்கிறோம். இரு பக்கமும் இயல்பாகவும், பலாத்காரம் அற்றதாகவும் காதல் உண்டானால் அல்லவோ, வாழ்வுக்கு அது தாங்கு மேடையாகும்? இந்தப் பெரும் பேறு அனைவரும் பெறுதல் அரிது! ஆனால், தன் பாய்ச்சல் இல்லாத வயல்களை எல்லாம் தண்ணீர் ஓடவில்லை என்று விட்டுவிட முடியுமா? கிணறு வெட்டியோ, வானத்தை வேண்டியோ சாகுபடி செய்கிறோம். இவ்வாறு உழுது பயிர் செய்து, இனிய காய் கனி கிழங்குகளும், மணமும் அழகும் கொண்ட பூக்களும் உண்டாக்கலாம். கண்ட காதலைக் காத்தலும், சர்வ வியாபகமாய் மறைந்து கிடக்கும் அவ்வியக்கத்தக்க காதல் செல்வத்தை வெளிப்படுத்தி வளர்த்து மனைவியை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளப் பயில்வதும்தான் யுவனுடைய தருமம். காதல் என்பது சாதல். நான் என்பது சாக வேண்டும். ‘காதல் இன்றேல் சாதல்’ என்று பாரதியார் குயில் பாடிற்று.

காதல் யுத்தம்!

விவாகத்துடன் காரியம் முடிந்தது என்று எண்ணுவது அறியாமை. மணம் செய்த பின்புதான் குருக்ஷேத்திரம். வாழ்க்கை முழுதும் ஒரு யுத்த களம். மனத் தூய்மைக்குப் பல சோதனைகள் நேரிடும். கொண்ட மனைவியைத் தாழ்த்தும் பல எண்ணங்களும் தோன்றும். அவைகளைக் கவசம் பூண்டு அருச்சுனனைப் போல் வில்லெடுத்து வெல்ல வேண்டும். காதல் மணம் ஆயினும் சரி, வழக்க மணம் ஆயினும் சரி, யுத்தம் பின்னால்தான். அதில் வென்றாலொழிய வெற்றி இல்லை; சுகமும் இல்லை.

உண்மையில், பூதத் தொகுதிகள் அனைத்தும் ஒன்று. அதில் ஆண் முழுதும் ஒன்று; பெண் முழுதும் ஒன்று. அனைத்தும் ஒன்றுபட்டுஅத்வைதமாக இடைவிடாமல் பொங்குகிறது. அதுவே காதல் சக்தி. ஆனால், இந்தச் சக்திக்கு வரம்பு மீறி இடம் கொடுத்தோமானால், அனைத்தும் ஒன்றாக வெந்து சாம்பலாகும். அவ்வளவு நெருப்பைத் தாங்க மாட்டோம். தனி அடுப்பும் விளக்கும்தான் வாழ்க்கை. ஆகையால், அடுப்பை மூட்டி, விளக்கை ஏற்றிக் காத்து வாழ்வோமாக!

*****

என்ன, படித்துவிட்டீர்களா? இதை எழுதிய கட்டுரையாசிரியர் யார் என்பதை யூகித்து, உடனே பின்னூட்டம் இடுங்கள். சரியான விடையை முதலில் பின்னூட்டம் இடுபவருக்குப் பரிசு! இது கொஞ்சம் கஷ்டமான போட்டி என்று நான் நினைப்பதால், உங்கள் விடைகள் வந்து சேர வேண்டிய முடிவு தேதியை இம்மாதம் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை என நிர்ணயித்திருக்கிறேன்.

ஒருவரே எத்தனைப் பெயர்களை வேண்டுமானாலும் யூகித்துப் பின்னூட்டங்கள் இடலாம். ஆனால், ஒரு பின்னூட்டத்தில் ஒரே ஒரு பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்கும் பின்னூட்டங்கள் (அவற்றில் சரியான விடையும் இருந்தபோதிலும்) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

இந்த ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவில், குறிப்பிட்ட இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் மட்டும்தான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’க்கோ அல்லது இதே வலைப்பூவில் தவறுதலாக வேறு ஒரு பதிவுக்கோ அனுப்பப்படும் விடைகளும், எனது ஃபேஸ்புக், டிவிட்டர், ஈமெயில் போன்றவற்றுக்கு அனுப்பப்படும் விடைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

தொழில்நுட்பக் கோளாறு, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உங்கள் பின்னூட்டங்கள் ஒருவேளை எனக்குக் கிடைக்காமல் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல!

இந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விடையும், போட்டி முடிவும் இம்மாதம் 27-ம் தேதி இதே வலைப்பூவில் பதிவேற்றப்படும்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு, வெற்றியும் பெற்ற ஒரு சிலர், பின்பு அது பற்றி மறந்து போனதன் காரணமாகவோ, அல்லது தனக்கு எங்கே பரிசு கிடைக்கப் போகிறது என்கிற எண்ணத்தினாலோ தங்கள் முகவரியைப் பல நேரங்களில் எனக்கு அனுப்புவதில்லை. வெற்றி பெற்ற வாசகருக்கு உரிய புத்தகத்தை அனுப்பி வைக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.

எனவே, அவசியம் இம்மாதம் பிப்ரவரி 27-ம் தேதியன்று இதே வலைப்பூவில் போட்டி முடிவைப் பாருங்கள். இந்திய முகவரிக்கு மட்டுமே புத்தகப் பரிசை அனுப்பி வைக்க இயலும். நீங்கள்தான் வெற்றியாளர் என்றால், உடனே உங்கள் முழு இந்திய முகவரியை (பின்கோடு எண்ணுடன்) என் nraviprakash@gmail.com இ-மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் முகவரியை அனுப்பக் கடைசி தேதி மார்ச் 15. அதற்குள் உங்கள் முகவரி எனக்குக் கிடைத்தால் மட்டுமே புத்தகப் பரிசை அனுப்பி வைக்க இயலும். மார்ச் 15-க்குப் பின்பு உங்கள் முகவரியை அனுப்பிப் பயனில்லை.
.