உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 22, 2009

குயிலை சந்தித்தது சிங்கம்!

ரு குயிலும் சிங்கமும் சந்தித்து உரையாடிய அபூர்வ நிகழ்ச்சி அது. குயில் - இந்தி() இசைக் குயில் லதா மங்கேஷ்கர். சிங்கம் - நமது ஏழிசை மன்னர் டி.எம்.சௌந்தர்ராஜன்.

டி.எம்.எஸ்-ஸின் தீவிர ரசிகரான விஜயராஜுக்கு, அவரது வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆர்வம். அந்த ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது, அவர் நேரடியாகப் பார்த்து வருந்திய ஒரு காட்சி.

நேரு ஸ்டேடியம் புதிதாகக் கட்டப்பட்டு, அதன் துவக்க விழா அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடாகியிருந்தது. உள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடி, பாதுகாப்பு பந்தோபஸ்துகள்! ஆங்காங்கே ஸ்பீக்கர்களில் 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்...' என்று எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாடகர் டி.எம்.எஸ். நடிகர் நாகேஷோடு வந்தார். அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் செக்யூரிட்டிகள். "நான்தானப்பா பாடகர் டி.எம்.எஸ். அதோ, அங்கே பாடிக்கிட்டிருக்கே, அந்தப் பாட்டெல்லாம் நான் பாடினதுதானப்பா!" என்று சொல்லிப் பார்த்தார் டி.எம்.எஸ். அவர்களுக்குப் பாவம், இந்தத் திரை இசைச் சக்கரவர்த்தியைத் தெரியவில்லை. உள்ளே விட முடியாது என்று தீர்மானமாக மறுத்துவிட்டனர். நாகேஷ் கோபத்துடன் சண்டையிட, தகவலறிந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் வந்து இருவரையும் உள்ளே அழைத்துப் போனார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு இருந்த விஜயராஜ், அப்போதே முடிவு செய்துவிட்டார், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை விஸ்தாரமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று.

2001-ல் தொடங்கிய அந்தப் பயணம், இதோ இப்போதுதான் சேர வேண்டிய இலக்கை வந்து எட்டியிருக்கிறது.

டி.எம்.எஸ். எங்கே பிறந்தார், எந்தக் கோயில் வளாகத்தில் ஹிந்தி டியூஷன் நடத்தினார், முதன்முதலில் எந்த ஸ்டுடியோவில் பாடினார் என்பதிலிருந்து அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும் அது தொடர்பான இடங்களுக்கே அவரை அழைத்துச் சென்று பதிவு செய்திருக்கிறேன். அந்தக் காலத்து சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரனிலிருந்து இன்றைய ரஜினிகாந்த், .ஆர்.ரஹ்மான், வடிவேலு வரைக்கும் டி.எம்.எஸ்ஸோடு தொடர்புள்ள எந்த ஒரு வி..பி-யையும் விட்டுவிடாமல், கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் அனைவரையும் டி.எம்.எஸ்ஸைச் சந்திக்க வைத்துப் பேச வைத்திருக்கிறேன். அந்த வகையில் இசைக் குயில் லதா மங்கேஷ்கரையும் டி.எம்.எஸ்ஸையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. லதா மங்கேஷ்கரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். 'இமயத்துடன்' என்கிற இந்த வரலாற்றுப் பதிவுக்கு ஒரு முத்தாய்ப்பாக அந்தச் சந்திப்பு அமைந்துவிட்டதில் எனக்குப்ூரண திருப்தி. இந்த மெகா சீரியல், ஒரு மகா கலைஞனுக்கான உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும்" என்கிறார் விஜயராஜ்.

தமிழ் உச்சரிப்புக்கு ஓர் அர்த்தம் கொடுத்துக் கம்பீரப்படுத்திய பாடகரான டி.எம்.எஸ். இந்தியில் பேசுவதைக் கேட்பதே ஒரு ரசனையாக இருக்கிறது. லதா மங்கேஷ்கர், நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகை. டி.எம்.எஸ்ஸுடன் அவர் பேசியபோதும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.

"சிவாஜி அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல் காட்சிகளை எல்லாமே பார்த்து ரசிச்சிருக்கேன். அவரே பாடுறது மாதிரி அதெப்படி அத்தனைத் தத்ரூபமா உங்களால பாட முடியுது?" என்று ஒரு குழந்தை போல் ஆச்சரியத்துடன் லதா கேட்க, அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்த டி.எம்.எஸ்., "அதும்மா... ஒருத்தர் குரலை உன்னிப்பா கவனிச்சு அவர் பேசுற பாணியை மனசுல வாங்கிப்பேன். சிவாஜி பேசும்போது அடிவயித்துல இருந்து கனமா குரல் வரும். இப்ப பாருங்க, இது சிவாஜி வாய்ஸ்..." என்று அடிவயிற்றிலிருந்து சிவாஜி குரலில் பேசிக் காட்டுகிறார்.

