உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, June 03, 2009

கைதானார் சாவி!

விகடன் அட்டையில் வெளியான ஒரு ஜோக், விகடன் ஆசிரியரை சிறையில் தள்ளியதென்றால், சாவி அட்டையில் வெளியான ஒரு ஜோக் சாவியைக் கைது செய்து ஏழு மணி நேரத்துக்கு மேல் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கச் செய்தது.

‘அத்தைதான் உங்களுக்கு ஆடையில்லாம பால் தரச் சொன்னாங்க!’ என்பது வசனம். ஆடை என்று பாலாடையை அத்தை குறிப்பிட, அதை புது மணப்பெண் தவறாகப் புரிந்துகொண்டு ஆடையில்லாமல் கணவன் எதிரே பால் சொம்போடு நிற்பதாகப் படம்.

ஆசிரியர் சாவி அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், நான் இந்த ஜோக்கை அட்டையில் வெளியிட்டுவிட்டேன். அது எனக்கு ஆபாசமாகவோ, பெண்மையைப் பழிப்பதாகவோ எல்லாம் தோன்றவில்லை. ஒரு கணவனிடம் வெள்ளந்தியான பெண் தவறாகப் புரிந்துகொண்டு செயல்பட்ட முறை எனக்கு வெறும் நகைச்சுவையாகத்தான் தோன்றியது. அதில் எந்த வக்கிரமும் இருப்பதாகத் தெரியவில்லை. படத்திலும் பெரிய ஆபாசம் இல்லை.

இருந்தாலும், மாதர் சங்கங்கள் கொதித்தெழுந்துவிட்டன. சாவிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தன. இரண்டு மாத காலமாக அமெரிக்காவிலிருந்த சாவி அந்த சனிக்கிழமை மதியம்தான் சென்னை திரும்பியிருந்தார். விமான நிலையத்திலிருந்து வரும் வழியிலேயே மேனேஜர் துரை சாவியிடம் பக்குவமாக விஷயத்தைச் சொல்லிவிட்டிருந்தார்.

அன்றைய தினம் (16.5.1992) மாலை 4 மணி வாக்கில் மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படை திரண்டு வந்து, சாவி இல்லத்தின் எதிரே குறிப்பிட்ட ஜோக் வெளியான சாவி இதழ்களைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தனர். “சாவியே, வெளியே வா! மன்னிப்புக் கேள்!” என்று கூச்சல் போட்டனர். சாவி வெளியே வந்தார். கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். “அதை வெறும் ஜோக்காதான் நான் நினைக்கிறேன். அப்படியும், உங்க மனசு அதனால புண்பட்டிருந்தா, அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்றார். அனைவரும் போய்விட்டார்கள்.

மாலை 5 மணிக்கு, ஒரு ஜீப் வந்தது. போலீஸ் உயர் அதிகாரியும், இரண்டு கான்ஸ்டபிள்களும் இறங்கினார்கள். “வாங்க, போகலாம்! உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் இருக்குது. விசாரிக்கணும்” என்றார்கள். “அப்புறம்... இங்க ரவிபிரகாஷ் யாருய்யா?” என்றார்கள். நான் முன்னால் போனேன்.

“போய் நீயும் வண்டியில ஏறு!” என்றார்கள். சாவியின் கார் பெட்ரோல் போடுவதற்காகச் சென்றிருந்தது.

“ஏறுங்கய்யா! ஏன் நிக்கறீங்க?” என்றார் போலீஸ் அதிகாரி காட்டமாக.

“இருங்க, என் கார் வந்துடட்டும். அதுல வர்றேன்” என்றார் சாவி.

“உங்க கார் எதுக்கு? அதான், இவ்ளோ பெரிய ரதம் கொண்டு வந்திருக்கிறோமே! கிளம்புங்க” என்றார் அவர் எகத்தாளமாக. கொஞ்சம் தாமதித்தாலும், சாவி சாரை நெட்டித் தள்ளிக்கொண்டு போய் ஜீப்பில் ஏற்றி விடுவார் போலிருந்தது.

சாவி மெதுவாக நடந்து போய் ஜீப்பில் ஏறிக்கொண்டார். கூடவே நானும்.

உட்கார்ந்து பின்புறக் கதவைப் படக்கென்று அடித்துச் சார்த்தியதும், விருட்டென்று புறப்பட்டது ஜீப். அதற்குள் பெட்ரோல் போடச் சென்ற சாவியின் கார் எதிர்ப்பட்டது. ஜீப் நிற்கவெல்லாம் இல்லை. சீறிக்கொண்டு பாய்ந்தது. யாரும் பின்தொடரவே முடியாத ஒரு வேகத்தில் சென்ற ஜீப், நேரே அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது.

எங்களை மாடி அறை ஒன்றுக்கு அழைத்துப் போனார்கள் கான்ஸ்டபிள்கள். வௌவால் புழுக்கை நெடியோடு, மாலை 6 மணிக்கே இருளாக இருந்தது அந்த அறை. அறையில் மின் விளக்குகளோ, மின் விசிறியோ இல்லை.

அதன்பின்..?

அடுத்த பதிவில்!

0 comments: