எனது பொன்மொழிகள் புத்தகத்துக்கு ஒரு பெயர் வைக்கச் சொல்லி நான் வைத்த முதல் போட்டியின் முடிவுக்கான பதிவில்தான் அதுபோல் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், 15 என்ற எண்ணிக்கையையெல்லாம் தாண்டி, 300 புத்தகங்களாவது பரிசளித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
சமீபத்தில், என் வலைப்பூ வாசகர் திரு.கணேஷ்ராஜா, நான் போட்டி வைத்துப் புத்தகம் பரிசளித்து வெகு காலமாகிவிட்டது என்று ஞாபகமூட்டியிருந்தார். அவரது பின்னூட்டத்திற்கான என் பதிலில், “இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிக்கிறேன். நான் பரிசளிக்கப்போகிற அந்தப் புத்தகம் மிக அற்புதமான புத்தகம். விலை மதிப்பற்றது. விறுவிறுவெனத் தயாராகி வருகிறது. ஜனவரியில் விற்பனைக்கு வரும். மற்ற விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன். முடிந்தால், நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று யூகித்து, என் வலைப்பூ நேயர்கள் எனக்குப் பின்னூட்டங்கள் அனுப்பலாம். சரியாக யூகித்து எழுதும் முதல் ஐந்து பேருக்கு வேறு ஒரு குட்டிப் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்” என்று கிளைப் போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தேன்.
அதற்கு சொக்கன், கிருஷ்குமார், எஸ்.ராஜேஸ்வரி, கணேஷ்ராஜா ஆகிய நாலு பேர் மட்டுமே சரியான விடை அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு தலா ஒரு பாக்கெட் சைஸ் விகடன் பிரசுர புத்தகம் (குறைந்தபட்சம் ரூ.50 விலையுள்ளது) விரைவில் பரிசாக அனுப்பி வைக்கப்படும். நால்வரும் தயவுசெய்து தங்கள் முகவரிகளை எனக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
விறுவிறுவெனத் தயாராகி வரும் ஆனந்த விகடன் காலப் பெட்டகம் (1926 முதல் 2000 வரையிலான விகடன் சரித்திரம்) புத்தகம்தான் நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்பதே சரியான விடை.
தொகுப்பாசிரியர் என்கிற முறையில் அந்தப் புத்தகத்திற்கான முன்னுரையை இன்று எழுதிக் கொடுத்தேன். விகடன் பிரசுரத்தாரால் அதில் ஒருக்கால் சின்னச் சின்ன வாக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி, நான் எழுதிய அந்த முன்னுரையை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
“அதெல்லாம் சரி, போட்டி என்ன ஆயிற்று?” என்று கேட்கிறீர்களா? அது இந்தப் பதிவின் கடைசியில்.
படித்தேன்... சிலிர்த்தேன்... மலைத்தேன்... தொகுத்தேன்..!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் நானாகவே இல்லை. காந்திஜியுடன் யாத்திரை போனேன்; காமராஜருடன் அளவளாவினேன்; இந்திரா காந்தியின் இல்லத்தில் தங்கினேன்; காஞ்சிப் பெரியவரின் அருளாசி பெற்றேன்; தந்தை பெரியாரின் அன்புக்குப் பாத்திரமானேன்; பழம்பெரும் இலக்கியவாதிகளைச் சந்தித்தேன்; தியாகராஜ பாகவதருடனும், கே.பி.சுந்தராம்பாளுடனும் உரையாடினேன்; எம்.ஜி.ஆருடன் உணவருந்தினேன்; சிவாஜியின் கை பிடித்து நடந்தேன்; டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவித்திரி, சரோஜாதேவி எனத் திறமை மிக்க சினிமா தாரகைகள் அத்தனை பேருடனும் கலந்துரையாடினேன்...
''இரு, இரு... ஏதாவது கனவு கினவு கண்டாயா?'' என்கிறீர்களா? இல்லை சுவாமி! அத்தனையும் உண்மை!
கால யந்திரம், கால யந்திரம் என்கிறார்களே, அதெல்லாம் அதீத விஞ்ஞானக் கற்பனை என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கிவிட்டது ஆனந்த விகடன்.
'பழைய விகடன் இதழ்களைப் படித்து, அவற்றிலிருந்து இன்றைய இளைய தலைமுறைக்கும் பயன்படக்கூடிய, சுவாரஸ்யமான விஷயங்களை வாராவாரம் தொகுத்துத் தரவேண்டும்' என்கிற, கரும்பு தின்னும் பணி என்னைத் தேடி வந்தது, நான் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.
2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆனந்த(விகட)ப் பெருங்கடலுக்குள் என் பயணத்தைத் துவக்கினேன். உள்ளே செல்லச் செல்ல, நான் என்னை மறந்தேன்; தன்னை இழந்தேன். எந்த ஆண்டுப் புத்தகங்களைப் புரட்டுகிறேனோ, அந்த ஆண்டில் வாழும் நபராகவே மாறிப்போனேன். மெய்யாகவே கால யந்திரத்தில் பயணம் செய்தேன். ஆரம்பப் பாராவில் சொன்ன அத்தனையும் நான் அனுபவித்த உண்மை!
ஆனந்த விகடன் எனும் அமுதக் கடலுக்குள்தான் எத்தனையெத்தனை ஆச்சரியங்கள்... அற்புதங்கள்..! அங்கே கொட்டிக் கிடக்கும் முத்துப் பரல்களையும், வைரக் கற்களையும், நவரத்தின மாலைகளையும் கண்டு விக்கித்துப் போனேன்; பிரமித்து நின்றேன். இத்தனை வைர வைடூரியங்களில் எதையென்று வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று குழம்பினேன். ஒன்றைப் புரட்டும்போது, 'அடடா! இதை இந்த வாரமே கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்' என்று தோன்றும். இன்னொன்றைப் புரட்டும்போது, 'இதையும் இப்போதே கொடுத்துவிடலாம்' என்று நினைப்பேன்.