"அட, ஆமாம்! அப்படியே இருக்கே" என்று வியந்து போன லதா மங்கேஷ்கர், "ஒரு தடவை சிவாஜி அண்ணன் கிட்டேயே சொல்லியிருக்கேன், டி.எம்.எஸ். குரல் அப்படியே உங்களைப் போலவே இருக்குன்னு. அதுக்கு அவர், 'ஆமாம்மா! இங்கே ராஜ்கபூருக்கு ஒரு முகேஷ் அமைஞ்சது மாதிரி எனக்கு டி.எம்.எஸ். கிடைச்சது என் அதிர்ஷ்டம்தான்'னு சொன்னார்" என்று சொல்ல, "அப்படியா!" என்று ரசித்துப் பெருமிதப்படுகிறார் டி.எம்.எஸ்.

"டி.எம்.எஸ்., பி.சுசீலா காம்பினேஷன்ல வந்த பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். என் தங்கை ஆஷாபோன்ஸ்லேக்கு ரொம்பப் பிடித்த பாடல் 'போனால் போகட்டும் போடா...'தான். டி.எம்.எஸ்ஸை எனக்கு ஐம்பது வருஷமா தெரியும்" என்கிறார் லதா.

உடனே டி.எம்.எஸ். தன் ஆல்பத்திலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து லதாவிடம் காட்டுகிறார். "இந்த நிகழ்ச்சி ஞாபகம் இருக்காம்மா?" என்று கேட்கிறார். அதை வாங்கிப் பார்க்கும் லதாவின் விழிகள் வியப்பால் விரிகின்றன. அது, டி.எம்.எஸ். சினிமாவில் பாட வந்து 25 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி ஏவி.எம். எடுத்த ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சி. அந்தப் படத்தில் ஏவி.எம்., டி.எம்.எஸ்., பி.சுசீலா, கலைஞர் மு.கருணாநிதி இவர்களோடு லதா மங்கேஷ்கரும் இருக்கிறார்.

"இது 37 வருஷத்துக்கு முன்னாடி, 1972-ல் எடுத்த படம்மா. எனக்கு அப்போ சரியா 50 வயசு. இன்னிக்கு எனக்கு 87 வயசாயிடுச்சு" என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்ன டி.எம்.எஸ்., "படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே..." என்று குரலெடுத்துப் பாடுகிறார்.

"அட, இந்த வயசுலயும் துளி பாவம் குறையாம, ஸ்ருதி குறையாம, உச்சரிப்பு தடுமாறாம, என்ன அழகா பாடறீங்க!" என்று லதா வியக்க, தான் மேற்கொண்டு வரும் யோகா, ஆல்ஃபா மெடிட்டேஷன் போன்றவை பற்றி விவரிக்கிறார் டி.எம்.எஸ்.

"எனக்கு இப்போ 81 வயசாகுது" என்று லதா சொல்ல, "அப்படின்னா நீ என்னை விடச் சின்னவ. எனக்குத் தங்கச்சிம்மா!" என்று உருகுகிறார் டி.எம்.எஸ்.

"வயசுல மட்டுமில்ல... உங்களைவிட எல்லா விதத்துலயும் நான் சின்னவதான்" என்கிறது அந்த இந்திய இசைக்குயில் வெகு அடக்கமாக. "இவ்ளோ தூரம் என்னைத் தேடி வந்து பெருமைப்படுத்தினதுக்கு நன்றி! என்னாலதான் இப்பெல்லாம் அதிகம் அலைய முடியலை. நீங்க இதுக்கு முன்னே மும்பை வந்திருக்கீங்களா?"

"கச்சேரி செய்யறதுக்காக அடிக்கடி வருவேன். உங்களையெல்லாம் பார்த்துப் பேச சந்தர்ப்பம் அமைஞ்சது இப்போதான். பகவானா பார்த்து ஏற்படுத்திய சந்திப்பு இது" என்று மேலே கை காட்டி டி.எம்.எஸ். நெகிழ, "ஆமாம். எனக்கும் உங்களைச் சந்திச்சதுல ரொம்பச் சந்தோஷம். இன்னிக்கும் உங்க குரல் மூலமாதான் சிவாஜி அண்ணன் எங்களோடு வாழ்ந்துட்டிருக்கார்" என்கிறார் லதா.

பிரியாவிடை பெற்றுக் கிளம்புகிறார் டி.எம்.எஸ்.

