உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, June 03, 2009

கை கொடுத்தார் கலைஞர்!

கைதானார் சாவி! - II

எங்கள் மேனேஜரும் அலுவலக நண்பர்களும் ஆசிரியர் சாவியின் காரில் எங்களைப் பின்தொடர்ந்து அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். சாவியின் மாப்பிள்ளைகள் இருவர் தங்கள் காரில் வந்து சேர்ந்தனர். எங்களைப் பார்க்க அவர்களை அனுமதிக்கவில்லை போலீஸார்.

இதற்குள் சாவி இதழை அச்சிட்டுத் தரும் பிரஸ் மணியும் கைதாகி, நாங்கள் இருந்த இருட்டறைக்குக் கொண்டு வரப்பட்டார்.

6 மணிக்கு அந்த அறையின் உள்ளே அடைக்கப்பட்ட நாங்கள், பத்து மணி வரை அப்படியே கிடந்தோம். நீளமான மேஜை ஒன்று கிடந்தது. அதன் எதிரே இருந்த ஒரே ஒரு நாற்காலியில் சாவி சார் அமர்ந்து, அமைதியாகிவிட்டார். அவருக்கு எதிரே தன் கால்களை நீட்டியபடி அந்த மேஜை மீது படுத்திருந்தார் ஒரு கான்ஸ்டபிள். மரியாதை என்ற வார்த்தைக்கு அவருக்கு அர்த்தமாவது தெரியுமா என்று சந்தேகமாக இருந்தது. எங்கள் காவலுக்கு இருக்கிறாராம்.

மணி பத்துக்கு கலைஞர் தன் சகாக்கள் சூழ கீழே வந்துவிட்டார் என்பது தெரிந்தது. சடசடவென்று போலீஸ் அதிகாரிகள் சிலர் ஓடிவந்தார்கள். அவசர அவசரமாக நாங்கள் இருந்த இருட்டறையில் டியூப் லைட் பொருத்தப்பட்டது. வெளிச்சம் பாய்ந்தது. மின் விசிறி சுழன்றது. தோற்றமே முற்றிலுமாக மாறிவிட்டது.

எங்களை மேலே வந்து பார்க்கக் கலைஞரையும் முதலில் அனுமதிக்கவில்லை அண்ணா நகர் போலீஸார். பின்னர், கலைஞர் பிடிவாதமாகப் படியில் ஏறத் தொடங்கியதுதான் வழிவிட்டார்கள். அதுவரை எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூடத் தரப்படவில்லை. எங்கள் அலுவலகத் தோழர்கள் வாங்கி வந்த பிஸ்லேரி தண்ணீர் பாட்டிலைக் கூட எங்களுக்குக் கொடுக்க அனுமதி மறுத்தார்கள்.

கலைஞரோடு (அப்போது எதிர்க்கட்சித் தலைவர்) துரைமுருகன், ஆயிரம் விளக்கு உசேன் என கட்சிக்காரர்கள் ஏழெட்டுப் பேர் வந்தார்கள். வந்ததுமே, “நீங்க சாப்பிட்டீங்களா?” என்றுதான் கேட்டார் கலைஞர். “இல்லை. தண்ணீர் கூடக் குடிக்கவில்லை” என்றதும், அவர் கண்ணசைக்க ஆயிரம் விளக்கு உசேன் உடனே ஆளனுப்பி எங்கள் மூவருக்கும் மசால்தோசை, வடை, காபி வாங்கி வரச் செய்தார்.

திருப்தியாகச் சாப்பிட்டோம். கலைஞர் ஆசிரியர் சாவியுடன் அவரை மூட் மாற்றும் விதமாக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு இருந்தார். ஒரு அரை மணி நேரம் அங்கே இருந்திருப்பார். பின்னர் எங்களிடம் விடைபெற்றுப் புறப்படும்போது என்னிடம், “என்ன தம்பி, பயந்துட்டீங்களா? பொதுவாழ்க்கைன்னு வந்தாச்சுன்னா இதெல்லாம் சகஜம். ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க” என்று என் தோளைத் தட்டிவிட்டுக் கிளம்பினார்.

அதன்பின் 12 மணி வாக்கில், திடுதிடுவென்று சில போலீஸார் வந்தார்கள். “ம்... கிளம்புங்க, கிளம்புங்க” என்று விரட்டினார்கள். கீழே இறங்கி வந்தோம். மூவரையும் மீண்டும் ஜீப்பில் ஏற்றினார்கள். அதிலேயே 10 நிமிடம் உட்கார்ந்திருந்தோம். ஜீப் கிளம்பினால், அதைப் பின்தொடர எங்கள் ஆட்கள் கார்களில் தயாராக இருந்தார்கள். “யாரும் பின்தொடரக்கூடாது. புரியுதா?” என்று போலீஸ் உயரதிகாரி கடுமையாக உத்தரவிட்டார்.

அடுத்த விநாடி, எடுத்த எடுப்பில் சரேலென்று வேகமெடுத்துச் சீறிக் கிளம்பியது ஜீப். தலைதெறிக்கும் வேகம். முன்னே இரண்டு போலீஸ்காரர்கள் பைக்கில் பறக்க, அதைத் தொடர்ந்து உயரதிகாரி இன்னொரு போலீஸ் காரில் மண்டையில் சிவப்புச் சுழல்விளக்கோடு விரைய, பின்னால் எங்கள் ஜீப் பின்தொடர்ந்தது.

