உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, June 05, 2009

தொடர் பதிவு விளையாட்டு!

னக்கு இந்த ஆட்டம் புரியலை. சரி, நண்பரும் சீனியர் பதிவருமான லதானந்த் சார் என்னவோ சொல்றாரேன்னு நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கறேன்.
ம்... ஆரம்பிக்கலாமா?

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அது பெரிய கதைங்க. அதுக்கு தனிப் பதிவே நான் போடணும். சுருக்கமா சொல்றேன். என் ஆதிப் பெயர் ரவிச்சந்திரன்தான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் வகுப்புல நாலைஞ்சு ரவிச்சந்திரன்கள் இருந்ததால, அப்பவே எனக்கு ஒரு இண்டிவிஜுவாலிட்டி வேணும்னு நினைச்சு எங்க அப்பா கிட்ட சொன்னேன். அவர்தான் எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர். ரெஜிஸ்டர்ல ரவிச்சந்திரன்கிறதை ரவிபிரகாஷ்னு சுலபமா மாத்திட்டாரு. இந்தப் பேரு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அது சரி, இப்ப இதைச் சொல்றேனே, பிரச்னை ஒண்ணும் வந்துடாதே?

2) கடைசியா அழுதது எப்போது?
தெரியலை. உள்ளுக்குள் அழுததுன்னா, இலங்கையில கொத்துக்கொத்தா வெட்டிச் சாய்ச்சாங்களே, அப்ப!

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
சின்ன வயசுல நான் கையெழுத்துக்காக ஆசிரியர்கள் கிட்டே பாராட்டே வாங்கியிருக்கேன். அப்புறம் நிறையப் பேர் கையெழுத்து அழகா இருந்தா, தலையெழுத்து அழகா இருக்காதுன்னு சொன்னதை நம்ம்ம்ம்ம்பி, கிறுக்க ஆரம்பிச்சுட்டேன். அது சரி, இப்ப எதுக்கு இந்தக் கேள்வி. எல்லாம் சிஸ்டம், கீ-போர்டு, இ-மெயில்னு ஆனப்புறம் எவன் கையெழுத்து அழகா இருக்கு?

4) பிடித்த மதிய உணவு?
தயிர்சாதம். பிடிக்குதோ பிடிக்கலையோ, தினம் அதான் கையில எடுத்துப் போறேன். வேற எதைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒத்துக்கலீங்களே!

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இல்லை. நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். நான் யாரோடவும் நட்பு வெச்சுக்க மாட்டேன். அவங்களா வந்து நட்பு பாராட்டினா விலகி ஓடமாட்டேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல குளிக்கப் பிடிக்கும் - பயம்! அருவியில குளிக்கப் பிடிக்கும் - ஜலதோஷம்!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
கண்களை! காரணம், அவர் நம்பிக்கைக்குரியவரா என்பதை அவர் கண்கள் எனக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம் - திறமை எங்கிருந்தாலும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுவது; பிடிக்காத விஷயம் - சோம்பேறித்தனம்!

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடிச்ச விஷயம் - அருமையான சமையல், சிறப்பான வீட்டு நிர்வாகம், என் பெற்றோர்களை அன்பாகக் கவனித்துக் கொள்ளும் பாங்கு, எனக்கு நேர்மாறான சுறுசுறுப்பு.
பிடிக்காத விஷயம் - குழந்தைகளை சதா படி, படி என்று திட்டிக்கொண்டே இருப்பது, சம்பளப் பணத்தில் கணக்குக் கேட்டுக் குடாய்வது.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
என் தாத்தா பக்கத்துல! தெனாலிராமன் கதை, மரியாதைராமன் கதை, பட்டி விக்கிரமாதித்தன் கதை, கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்-வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன் கதை போல என் சின்ன வயசில் ஏகப்பட்ட கதைகளைச் சொல்லி அவர் வளர்த்ததனாலதான் இன்னிக்கு நான் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவுக்கு உயர முடிஞ்சிருக்குன்னு நம்பறேன்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
எதுக்கு இந்தக் கேள்வின்னு புரியலை. இருந்தாலும் சொல்றேன், நீலத்தில் பொடிக் கட்டம் போட்ட லுங்கி; டாப்லெஸ்!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
வீட்டில் நெட்டில் உட்கார்ந்தாயிற்றென்றால், ஏதாவது ஒரு டி.எம்.எஸ். பாட்டுதான் சைடில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்போது ஓடிக்கொண்டு இருப்பது ராகா டாட் காமில் பரவசமூட்டும் முருகன் பாடல்... ‘மனம் கனிந்தே நீ அருள் புரிவாய்... திருமால் மருகா’

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு!

