உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, January 17, 2012

டி.எம்.எஸ்... ஆணவம் அல்ல... ஆவணம்!

சில மாதங்களுக்கு முன்னால் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர், பாட்டுக்கொரு தலைவன் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களைச் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை ‘கோல்டன் பீச்’சில் ஏற்பாடு செய்திருந்தார் என் நண்பரும் இயக்குநருமான திரு.விஜய்ராஜ். திரு. டி.எம்.எஸ் அவர்களோடு உரையாடிய கல்லூரி இளைஞர்களில் என் மகள் ஷைலஜாவும் ஒருத்தி.

அன்றைய சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் ஒரு டிவிடி-யில் பதிந்து கொடுத்திருந்தார் விஜய்ராஜ். அதிலிருந்து சில புகைப்படங்களை என் முகப் புத்தகத்தில் பதியலாம் என்று சிடி கன்டெய்னரில் தேடியபோது, அதைக் காணவில்லை. வீடு முழுக்கத் தேடிப் பார்த்தேன். ம்ஹூம்... கிடைக்கவே இல்லை. அது காணாமல் போனதில், காணும் பொங்கலன்று நான் மூட் அவுட்!

அன்றைய சந்திப்பைத் தொடர்ந்து, ஆனந்த விகடனின் சென்னை இணைப்பான ‘என் விகடன்’ இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தாள் என் மகள். அதை இங்கே வெளியிட்டு, என் மனத்தைக் கொஞ்சம் ஆற்றிக் கொள்கிறேன்.

பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றை 'இமயத்துடன்...’ என்ற தொலைக்காட்சித் தொடராக இயக்கிவரும் இயக்குநர் விஜய்ராஜையும் டி.எம்.எஸ்ஸையும் லயோலா கல்லூரி மாணவர்கள் சிலருடன் கடந்த வாரம் கோல்டன் பீச்சில் சந்தித்தேன். திரையுலகில் கால் பதிக்க சந்தித்த சவால்கள், காதல் தோல்வி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களுடனான அனுபவங்கள், இந்த வயதிலும் ரஜினிக்காக .ஆர்.ரஹ்மான் இசையில் பாட இருப்பது எனப் பல விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டார் டி.எம்.எஸ்.

''2001-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படப் பதிவு 10 ஆண்டு காலத்துக்குப் பிறகு, இந்த மாதம் செப்டம்பர் 18-ம் தேதி பூர்த்தியானது. என் 10 ஆண்டுகாலத் தவம் இன்றோடு முடிந்தது!'' - மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் பேசுகிறார் விஜய்ராஜ். ''பணப் பிரச்னை; பொருத்தமான பாடல் காட்சிகள் கிடைக்காமல் மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்தேன். தானாக வந்த பல திரைப்பட, சீரியல் வாய்ப்புகளை இழந்தேன். உறுதுணையாக இருந்த என் தாயார் மீனாட்சி, ஊக்கம் கொடுத்த பெரியம்மா இருவரையும் இழந்தேன். 'வேண்டாத வெட்டி வேலைஎன்று நண்பர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளானேன்'' என விஜய்ராஜ் விவரிக்க விவரிக்க... அவரின் கஷ்டங்கள் புரிந்தன.

''நான் 90-களில் தமிழக அரசின் செய்திப் பிரிவில் பணியாற்றி னேன். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேரு ஸ்டேடியம் திறக்கப்பட்டபோது, அவருக்கு அருகில் நான் மேடையில் இருந் தேன். அப்போது ஸ்பீக்கர்கள் நாலா பக்கமும் டி.எம்.எஸ். பாடல்களை முழங்கிக்கொண்டு இருந்தன. ஆனால், விழாவுக்கு வந்த டி.எம்.எஸ்-ஸை உள்ளே விட மறுத்தனர் காவல் துறையினர். இதை மேடையில் இருந்து பார்த்த நான், பி.ஆர்.. ஒருவரை அனுப்பி அவரை உள்ளே அழைத்துவந்தேன். எனினும், ஒரு மாபெரும் கலைஞனுக்கு உரிய மரியாதை தரப்படாததும், அவரை பத்தோடு பதினொன்றாக நடத்தியதும் என் மனதைப் புண்படுத்தியது. கேரளாவில் யேசுதாஸை எப்படிக் கொண்டாடுகிறார்கள்? இங்கே மட்டும் அபிமானப் பாடகருக்கு ஏன் இந்த அவமதிப்பு?'' என்று குமுறுகிற விஜய்ராஜுக்கு அப்போதுதான் வேறு எந்தப் பாடகருக்கும் யாரும் செய்திராத வகையில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக, கலகலப்பான, அனைவரும் ரசிக்கும் வகையில் பொருத்தமான பாடல் காட்சிகளோடு தொகுக்க வேண்டும் என்ற உறுதி உண்டானதாம்.

கலைஞர், சரோஜாதேவி, வாலி, வைரமுத்து, ரஜினி, கமல், சோ, வடிவேலு, இளையராஜா, எம்.எஸ்.வி., .ஆர்.ரஹ்மான், லதா மங்கேஷ்கர் என ஒருவர் விடாமல் அனைவருடனும் டி.எம்.எஸ்ஸைச் சந்திக்கவைத்து, உரையாடச் செய்து, பதிவுசெய்திருக்கிறார். கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என பழைய ஸ்டுடியோ இருந்த இடங்களுக்கு டி.எம்.எஸ்ஸை அழைத்துச் சென்று, பழைய நினைவு களை அசைபோடச் செய்திருக்கிறார்.

''அந்தக் காலத்தில் டி.எம்.எஸ். என்றால் சிறந்த பாடகர் என்பதைத் தாண்டி, இளையராஜா, டி.ஆரோடு மல்லுக்கட்டியவர், கோபக்காரர் என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் பதியவைத்துவிட்டன. ஆனால், அந்த மாயக் கருத்தை உடைத்தெறிந்து, டி.எம்.எஸ்ஸின் குழந்தை மனத்தையும், இளையராஜாவும் டி.ஆரும் இவர் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் மக்களுக்கு உணர்த்தும்'' என்கிறார் விஜய்ராஜ்.

''டி.எம்.எஸ். ஆணவம் என்பதை மாற்றி, அவரை ஆவணமாகப் பதிவுசெய்ய முடிந்ததை என் வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்'' - விஜய்ராஜ் சொன்னபோது, அவரின் 10 ஆண்டுக் கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டதை உணர முடிந்தது!

- ஆர்.ஷைலஜா

.