ஆங்காங்கே டிராஃபிக் நிறுத்தப்பட, எந்தத் தடங்கலும் இன்றி, விமானம் மாதிரி சீறிச் சென்றது போலீஸ் அணிவகுப்பு. அண்ணா ஆர்ச்சைக் கடந்து இடப்புறம் திரும்பியது. எங்கள் கார்களும் கஷ்டப்பட்டு எங்களைப் பின்தொடர்ந்தன. சர்ரென்று சென்ற ஜீப்புகள் அருண் ஹோட்டல் அருகில் வந்ததும் சடாரென்று யூ டர்ன் அடித்து எதிர் பாதையில் வந்த வழியே திரும்பி, நேரே எம்.எம்.டி.ஏ. காலனியை நோக்கி விரைந்தன.

எங்கள் கார்கள் நேரே போய் சுதாரித்து, பின்பு திரும்பி எங்களைப் பின்தொடர்வதற்குள் நாங்கள் அவர்கள் கண்களிலிருந்து மறைந்து விட்டோம்.

நேரே மாஜிஸ்ட்ரேட் வீட்டின் முன் போய் இறங்கினோம். காலிங் பெல் அடித்து அவரைக் கீழே கூப்பிட்டார் காவல்துறை உயரதிகாரி. தூக்கம் கெட்ட அலுப்போடு அவர் வந்து சேர்ந்தார். வழக்கை அவரிடம் சுருக்கமாகச் சொன்னார் போலீஸ் அதிகாரி.

“யாருப்பா... நீதான் சாவியா?” - மாஜிஸ்ட்ரேட் கேள்வி. இதற்குள் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்திருந்தார்கள் சாவியின் மாப்பிள்ளைகள் மற்றும் எங்கள் மேனேஜர் உள்ளிட்ட மற்றவர்கள். மேனேஜர் முன்னால் போய், “ஆமாம் சார்” என்றார். “நீ யாரு? நீ எதுக்கு முன்னே வர? நீயா சாவி?” என்றார் போலீஸ் அதிகாரி காட்டமாக.

“சாவி என்பது நான்தான்” என்றார் சாவி, மாஜிஸ்ட்ரேட்டின் முன் நின்று. கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அங்கே இருட்டில் நின்றுகொண்டிருக்கிறார் அவர். “அட்டைப்படத்துல ஆபாசப்படம் போட்டதா உன் மேல வழக்கு. ஜாமீன் எடுக்க யார் வந்திருக்கா?” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

எனக்கு ஆலடி அருணாவும், பிரஸ் மணிக்கு என்.வி.என்.சோமுவும், சாவிக்கு அவரது இரு மாப்பிள்ளைகளும் (ஒருவர் மிலிட்டரி மேன், மற்றவர் ஆடிட்டர்) ஜாமீன் தந்திருப்பதாக போலீஸ் அதிகாரி மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்ல, “சரி, விசாரணைன்னு கூப்பிட்டா வரணும். இப்ப நீங்க போகலாம்!” என்று கோப்புகளில் கையெழுத்திட்டுவிட்டு, மாடியேறிப் படுக்கச் சென்றுவிட்டார் மாஜிஸ்ட்ரேட்.

அடுத்த கணம், எங்களை அம்போவென்று இருளில் நிற்க வைத்துவிட்டு போலீஸார் கிளம்பிப் போய்விட்டார்கள்.

நாங்கள் எங்களின் கார்களில் சாவி இல்லம் வந்தடைந்தோம். நான் தொடர்ந்து சாவி இதழ் வேலைகளில் (27.5.1992 இதழ்) ஈடுபட்டேன். சாவி அப்போதே ‘அழுவதா, சிரிப்பதா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விறுவிறுவென்று எழுதிக் கொடுக்க, சாவி இதழ் அட்டையிலும் அதையே வெளியிட்டு ரெடி செய்து அனுப்பினோம்.

அந்தக் கட்டுரையை பிறகு ஒரு நாள் பதிகிறேன்.

மகளிர் அமைப்புகள் தங்கள் வழக்கைப் பின்னர் வாபஸ் வாங்கிவிட்டன.

5 comments:

உங்கள் வலைக்கு முதல் வருகை.. அற்புதமான விஷயங்களை அழகாக எழுதுகிறீர்கள்..

இனி.. நான் உங்கள் ரசிகன் / follower too.

Hearty wishes..
 
Dear RAVIPRAKASH,
AFTER a LONG TIME WHEN SEEING THIS i CAN REMEBER THE VERY HAPPY DAYS OF PUBLISHING THE sAVI mAGAZINE AS THE PRINTER IN OUR pRESS; bUT i am a little disappointed since you have not mentioned the Joke passed by the Kalaignar THEN, why the then CM got annoyed in this joke; I hope you can remember the joke;
R.S. Mani (My email ID is r.subramoni@gmail.com
 
Sathyarajkumar: போலிசின் நடத்தை பற்றி நீங்கள் எழுதியதை படித்த போது, அமெரிக்க போலிஸுடனான எனது அனுபவங்களை போன வருஷம் இங்கே எழுதினது நினைவுக்கு வந்தது. அதையும் பாருங்கள். http://inru.wordpress.com/2007/08/31/lawandorder/
 
படித்துவிட்டேன். மிகவும் அருமை! நம்ம ஊர் போலீஸுக்கும் அவர்களுக்கும்தான் எத்தனை வித்தியாசம்!
 
ரவி சார் பதிவு அருமை.

உங்கள் ப்ளாக் வெகுநாட்கள் முன்பே படித்திருக்கிறேன் பின் ப்ளாக் அட்ரஸ் மறந்துவிட்டது திரும்ப இப்போதுதான் கிடைத்தது.