உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, May 17, 2009

ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

ரு கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. சுவரிலிருந்த பூனை ஒரு பக்கமாகக் குதித்துவிட்டது. ஊகங்கள், எதிர்பார்ப்புகள், கணிப்புகள் எல்லாம் பொய்த்துப் போயின.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-தான் பெரும்பான்மை இடத்தைப் பிடிக்கும்; தி.மு.க. மண்ணைக் கவ்வும் என்றும், இலங்கைப் பிரச்னையை ஆவேசமும் உருக்கமுமாக மக்களிடம் கொண்டு சென்ற வைகோ பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் பலரும் சொன்ன கணிப்புகள் இன்று அர்த்தம் இழந்து பல்லிளிக்கின்றன.

காங்கிரஸ் பெரிய தலைகள் குப்புறடித்துவிட்டதற்குக் காரணம் கூட, அது இலங்கைப் பிரச்னையில் காட்டிய அக்கறையின்மையால் என்று தோன்றவில்லை. தவளைகள் போல அவர்கள் காலை அவர்களே பற்றி இழுத்து மேலே ஏற முடியாமல் செய்துவிட்டார்கள். இனி, தமிழக ஆட்சியில் பங்கு என்று குரலெழுப்ப அவர்களுக்கு வாயிருக்காது.

மருத்துவரின் சில சிகிச்சையில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், ஜெயிக்கிற கட்சி மீது தொற்றிக்கொள்கிற அவரது போக்கு ரசிக்கத்தக்கதல்ல. எல்லாக் கட்சியினரும்தான் இந்த ரகம் என்றாலும், பா.ம.க. கூச்ச நாச்சமில்லாமல் இந்த பல்டி விளையாட்டில் ஈடுபட்டது. 'ஆஹா... பா.ம.க. மொத்தமும் புட்டுக்கிச்சு. இனி அந்தக் கட்சியைத் தேட வேண்டியதுதான்' என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சந்திக்காத சரிவுகளா? பா.ம.க-வை விளம்பரம் போட்டுத்தான் தேடவேண்டும் என்று இப்போது சொல்லும் தி.மு.க-வினர் அடுத்தமுறை மருத்துவரைத் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள விளம்பரம் கொடுத்துக் கூப்பிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரவர் தங்கள் அணி தோற்றதற்கு வழக்கமான காரணங்களைச் சொல்லிப் புலம்புவதில் ஆச்சரியமில்லை. பின்னே... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று மழுப்பிச் சமாளிக்கத்தானே வேண்டியிருக்கிறது இந்தப் பாழாய்ப்போன அரசியலில்?

ஆனால், எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தமிழ்நாடு முழுக்க யாரைக் கேட்டாலும் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க. கூட்டணிதான் வலுவான கூட்டணி, அதுதான் ஜெயிக்கும் என்றார்களே? ரிசல்ட் ஏன் வேறா வந்தது?

ஒருவேளை, தமிழக அரசியல்வாதிகளோடு பழகிப் பழகி, அவர்களும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசக் கற்றுக்கொண்டு விட்டார்களோ? இருந்தாலும் இருக்கும்.