14) பிடித்த மணம்?
மல்லிகை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
சொக்கன். மிகச் சிறந்த எழுத்தாளர். கணினி தொடர்பாக விகடனில் தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். கதைகளும் எழுதியிருக்கிறார். அவரை அழைக்கக் காரணம்... ம்... மத்த பதிவர்களைப் பார்த்தேன். ஒருத்தர் ஜெயமோகனைக் கூப்பிடுவீர்களா, சாருவைக் கூப்பிடுவீர்களா, அப்படியென்றால் நானும் வருகிறேன் என்கிறார். இன்னொரு பதிவு், இதென்ன அசட்டுத்தனமான ஆட்டம், சேச்சே என்கிறது. சொக்கன் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் என்று ஒரு நம்பிக்கை. அதான்!

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவர் சமீபத்தில் பதிவிட்ட ‘கேட்டோ சேதியை - ஆணும் பெண்ணும்’ கவிதை! அவருக்கு ரெண்டும் பசங்கன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். அதனாலே அவர் கவிதைக் கருத்துல எனக்கு 100 சதவிகிதம் உடன்பாடு!

17) பிடித்த விளையாட்டு?
சீட்டாட்டம். அட, காசு வெச்செல்லாம் இல்லீங்க. சும்மா ரம்மி, டிக்ளேர், நைன் நாட் ஃபோர் என்று உறவினர்களோடு விளையாடுவது. என் பிள்ளைகளோடு விளையாடினால் செஸ். என் அப்பாவோடு விளையாடினால் ஆடுபுலி ஆட்டம்.

18) கண்ணாடி அணிபவரா?
இமேஜை ஸ்பாயில் பண்றீங்களே! அட, ஆமாய்யா ஆமாம்!

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
என் ரசனைக்குரியதாக இருக்கும் எந்தப் படமும்!

20) கடைசியாகப் பார்த்த படம்?
ரத்தக்கண்ணீர் - சிடியில்!

21) பிடித்த பருவ காலம் எது?
இதுக்கு லதானந்த் வில்லங்கமா பதில் சொல்லியிருந்தாரு. நான் அப்படியெல்லாம் சொல்லப்போறதில்லை. வசந்தம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ராஷ்மி பன்சால் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகம். சுய தொழில் தொடங்கி அதில் சாதித்தவர்களைப் பற்றியது.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
மாற்றுவதே கிடையாது. காரணம், என் குழந்தைகள் படம் அது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அவர்களை நான் எடுத்த படங்களில் மிக அருமையாக வந்திருக்கும் தி பெஸ்ட் படம் அது!

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - பிறந்த குழந்தையின் அழுகை; வளர்ந்த குழந்தையின் சிரிப்பு.
பிடிக்காதது - மனிதன் வெளியிடும் கொட்டாவி, ஏப்பம் மற்றும் அபான வாயுச் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்தப் பக்கம் கன்னியாகுமரி; அந்தப் பக்கம் ஹைதராபாத்!

26) உங்களின் தனித்திறமை?
எந்தத் தனித்திறமையும் இல்லாதபோதும், நம்பர் ஒன் தமிழ்ப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பதவியில் உட்கார்ந்திருப்பதே ஒரு தனித்திறமைதானே?

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஒரு கண்ணில் வெண்ணெய்; ஒரு கண்ணில் சுண்ணாம்பு!

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
திடுக்கென்று வந்துவிடும் கோபம்!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
போனவற்றில் பிடித்தது மூணாறு. போக விரும்புகிற லிஸ்ட்டில் அதிகம் பிடித்தது வெனிஸ்!

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
இருக்கணும். எப்படியாவது!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
கணவர்/மனைவிக்குத் தெரியாமல் செய்ய விரும்பும் காரியம்னு இந்தக் கேள்வி இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப யோசித்துப் பார்த்தும் அப்படி எதுவும் தோன்றவில்லை.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
முழுமையாக வாழ்!

6 comments:

நல்லாயிருக்கு.. அருமை சார். ஆனால் 26 ஒத்துகொள்ள முடியவில்லை.
 
பதில்கள் அருமை. நேர்த்தியான, நேர்மையான, நகைச்சுவையான, யதார்த்தம் இழையோடும் பதிலக்ள்.
 
சில உண்மைகளை ஒப்புக்கொள்ள முடியாதுதான் வண்ணத்துப்பூச்சிஜி!

எல்லார் பதிவிலும் இந்த செட் கேள்வி-பதில் இருக்கே, அதையெல்லாம் படிச்சீங்களா காட்டிலாகாஜி?
 
very nicE!
 
அழைப்புக்கு நன்றி திரு. ரவிபிரகாஷ், என்னுடைய பதில்கள் இங்கே:

http://nchokkan.wordpress.com/2009/06/08/qa/

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூர்.
 
எனக்குப் பிடித்த இடமும் மூணாறு தான்!