லதாவைச் சந்திப்பதற்கு முன்பாக, வேறொரு முக்கிய இந்திப் பாடகர் வீட்டுக்கும் சென்றார் டி.எம்.எஸ். அவர், மறைந்த முகம்மது ரஃபி. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, டி.எம்.எஸ்ஸை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, அவரது தொண்டைப் பகுதியைத் தன் விரல்களால் வருடி, "இந்த இடத்திலிருந்துதானா அத்தனை அற்புதமான சங்கீதம் வருது!" என்று வியந்து மகிழ்ந்தவர் முகம்மது ரஃபி. அவர் அப்படி வியப்பதற்குக் காரணமான பாடல், 'தூங்காதே தம்பி தூங்காதே...'.

முகம்மது ரஃபி பெற்ற ஏராளமான விருதுகளையும் கேடயங்களையும் பாராட்டுப் பத்திரங்களையும் ஒரு பெரிய ஹாலில் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். முகம்மது ரஃபியின் மைத்துனர் பர்வேஷ் அஹமத் அவற்றை டி.எம்.எஸ்ஸுக்கு விளக்குகிறார்.

முகம்மது ரஃபிக்கு அவர் மறைந்து எட்டு வருஷத்துக்குப் பிறகுதான் பத்மஸ்ரீ அவார்டு கிடைச்சுது. உங்களுக்கு ஒரு விஜயராஜ் கிடைச்சது போல ரஃபிக்கு யாரும் கிடைக்கலை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு பண்ணலையேங்கிற குறை எனக்கு இருக்கு" என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் அவர்.

உண்மையில் 'இமயத்துடன்...' என்கிற சீரியல் ஒரு மகா, மெகா முயற்சி!

'இமய'த்துக்காகக் காத்திருக்கிறார்கள் பாட்டு அரசனின் லட்சக்கணக்கான ரசிகர்கள்.

(30.12.09 ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

.

10 comments:

பல நாராசங்களுக்கு மத்தியில் இது போன்ற அபூர்வ நிகழ்ச்சிகளில் மனம் லயித்துவிடும்.. கிட்டத்தட்ட நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு...வாசித்ததும். நன்றி SIR.
 
பலா பட்டறை! தங்களின் ஆர்வம் கண்டு வியந்தேன். நான் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியதற்கு நன்றி! இப்போது அதற்குரிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளேன். பார்க்கவும்.
 
நல்ல பதிவு ரவி. நேரம் எடுத்து இணையத்தில் இது போன்ற நல்ல விஷயங்களை எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி. பகிர்விற்கு நன்றி...
 
what a writing....! Seems to be LIVE show. I love TMS very much....

He is the best for TAMIL lyrics.
 
நான் எஸ்.பி.பி. ரசிகை; (அதற்காக டி.எம்.எஸ். பிடிக்காது என்று அர்த்தமல்ல!) என் கணவர் டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகர். அவர் இந்தப் பதிவைப் படித்துவிட்டுத் தன் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கச் சொன்னார். அதோடு ‘மிக அருமையான பதிவு’ என்கிற என் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அருமையான பகிர்விற்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.
 
மிக நல்ல பதிவு சார். சமீப காலமாக தான் டி.எம்.எஸ் பாடல்களை அதிகம் கேட்கிறேன்; அதுவும் கண்ணதாசனின் ப்ளே லிஸ்டில். இப்போது கேட்டுக்கொண்டிருப்பது திருவிளையாடலில் இருந்து 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடல்.

வலைப்பூ வடிவமும் குயில் ஆகி விட்டதே!

டி.எம்.எஸ் அவர்களின் கனீர் குரல் அபாரம்! ' நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ' எனும் வரியை கேட்கும் போது சிலிர்க்கிறது!
 
@ நன்றி கிருஷ்ண பிரபு!

@ கோழிப்பையன்! தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

@ கிருபாநந்தினி! நான் டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகன். (அதற்காக எஸ்.பி.பி. பிடிக்காது என்று அர்த்தமல்ல!) தங்களின் பாராட்டுக்கும் தங்கள் கணவரின் பாராட்டுக்கும் என் இதயங்கனிந்த நன்றி!
 
@ நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா!

@ டி.எம்.எஸ்ஸின் மிக அருமையான பாடலைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள், பொன்னியின் செல்வன்! நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பாடலை முதலில் சுந்தரம் என்பவர்தான் பாடுவதாக இருந்தது (டி.எம்.எஸ்ஸுக்கு கர்னாடக ஜதி ஸ்வரங்கள் அவ்வளவாகச் சொல்ல வராது என்பதால்!). ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, பயிற்சி செய்து அற்புதமாகப் பாடித் தந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

புதியதொரு தகவலைத் தங்களுடன் பகிர்ந்துகொள்வதற்குத் தோதாக ஒரு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி!
 
விகடனிலேயே படித்து ரசித்தேன். தங்கள் பெயரையும் அங்கேயே கண்டு கொண்டேன்.. ரசிக்க தக்க எழுத்து