தருமர், கர்ணன் இருவரில் யார் பெரிய வள்ளல் என்று ஒரு கேள்வி வந்ததாம். இருவரிடமும் தங்கக் காசுகள் அடங்கிய ஒரு குடத்தைக் கொடுத்து, 'இதை யார் சீக்கிரம் தானம் செய்கிறீர்கள், பார்ப்போம்' என்று ஒரு போட்டி வைத்தாராம் கிருஷ்ண பகவான். தருமர் அந்தக் குடத்தை எடுத்துக்கொண்டு போய், ஆளுக்கொரு தங்கக் காசாக விநியோகம் செய்தார். கர்ணனோ வறியவர் ஒருவரை அழைத்து, 'இந்தா, வைத்துக் கொள்!' என்று அந்தக் குடத்தையே தூக்கிக் கொடுத்துவிட்டாராம்.
ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கப் படிக்க, அந்தக் கர்ணனாக நான் ஆகிவிடக் கூடாதா என்கிற பேராசை எழுந்தது.
அதன் விளைவாக... 30-களில், 80-களில், 50-களில், 90-களில் என அங்கொன்றும் இங்கொன்றுமாக விகடனின் வைர மணிகளைப் பொறுக்கியெடுத்து, ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற மாலையாகத் தொடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த நான், பிறகு ஆனந்த விகடனின் முதல் இதழில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டு இதழ்களிலும் உள்ள ரத்தினக் குவியலிலிருந்து கொஞ்சத்தை எடுத்து, 'பொக்கிஷம்' பகுதிக்குள்ளேயே 'காலப் பெட்டகம்' என்னும் தனிப் பகுதியாகத் தொகுத்துக் கொடுத்தேன்.
ஆறு குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் ஒன்று சேர்த்து ஆறுமுகப் பெருமானாக அவதரிக்கச் செய்ததுபோல், தனித் தனித் தொகுப்புகளாகப் பிரிந்து கிடந்த விகடன் காலப் பெட்டகத்தை ஒன்று சேர்த்து 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்' என்னும் முழுப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள் விகடன் பிரசுரத்தார்.
1926 முதல் 2000 வரையிலான ஆனந்த விகடனின் பரிணாம வளர்ச்சியை மட்டும் காட்டுகிற தொகுப்பல்ல இது. நாட்டின் அரசியல் மாற்றங்கள், சமூகச் சூழல்கள், மக்களின் மனோபாவங்கள், கலை- இலக்கிய வளர்ச்சிகள் என 75 ஆண்டுக் கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற கண்ணாடியும்கூட!
நான் பயணித்த விகடன் கால யந்திரத்தில் ஏறி, நீங்களும் ஒரு சுற்று வாருங்கள்; அதன் த்ரில்லை உணர்வீர்கள்!
மிக்க அன்புடன்,
ரவிபிரகாஷ்.
*****
இனி, போட்டி!
வரிசையாக ஐந்து வீடுகள் உங்களுக்கு நேர் எதிரே இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நிறம். அந்த ஐந்து வீடுகளிலும், ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாநிலத்தார் வசிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசைக் கருவியை வாசிப்பதில் நிபுணர்கள். ஒவ்வொருவரும் காலையில் அருந்தும் பானம் வெவ்வேறு. அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பிராணியை வளர்க்கிறார்கள்.
இனி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கவனமாகப் பாருங்கள்.
1. தமிழர் சிவப்பு நிற வீட்டில் வசிக்கிறார்.
2. வட இந்தியர் நாய் வளர்க்கிறார்.
3. பச்சை நிற வீட்டில் வசிப்பவர் காலையில் அருந்துவது காபி.
4. கேரளத்துக்காரர் காலையில் டீ அருந்துவார்.
5. வெள்ளை நிற வீட்டுக்கு அருகில் வலப் பக்கத்தில் (அதாவது, உங்கள் பார்வையில் வலப் பக்கம்) உள்ள வீட்டின் நிறம் பச்சை.
6. வயலின் வாசிப்பவர் ஆடு வளர்க்கிறார்.
7. வீணை வாசிப்பவரின் வீட்டு நிறம் மஞ்சள்.
8. நடு வீட்டில் வசிப்பவர் பால் அருந்துகிறார்.
9. பூனை வளர்க்கப்படும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் மிருதங்கம் வாசிப்பார்.
10. உங்கள் பார்வையில், இடப்பக்கம் உள்ள முதல் வீட்டில் வசிப்பவர் ஆந்திரர்.
11. குதிரை வளர்க்கப்படும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் வீணை வாசிப்பார்.
12. கடம் வாசிப்பவர் பழரசம் அருந்துவார்.
13. கன்னடக்காரருக்கு கஞ்சிரா வாசிக்கத் தெரியும்.
14. ஆந்திரர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டின் நிறம் நீலம்.
எனில், இளநீர் அருந்துபவர் யார்? மாடு வளர்ப்பவர் யார்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் எழுதும் முதல் நபருக்கு, ஆனந்த விகடன் காலப் பெட்டகம் புத்தகம் தயாரானதும் (சுமார் 350 பக்கம் வரையில் வரக்கூடிய அந்தப் புத்தகத்தின் விலை ஏறத்தாழ ரூ.150 இருக்கலாம்), அதில் ஒரு பிரதியை என் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.
ஜனவரி புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பொருட்டு, மேற்படி புத்தகம் அதி விரைவாகத் தயாராகி வருகிறது.
எனவே, ஜனவரி 15-க்குள் வந்து சேரும் விடைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
வாழ்த்துக்கள்!
.